கலைந்தது கலாம் கனவு..! பிழைத்தது இந்தியா..!


மக்கள் அனைவரும் எல்லா வளமும் பெற்று நிறைவாழ்வு வாழ்வது போலவும், கனவு காணத்தெரியாமல்தான் சிரமப்படுகிறார்கள் என்பது போலவும் வந்த நாள் முதலாய் ஒட்டுமொத்த நாட்டையும் கனவுக் காணச்சொல்லி சாமியாடிக்கொண்டிருந்தார் அரசவை கோமாளி ( நன்றி: புதிய கலாசாரம்) அப்துல் கலாம்.

கிராமங்களில் பத்து நாள் திருவிழாவின் நாடகங்களில் ஒரே பப்பூன் தினமும் வந்தால் பார்வையாளர்களுக்கு சலிப்பு ஏற்பட்டுவிடுமென தினமொரு நபர் பப்பூனாக வருவது போல, ஐந்து வருடங்களுக்கொரு முறை அரசவை கோமாளி மாற்றியமைக்கப்படும் வைபவத்தில் இப்போது அப்துல் கலாமுக்கு ‘நன்றி, வணக்கம்’ சொல்லிவிட்டனர். அடுத்த கோமாளி தயாராகிக்கொண்டிருக்கிறார்.

எல்லோரையும் கனவு காணச்சொன்ன அப்துல் கலாம், இன்னொரு முறை அதே நாற்காலியை தக்க வைத்துக் கொள்ளலாம் என கனவு கண்டார். ஆனால், முடியவில்லை. வீழ்ந்துபோன அவரது கனவால் நாட்டில் பல பேர் சந்தோஷக் கூத்தாடிக்கொண்டிருப்பதாகக் கேள்வி. கலாம் காலியானதால், யார், யாரெல்லாம் எந்தெந்த வகையில் நிம்மதியாக இருப்பார்கள்..?

1. ஜனாதிபதி மாளிகையின் புகைப்படக்காரர் ‘அப்பாடா’ என்று பெருமூச்சு விடுவார். சாக்பீஸில் தாஜ்மகால் செய்த பத்து வயது சிறுவன் முதல், நாக்கில் அலகு குத்தி லாரியை இழுத்த இளைஞன் வரை, சாதனை என்ற பெயரில் கொத்து, கொத்தாக கிளம்பி வருபவர்களை கலாமுடன் நிற்க வைத்து புகைப்படம் எடுக்கும் கொடுமையிலிருந்து அவர் தப்பித்தார்.

2. ‘ஒட்டன்சத்திரம் மூலம் பௌத்திரம் டாக்டர் கே. என். ராய், ஜனாதிபதி அப்துல் கலாமை சந்தித்தார்..’ என்பது மாதிரியான கேணத்தனமான பத்திரிகை செய்திகளிலிருந்து மக்களுக்கு விடுதலை

3. பத்து நாளைக்கொரு முறை தேசிய ஜோசியக்காரராக மாறி, ‘ 2020-ல் இந்தியா வல்லரசாகிவிடும்’ என்ற வறட்டு ஜம்ப ஸ்டேட்மெண்ட் கொஞ்சமாவது குறையும்.

4. ‘ஜனாதிபதிங்குறது எம்மாம்பெரிய வேலை.. அங்கப்போயி வேலையைப் பாருய்யான்னா, சின்னப்புள்ளைகக்கூட வெளாடுறாருப் பாரு..’ என்று எங்கள் கிராம பெரியவர் ஒருவர் சொன்னார். குழந்தைகள் மீது அன்பு செலுத்துவது தவறில்லை. ஆனால், ஊடக வெளிச்சத்தில் அவர் குழந்தைகளை கொஞ்சுவது மட்டும்தான் நம் கண்ணுக்குத் தெரிகிறது. அதற்குப் பின்னால் அந்தக் குழந்தைகள் அனுபவிக்கும் கொடுமைகள் நமக்குத் தெரிவதில்லை.

ஜனாதிபதி வருகிறார் என்றால், அந்த விழாவுக்கு வர வேண்டிய பள்ளிக் குழந்தைகளை தேர்ந்தெடுக்கும் வேலை, அதற்கு இரண்டு மாதங்கள் முன்பாகவே ஆரம்பித்துவிடுகிறது. அந்தக் குழந்தைகள் யார், அவரது பெற்றோர்கள் யார், விழா நாளன்று எப்படி நடந்துகொள்ள வேண்டும், என்ன பேச வேண்டும் என்றெல்லாம் ஏராளமான முன் தயாரிப்புகள் உண்டு. ஜனாதிபதியிடம் கேட்க விரும்பும் கேள்விகளை முன் கூட்டியே எழுதி வாங்கி விடுகின்றனர். விழா நடக்கிற தினத்தில் ஜனாதிபதி வருவதற்கு பல மணி நேரத்திற்கு முன்பே அரங்கத்தில் அல்லது அறைக்குள் அடைக்கப்பட்டு விடுகின்றனர். பல இடங்களில் ஜனாதிபதியை வரவேற்க பள்ளி மாணவிகள் கொளுத்தும் வெயிலில் பல மணி நேரம் கால் கடுக்கக் காத்துக் கிடக்கின்றனர். இதிலிருந்தெல்லாம் இனி அவர்களுக்கு விடுதலை. ( தன் பதவிக்காலத்தில் ஏராளமான குழந்தைகளை சந்தித்த கலாம், இந்த சீரற்ற கல்விமுறை குழந்தைகளின் எதிர்காலத்துக்கு உகந்ததுதானா.. குறைந்தபட்சம் தான் விரும்பும் வல்லரசை உருவாக்க இந்த கல்விமுறை போதுமானதா என்று ஒரு முறை கூட கேள்வி எழுப்பியதில்லை..)

5. ‘இந்தியாவோட ஜனாதிபதியே ஒரு முஸ்லிம்தான்.. அப்புறமென்ன..?’ என்ற காவிகளின் போலி கூக்குரல் ஒழியும். முதலாளியே தொழிற்சங்கம் அமைப்பதுபோல, காவிக்கூட்டத்தால் முன்னிருந்தப்பட்ட ‘சிறுபான்மையினரின் பிரதிநிதி’யான அப்துல் கலாம் ஜனாதிபதியாக இருந்ததற்காக சங் பரிவாரங்கள் வேண்டுமானால் பெருமை கொள்ளலாமே ஒழிய, இஸ்லாமியர்கள் பெருமை கொள்வதற்கு எதுவுமில்லை.

6. புத்தர் சிரிப்பார்.

இனி அப்துல் கலாம் என்ன செய்யலாம்..?

1. ‘கனவு காண்பது எப்படி..?’ என்றோ, ‘கனவுகளும், அதன் பலன்களும்’ என்றோ இந்தியாவின் எல்லா மொழிகளிலும் புத்தகம் எழுதலாம். ஒவ்வொரு எலிமண்ட்ரி ஸ்கூலிலும் போய் அதனை விற்பனை செய்யலாம்.

2. ஊர், ஊருக்கு கனவு காண்பது எப்படி என்று பயிற்சி பட்டறை நடத்தலாம். அவரே நேரடியாக கனவு கண்டு செய்முறை பயிற்சி அளிக்கலாம்.

3. காசியிலோ, கங்கையிலோ குடிசை அமைத்து ‘வல்லரசு நமக, வல்லரசு நமக’ என்று யாகம் செய்யலாம்.

4. தன்னை ஒரு முழுமையான சுயம் சேவக் என அறிவித்துவிட்டு, ராமேஷ்வரம் டூ ராஷ்ட்ரபதி பவன் ரத யாத்திரை போகலாம்.

5. வாஜ்பாயை செவ்வாய் கிரகத்துக்கு அழைத்துச் சென்று மூட்டு வலிக்கு மருந்து போடலாம்.

6. ஷங்கர் இயக்கும் அடுத்த படத்தில், ‘அப்துல் கலாம்னா, தொப்பி வச்சுக்கிட்டு தொழுகை பண்ணுவேன்னு நினைச்சியா..? என் பழைய ரெக்கார்ட்ஸையெல்லாம் எடுத்துப் பாரு..’ என்று சுஜாதா எழுதும் வசனத்தைப் பேசி ஒரு கெஸ்ட் ரோல் பண்ணலாம். செவ்வாய் கிரகத்தில் குவிந்து கிடக்கும் கறுப்புப் பணத்தை 2020-க்குள் ஒழிப்பது குறித்து அடுத்த படம் எடுக்க ஷங்கரை வற்புறுத்துவதோடு, அதற்கான விஞ்ஞான பூர்வ திரைக்கதையை சுஜாதாவோடு இணைந்து தயாரித்து அரங்கனின் காலடியில் வைத்து சேவிக்கலாம்.

7. ‘குடிமகனாய் இருக்கும் நீங்கள் முதல் குடிமகனாக மாறுவது எப்படி..?’ என மணிமேகலை பிரசுரத்தில் புத்தகம் போடலாம்.

8. குமுதத்தில் எப்படியாவது இடம் பிடித்து, ‘கண்ணைத் திற.. கனவு வரட்டும்’ என ஆன்மிகம் கலந்த அறிவியல் தொடர் எழுதலாம்.

9. ‘ராமேஸ்வரம் ராமநாத ஸ்வாமி கோயிலுக்கும் எனக்கும் பதினாலு தலைமுறை உறவு இருக்கு. அதனால என்னை அங்க அர்ச்சகரா நியமிக்க சிபாரிசு பண்ணனும்’ என காஞ்சி ‘காம’கோடி சங்கராச்சாரியிடம் அப்ளிகேஷன் கொடுக்கலாம்.

10. மலைச்சாமி தேர்தல் கமிஷனராக இருந்து பதவிக்காலம் முடிந்ததும் அ.தி.மு.க.வில் சேர்ந்து சேவை செய்ததைப் போல அப்துல் கலாமும், அ.தி.மு.க.வில் சேரலாம். கட்டாயம் அம்மா, ஒரு ராஜ்யசபா எம்.பி. பதவியாவது தருவார்.

11. சாய்பாபா வாயில் லிங்கம் வருவது எப்படி என்று பாபா வாயில் அணுகுண்டு வைத்து வெடித்து ஆராய்ச்சி செய்யலாம். இந்த ஆபரேஷனுக்கு ‘பாபா மரித்தார்’ என பெயர் வைக்கலாம்.

அப்துல் கலாம் ஜனாதிபதியாக இல்லாததால் யார் யாருக்கெல்லாம் நஷ்டம்..?

1. பத்திரிகை கார்ட்டூனிஸ்டுகளுக்கு ஒரு கோமாளி கேரக்டர் போய்விட்டது.

2.சிறந்த முறையில் சிட்டுக்குருவி லேகியம் விற்பவர், பத்து நிமிடத்தில் நூறு நாடுகளின் தலை நகரங்களை ஒப்புவிக்கும் சிறுமி போன்றவர்களுடன், கூட நின்று புகைப்படம் எடுப்பதற்கு சளைக்காமல் போஸ் கொடுக்கும் ஒரு நபர் இனி கிடைக்க மாட்டார்.

3. ஊத்தவாயன் ஜெயேந்திரனுக்கும், வணங்காமுடி சாய்பாபாவிற்கும் அவர்களின் வி.ஐ.பி. அடிமை பக்தர்களில் ஒருவர் குறைந்துவிடுவார்.

பி.டி கத்திரிக்காயும் – பி.ஜே.பி வெங்காயமும் !!


அண்மை காலமாக ஒரு வித்தியாசமான காட்சியை நாம் காண்கிறோம். மரபணு மாற்றப்பட்ட விதைகளுக்கு எதிரான போராட்டங்கள் இந்தியா முழுவதும் பல தரப்பினரால் பரவலாக நடத்தப்படுகின்றன. அறிவுத்தள செயற்பாட்டாளர்கள், தன்னார்வக் குழுக்கள், இயற்கை வேளாண் விசுவாசிகள், ஊடகங்கள், அரசியல் கட்சிகள், பத்தி எழுத்தாளர்கள், நடிகர்கள் என யூகிக்கவே முடியாத பல தரப்பினரும் மரபணு மாற்ற விதைகளுக்கு எதிராக குரல் கொடுக்கின்றனர்.

போராட்டம், எதிர்ப்பு என்பதை எல்லாம் வாழ்வில் அறிந்தே இராத உயர் மேல்தட்டு கல்லூரி மாணவ, மாணவிகள் கூட இதற்காக பேசுகின்றனர். இப்போராட்டங்கள் தொடர்பாக நாள்தோறும் ஊடகங்களில் வெளியாகும் செய்திகளைப் பார்த்தால் ‘திருந்திட்டாய்ங்களோ’ என்றே எண்ணத் தோன்றுகிறது.

நம்மாழ்வார் உள்ளிட்ட இயற்கை விவசாயத்தை வலியுறுத்துபவர்கள் இதற்காகப் பேசுவதை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் பா.ஜ.க.வின் இல.கணேசன், மரபணு மாற்றப்பட்ட விதைகளுக்கு எதிராக மாய்ந்து, மாய்ந்து குரல் கொடுக்கிறார். ஆர்.எஸ்.எஸ். கூட இதை கண்டிக்கிறது. இது தொடர்பான செய்திகளை ஊடகங்கள் கூடுதல் முக்கியத்துவம் தந்து பிரசுரிக்கின்றன. குறிப்பாக இந்துத்துவ, பார்ப்பன ஊடகங்கள் என்றுமில்லாதக் கூத்தாக மரபணு மாற்றப்பட்ட விதைகளுக்கு எதிராக பிரசாரமே செய்கின்றன.

பொதுவாக இத்தகைய தனது ஏகாதிபத்திய தரகு வேலைகளுக்கு எதிர்ப்புகள் வரும்போது அதை ஒரு பொருட்டாக மதிக்காமல் கடந்து செல்வது அல்லது போலீஸ் லத்தி மூலம் பதில் சொல்லி அடக்கி ஒடுக்குவது என்பதுதான் ஆளும்வர்க்கத்தின் காலம் காலமான வழிமுறை. ஆனால் அந்த அரசு கூட மரபணு மாற்றப்பட்ட விதைகளுக்கு எதிரான போராட்டங்களுக்கு அஞ்சுவது போல நடிக்கிறது. ‘பி.டி. கத்தரிக்காயை சந்தையில் விற்பனை செய்வதை தற்காலிகமாக நிறுத்தி வைக்கிறோம்’ என பெயரளவுக்கேனும் மத்திய அரசு சொல்ல வேண்டியிருக்கிறது. புறத்தோற்றத்தில் இப்போராட்டங்களுக்கு வெற்றி கிடைத்திருப்பதைப் போன்று ஒரு சித்திரத்தை உருவாக்க இவ்வரசு முனைகிறது. உள்ளடக்கத்தில் அது தீவிர முனைப்போடு இருக்கிறது என்பது வேறு விசயம்.

சரி, என்னவாயிற்று இவர்களுக்கு எல்லாம்? பா.ஜ.க.வும், அதிகார வர்க்கமும் திடீரென உலகமயமாக்கல் கொள்கைகளுக்கு எதிராக மாறிவிட்டார்களா? இந்தியாவின் உணவு இறையாண்மையை காலில் போட்டு நசுக்கும் மரபணு மாற்ற விதைகளின் பின்னுள்ள முதலாளித்துவ நச்சு அரசியலை புரிந்துகொண்டுவிட்டார்களா? ‘மாண்சாண்டோவில்தான் கொஞ்சம் கவனப்பிசகாக இருந்துவிட்டோம். இப்போதேனும் விழித்துக்கொள்வோம் அல்லது பி.டி.காட்டன் என்ற கொலைகார விதையின் மூலம் நூற்றுக்கணக்கான விவசாயிகளை சாகக் கொடுத்தது போதும். இன்னொரு பி.டி. கத்தரிக்காயைக் கொண்டு வந்து பல ஆயிரம் விவசாயிகளை காவு கொடுக்க வேண்டாம்’ என்பது அவர்களின் எண்ணமா?

ஒரு வெங்காயமும் கிடையாது. மரபணு மாற்ற விதைகளுக்கு கிளர்ந்து வரும் எதிர்ப்பின் பேர்பாதி எங்கிருந்து வருகிறது என்ற திசையைப் பார்த்தால் தெரியும், அவர்கள் அத்தனை பேரும் எப்போதும், எதன் பொருட்டும் மரபுகளை மாற்ற விரும்பாதவர்கள். கோயிலாக இருந்தாலும், கத்தரிக்காயாக இருந்தாலும் அவர்களுக்கு இந்தியாவின் பாரம்பரிய மரபு காக்கப்பட வேண்டும். ராமன் என்றொருவன் வரலாற்றில் இருந்தானா, இல்லையா என்பதே தெரியாது. ஆனால் கடலின் மணல் திட்டை ராமர் பாலம் என்பார்கள். கேட்டால் இந்து மரபு என்பார்கள். கருவறைக்குள் என்னைத் தவிர வேறு எவனும் நுழையக்கூடாது என்பது இந்திய மரபு. அதை மாற்றினால் இவர்களுக்குப் பிடிப்பதில்லை. தமிழ் பெண்கள் அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்ற தமிழ் மரபின் குணங்களுடன் வாழ வேண்டும். மீறினால் ‘தமிழனுக்கு சொரணையே இல்லைங்க’ என்று தங்கர்பச்சான் ரப்பர் ஸ்டாம்புடன் கிளம்பிவிடுவார் ‘யார் தமிழன்?’ என சீல் குத்த.

ஆண்களின் உடலுக்கு வெளியே இருக்கும் உபரி உறுப்பாகவே பெண்கள் நடத்தப்படுவதும், ஆதிக்கச்சாதிக்காரன் தலித் மக்களை அடிமைச் சேவகம் செய்ய வலியுறுத்துவதும், ஆண்டைகளுக்கு பணிந்து நடக்க ஏழைகள் பணிக்கப்படுவதும், மத, மொழி, இன மற்றும் பாலியல் சிறுபான்மையினரை விளிம்பில் தள்ளி அவர்களின் தினவாழ்வை அச்சத்துக்கு உள்ளாக்குவதும் இந்திய மண்ணின் மரபுகள்தான். அவை மீறப்படும்போதும் பதற்றமான குரல்கள் மேலெழும்பும். தற்போதைய மரபணு மாற்ற விதைகளுக்கு எதிரான குரல்களின் சரிபாதி அத்தகையவே.

“உங்களுக்கு இதே பொழப்புடா. எவனையும் ஒண்ணு சேர விட மாட்டீங்களே. அவன் மத்த விசயத்துல எப்படியாவது இருந்துட்டுப் போறான். பி.டி. கத்தரிக்காயை எதிர்க்கிறது நல்ல விசயம்தானே… அதுக்குள்ளேயும் எதுக்குப் பூணூலை தேடுறீங்க?” என்பது உங்களில் சிலரது உடனடி எண்ணமாகவும், எதிர்வினையாகவும் இருக்கக்கூடும். சரி, ஒரு வாதத்துக்காக பி.டி.கத்தரிக்காயை எதிர்க்கும் எல்லோரும் போராளிகள், சமூக நலனின் அக்கறைக் கொண்டவர்கள் என வைத்துக்கொள்வோம். இவர்களுக்கு இந்த நாட்டின் கத்தரிக்காய் வளம் பறிக்கப்படுவது பற்றி மட்டும்தான் கவலையா? அதற்கு முன்னும், பின்னும் இம்மண்ணின் வளங்கள் சூறையாடப்பட்டுக்கொண்டேதான் இருக்கின்றன.

இதோ… சமகாலத்தில் சட்டீஸ்கர், ஜார்கண்ட் காடுகளில் பல லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள கனிம வளங்களை பன்னாட்டு நிறுவனங்கள் கொள்ளையிட துடிக்கின்றன. மரபுரிமை அடிப்படையில் தண்டகாரன்யா காட்டின் ஆதிவாசிகளுக்கு சொந்தமான காட்டுப்பகுதியில் இருந்து அவர்கள் துரத்தி அடிக்கப்படுகிறார்கள். இதை பன்னாட்டு நிறுவனங்களின் புரோக்கர்களாக இருந்து பிரதமரும், உள்துறை அமைச்சருமேதான் செய்கின்றனர்.

திருநெல்வேலி தாமிரபரணி ஆற்றின் நீர்வளம் முழுவதையும் ரத்தம் உறிஞ்சுவதைப் போல கோக்கோகோலா நிறுவனம் இன்னமும் உறிஞ்சிகொண்டேதான் இருக்கிறது. அருகாமை மாநிலங்கள் சொந்தம் கொண்டாட முடியாத, தமிழ்நாட்டில் உற்பத்தியாகி, இங்கேயே கடலில் கலக்கும் ஒரே நதியான தாமிரபரணியின் வளம் மரபு ரீதியாக கோககோலாவுக்கு சொந்தமா, தமிழ் மக்களுக்கு சொந்தமா? தண்டகாரண்யாவிலும், தாமிரபரணியிலும் நமது பூர்வீக மரபுரிமை பறிக்கப்படுவதற்கு எதிராக இந்த மரபின் மைந்தர்கள் என்ன செய்து கிழித்தார்கள்? ஒரு கண்டனம், ஒரு அறிக்கை, ஒரு போராட்டம்… எதுவுமில்லை.

1987-ல் அமெரிக்காவில் முதன் முதலில் மரபணு மாற்ற உயிரினம் உருவாக்கப்பட்டது. நாம் கண்ணாடித் தொட்டிகளில் பார்க்கிற வண்ண மீன்கள்தான் இந்த உலகின் முதல் மரபணு மாற்ற உயிரினம். அவை வெறுமனே அழகுக்கானவை என்பதால் உடனடியாக ஆபத்துத் தெரியவில்லை. கொத்த வரும் சர்ப்பம் கூட அழகுதான். இந்த மரபணு மாற்றம் என்ற சர்ப்பம் முதலாளிகளின் கண்களுக்கு மிகப்பெரிய கர்ப்பகத்தருவாக தெரிந்தது. அதன் பிறகு அவர்கள் உருவாக்கியதுதான் பிராய்லர் கோழிகள். கோழியின் சதைப்பகுதி மட்டும் அதிகமாக வரும்படி அதன் மரபணுவை மாற்றியமைத்து பிராய்லர் கோழிகளை உருவாக்கினார்கள். எது விற்பனையாகிறதோ அதன் உற்பத்தியை பெருக்குவது இயல்பான உற்பத்தியாளர் உத்தி. ஒரு வருடம் உளுந்து அதிகம் விலைபோனால் அடுத்த வருடம் பெரும்பாலான விவசாயிகள் உளுந்து பயிரிடுவது வழக்கம்தான். ஆனால் ஒரு உயிரினத்தின் உடல் அமைப்பையே விற்பனைக்கேற்ப மாற்றுவதன் பின்னால் இருக்கும் லாபவெறியின் கொடூர முகத்தைப் பாருங்கள்.

இன்றைய நுகர்வு கலாசாரத்தில் மனித உடம்புக்கும், பிராய்லர் கோழிக்கும் ஆறு வித்தியாசங்கள் கூட கிடையாது. பிராய்லர் கோழிக்கு சதை அதிகமாக வரும்படி மரபணு மாற்றியமைக்கப்பட்டிருக்கிறது என்றால் கண்டதையும் வாங்கிக்கொண்டே இருக்கும்படி மனிதனின் மூளை மாற்றியமைக்கப்பட்டிருக்கிறது. நிறுவனங்கள் தங்களின் பொருட்களுக்கு ஏற்றதுபோல வாழ்வதற்கு மக்களை பழக்கியிருக்கிறார்கள்.

கிராமங்களில் மாடு மேய்ப்பதில் இரண்டு வகை உண்டு. மாட்டை புல் உள்ள இடத்தில் மேயவிட்டு ஓட்டி வருவது ஒரு வகை. வெள்ளாமை வயல்களின் வரப்புகளுக்கு நடுவே பசும்புல்லை மாட்டை கையில் பிடித்தபடி மேயவிடுவது இன்னொரு வகை. ‘பிடி மாடு மேய்ப்பது’ என்றிதைச் சொல்வார்கள். இன்றைய சந்தை உலகில் நிறுவனங்கள் மேய்க்கும் பிடிமாடுகளாகத்தான் இருக்கின்றனர் மனிதர்கள். ஆகவே பிராய்லர் கோழியை தின்பதால் நீங்கள் அதை விட பெரிய ஆள் என்ற எண்ணம் எல்லாம் வேண்டாம். நீங்களும் ஒரு பிராய்லர் கோழியே.

சரி, இப்படி கோழியின் மரபணுவை மாற்றினார்களே… அப்போது இந்த so called எதிர்ப்பாளர்கள் எங்கேப் போனார்கள்? ‘கோழிக்கறியை மாத்தினா எங்களுக்கு என்ன? அதெல்லாம் அவா ஃபுட். கத்தரிக்காய்தான் எங்க ஃபுட்’ என்பதாக இதைப் புரிந்துகொள்ளலாமா? உண்மையில் பி.டி. கத்தரிக்காய் என்ற மரபணு மாற்றப்பட்ட விதைகளை நாம் முழு வீச்சோடு எதிர்க்க வேண்டும். இன்று பரவலாக பி.டி.கத்தரிக்காய் என்ற வார்த்தையே அறியப்படுகிறது.

Bacillus Thuringiensis என்ற வைரஸின் சுருக்கம்தான் பி.டி. இந்த வைரஸை கத்தரிக்காயின் மரபணுவில் செலுத்தி அதன் தன்மையை மாற்றுகின்றனர். ஏன்? இந்திய கத்தரிக்காயில் தண்டு துளைப்பான் புழு அதிகமாக இருக்கிறதாம். ’ஆகவே அந்தப் புழுவை எதிர்க்கும் விதமாக கத்தரிக்காயின் மரபணுவை மாற்றி அமைத்திருக்கிறோம்’ என இதற்கு விளக்கம் சொல்லப்படுகிறது. ஆனால் நடைமுறை யதார்த்தம் வேறாக இருக்கிறது. இதே போன்றதொரு ’பூச்சி தாக்காது’ காரணத்தை சொல்லிதான் முன்பு பி.டி.பருத்தியை அறிமுகப்படுத்தினார்கள். ஆனால் அந்த பருத்தி முன்னெப்போதும் இல்லாததைவிட மிகப்பெரிய நஷ்டத்தை பரிசளிக்கவே ஆந்திராவிலும், மஹாராஷ்டிராவிலும் பல ஆயிரம் விவசாயிகள் தற்கொலை செய்து மாண்டுபோனார்கள்.

விசயம் என்னவெனில் எந்தவொரு பூச்சியினமும் மருந்தின் தன்மைக்கு மிக விரைவில் பழகிவிடும். பின் அதைவிட வீரியமான மருந்தைதான் தெளிக்க வேண்டும். இவர்கள் மரபணுவை மாற்றி உருவாக்கிய விதைக்கும் இது பொருந்தும் என்பதால் அவ்விதைகள் மிகக் குறைவான நோய் எதிர்ப்பு சக்தியைக் கொண்டிருந்தன. எளிதாக நோய்த் தாக்குதலுக்கு உள்ளாகின. பி.டி.பருத்திக்கு நேற்று இதுதான் நடந்தது. நாளை பி.டி.கத்தரிக்காய்க்கும் இதுதான் நடக்கும்.

மரபணு மாற்ற விதைகளை ஒரு கிராமத்தில் ஒரு விவசாயி தன் நிலத்தில் பயிரிடுகிறார் என்று வைத்துக்கொள்வோம். அருகாமை வயல்களில் வேறு எந்த தாவரம் பயிரிட்டிருந்தாலும் அதன் மரபணுவிலும் தானாகவே மாற்றம் நிகழும். தொற்றுநோய் மாதிரி. ஆக, ஒரு ஊரில் ஒரே ஒரு விவசாயி இதைப் பயிரிட்டாலும் மெல்ல, மெல்ல அப்பிராந்தியத்தின் தாவர மரபணு சூழல் மாறுதலுக்குள்ளாகும். வேறு வழியே இல்லாமல் மரபணு மாற்ற விதைகளை விற்கும் நிறுவனங்களிடம் போய் நிற்க வேண்டும். அவன் சொல்வதை எல்லாம் கேட்க வேண்டும். ஒட்டுமொத்த இந்திய விவசாய நிலங்களையும் மோனோபோலியாக ஆட்சி செலுத்துவார்கள். மரபணு மாற்ற தாவரங்களுக்கான விதைகளுக்கும் அந்த நிறுவனங்களையே சார்ந்திருக்க வேண்டும்.

விளைந்ததை விதையாகப் பயன்படுத்த முடியாது. ’பயன்படுத்தவும் கூடாது’ என்கிறது இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையேயான India-US knowledge initiative on Agriculture என்ற ஒப்பந்தம். 1,2,3 அணு ஒப்பந்தம் சமயத்தில் அமெரிக்காவுடன் கையெழுத்தான இந்த ஒப்பந்தத்தின்படி இந்தியாவின் பாரம்பரிய விவசாயத்தைக் காப்பாற்ற அமெரிக்கா தொழில்நுட்ப உதவி செய்யுமாம். இந்தியா இதற்கான நிதி ஆதாரத்தை உருவாக்கித் தருமாம். வருடத்துக்கு 350 கோடி ரூபாய். இந்திய மரபை காப்பாற்ற அமெரிக்காவுக்குக் காசு தரும் இந்த அறிவாளிகளை என்ன செய்வது? இந்த ஒப்பந்தம் இம்மியளவும் மாற்றமில்லாமல் அப்படியேதான் இன்னமும் அமுலில் இருக்கிறது. மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் சும்மாவேனும் எதிர்ப்புகளை மட்டுப்படுத்தும் தந்திரமாக ‘தற்காலிகத் தடை’ என்கிறார். மரபா, லாபமா என்றால் அவர்கள் லாபத்தின் பக்கமே சாய்வார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

மேற்சொன்ன இந்திய-அமெரிக்க ஒப்பந்தத்தில் ஒட்டுமொத்த மனித குலத்துக்கும் எதிரான மிக மோசமான அம்சங்களும் அடக்கம். பொதுவில் அனைத்துலக சட்டங்களின்படி தாவரங்கள், விலங்குகள் உள்ளிட்ட எந்த ஒரு உயிரினத்துக்கும் தனி சொத்துரிமை கோர முடியாது. இவர்கள் மரபணு மாற்றத்தின் மூலம் சிற்சில மாற்றங்களை விதைகளில் ஏற்படுத்தி அவற்றை தங்களின் அறிவுசார் சொத்துரிமையாக மாற்ற முனைகின்றனர். இதன்மூலம் உயிரினங்களுக்கும் காப்புரிமை பெறத் துடிக்கின்றனர்.

ஒட்டுமொத்த உயிர்ச்சூழலையும் லாபத்துக்கு ஏற்றவாறு மாற்றியமைக்க முயலும் இந்த லாபவெறிக்கு எதிராக நாம் அனைவரும் எதிர்குரல் எழுப்ப வேண்டும். நமது எதிர்ப்புகளை உழைக்கும் விவசாயிகளுடன் பொருத்திக்கொள்ள வேண்டுமே தவிர, மரபின் மைந்தர்களுடன் அல்ல!

தீட்டென்பவனை நாப்கின் கழற்றி அவன் வாயில் அடி..


தீட்டென்பவனை
நாப்கின் கழற்றி
அவன் வாயில் அடி..
நினைவுக்கு வரட்டும்
அவன் பிறப்பு..

-பொளேரென்று செவியில் அடித்தாற்போல பாய்கின்றன வார்த்தைகள்.நெருப்பு பறக்கிறது.வாசிக்க ஆரம்பித்த கணத்திலேயே நம்மை ஆட்கொள்கிறது.அது ‘கொஞ்சூண்டு..’ என்ற தலைப்பிலான கவிதை தொகுதி.திண்டுக்கல் தமிழ்பித்தன்,தயா கவிசிற்பி என்னும் இருவர் சேர்ந்தது உருவாக்கியிருக்கும் புத்தகம்.(தலைப்பில் ‘கொஞ்சூண்டு’ என்ற வார்த்தைக்கும் மேலே சின்னதாக 2 என்று எழுதியிருப்பது நல்ல ரசணை).சிறிய கையடக்க நூல்.ஹைக்கூ வடிவத்தில் பெரும்பாலும் நிலா,வானம்,காதலி,நாய்குட்டி என்று்தான் எழுதப்பார்த்திருக்கிறோம்.இது முற்றிலும் வேறு தளம்.புத்தகமெங்கும் ரணம் பொங்கும் தலித்துகளின் வாழ்க்கை விரவிக்கிடக்கிறது.

செண்ட் பூசிய பணக்கார பிணம்..
துர்நாற்றமடிக்கிறது
எரிக்கையில்..

உறக்கம் பிடிக்கவில்லை..
கனவிலும்
பீ துடைப்பம்..

நாத்தம் குடல புரட்டுது..
சகிச்சுகிட்டு சுத்தப்படுத்தினோம்..
மறுபடியும் அவிய்ங்க பேல.

கருவறை நுழைய அனுமதியில்லை..
கையில ஆயுதமிருந்தும்,
நிராயுதபாணியாய் எங்கள் குலசாமிகள்..

-என்று ஏராளமான கொதிப்போடு சொல்லும் அவர், உச்சகட்டமாக சொல்கிறார் இப்படி.

இட ஒதுக்கீடு வேண்டாம்.
வா…வந்து
நீயே பீ அள்ளு..

-அதிர்ந்து நிமிர்கையில் இடஒதுக்கீடுபற்றி மேலும் அறைகிறார் இப்படி.

வேகாததை
புரட்டிபோடு..
வெந்தது மேலே வரட்டும்..

-இட ஒதுக்கீட்டின் நியாயங்களை இதைவிட எளிமையாக யாரும் சொல்லிவிட முடியாது.இப்படி அவரின் எல்லா கவிதைகளுமே நாட்டின் நடைமுறைக்குத் தேவையான அரசியலை முன்வைக்கின்றன.அழகியல் மட்டுமே கவிதைக்கான பாடுபொருள் இல்லை..நாட்டின் தேவை அதுவல்ல..இதை ஒவ்வொரு கவிதையிலும் உணர்த்துகிறார் தமிழ்பித்தன்.

ஒருமுறை பிய்ந்தது ஹை-ஹீல்ஸ்..
பின்னால் முட்டவில்லை,
ஆண்குறி..

நிலவல்ல, மலரல்ல,
நான் பெண்..
த்தூ…நீதான் ஆண்.

புலியை முரத்தால் அடித்தாள்..
சாதனையல்ல-அது
பெண் இயல்பு..

கள்ளிப்பாள் குடித்தும்
சிரித்தது குழந்தை..
அழுதாள் தாய்..

நீ இந்து.
நானுமா இந்து..?
வா கும்பிடுவோம் முனியப்பனை..

வாழ்கிறபோது நரகம்
செத்தபின் சொர்கம்
செருப்பால் அடி கற்பிக்கிறவனை..

பிறப்பு ஒரு முறைதான்
ஏன் சுமந்தாய் சிலுவையை
கழற்றி அடிக்காமல்..

சூழ்ச்சி சண்டை
பாபருக்கும்-ராமருக்கும்
எங்கள் மண்ணை பிடிக்க..

மரத்தினால்
நிழல்,மழை,கூடு-ஒரு
கோடறி..

நாயை விடு..
பூனையிடம் கற்றுக்கொள்..
தேவை விசுவாசமல்ல;எதிர்ப்பு

நிழல் மறு
வெயில் காண்பி
வியர்வையை அறிமுகம் செய்..

மொத பார்வ..
பயங்காட்டுது
கடல்..

தெரியாமல் மிதித்தேன்
மிதித்ததும் கடித்தது
எறும்பு

கொஞ்சூண்டு மழை
துளிர்த்துகிடுச்சு
முள்ளுசெடி..

பன்றி பீ திண்ணும்.
முடிவுக்கு வராதே..
காய்கறி கொடுத்துப் பார்.

சுமைக்குள் உடல்
உயரத்தில் ஏறுகிறது
நத்தை..

பசியால் செத்த பிணம்
கல்லறை மீது
படையல்..
-மேலுள்ளவை எல்லாம் தமிழ்பித்தனின் கவிதைகள்.அவரோடு இணைந்து எழுதியிருக்கும் தயா கவிசிற்பியும் ஒன்றும் சளைத்தவரில்லை.அவரது கவிதைகளில் சில…

புனிதநூல்.
பக்கங்கள் புரட்டுகின்றன
எச்சில் விரல்கள்.

நாத்து நடாத
கதிர் அறுக்காத சாமிக்குப் பேரு
அன்னலட்சுமி..

பீ கூடையில்
சோத்துசட்டி..
விஞ்ஞானம் வளர்கிறதாம்..த்தூ…மசுரு..

தேசபக்தி… அயோக்கியர்களின் கடைசி முகமூடி …


தேசபக்தி என்பது இன்றைக்கு வியாபாரம் செய்வதற்கு தோதான ஒரு பிராண்ட். கோககோலா, பெப்ஸி, ரிலையன்ஸ், இந்துஸ்தான் லீவர், ஹமாம் போல தேசபக்தியும் ஒரு பிராண்ட். இது அனைத்து பெருமுதலாளிகளுக்குமான அமுத சுரபி. பன்னாட்டு நிறுவனங்களும், பெரும் முதலாளிகளும் கோடிகளை செலவழித்து நடிகர், நடிகைகளை வைத்து தங்கள் பொருளுக்கு கொடுக்க முடியாத விளம்பரத்தை தேசபக்தியின் பெயரால் மிக எளிதாக செய்கிறார்கள். குறிப்பிட்ட பிராண்ட் துணி அணிந்தால், குறிப்பிட்ட பிரஷ்ஷர் குக்கர் வாங்கினால் நீங்கள் உண்மையான தேசபக்தர். இந்திய சுதந்திரத்தின் 50&ம் ஆண்டு பொன்விழா கொண்டாட்டங்களின்போது தொலைகாட்சி நிகழ்ச்சிகளுக்கு ஸ்பான்ஸர் செய்த கோல்கேட் நிறுவனம் ‘வந்தே மாதரம், ஸ்பான்ஸர்டு பை கோல்கேட்’ என்று சொல்லிக்கொண்டது. பாரதமாதாவுக்கும், வந்தே மாதரத்துக்கும் பன்னாட்டு நிறுவனங்கள் ஸ்பான்ஸர் செய்ய ஆரம்பித்து வெகு காலமாகிறது.

கொஞ்சம் கவனித்தால் நாட்டில் கிரிக்கெட் காலங்களிலும், இன்ன பிற விழா காலங்களிலும் தேசபக்தியின் அடர்த்தி கூடிவிடும். அப்போது மட்டும் தேச பக்தியின் பெயரால் சாமியாடுவார்கள். ஆனால் மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பங்கீட்டில் இந்திய தேசியம், தேசபக்தி என்பதெல்லாம் டவுசர் கிழிந்து தொங்குகிறது. இந்த வெறியூட்டப்பட்ட தேசபக்தியின் உச்சகட்ட வடிவம்தான் கிரிக்கெட். அதிலும் குறிப்பாக பாகிஸ்தான் உடனான கிரிக்கெட் போட்டி என்பது தேசபக்தியை மிக அதிக விலைக்கு விற்கக் கிடைத்திருக்கும் சந்தை. இந்த சந்தையை தங்கு தடையில்லாமல் நிறுவுவதற்காகதான் பாகிஸ்தான் என்னும் தேசத்தையும், அதன் மக்களையும் இந்திய எதிரிகளாக கட்டமைக்கிறார்கள். இதன் இந்தியப் பதிப்பாக முஸ்லீம் விரோதம் வளர்த்தெடுக்கப்படுகிறது. இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே கிரிக்கெட் போட்டி நடக்கும்போது ‘என்ன இருந்தாலும் நீ பாகிஸ்தானுத்தான் சப்போர்ட் பண்ணுவே’ என்று கிரிக்கெட் பார்க்கும் இந்திய முஸ்லீம்களை நோக்கி வார்த்தைகள் வீசப்படுவதை நீங்கள் கேட்டிருக்கலாம். இதன் மூலம் முஸ்லீம்களுக்கு தேசபக்தி இருக்காது, இருக்கத் தேவையில்லை என்ற கருத்தை கட்டமைத்து, இந்திய தேசபக்தி தனக்கான எதிர்வுகளை நிறுவுகிறது. ‘பாகிஸ்தானுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் போட்டி: பழி தீர்க்குமா இந்தியா?’ என்று ஊடகங்கள் தங்கள் பங்குக்கு வெறியூட்டுகின்றன.

அனுதினமும் அதிகாரம் மக்களுக்கு துன்பங்களையே பரிசளித்து வருகிறது. இவற்றை மக்கள் உணரவிடாமல் செய்யவும் தங்களின் பொறுக்கித் திண்ணும் பிழைப்பை மூடி மறைத்துக்கொள்ளவும் அதிகார வர்க்கத்துக்கு தேசபக்தி பயன்படுகிறது. எல்லையோரத்தில் துப்பாக்கிக்களுக்கு இரையாகும் அப்பாவி ராணுவ வீரன் தேசபக்தியாளனாகக் கொண்டாடப்படுகிறான். இதன்மூலம் அவனை கொன்றது அரசதிகாரம்தான் என்ற உண்மை மறைக்கப்பட்டு தேசபக்தியின் பெயரால் ஒரு கொலை, தியாகமாக்கப்படுகிறது.

இப்படி அதிகாரம் தயாரித்து வழங்கும் தேசபக்தியை கேள்விகளுக்கு அப்பாற்பட்டு நிறுவும் நிறுவனமாக செயல்படுகின்றன இந்திய நீதிமன்றங்கள். ஈழப்போர் உச்சத்தில் இருந்தபோது தமிழ் தேசியப் பொதுவுடைமைக் கட்சியும், தமிழர் விடுதலை இயக்கமும் தமிழ்நாடு முழுக்க இந்திய தேசியக் கொடியை எரிக்கும் போராட்டங்களை நடத்தின. இந்த வழக்கில் தொடர்புடையவர்களுக்கு பிணை வழங்கும்போது ‘இவர்கள் இந்திய தேசிய கொடியை அவமதித்திருக்கிறார்கள். அதனால் ஒரு வார காலத்துக்கு தங்கள் வீடுகளின் முன்பு தேசியக் கொடியை ஏற்ற வேண்டும்’ என்பதை பிணைக்கான நிபந்தணையாக விதித்தது நீதிமன்றம். இதற்கு அவர்கள் மறுத்தபோது நீதிபதிகள் கோபப்பட்டனர். தேசியக் கொடி ஏற்றும் நிபந்தணையை மறுபடியும் மறுபடியும் வலியுறுத்தினார்கள். இங்கு தேசபக்தி என்பது கட்டாயமாக்கி ஊட்டப்படுகிறது. இதை, ‘இந்த நாட்டில்தானே வசிக்கிறீர்கள். இந்த நாட்டு அரசாங்கத்தின் சலுகைகளைத்தானே அனுபவிக்கிறீர்கள். பிறகு தேசபக்தி இல்லாமல் இருந்தால் அது குற்றமில்லையா?’ என்ற எளிய தர்க்கத்தின் மூலம் நியாயப்படுத்துகின்றனர். நானும் இந்த நாட்டில்தான் வாழுகிறேன், அம்பானியும் இந்த நாட்டில்தான் வாழுகிறார், அசோக் சிங்காலும், நரேந்திரமோடியும் இந்த நாட்டில்தான் வாழுகின்றனர், வாயில் மலம் திணிக்கப்பட்ட திண்ணியம் முருகேசனும், ராமசாமியும் இந்த நாட்டில்தான் வாழுகின்றனர், எல்லோரும் சமமா? ஒரு அரசு தன் ஆளுகையின் கீழ் வாழும் அனைத்து தேசிய இனங்களையும் சமமாக நடத்த வேண்டும்? அவ்வாறுதான் நடக்கிறதா?

கீழே உள்ளது கயர்லாஞ்சியில் ஆதிக்க சாதியினர் செய்த சித்தரவதையின் சிறு பகுதி….

“குடிசைக்குள் புகுந்த உயர் ஜாதி இந்துக்கள், (பெண்கள் பலரும் அக்கூட்டத்துடன் வந்தனர்.) அவர்கள் அணிந்திருந்த ஆடைகளைக் கிழித்து நிர்வாணப்படுத்திக் கையோடு கொண்டுவந்திருந்த ஆயுதங்களால் கடுமையாகத் தாக்கினர். நால்வரையும் தெருத்தெருவாக இழுத்துச்சென்றனர். ஊர்ப் பொது இடத்திற்குக் கொண்டுவந்து போட்மாங்கேவின் மனைவியையும் மகளையும் கூட்டத்திலிருந்த எல்லா ஆண்களும் மாறிமாறி பாலியல் வல்லுறவுக்குட்படுத்தினர். சூழ்ந்துநின்று இதைப் பார்த்துக்கொண்டிருந்த உயர் ஜாதி இந்துப் பெண்கள் யாரும் தம் ஆண்களின் வெறிபிடித்த இந்த வன்செயலைக் கண்டிக்கவுமில்லை, தடுக்கவும் முற்படவில்லை. பிறகு ஒரு கொடூரமான செயல் அரங்கேறியது. தாயையும் தங்கையையும் புணருமாறு போட்மாங்கேவின் மகன்கள் சுதிருக்கும் ரோஷனுக்கும் கட்டளையிட்டனர். அவர்கள் மறுத்துவிடவே அவர்களின் ஆண் உறுப்புகளைக் கத்தியால் வெட்டினர். பிறகு ரத்தம் தெறிக்கும் அவர்களது உடல்களை ஆகாயத்தில் தூக்கி எறிந்து விளையாடினர். அவர்களது உயிர் பிரியும்வரை நான் முந்தி நீ முந்தி எனப் பலரும் இந்த விளையாட்டில் ஈடுபட்டனர். குற்றுயிராய்க் கிடந்த இரு பெண்களின் குறிகளுக்குள்ளும் மாட்டு வண்டியின் நுகத்தடியில் பொருத்தப்படும் கம்புகளைச் சொருகினர். சிலர் நன்கு கூர்மையாகச் சீவப்பட்ட மூங்கில் குச்சிகளை அடித்துச் சொருகினர். அதிக இரத்தப் போக்கினாலும் தாங்க முடியாத சித்திரவதைகளினாலும் உயிரிழந்த அப்பெண்களது உடல்களைத் தெருவில் வீசிவிட்டுச் சென்றனர்.”

இதைப் படிக்கும்போது ஒரு கணம் உடல் அதிரவில்லையா? ஒரு தலித்தாக இருந்துகொண்டு சொந்த நிலம் வைத்திருந்ததையும், தன் பயிர்கள் மீது உயர்சாதியினர் டிராக்டர் ஏற்றி நாசம் செய்தபோது அதற்கு நியாயம் கேட்டதையும் தவிர போட்மாங்கே செய்த தவறு என்ன? இந்த கொடூரங்களை அரங்கேற்றியவர்களும், செத்துப்போனவர்களும் இந்த நாட்டின் குடிமக்கள்தான். இருவரும் ஒன்றா? ‘இந்த நாட்டின் மீது எனக்கு பற்று இல்லாமல் போனதற்கு நான் காரணம் அல்ல. நான் வாழ்வதற்கு உரிய குறைந்தப்பட்ச உரிமைகளைக் கூட தர மறுக்கும் இந்த நாடுதான் காரணம்’ என்றார் அண்ணல் அம்பேத்கர். அந்த நிலை கொஞ்சமும் குறையாமல் இந்த நாடு என்பது ஆதிக்கத்துக்கும், அதிகாரத்துக்கும் சேவை செய்யும் நிறுவனமாக இருக்கும் நிலையில் தேசபக்தி எப்படி வரும்?

இந்திய தேசபக்தி என்பதே இந்து தேசபக்திதான். இதை இந்திய தேசியம் என்ற கற்பிதத்தின் பெயரால் ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் ஊட்டியதில் காந்திக்கு பெரும்பங்கு உண்டு. ‘நான் ஒரு சனாதான இந்து’ என்று அறிவித்துக்கொண்ட காந்தி இந்திய தேசியம் என்பது இந்து தேசியம்தான் என்பதை பல சமயங்களில் மிக வெளிப்படையாகவே அறிவித்தவர். தலித்கள் அதிகம் வசிக்கும் தொகுதிகளில் இரட்டை வாக்குரிமை வேண்டும் என்ற அம்பேத்கரின் கோரிக்கையை, ‘அப்படி செய்தால் இந்து மதம் பிளவுபட்டு விடும்’ என்று சொல்லி நிராகரித்தவர். பிரிட்டீஷ் அரசு தலித் மக்களுக்கு அந்த உரிமையை வழங்கியபோது அதைக் கண்டித்து உண்ணாவிரதம் இருந்த காந்தி எப்படி இந்த நாட்டு தலித் மக்களுக்கு ‘தேசப்பிதா’வாக இருக்க முடியும்? இப்போது இந்துத்துவா அமைப்புகள் பழங்குடி மக்களிடமும் தங்களின் பாசிச கருத்துக்களை விதைக்கும் வேலையில் இறங்கியிருக்கின்றன. அவர்களின் பழங்குடி கலாச்சாரத்தை நீக்கம் செய்து ஆர்.எஸ்.எஸ். அவர்களுக்கு இந்துத்துவ வகுப்பு எடுக்கிறது. குஜராத்தில் பழங்குடி மக்களைக் கொண்டு முஸ்லீம் மக்களுக்கு எதிரான தாக்குதல்களை மோடி கட்டவிழ்த்து விட்டதை நினைவில் கொள்ள வேண்டும்.

அடிப்படையில் தேசியம் என்பதே மற்றமைகளை மறுக்கிற ஒன்றுதான். அது இந்திய தேசியமாக இருந்தாலும், தமிழ் தேசியமாக இருந்தாலும்… தேசியம் என்ற கருதுகோளே நிபந்தணையற்ற ஜனநாயகத்தை மறுப்பதில்தான் தொடங்குகிறது. அதுவே பின்பு அடக்குமுறையாகவும், அதிகாரமாகவும் மாற்றம் கொள்கிறது. இந்தியா என்பது பல்தேசிய இனங்களின் சிறைக்கூடமாக இருப்பதையும் நாம் இந்த பின்னணியில் இருந்துதான் வாசிக்க வேண்டியிருக்கிறது. இந்தியா என்ற நிலப்பரப்புக்கு எவ்வகையிலும் சம்பந்தப்படாத வட கிழக்கு மாநில மக்களை இந்திய தேசிய வரையறைக்குள் எப்படி சேர்க்க முடியும்?

ஏறக்குறைய அனைத்துப் பார்ப்பனர்களுமே இந்திய தேசியத்தை வலியுறுத்துகின்றனர். தமிழ் தேசியம் பேசும் பார்பனர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு. காரணம் தாங்கள் இந்த மண்ணின் பூர்வகுடிகள் இல்லை என்ற உண்மையை அவர்களின் அடிமனம் எப்போதும் நினைவூட்டிக்கொண்டே இருக்கிறது. தங்களுக்கு என்ற சொந்த நாடு இல்லாத அவர்களின் மனநிலையானது அடுத்தவன் ஒரு நாடு அடைவதையும் தடுக்கிறது. அதனால்தான் பெரும்பான்மை பார்ப்பனர்கள் தமிழீழம் என்பதற்கும் எதிராக இருந்தார்கள், இருக்கிறார்கள். இந்த இந்துத்துவவாதிகள்தான் இந்திய தேசியத்தை தேசபக்தியின் பெயரால் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றனர்.

உண்மையில் மக்களின் மனங்களில் இருந்து தேசியம் துடைக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. மக்களுக்கு தேசியவெறி இல்லை. தேச எல்லைகள் தேவையாய் இல்லை. இதற்கு உலகமயமாதல் உட்பட பல காரணங்கள். இந்த நிலைக்கு எதிர்மாறாக உலகம் முழுக்க ஆளும் வர்க்கத்தால் தேசியவெறி திட்டமிட்டு வளர்த்தெடுக்கப்படுகிறது. காரணம் ஆளும் முதலாளிகளுக்கு தேசிய வெறி என்பது மிகத் தேவையான ஒன்று. அழிவின் விளிம்பில் நிற்கும் முதலாளித்துவமானது, தனது இருப்பை எப்பாடுபட்டாவது தக்கவைத்துக்கொள்வதற்காக மக்களிடம் தேசியவெறியை தூண்விடுகிறது. இதை முறியடிக்க வேண்டுமானால் முதலில் நாம் இந்த முதலாளித்துவ தேசியத்தின் துரோகிகளாக மனமாற்றம் கொள்ள வேண்டும். தேசபக்தனில் இருந்து தேசத்துரோகியாக மாறுவது ஒன்றே அறம் சார்ந்த வாழ்வாக இருக்க முடியும்!

-ஆழியூரான்