வக்கிரப் பண்பாட்டை வளர்க்கும் விஷக்கிருமி எது ?


டெல்லியில் துணை மருத்துவ மாணவி, ஓடும் பேருந்தில் சில கிரிமினல்களால் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டு, கொடூரமாகத் தாக்கப்பட்டு உயிரிழந்த நிகழ்வும், அதற்கு எதிராக வெடித்த போராட்டமும் தோற்றுவித்திருக்கும் விவாதங்கள் பல தரப்பட்டவை. ஆனால், அநேகமாக இந்த விவாதங்கள் அனைத்திலும் சரடு போல ஒரு கருத்து இழையோடுகிறது.

“தனியார்மய, தாராளமயக் கொள்கைகள் பெண்களின் முன்னேற்றத்திற்குப் பல்வேறு வாய்ப்புகளை வழங்கியுள்ளன. இதுகாறும் அடுப்படியில் கட்டுண்டிருந்த பெண்களுக்கும் கூடச் சுதந்திரத்தையும், ஜனநாயகத்தையும் வழங்கியுள்ளன; ஆலைகள் முதல் ஐ.டி. துறை வரையிலான பல வேலைகளுக்குப் பெண்கள் போகத் தொடங்கிவிட்டார்கள். இரவுப் பணிகளுக்குப் போகக்கூடாது என்ற மனத்தடைகளையெல்லாம் களைந்து விட்டு, துணிச்சலாக இரவு நேரங்களில் வேலைக்குப் போகிறார்கள். திரைப்படங்களுக்குப் போகிறார்கள். இவ்வாறு தனியார்மயக் கொள்கைகளுக்குப் பின்னர் ஏற்பட்டு வரும் இந்த ‘முன்னேற்றம்’ டெல்லி சம்பவம் போன்றவற்றினால் அச்சுறுத்தப்படுகின்றது.”
சுமங்கலி திட்டம்

“சுமங்கலித் திட்டத்தின்” கீழ் கோயம்புத்தூர் மில்களில் பணியாற்றும் இளம் பெண்கள் தாராளமயத்தின் நவீன கொத்தடிமைகள்

“இது போன்ற குற்றங்களில் ஈடுபடுகின்ற கிரிமினல் சக்திகள், பெண்களின் முன்னேற்றத்திற்கு மட்டுமின்றி, நாட்டின் முன்னேற்றத்திற்கே கூடத் தடைக்கற்கள் தான். எனவே, பெண்களையும் அவர்களது சுதந்திரத்தையும் பாதுகாக்கின்ற வகையில் சட்டங்களை இன்னும் கடுமையாக்க வேண்டும்; இச்செயல்களில் ஈடுபடும் கிரிமினல்களைக் கடுமையாகத் தண்டிக்க வேண்டும்” என்ற கருத்து நடுத்தர வர்க்கம் முதல் மேல்தட்டுவரையுள்ள எல்லா அறிவுஜீவிகள் மற்றும் ஊடகங்களின் பொதுவான கருத்தாகப் பரவி நிற்கிறது.

மறுகாலனியாக்க கொள்கைகள் கொண்டு வரும் முன்னேற்றத்தை ‘இலஞ்ச – ஊழல்’ தடுக்கிறது, அதிகார வர்க்கத்தில் அரசியல் குறுக்கீடு தடுக்கிறது, திறமையற்ற அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் தடுக்கிறார்கள் என்றெல்லாம் கருதுபவர்கள், நாட்டின் முன்னேற்றத்துக்கு தடையாக அவர்கள் கருதுவனவற்றின் பட்டியலில் இத்தகைய பாலியல் வல்லுறவுக் குற்றங்களையும் சேர்த்துக் கொள்கிறார்கள். பொதுவாக முதலாளித்துவம் ஜனநாயகத்தைக் கொண்டுவரும் என்பதைப் போல, தனியார்மய – தாராளமயக் கொள்கைகளும் ஜனநாயகத்தைக் கொண்டு வந்து விடும் என்ற மயக்கம்தான் மேற்கண்ட கருத்தில் பிரதிபலிக்கிறது.

நாட்டின் முன்னேற்றத்திற்குச் சான்றாக வானளாவிய கட்டிடங்களையும், ஷாப்பிங் மால்களையும், ஐ.டி. நிறுவனங்களையும், விதவிதமான கார்களையும், ஆறு வழிச்சாலைகளையும் காட்டுவது போல, பெண்களின் முன்னேற்றத்திற்குச் சான்றாக பெப்சி நிறுவனத்தின் தலைவர் இந்திரா நூயி, டாஃபே நிறுவன இயக்குநர் மல்லிகா சீனிவாசன், பயோகானின் கிரன் மஜும்தார் போன்றோரைக் காட்டி, இவர்களைப் போல இன்று பல பெண்கள் தொழில்முனைவோராக, நிர்வாகியாக, ஆராய்ச்சியாளராக, கலைஞராக, அரசியல்வாதியாக பொதுவெளியில் உயரும் வாய்ப்பை உலகமயம் ஏற்படுத்திக் கொடுத்திருப்பதாக ஊடகங்கள் தொடர்ந்து சித்தரித்து வருகின்றன.

இவர்கள் கூறுவது போல் தாராளமயமும் உலகமயமும் பெண்களுக்குச் சுதந்திரத்தையும் ஜனநாயகத்தையும் உண்மையிலேயே வழங்கியுள்ளதா?

இந்திய சமூகத்தில் பெண்கள் குடும்ப பராமரிப்பை செய்து கொண்டே, விவசாயம்,கட்டுமானத் தொழில்களில் தங்களது உழைப்பைச் செலுத்தி வந்திருப்பது காலம்காலமாக நடந்து வந்திருக்கிறது; எனினும், புதிய பொருளாதாரக் கொள்கைகள் அறிமுகப்படுத்தப்பட்டதற்குப் பிந்தைய காலத்தில் பல்வேறு துறைகளில் பெண் உழைப்பாளர்கள் மற்றும் ஊழியர்களின் எண்ணிக்கை வேகமாகப் பெருகிவருகிறது என்பது உண்மையே. இதற்குக் காரணமென்ன என்பதுதான் கேள்வியே.இரட்டை சுமை

முதற்காரணமாக கடந்த 15 ஆண்டுகளில் தனியார்மயக் கொள்கைகளின் விளைவாக மிகக் கடுமையாக உயர்ந்து வரும் விலைவாசி, அடிப்படை உழைக்கும் வர்க்கத்தினர் முதல் நடுத்தர வர்க்கத்தினர் வரையிலானோரின் வாழ்க்கைத் தரத்தை வெகுவேகமாக அரித்து வருகிறது. வீட்டு வாடகை, மளிகைப் பொருட்கள், பால், மின்சாரம், போக்குவரத்துச் செலவுகள் போன்ற வழமையான செலவுகள் அதிகரித்திருக்கின்ற அதே நேரத்தில், கல்வி-மருத்துவத் துறைகளின் தனியார்மயத்தின் காரணமாகவும், அவர்களது கட்டணக் கொள்ளை காரணமாகவும் பல குடும்பங்கள் கடனாளி ஆக்கப்பட்டனர். இந்தக் கடுமையான விலைவாசி உயர்வும் நுகர்வுக் கலாச்சாரத்தினால் ஏற்பட்ட பொருளாதாரத் தேவைகளும், கணவனின் ஒற்றை வருமானத்தில் குடும்பத்தைப் பராமரிப்பதை இயலாததாக்கியது. இதனால் நடுத்தர வர்க்கத்திலிருந்து உழைக்கும் மக்கள் வரை அனைத்துத் தரப்பு பெண்களும் தங்கள் தகுதிக்கேற்ற வேலைக்குச் செல்ல வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டனர்.

குறைவான கூலி, சங்கமாகத் திரளமாட்டார்கள் போன்ற காரணங்களால் புதிய வகைப்பட்ட வேலைவாப்புகள் பெண்களுக்கென்றே வழங்கப்பட்டுள்ளன. தன்னார்வக் குழுக்களின் தீவிர பிரச்சாரத்தால் உணவு விடுதிகள், பட்டுநெசவு போன்றவற்றிலிருந்து அகற்றப்பட்ட குழந்தைத் தொழிலாளர்களின் வேலைகளும் பெண்களுக்குச் சென்றுள்ளன. விவசாயத்தின் வீழ்ச்சி காரணமாக, நகர்ப்புறங்களில் கட்டுமான வேலைகளுக்கு வரும் விவசாயக் குடும்பத்தின் பெண்கள், வீடற்றவர்களாக தெருவோரத்தையே வீடாக மாற்றி, அங்கேயே குளித்து, சமைத்து, குழந்தைகளைப் பராமரித்து வேலைக்கும் செல்லவேண்டியவர்களாக உள்ளனர்.

பஞ்சாலைகளில் ஊதிய உயர்வு, போனஸ் போன்ற கோரிக்கைகளுக்காகப் போராடியதால் ஆண் தொழிலாளர்களைத் துரத்திவிட்டு, அவ்வேலைகளில் பெண்களை அமர்த்தி 10 முதல் 12 மணிநேரம் வரை சுரண்டுகின்றனர். நோக்கியா போன்ற மின்னணுத் தொழிலகங்களில் ஒப்பந்தக் கூலிகளாக, நகரங்களின் ஜவுளிக் கடல்களில் விற்பனையாளர்களாக, மென்பொருள் நிறுவனங்களில் துப்புரவு, எடுபிடி வேலைகளிலும், பாதுகாப்புப் பணிகளிலும், தொழில் தேர்ச்சி பெற்ற வேலைகளிலும், பெண்கள் பலர் வேலைக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.

தனியார் மருத்துவமனைகளின் பெண் நர்சுகள் ஊர்விட்டு ஊர் சென்று, இரவு நேரத்திலும் உழைப்பில் ஈடுபடுகின்றனர். கால் சென்டர்களில் இரவு முழுக்க அமெரிக்காவின் வங்கிகளுக்காவும், மருத்துவமனைகளுக்காகவும் பெண்கள் உழைக்கின்றனர். ஆயத்த ஆடை (கார்மென்ட்ஸ்) தொழிலாளர்களாக இன்று பெண்களே அதிக அளவில் வேலை செய்கின்றனர். ஒரே விதமான பட்டுச்சேலைகளால் அலங்கரிக்கப்பட்ட குமரிப் பெண்கள், பணக்காரர்களின் திருமண வரவேற்பில் பன்னீர் தெளிப்பது முதல் பந்தியில் தண்ணீர் வழங்குவதுவரை ஈடுபட்டு நள்ளிரவில் வீடு திரும்புகின்றனர்.

இவ்வாறு பல்வேறு துறைகளில் தங்கள் உழைப்பை வழங்கும் இப்பெண்கள் வீட்டின் சமையலையும், குழந்தைப் பராமரிப்பையும் செய்து முடித்து விட்டு நிறுவன வேலைகளுக்கு விரைகின்றனர். கைக்குழந்தைகளை அண்டை வீட்டாரிடமோ, காப்பகத்திலோ விட்டுவிட்டு 10 மணி முதல் 12 மணிநேரம் வேலை செய்து விட்டு, குழந்தைகளை அவசரமாகக் கொஞ்சிவிட்டு அடுத்த நாளுக்கான சமையல் வேலையை மீண்டும் தொடங்குகின்றனர். இதுதான் தனியார்மய – தாராளமயக் கொள்கைகளின் அமலாக்கத்துக்குப் பின்னர் பெண்களின் வாழ்க்கையில் ஏற்பட்டு வரும் மாற்றம்.
வீட்டு வேலை செய்யும் தொழிலாளர்

வீட்டு வேலை செய்யும் பெண்களையும் பாலியல் வன்முறைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரக் கோரி சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் (கோப்பு படம்)

இதுவரை உற்பத்தியில் ஈடுபடாதவர்களாக இருந்த பெண்களைத் தற்போது பெருமளவில் ‘உற்பத்தியில் ஈடுபடுத்தியிருப்பதாக’ , பெண்களின் வாழ்க்கையில் ஏற்பட்டிருக்கும் இந்த மாற்றம் பற்றி ஆளும் வர்க்கங்கள் பெருமையுடன் கூறுகின்றன. பெண்கள் ஏற்கெனவே தத்தம் குடும்பங்களில் செலுத்தி வரும் உழைப்பின் மூலம் பராமரிக்கப்படுகின்ற ஆண்கள் மற்றும் அக்குடும்பத்தின் வாரிசுகள்தான் முதலாளித்துவத்தின் உற்பத்திக்கு உழைக்கிறார்கள். எனினும், தமது இலாபத்துக்குப் பயன்படுகின்ற, பெண்களின் இந்த மறைமுக உழைப்பை, முதலாளித்துவப் பொருளாதாரம் மதிப்பதில்லை. அதாவது, குடும்ப உழைப்பு மற்றும் புதிய உழைப்பாளிகளை உருவாக்கித் தரும் மறு உற்பத்தி, அவர்களுடைய பராமரிப்பு ஆகியவற்றுக்கு ஒரு பொருளாதார மதிப்பினை நிர்ணயித்து, அதனை நிகர உள்நாட்டு உற்பத்தியை நிர்ணயிக்கின்ற கணக்கில் சேர்ப்பதில்லை.

ஒரு உணவு விடுதியின் சமையல்காரர், குழந்தைகள் காப்பகத்தில் வேலை பார்க்கும் பெண், சலவைத் தொழிலாளி ஆகியோரது உழைப்பு கூலிக்கு விற்கப்படுவதால் அதற்குப் பொருளாதார மதிப்பு உள்ளதாகக் கணக்கில் கொள்ளும் முதலாளித்துவம், பெண்களுடைய குடும்ப உழைப்பின் மதிப்பை நிராகரிப்பதன் மூலம், அவர்கள் இதுவரை உழைப்பிலேயே ஈடுபடாதவர்கள் போலவும், முதன்முறையாகத் தற்போது உழைப்பில் ஈடுபடுத்தப் பட்டிருப்பது போலவுமான தோற்றத்தை உருவாக்குகிறது. உண்மையில் பெண்களின் குடும்ப உழைப்பு மூலம் தான் பெறுகின்ற பொருளாதார ஆதாயத்தைச் சுரண்டிக் கொண்டே, கூடுதலாக, குடும்பத்தின் பொருளாதாரத் தேவைக்காக, உற்பத்தி சார்ந்த உழைப்பைக் கோரும் வேலைகளுக்குள் இழுத்திருக்கிறது. தனியார்மயக் கொள்கை, பெண்களுக்கு வழங்கியுள்ளதாக கூறப்படும் ‘வேலைவாய்ப்பு’ முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இரட்டைச் சுரண்டலுக்கு பெண்களை ஆட்படுத்தியிருக்கிறது என்பதே உண்மை.

*************

பெண்களின் மீதான உழைப்புச் சுரண்டலை அதிகமாக்கியிருப்பது மட்டுமல்லாமல், மறுகாலனியாக்க கொள்கைகள் அவர்களுடைய உடலையும் முன்னெப்போதும் இல்லாத வடிவங்களிலெல்லாம் விற்பனைப் பண்டமாக்கியிருக்கின்றன.

சிவப்பழகு கிரீம்பத்தாண்டுகளுக்கு முன்னர் யாரும் நினைத்துக்கூட பார்த்திராத வேலைகளிலும் பெண்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர் .பெங்களூரு சாராய விடுதிகளில் மதுவைக் கலக்கித் தரும் “பார் டென்டர்” களாகவும், 20/20 கிரிக்கெட் போட்டிகளில் கவர்ச்சி உடை அணிந்து ரசிகர்களை உற்சாகப்படுத்தும் “சியர் கேர்ல்ஸ்’’ களாகவும் பெண்கள் இறக்கிவிடப்பட்டுள்ளனர். விரைவில், அமெரிக்காவின் பாலியல் வக்கிர “பிளேபாய்” பத்திரிக்கை குழுமம், இந்தியாவில் தொடங்கவிருக்கும் “பிளேபாய் கிளப்புகளில்” ஆண்களுக்கு மது ஊற்றிக் கொடுப்பது, சிகெரெட் பற்றவைப்பது முதலான “சேவை’’களைச் செய்கின்ற வேலைகளில் இந்தியப் பெண்களை நியமிக்கவுள்ளது.

பெண்களைப் போகப்பொருளாகக் கருதும் ஆணாதிக்கச் சிந்தனையைப் பயன்படுத்திக் கொண்டு, அவர்களை ஆண்கள் நுகரத்தக்க பண்டமாகச் சந்தைப்படுத்தியிருக்கின்றது மறுகாலனியாக்க கொள்கை. அதே நேரத்தில், அழகுணர்ச்சி என்ற பெயரில், தம்மை ஆண்களின் நுகர்வுக்கான பண்டமாகத் தயாரித்துக் கொள்வதையே வாழ்க்கை இலட்சியமாகக் கொள்ளும் அளவுக்கு பெண்களின் மனோபாவத்தையும் மாற்றி அமைத்திருக்கிறது.

அழகிப் போட்டிகளை அறிமுகம் செய்து, ஐஸ்வர்யா ராய், சுஷ்மிதா சென் – என அடுத்தடுத்து இந்தியப் பெண்களை உலக அழகிகளாகத் தேர்ந்தெடுத்து, அவர்களையே அழகு சாதனப் பொருட்களின் “பிராண்ட் அம்பாசிடர்’’களாக்கியதன் மூலம், அவர்களைப் போல மெலிந்த சிவப்பான உடல்வாகுவைப் பெறுவதையே மாபெரும் இலட்சியமாகக் கொள்ளுமாறு பெண்களிடம் தொடர் மூளைச்சலவை செய்யப்படுகிறது. இன்று இதன் விளைவாக, இரண்டுவேளை உணவுக்கு உத்திரவாதமில்லாத குக்கிராமங்கள் வரை சிவப்பழகு கிரீம்கள் உள்ளிட்ட பல்வேறு முகப்பூச்சு, அழகு சாதனப் பொருட்கள் எட்டியுள்ளன.

தெருவெங்கும் அழகு நிலையங்கள் முளைத்துள்ளன. அழகு நிலையங்களை எட்டிப்பார்க்காத பெண்களெல்லாம் ‘பத்தாம் பசலிகள்’, ‘கட்டுப்பெட்டிகள்’ போன்ற ‘கருத்து’களைப் பொதுப்புத்தியில் உறைய வைத்து, ஆண்டொன்றுக்கு ரூ.18 ஆயிரம் கோடிக்கும் மேல் அழகு சாதனப் பொருட்களைச் சந்தையில் விற்று, வீட்டின் பொருளாதாரத் தேவைக்காக வெளியில் வேலைக்கு வந்த பெண்களின் சொற்ப வருமானத்தையும் வழிப்பறி செய்துகொண்டிருக்கிறது, தாராளமயம்.

இத்துடன் சினிமா குத்தாட்டத்திற்கென்றே வடிவமைக்கப்படும் ஆபாசமான உடைகளை நவீனம் எனக் கூறி சிறுமிகளுக்குக்கூட அறிமுகம் செய்துள்ளனர். எவ்வித நெறிமுறைகளும் இனி இருக்கக் கூடாது என்பதை ஒரு மோஸ்தராகவே உருவாக்கி, அதற்கென்றே ஆபாசமான ‘பேஷன் பரேட்’ களை நடத்துகின்றனர். அநாகரீகம் என்று இதுவரை கருதி வந்த அனைத்தையும் தலைகீழாக்கும் செயலை ஒவ்வொரு வீட்டின் உள்ளேயும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் வழியாகப் புகுத்தியுள்ளனர். எழுபது-எண்பதுகளில் தடைசெய்யப்பட்ட ரிக்கார்டு டான்ஸ் எனும் பாலுணர்வு வெறி நடனங்களைத் தொலைக்காட்சிகளைப் பார்த்து தம் பிள்ளைகள் ஆடுவதைக் கண்டு பெருமைப்படும் அளவுக்கு பெற்றோர்கள் மூளைச்சலவைக்கு ஆளாகியுள்ளனர்.

இதன் எதிரொலியாக, மனைவி என்பவள் எல்லாவிதத்திலும் தனக்குக் கட்டுப்பட்டவளாகவும், மாடல் அழகிகளைப் போலத் தன்னை அலங்கரித்துக் கொண்டு ‘கண்ணுக்குக் குளுமையாக’க் காட்சியளிப்பவளாகவும் இருக்க வேண்டும் என்ற கண்ணோட்டத்தை ஆண்களிடம் ஊடகங்கள் உருவாக்கியுள்ளன.

பாய் பிரண்ட்ஸ் இல்லாத இளம் பெண்கள், கல்லூரிகளிலும் பணியிடங்களிலும் “நீ வேஸ்ட்” என்று சக பெண்களால் ஏளனப்படுத்தப்படுகின்றனர். நகர்ப்புறங்களில் டேட்டிங் செல்வது, ரிசார்ட்டுகள், டிஸ்கோத்தேகளுக்குச் சென்று வார இறுதியைக் கொண்டாடுவது போன்ற கலாச்சாரங்கள் பெண்களைப் பலிகடாவாக்குகின்றன. பண்பலை வானொலியில் பெண்மருத்துவ திலகங்கள், பாடல்களுக்கு நடுவே “திருமணம் ஆகாத பெண்கள், பாதுகாப்பாக இருந்துக்கணும். ஆணுறை, கருத்தடை மாத்திரைகள் எல்லாம் இன்றைக்கு எல்லா இடங்களிலும் கிடைக்கின்றன” என ஆலோசனை வழங்குகின்றன.

“இந்தியா டுடே” “அவுட்லுக்” உள்ளிட்டுப் பல முதலாளித்துவ இதழ்கள் இந்தப் பாலியல் ‘புரட்சிக்கு’ தயங்கும் பெண்களை “இன்னமும் இப்படி ஹைதர்காலத்துப் பெண்களாக இருக்கிறீர்களே!” எனக் கடிந்துகொண்டு, பெரும்பாலான இந்தியப் பெண்கள் சோரம் போவதாக மூன்று மாதங்களுக்கு ஒருமுறை சர்வே எடுத்து இக்கலாச்சார ‘புரட்சியை’த் துரிதப்படுத்தி ‘முன்னேற’த் தூண்டுகின்றன. ஊடகங்கள்தான் இப்படி என்றால், அரசோ, அந்நியச் செலாவணிக்காக, கோவா, மாமல்லபுரம் போன்ற சுற்றுலாத் தலங்களில், வெளிநாட்டுப் பயணிகள் பாலியல் வக்கிரங்களைத் தணித்துக் கொள்வதற்காக, சிறுவர்-சிறுமிகளைப் பலிகடாவாக்குவதற்குத் துணைபோகிறது. இக்கொடூரம் பலமுறை அம்பலமான பின்னரும், அரசு இதுவரை இதனைக் கண்டுகொள்ளாமல், மறைமுகமாக ஆதரித்து வருகிறது.

ஆண்களின் நுகர்வுக்கான பண்டமாகப் பெண்களைச் சித்தரிப்பதும், மாற்றுவதும் எந்த அளவுக்கு நடந்திருக்கிறதோ, அந்த அளவுக்குப் பெண்களுக்கு எதிரான வெறி பிடித்த வன்முறைகள் அதிகரித்துள்ளன. தொழில்நுட்பப் பரவலால் எளிதில் கிடைத்திருக்கும் செல்பேசி மூலம் பல பாலியல் வக்கிரங்கள் கிளறிவிடப்பட்டுள்ளன. சிறுமிகள், இளம்பெண்களின் நிர்வாணப் படங்கள் சின்னஞ்சிறு மெமரி சிப்பில் ஏற்றப்பட்டு ஆண்களுக்காகச் சந்தையில் விற்கப்படுகின்றன.

தொலைபேசியில் சில குறிப்பிட்ட எண்களுடன் தொடர்பு கொண்டு பாலியல் சரச உரையாடல்களைப் பெண்களின் குரலில் கேட்டுக் கிளர்ச்சியடைய இளைஞர்கள் விளம்பரங்கள் மூலம் ஈர்க்கப்படுகின்றனர். வீடியோ கேம்களின் வழியாகவும் ஆண்கள் வக்கிரமாக்கப்படுகின்றனர். இதில் உச்சமாக ‘ரேப் சிமுலேசன்’ எனும் பெயரில் ஜப்பானிலிருந்து வந்துள்ள ‘மெநிகர் வன்புணர்ச்சி’ வீடியோ கேம் உலகளவில் சந்தைப்படுத்தப்படுகிறது.

ஆண்களைத் தங்கள் கிராமங்களிலிருந்து பிய்த்து எடுத்து திருப்பூர் போன்ற ஊர்களில் பதியனிட்டுள்ள வேலை வாய்ப்புகள், பன்னிரண்டு மணி நேரம் வரை தொழிலாளர்களைப் பிழிந்தெடுக்கின்றன. பெண்களுக்கும் இதே கதிதான். இரவு நேர ஷிப்ட்களில் வேலை அலுப்பு தெரியாமல் இருக்க ஆபாச உரையாடல்கள் ஒலிப்பதிவு செய்யப்பட்ட குறுந்தகடு ஓட விடப்படுகின்றது.
குத்தாட்டம்

குத்தாட்டம்: கும்பல் பாலியல் வன்முறையின் கலை வடிவம்.

தமிழ் சினிமாவின் குத்துப்பாட்டு, இந்தி சினிமாவின் “ஐட்டம்” பாடல்கள் போன்றவை இதுவரை இலைமறை காயாக இருந்த பாலியல் உறவுக்காட்சிகளை அப்பட்டமான நடன அசைவுகளாக மாற்றி, பெண்களைச் சீண்டுவதற்குத் தோதான புது விதமான கழிசடை வார்த்தைகளையும் அறிமுகப்படுத்திச் சீரழிவையே கலாச்சாரமாக்குகின்றன. இந்த வகைப்பட்ட பாடல் காட்சிகளால் உசுப்பேற்றப்படும் ஆண், பொது இடங்களில் நடமாடும் பெண்கள் அனைவரையும் போகப்பொருளாகவே பார்க்கிறான். பேருந்துகள், திரையரங்குகள், வேலைசெய்யும் இடங்கள் என ஆண், பெண் இருபாலரும் புழங்கும் எல்லா வெளிகளிலும் ஆண்கள் பெண்களைச் சீண்டுவதும் பாலியல் ரீதியாகத் துன்புறுத்துவதும் அதிகரித்து வருகிறது.

வேலைக்குச் செல்லும் பெண்கள், தொழிற்கூடங்களில் சக தொழிலாளர்கள், மேலாளர்களின் பாலியல் வக்கிரங்களையும் அவமதிப்புகளையும் அன்றாடம் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. தனியார் கல்வி நிறுவனங்களின் ஆசிரியைகள் பள்ளித் தாளாளரை அனுசரித்து நடக்குமாறு நிர்பந்திக்கப்படுகின்றனர். பிராக்டிகல், இன்டர்னல் மதிப்பெண்களில் கைவைப்பேன் – என மிரட்டும் ஆசிரியர்களின் பாலியல் சுரண்டலுக்கு கல்லூரி மாணவிகள் மட்டுமல்ல, பள்ளி மாணவிகள்கூடப் பலியாகின்றனர்.

இவ்வாறு பாதிக்கப்படும் பெண்கள், இது குறித்து குடும்பத்தில் வெளிப்படுத்தவோ அல்லது போலீசு நிலையத்தில் முறையிடவோ செய்தால், நடந்த சம்பவங்களுக்கு அவர்களே பொறுப்பாக்கப்படுகிறார்கள். “ஏன் இரவு நேரத்தில் வெளியே சுற்ற வேண்டும்?” என்கிற கேள்வி முதல், அவர்கள் அணியும் ஆடைகள் வரை அனைத்தையும் காட்டி, இந்தப் பிரச்சனையை அவளே வரவழைத்துக் கொண்டதாகக் குற்றம் சாட்டுகிறார்கள்.

நிலவும் ஆணாதிக்க சமுதாயத்தில் பெண் என்பவள் ‘தூய்மையானவளாக’ இருக்க வேண்டும் என்பதும், தனது “கற்பை”ப் பேணிப் பாதுகாப்பதுதான் அவளது முழுநேர வேலை என்பதும் பொது விதியாக இருப்பதால், பாதிக்கப்பட்ட பெண்கள் இது குறித்துப் பேசுவதற்கே அஞ்சும் நிலை உள்ளது. பொது இடங்களில் பாலியல் சீண்டல்களை எதிர்கொள்ளும் ஏதாவதொரு பெண் அதற்கு எதிர்வினையாற்றினால், சுற்றியிருப்பவர்கள் மவுனம் சாதிக்கின்றனர். இந்த மவுனம், பெண்கள் மீது நடக்கும் தொடர் வன்முறைகளுக்குத் துணை நிற்கிறது

********

மொத்தத்தில், மறுகாலனியாக்கக் கொள்கைகளின் அமலாக்கம், ஏற்கெனவே ஆணாதிக்க அடிமைத்தனத்தில் உழலும் இந்தியப் பெண்களின் மீதான உழைப்புச் சுரண்டலை அதிகரித்திருப்பதுடன், அவர்களைப் பாலுணர்வுப் பண்டமாகக் காட்டி வெறியூட்டுவதன் மூலம், அவர்கள் மீதான பாலியல் ரீதியான தாக்குதல்கள் அதிகரிப்பதற்கும் வழி வகுத்திருக்கிறது.

அது மட்டுமல்ல, மறுகாலனியாக்கம் திட்டமிட்டே பரப்புகின்ற, தன்னையும் தன் இன்பத்தையும் மட்டுமே நோக்கமாகக் கொண்ட, விழுமியங்கள் ஏதுமற்ற நுகர்வு வெறி, மற்றவர் துன்பங்களைப் பற்றிக் கவலைப்படாத விலங்குகளாக மக்களைத் திட்டமிட்டே மாற்றி வருகிறது. வகை வகையாகவும் விதவிதமாகவும் உணவுப் பொருட்கள், ஆடைகள், பல வண்ணக் கைபேசிகள், ஊடகங்களில் சந்தைப்படுத்தப்படும் நுகர்பொருட்கள் போன்றவற்றை வாங்கி அனுபவிப்பது மட்டுமே நோக்கம் என்றும், இவற்றை அடையும்பொருட்டு எல்லா நெறிகளையும் கைவிடலாம் என்பதும் சகஜமாக்கப்பட்டிருக்கிறது.

டெல்லி வன்முறையாளர்கள் யாரோ அல்ல. ‘நாடு விலை போவதைப் பற்றியோ, சமூகம் அழுகி நாறுவதைப் பற்றியோ, அடுத்தவன் துன்பத்தால் துடிப்பதைப் பற்றியோ, தன்னுடைய வர்க்கத்தின் உரிமைகள் பறிக்கப்படுவது பற்றியோ, தன்னுடைய தனிப்பட்ட எதிர்காலத்தைப் பற்றியோ கூடக் கவலை இல்லாமல், இருக்கிற வரையில் அனுபவி‘ என்பதையே தம் விழுமியமாக வரித்துக் கொண்ட கிரிமினல்கள்.

டெல்லி வன்முறையைப் பாலியல் வெறி என்ற ஒரு கோணத்திலிருந்து மட்டும் பார்த்துப் புரிந்து கொள்ள இயலாது. நாடு முழுவதும் பெருகி வரும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் ஏதோ சில கிரிமினல்களின் எதிர்பாராத நடவடிக்கைளும் அல்ல. அவை இந்தப் பண்பாடு தோற்றுவிக்கின்ற, எதிர்பார்க்கக்கூடிய விளைவுகளே!

– கதிர்

…ஆதலினால் காதல் செய்வீர்!


காடுவெட்டிகுரு முதல் குச்சு கொளுத்தி ராமதாஸ் வரை அனைத்து ஆதிக்க சாதி வெறியர்களையும் பதற வைக்கும் ஒரு நெருப்பு சொல் காதல்
தோழி!
*திவ்யாவைப் போல்
தெளிவாக காதலி.
காதல்தான் விருப்பமெனில்
தாழ்த்தப்பட்டோரை
தயங்காமல் காதலி!
வர்க்கம் பார்த்துதான்
வருகிறது காதலெனினும்,
வர்ணம் பொடிபட
எப்போதாவது துடிக்கும் இதயத்தை
நழுவாமல் ஆதரி!

சேரிக்கு
வாழ்க்கைப்பட்டால்தான் தெரியும்
உன் சொந்த சாதி அசிங்கம்.
சாதிக்கு
எதிராய் போனால்தான் புரியும்
தாய், தகப்பன் பாசம்
கருப்பையை அடக்கி நாறும்
சாதியை விட்டொழி!
சைவப்பிள்ளையும், புதிர வண்ணாரும்
இணையேற்றால்
ஒன்றும், கீரிப்பிள்ளை பிறப்பதில்லை,
ஒழுங்கான மனிதமுகம் மலருமங்கே!

வன்னியப்பெண்ணும், பறையரும்
வாழ்க்கைத் துணையானால்
காடுவெட்டி குருவுக்கு வேண்டுமானால்
மூலம் தள்ளிப் போகலாம்,
ராமதாசு வேண்டுமானால்
நாக்கு வெந்து காயலாம்.
நாடு ஒன்றும் மூழ்கிடாது,
சாதி ஒழியும்படி சமத்துவமாய் காதலி!

கக்கத்தில் பையை வைத்து
பக்கத்து ஊரையெல்லாம்
கந்துக்கு தரிசாக்கி…
அந்நிய செலாவணிக்காக
நொய்யலையும், பவானியையும்
சாயப்பட்டைறையில் கருக்கி…
காசுக்காரன் அழித்திட்ட
‘கவுண்டர் வாழ்க்கை’
நீ… அருந்ததியரைக் காதலித்தால்
அழியுமென்றால்!
அழியட்டும் சாதிவெறி!
பெண்ணே! சமூகம் அழகாக
சக்கிலியரைக் காதலி!

அந்நிய மூலதனத்தோடு
அனைத்து சாதியும் கலப்பு,
அதில் சில்லரை பொறுக்கிக் கொண்டே
சிலருக்கு சாதியோட கொழுப்பு.

பன்னாட்டுக் கம்பெனி
பனிரெண்டு மணிநேரம்
கையை பிடித்து இழுக்கையில்…
அமெரிக்க ‘டேட்டிங்’
ஆளைச் சுற்றி வளைக்கையில்..
அரிவாள் தூக்காத சாதி,
நீ சாதி மாறி காதலித்தால்
ஆர்ப்பரிக்குமென்றால்,
தூக்கிய அரிவாள் துருபிடிக்க
துணை கொள் தோழி!
தாழ்த்தப்பட்டோரையே!

– துரை.சண்முகம்.

மான உணர்ச்சி ஏழைகளுக்கு மட்டும்தான் சொந்தமோ?


தன்மகன் போரிலே புறமுதுகில் அம்பு தைத்து மாண்டு போனான் என்று கேள்விப்பட்டதும் ‘அந்த கோழைக்கு இந்த மார்புகளா பாலூட்டியது’ என்று சினம் கொண்டு தன் மார்புகளை அறுத்தெரிந்தாளாம் ஒரு புறநானூற்றுத் தாய். இலக்கியத்தில் பதிவான அந்த வீரத்தாயின் வரிசையில் உண்மையாகவே ஒரு தாய் இருக்கிறாள். நாமக்கல் மாவட்டம் மேற்கு பாலப்பட்டி என்ற கிராமத்தில் கூலி வேலைச் செய்து பிழைப்பை ஓட்டும் ஒரு பாவப்பட்ட கூலி ஏழை சந்திராதான் அந்த தாய். 45 வயதான இந்த தாய்க்கு 16 வயதில் ஒரு மகன்.

‘தன் மகன் ஒரு திருடன்’ என்று கேள்விப்பட்டவுடன் தூக்கு மாட்டிக்கொண்டு தன் உயிரை மாய்த்துக் கொண்டாள் அந்த உத்தமி. அந்தத் தாய் செய்த தவறு ஒன்றே ஒன்று தான். கூலி வேலை செய்து சம்பாதித்த அற்பத் தொகையில் தன் மகனை 11ஆம் வகுப்பு வரை படிக்க வைக்கத்தான் முடிந்தது. வயிறார அவனுக்கு இரண்டு வேளை சோறு போட முடியவில்லை. வாழ வேண்டிய வயதிலேயே தன் கணவனைப் பறிகொடுத்த அந்த அனாதைத் தாயால் உழைக்;க முடிந்தது அவ்வளவுதான்.
அவளது மகன் திருடியது வேறு எந்த அபூர்வமானப் பொருளையும் அல்ல. கேவலம் ஒத்த ரூபாய் புழுத்த அரிசி சோத்தைத்தான். சோத்தைத் திருடித் தின்ற இந்தக் கொடுமையை அமெரிக்கா நுழைந்து குதறிய சோமாலியாவில் கூட கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள். அவளுடைய 16 வயதுடைய மாணவன் இளவரசன், அடுத்த வீட்டில் சோத்தைத் திருடித் தின்னும் வழக்கத்தைக் கொண்டிருந்தான். என்னென்ன கற்பனைகளோடு அவனுடைய அப்பாவி பெற்றோர்கள் அவனுக்கு ‘இளவரசன்’ என்று பெயர் வைத்தார்களோ…. பாவம் சோத்துத் ‘தரித்திரம்’ அவனை விடாது விரட்டியது.

அவனுக்கு சொந்த பந்தங்கள் இருந்தும் அந்தப் பாலகனின் பசியால் வாடிய முகத்தைப் பார்த்தும் கூட ஒருவாய் சோறு போட யாரும் முன் வரவில்லை. அடுத்தவர் சாப்பிடும் போது தெரு நாய் பார்ப்பது போல வாயையும், கையையும் பார்த்து பார்த்து ஏங்கி ஏங்கி, இறுதியாக முடிவெடுத்தான், திருடித்தின்றாவது பசியாற்றுவதென்று. ஒருநாள்…. இரண்டு நாள்… அடுத்த நாளென்று வெற்றியின் ஊடாக ‘திருட்டுத் தொழில்’ தொடர்ந்தது.

‘பலநாள் திருடன் ஒருநாள் அகப்படுவான்’- என்ற பழமொழி உண்மையாயிற்று. எச்சில் கையோடு கைது செய்தது சேந்தமங்கலம் போலீசு. சுற்றி வளைத்துப் பிடித்துத் தந்தது சோத்துக்கு சொந்தக்காரர் கூட அல்ல, அக்கம் பக்கத்து வீட்டு ‘அரிச்சந்திரர்கள்’ தான். வெறும் சோத்தைத் திருடினான் என்றால் வழக்கு போட முடியாது என்று கருதிக்கூட ‘நகையைத் திருடி விட்டான்’ என்று பிடித்துக் கொடுத்திருக்க அதிகம் வாய்ப்புள்ளது. தனது வயதையொத்த பணக்கார குலக் கொழுந்துகள் பள்ளிக்குச் செல்லும் சொகுசுக்காரைத்; திருட அவன் துணியவில்லை. விதவிதமான துணிமணிகளைக் கண்டு அதைத் திருடி மினுக்கிக்கொள்ளலாம் என்று அவன் எண்ணியதில்லை.

உணவுக்கு கையேந்த வேண்டுமா, வாளேந்த வேண்டுமா?
பல இளைஞர்கள் தமது காதல் ஜோடிகளுடன் கைகோர்த்துச் செல்வதைக்கண்டு தானும் அப்படி இருக்கலாமென்று அவன் நினைத்துக்கூட பார்த்ததில்லை. உணவு விடுதிகளில் விதவிதமாக உண்பவர்களைப் பார்த்து வயிற்றொpச்சல் அடைந்ததில்லை. அதை ஈடுசெய்ய உமிழ்நீரைத்தான் விழுங்கிக் கொண்டான். இறுதியில் அவனால் சோத்தைத் தான் திருட முடிந்தது. எந்தப் பொருளைத் திருடுவது என்பதைத்கூட வர்க்கம் தானே தீர்மானிக்கிறது.

இந்தச் சமூக விரோத பெருங்குற்றத்திற்கு ‘யார் காரணம்?! அவனா… இல்லை அவனையும், அம்மாவையும் அனாதையாக விட்டு விட்டுச் செத்துப் போனாரே….அவனுடைய அப்பா, அவரா?! இல்லை, பச்சப்புள்ளையைப் பார்க்க வைத்துத் தின்றார்களே அவனுடைய சொந்த பந்தங்கள்.. அவர்களா?! இல்லை…’எப்படியாவது சாந்துச்சட்டி சுமந்து தன் மகனை காலேஜ் வரைக்கும் படிக்க வச்சா…. ஒரு நல்ல வேலை கெடச்சி, மகன் கஞ்சி குடிச்சி பொழச்சிக்குவான்’ என்று அந்தக் கனவிலேயே உடைந்து போன உடலோடும், வாழ்க்கையோடும் சித்தாள் வேலைக்குப் போய் 11-ஆம் வகுப்பு வரைப் படிக்க வைத்தாளே, அந்த மானமுள்ளத் தாயின் தவறா?!’ இப்படித்தானே நீங்களும் யோசிப்பீர்கள்?

நியாய விலைக் கடைகளில் கலைஞர் சிரிக்கிறார். “ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி”! மகிழ்ச்சி. அந்த ஒத்த ரூபாய் அரிசிகூட கிடைக்காமல் ஏன் அந்த ‘இளவரசன்’ சோத்தைத் திருடினான்? இதற்கு ‘நியாயமாக’ பதில் சொல்ல கலைஞரால் முடியுமா?! இல்லை… பூச்சியும், எலியும் தின்றால் கூட அந்த அரிசியை ஏழைகளுக்குத் தரமாட்டேனென்று அடம் பிடிக்கிறாரே… பிரதமர்… அவர் பதில் சொல்வாரா?! கலைஞர் வேண்டுமானால் ‘தம்பிக்கு கடிதம்’ எழுதி தப்பித்துக் கொள்ளலாம். இந்தக் கொடுமைக்கு அவரது குடும்பமே ஒன்று சேர்ந்தால் கூட பதில் சொல்ல முடியாது. ஒரு வேளை கடந்த நவம்பர் 17ஆம் தேதி தன் பேரன் துரை தயாநிதிக்கு நடந்த திருமணத்தில் ரேசன் அரிசி சோத்தை வேகவத்து விருந்து போட்டிருந்தால், இதற்கு பதில் சொல்லத் தகுதியிருந்திருக்கும் கலைஞருக்கு. ஆனால் ‘ஊருக்குத்தான் ஒத்த ரூபாய் அரிசி’!

சின்ன வயதிலேயே தகப்பனை எடுத்து விழுங்கிவிட்டு, வீட்டுக்காரர்கள் வந்து விடுவார்களோ என்ற பதற்றத்தில் கவளம், கவளமாக திருட்டுச் சோத்தை கண்ணில் நீர்வர விழுங்கி விட்டு, கடைசியில் ஒரே ஆதராவாக இருந்த தாயையும் எடுத்து விழுங்கி விட்டு, இப்போது சேலம் சிறுவர் கூர் நோக்கு இல்லத்தில் சிறை வைக்கப்பட்டிருக்கிறான் இளவரசன்.
சட்டம் தன் கடமையைச் செய்கிறது. இருக்கட்டும், நல்லது.

சோறு திருடினான் என்பதைக்கூட அந்த தாயால் தாங்க முடியவில்லை. குற்ற உணர்ச்சி அழுத்த தன் உயிரை துறந்திருக்கிறாள். ஆனால் இந்த மான உணர்ச்சி ஏழைகளுக்கு மட்டும்தான் சொந்தமோ? ஸ்பெக்ட்ரம் ஊழலின் அளவு ஒத்தை ரூபா அரிச போன்றது அல்ல. ஒன்னே முக்கால் இலட்சம் கோடிக்கு எத்தனை பூஜ்ஜியம் என்று கூட அந்த ஏழைகள் அறியமாட்டார்கள். ஆனால் அந்த பூஜியங்களை அறிந்தவர்களுக்கும், அபகரித்தவர்களுக்கும் மான உணர்ச்சி கிஞ்சித்தும் இல்லையா? கலைஞர் குடும்பம், டாட குடும்பம், மந்திரிகள், அதிகாரிகள், முதலாளிகள் எங்கும் யாராவது ஒருவர் கூட தற்கொலை செய்ய வில்லையே? சோறு திருடுவதுதான் மானக்குறைவா, இலட்சம் கோடிகளில் திருடினால் அது பெருமையா?

காமன்வெல்த் போட்டிக்கு ஏற்பாடு செய்ததில், கேவலம் மலம் துடைக்கும் பேப்பரில்கூட கமிஷன் வச்சிகாசு திருடினாரே காங்கிராஸ் கல்மாடி… அவருடைய வீட்டுப் பெண்கள் யாராவது ரோசத்தோடு தூக்கு மாட்டிக் கொண்டிருக்கலாமே…. ஏன் செய்யவில்லை? நம்ம நாட்டுல தேசபக்திக்கு மட்டும் குறைச்சலே இல்லை. நடிகர் அர்ஜுனையே விஞ்சிவிடுவார்கள். ‘வீரமரணம்’ அடைந்த கார்கில் வீரர்களின் விதவை மனைவிமார்களுக்கு வீட்டு வசதி செய்து கொடுத்ததில் தன்னுடைய மாமியார், மைத்துனி, மைத்துனர் ஆகியோருக்கும் ‘வீட்டு வசதி’ செய்து கொடுத்தாரே… மகாராஷ்டிரா முதல்வர் அசோக்சவான்… அவருடைய களவாணித்தனம் தெரிந்து அவருடைய வீட்டுப் பெண்களோ, ஆண்களோ இல்லை அவரோ ஏன் ஒருவர் கூட ஏன் தூக்கு மாட்டிக் கொள்ளத் துணிய வில்லை!!
இதற்கெல்லாம் மன்மோகனும், சிதம்பரமும் பதில் சொல்வார்களா? பதில் சொல்ல பிரதமருக்கு ஏது நேரம்! 10 ஆயிரம் கோடி செலவு செய்து அம்பானி கட்டியிருக்கிற ‘அன்டிலியா’ வீட்டுக்கு பால்காய்ச்சவே நேரம் போதவில்லை.

ஆயிரம் கோடி மதிப்புள்ள அரசு நிலத்தை தன் பிள்ளைகளுக்கு நோகாமல் எடுத்துத் தந்தாரே மதவெறியன் கர்நாடகா முதல்வா; எடியூரப்பா… அவர் வீட்டில் யாராவது தேசப்பற்றோடு ஏன் தூக்கு மாட்டிக்கொள்ளவில்லை?!
தோல்வி மனப்பான்மையால் தற்கொலை செய்துக்கொள்வதில் எமக்கு உடன்பாடில்லை என்பது வேறு விசயம். ஆனால் அந்தத் தாயின் தன்மான உணர்ச்சி சுயமாpயாதையுள்ள அனைவரையும் தலைகுனிய வைக்கிறது. ஆனால் நாட்டையே திருடும், கூட்டிக் கொடுக்கும் திருடர்கள் தலை நிமிர்ந்து கேமராவுக்கு போஸ் கொடுக்கிறார்களே… அதைப் பார்த்து பொறுத்துக் கொண்டிருப்பது நமக்கெல்லாம் அவமானமில்லையா?!
முதலாளிகள் போடும் எச்சில் காசில் வாழும் இந்த மானங்கெட்ட அரசும், அதிகாரவர்க்கமும், அரசியல்வாதிகளும் இனிமேலும் நாட்டையும், நாட்டின் கௌரவத்தையும் காப்பாற்றுவார்கள் என்று உங்களால் நம்ப முடிகிறதா?! ஒன்றே ஒன்றுதான் இதற்கெல்லாம் தீர்வாக இருக்க முடியும். ஓன்று அவர்களாகவே தூக்கு மாட்டிக் கொள்ள வேண்டும். அது நடக்கப் போவதில்லை. ஏனென்றால் எல்லாரும் சொரணை கெட்டவர்கள். நாம்தான் அவர்களை தூக்கிலேற்ற வேண்டும்
மானமுள்ள எம் உழைப்பாளி மக்களே உயிரை மாய்த்துக் கொள்ளாதீர்கள். வறுமைக்கும், தரித்திரத்திற்கும் காரணமானவர்களின் உயிரை எடுங்கள். இந்தத் தினவெடுத்த முதலாளித்துவத்திற்கு ஒரு உணவுக் கலகம் விடை சொல்லட்டும். அந்த உணவுக் கலகம் என்பது புரட்சிதான் என்பதற்கு முன்னோட்டமாக இருக்கட்டும்.
– சா.செல்வராசு

சந்தி சிரிக்குது இராணுவத்தின் தேசபக்தி !


பல நூறு இந்தியச் சிப்பாய்களைப் பலிகொண்ட கார்கில் போர் மக்களுக்கு இலவசமாக வழங்கியது வெறும் தேசபக்தியை மட்டும்தான். ஆனால் இப்போர் வீரர்களுக்குக் காலணிகள் வாங்கியதிலும், செத்துப்போன வீரர்களுக்குச் சவப்பெட்டி வாங்கியதிலும், பல கோடிகளை சுருட்டிக்கொள்ள ஆளும் கட்சிக்குப் பயன்பட்டது. எண்ணிக்கூடப் பார்க்கமுடியாத ஊழல்களை அரங்கேற்ற இன்னும் அப்போர் பயன்படுகிறது என்பதற்கு இன்னொரு ஆதாரம் ஆதர்ஷ் ஊழல்.

மும்பை-கொலாபா பகுதியில் இருக்கும் இராணுவத்துக்கு சொந்தமான நிலத்தில் ஆறு மாடிகள் கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்பைக் கட்டி கார்கில் போர்வீரர்களுக்கும், அப்போரில் மாண்டவர்களின் மனைவிகளுக்கும் தரப்போவதாக ஒரு திட்டத்தை முன்வைத்து ஆதர்ஷ் கூட்டுறவு குடியிருப்பு சொசைட்டியை உருவாக்கியது மகாராட்டிர அரசு. இது தொடர்பாக எழுந்துள்ள ஊழல் விவகாரத்தில், நாளுக்கு ஒரு மோசடி குறித்த விவரம் வெளிவந்து நாறிக் கொண்டிருக்கிறது.

மகாராட்டிர முதல்வர் அசோக் சவான் தனது மாமியாருக்கும் மருமகளுக்கும் இந்தக் குடியிருப்பில் வீடு ஒதுக்கியிருப்பது அம்பலமாகவே, சவானைப் பதவி விலக வைத்து அதைக் காட்டியே உத்தம வேடம் போட முனைந்தது, காங்கிரசு. ஆனால் உள்ளே செல்லச்செல்ல, காங்கிரசு, பாரதிய ஜனதா, சிவசேனா, அதிகார வர்க்கம், இராணுவ உயர் அதிகாரிகள் என்று மிகப் பிரம்மாண்டமானதொரு ஊழல் வலைப்பின்னல் அம்பலமாகத் தொடங்கியிருக்கிறது.

முதலில் 6 மாடிகள், 40 வீடுகள் என்று போடப்பட்ட திட்டம், சுற்றுச்சூழல் விதிகளுக்கு முரணாக 31 மாடிகள், 103 வீடுகள் என்று அதிகரிக்கப்பட்டது. இவ்வாறு அதிகரிக்கப்பட்டபின், 60% வீடுகளை கார்கில் தியாகிகளுக்கும் மீதமுள்ள 40% வீடுகளைப் பொதுமக்களுக்கும் ஒதுக்குவது என்று விதிமுறைகள் தளர்த்தப்பட்டன. தற்போது ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள 103 வீடுகளில் 34 பேர் மட்டும்தான் இராணுவத்தை சேர்ந்தவர்கள். அதிலும் வெறும் 3 பேர் மட்டும்தான் கார்கில் போர் முனையில் இருந்தவர்கள்.

முன்னாள் மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு (சிவசேனா), முன்னாள் முதல்வர் சுசில் குமார் ஷின்டே (தற்போது மத்திய அமைச்சர்), பாரதிய ஜனதாக் கட்சியின் தலைவர் நிதின் கட்காரி போன்ற சர்வகட்சிப் பிரமுகர்களும் ஆதர்ஷில் வீட்டுமனை ஒதுக்கீடு பெற்றிருப்பது அம்பலமாகியிருக்கின்றது.

ஓட்டுப்பொறுக்கிகளின் மோசடியைக் காட்டிலும், செத்துப்போன சிப்பாய்களின் உடலைக் காட்டி இராணுவ உயர் அதிகாரிகள் இதில் நடத்தியிருக்கும் கொள்ளைதான் மிகவும் கீழ்த்தரமானது. தரைப்படை முன்னாள் தலைமை தளபதிகள் என்.சி.விஜ், தீபக் கபூர், முன்னாள் கடற்படை தளபதி மாதவேந்திர சிங், வைஸ் அட்மிரல் மதன்ஜித் சிங், மேஜர் ஜெனரல் ஆர்.கே.ஹூடா ஆகிய அதி உயர் இராணுவ அதிகாரிகளுக்கும் இக்குடியிருப்பில் வீடு ஒதுக்கப்பட்டிருக்கிறது.

குடியிருப்பில் இடம் ஒதுக்க வேண்டுமானால், மும்பையில் தொடர்ச்சியாக 15 ஆண்டுகள் குடியிருந்திருக்க வேண்டும். ஏற்கெனவே சொந்த வீடு இருக்கக் கூடாது என்ற விதிமுறைகள் இருந்த போதிலும், குர்கானில் 6 பிளாட்டுகளும் மும்பையில் லோகன்ட்வாலாவில் ஒரு வீடும் வைத்திருக்கும் முன்னாள் தலைமைத் தளபதி தீபக் கபூர், அவை அனைத்தையும் மறைத்துப் பொச்சான்றிதழ் கொடுத்துள்ளார். ஆண்டு வருமானம் குறிப்பிட்ட அளவுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மட்டும்தான் வீடு ஒதுக்கப்படும் என்று விதிமுறை இருந்ததால், எல்லா இராணுவத் தளபதிகளும் தங்களது சம்பளச் சான்றிதழை மறைத்து, போர்ஜரி வேலை செய்து சம்பளத்தைக் குறைத்துக் காட்டிச் சான்றிதழ் கொடுத்துள்ளனர்.

பாரதிய ஜனதாக் கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினரும், நாக்பூரைச் சேர்ந்த பெரும் தொழிலதிபருமான அஜய் சஞ்சேதியின் மகன், மற்றும் அவரது கார் ஓட்டுனர் ஆகியோரது பெயர்களிலும் ஆதர்ஷ் குடியிருப்பில் வீடுகள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன. “மாதச்சம்பளம் ரூ.8000 என்று குறிப்பிட்டுள்ள கார் டிரைவர் சுதாகர் மட்கே, 60 இலட்சம் மதிப்புள்ள ஆதர்ஷ் வீட்டை எப்படி வாங்க முடியும்? இந்த நபர் கட்காரியுடைய பினாமி” என்று குற்றம் சாட்டியிருக்கிறார் காங்கிரசின் மனிஷ் திவாரி.

விதிமுறைகளை மீறி இந்தக் குடியிருப்புக்கு அனுமதி அளித்த, 2004-இல் மாவட்ட ஆட்சியராக இருந்த பிரதிப் வியாஸின் மனைவி நீனா வியாஸ், நகர்ப்புற வளர்ச்சித்துறையின் துணைச் செயலர் பி.வி. தேஷ்முக் என ஒரு பெரிய அதிகார வர்க்கக் கும்பலும் இக்குடியிருப்பில் தமக்கு இடம் ஒதுக்கிக் கொண்டுள்ளது.

கடலிலிருந்து 500 மீட்டர் தூரம் வரையில் கடலோர ஒழுங்குமுறைப் பிராந்தியம் என்றும் அந்த இடத்தில் வீடுகளோ கட்டிடங்களோ கட்டுவது சுற்றுச்சூழல் விதிமுறைகளுக்கு எதிரானது என்றும் கூறி மீனவர் குடியிருப்புகள் மற்றும் சேரிப்பகுதிகளைச் சேர்ந்த பல்லாயிரம் வீடுகள் மும்பையில் இடித்துத் தள்ளப்பட்டிருக்கின்றன. ஆனால், தடை செய்யப்பட்ட இந்தப் பகுதியில் ஏற்கெனவே கட்டப்பட்டிருக்கும் அடுக்கு மாடிக் குடியிருப்புகள் எவற்றின் மீதும் அரசு கைவைக்கவில்லை.

மேற்கு கடற்கரை ஓரம் மும்பை முதல் கோவா வரையிலான இயற்கை எழில் கொஞ்சும் கடலோரப் பகுதி, உலகிலேயே ரியல் எஸ்டேட் விலை உச்சத்திலிருக்கும் பகுதிகளில் ஒன்று. இந்தக் கடலோரப் பகுதியில் சுற்றுச்சூழல் துறையின் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டிருக்கும் குடியிருப்புதான் ஆதர்ஷ் அடுக்குமாடிக் குடியிருப்பு.

கடற்படை துணை அட்மிரல் சஞ்சீவ் பாசின், “இக்குடியிருப்பு கட்டப்பட்டுள்ள இடம், கப்பல்தளத்துக்கு வெகு அருகில் தாக்குதல் எல்லைக்குள் இருப்பதால், கடற்படைத் தளத்தை உளவு பார்ப்பது எளிதென்றும், பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்றும்” இராணுவ அமைச்சகத்துக்கு எழுதியதால்தான் இத்திட்டம் விசாரிக்கப்பட்டு, தளபதிகளும் இதில் சம்பந்தப்பட்டுள்ளனர் என்பது தெரியவந்தது. சஞ்சீவ் பாசின், இத்திட்டத்தைச் செயல்படுத்தும் ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் மீதும் அனுமதித்த அதிகாரிகள் மீதும் நடவடிக்கை தேவை என்றும் குறிப்பு எழுதியிருந்தார்.

ஆதர்ஷ் மோசடிகள் பற்றி அறிவதற்காக பூனாவைச் சேர்ந்த விஹார் துர்வே என்பவர், தகவலறியும் உரிமை சட்டத்தின் கீழ் இத்திட்டத்தில் பயனடைந்தவர்கள் பற்றிக் கேட்டிருந்தார். அவருக்கு இரண்டுமுறை தகவல் மறுக்கப்பட்டது. காரணம், மராட்டிய அரசின் தகவல் கமிஷனர் ரமானந்த் திவாரியின் மகனுக்கும் ஆதர்சில் வீடு ஒதுக்கப்பட்டிருக்கிறது என்பது பின்னர் தெரியவந்தது.

தற்போது முதலமைச்சர் மாற்றம், சி.பி.ஐ விசாரணை என்ற நாடகங்கள் நடந்து கொண்டிருக்கும் நிலையில், கொலாபாவில் உள்ள இராணுவ எஸ்டேட் அலுவலகத்தின் கோப்புகளில் முக்கியமான ஆவணங்கள் பல காணாமல் போயிருக்கின்றன. இராணுவத்துக்குச் சொந்தமான அந்த நிலத்தில் அடுக்குமாடி வீடு கட்டுவதற்கு மார்ச் 2000-இல் வழங்கப்பட்ட தடையில்லா சான்றிதழைக் காணவில்லை. முதன்முதலில் எந்தெந்த சிப்பாய்களுக்கு வீடு ஒதுக்குவதாகச் சொல்லி இந்தத் திட்ட முன்வரைவு முன்வைக்கப்பட்டதோ, அதனையும் காணவில்லை.

மகாராட்டிர அரசின் நகர்ப்புற வளர்ச்சிச் துறையில் ஆதர்ஷ் சொசைட்டி தொடர்பான கோப்புகளிலும் முக்கியமான காகிதங்களைக் காணவில்லை என்று சி.பி.ஐ. கூறியிருக்கிறது.

இரண்டு முன்னாள் முதல்வர்களும், மூத்த அதிகாரிகளும் கையொப்பமிட்ட ஆணைகள், சுற்றுச்சூழல் விதிகளைத் தளர்த்தி நகர்ப்புற வளர்ச்சி இலாகா கொடுத்த தடையில்லாச் சான்றிதழ், சாலையின் அகலத்தை 60 மீட்டரிலிருந்து 18 மீட்டராக குறைத்துக் கொண்டு, மீதியுள்ள 42 மீட்டர் சாலையை ஆக்கிரமித்து கட்டிடம் கட்டுவதற்கு ஆதர்ஷ் சொசைட்டிக்கு அரசால் வழங்கப்பட்ட அனுமதி, 6 மாடிகளை 31 மாடிகளாக உயர்த்தி கட்டுவதற்கு வழங்கப்பட்ட அனுமதி – இவை தொடர்பான ஆவணங்கள் காணவில்லை என்று சி.பி.ஐ. தெரிவித்திருக்கிறது.

ஆதர்ஷ் ஊழலைத் தொடர்ந்து, இதைவிடப் பிரம்மாண்டமான ரியல் எஸ்டேட் ஊழலான லவாசா ஊழல் அம்பலமாகியிருக்கிறது. விவசாய நிலங்கள், பழங்குடி மக்களின் நிலங்கள் அடங்கிய சுமார் 12,316 ஏக்கர் மலைப்பிராந்தியத்தை மகாராட்டிர அரசு 2001-இல் தாரை வார்த்திருப்பது அம்பலமாகியிருக்கிறது.

“சிறு கடை வியாபாரிகளையும், குடிசை வாசிகளையும் ஆக்கிரமிப்பாளர்கள் என்று கூறி அவர்களுடைய கடைகளையும் வீடுகளையும் இடித்துத் தள்ளும் அரசு, ஆதர்ஷ் உள்ளிட்ட சட்டவிரோத கட்டுமானங்களை இடிக்க மறுப்பது ஏன்?” என்று கேள்வி எழுப்புகிறார், மேதா பட்கர். தனக்குச் சொந்தமான நிலத்தையே காப்பாற்றிக் கொள்ளமுடியாத இராணுவம், தேசத்தை எப்படிக் காப்பாற்றும் என்று எள்ளி நகையாடுகிறார். மும்பை சாந்தாகுரூஸ் விமான நிலையத்திற்கு அருகிலேயே இராணுவத்துக்குச் சொந்தமான நிலம் ரியல் எஸ்டேட் முதலைகளுக்கு விலை பேசப்பட்டு கட்டிடங்களாக மாறியிருப்பதையும் அம்பலமாக்கியிருக்கிறார்.

நாடு முழுவதும் இராணுவத்துக்கு சொந்தமாக இருக்கும் பல இலட்சம் ஹெக்டேர் நிலங்களில் விலை பேசப்பட்டவை எத்தனை, எத்தனை ஆயிரம் கோடிகளை இராணுவ அதிகாரிகள் விழுங்கியுள்ளார்கள் என்ற விவரங்கள் ஒருக்காலும் வெளியே வரப்போவதில்லை.

ஆதர்ஷ் ஊழல் அம்பலமானவுடன் தலைமைத் தளபதிகள் கபூர், விஜ் ஆகியோர் “இந்த வீடுகள் சிப்பாய்களுக்கு ஒதுக்கப்பட்டவை என்று எங்களுக்குத் தெரியாது” என்று பச்சையாகப் புளுகியிருக்கின்றனர். வீடுகளைத் திருப்பிக் கொடுத்து விடுவதாகவும் அறிவித்திருக்கின்றனர். தற்போதைய இராணுவத் தலைமைத் தளபதியோ, “இந்த சிறிய விசயத்தை வைத்துக் கொண்டு இந்திய இராணுவத்தின் ஒழுக்கத்தையும் கட்டுப்பாட்டையும் குறைத்து மதிப்பிட்டு விடக்கூடாது” என்று பேசியிருக்கிறார்.

நேர்மை, கட்டுப்பாடு, தியாகம், ஒழுக்கம் என்றெல்லாம் கதை சொல்லித்தான், சிவில் சமூகத்துக்கு மேம்பட்ட கேட்பாரற்ற அதிகாரமாக இராணுவம் பாதுகாக்கப்படுகிறது. பச்சைப் படுகொலைகள் பல அம்பலமாகி, காஷ்மீரே பற்றி எரியும் சூழ்நிலையிலும், ஆயுதப்படைகள் சிறப்பு அதிகாரச் சட்டத்தை எக்காரணம் கொண்டும் இரத்து செய்யக்கூடாது என்றும், தாங்கள் செய்யும் சட்டவிரோதப் படுகொலைகளுக்காக எல்லோரையும்போல நீதிமன்றத்தில் நின்று இராணுவம் பதில் சொல்ல முடியாது என்றும் திமிர்த்தனமாகப் பேசி வருகிறது இராணுவத்தின் அதிகார வர்க்கம்.

ஆனால், கேள்விக்கு அப்பாற்பட்ட புனிதப்பசுவாகச் சித்தரிக்கப்பட்டுப் பாதுகாக்கப்படும் இராணுவத்தின் யோக்கியதை ஆதர்ஷ் ஊழலில் சந்தி சிரிக்கிறது. போர் முனையில் உயிர் விட்ட தனது சிப்பாய்களுடைய பிணத்தைக் காட்டி, கோடிக்கணக்கில் சுருட்டியிருக்கும் இராணுவ உயர் அதிகாரிகள், ஓட்டுப் பொறுக்கிகளைக் காட்டிலும் தாங்கள் கேவலமானவர்கள் என்பதை நிரூபித்திருக்கிறார்கள்.

பொதுச்சொத்தை கொள்ளையிடுவதற்கான வாய்ப்பைத் திறந்து விட்டிருக்கும் தனியார்மய-தாராளமயக் கொள்கைகள் இராணுவத்தின் உடுப்பையும் களைந்து நிர்வாணமாக்கியிருக்கின்றன. ஆயுதம் முதல் சிப்பாய்களுக்கான அன்றாட ரேசன் வரையில் இராணுவத்துக்காக செய்யப்படும் அனைத்துச் செலவுகளிலும், 10% கமிஷன் என்பது இந்திய இராணுவத்தில் அமல்படுத்தப்படும் எழுதப்படாத விதி. ஆதர்ஷ் ஊழலில் இந்த சதவீதக் கணக்கு கொஞ்சம் அதிகரித்திருக்கிறது. 103-க்கு 100 ஊழல். அதாவது, ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள 103 வீடுகளில் 3 பேர் மட்டும்தான் கார்கில் போர்முனையில் இருந்தவர்கள்.

ஆதர்ஷ் என்ற இந்திச் சொல்லுக்கு முன்மாதிரி என்று பொருள். தேசத்துக்கே இராணுவம்தான் முன்மாதிரி எனும்போது, இராணுவம் சம்பந்தப்பட்ட ஊழலும் முன்மாதிரியாகத்தானே இருக்கவேண்டும்?

“நமக்கு வாய்த்த அடிமைகள் மிகவும் திறமைசாலிகள். ஆனால் ரெண்டு பேருக்கும் நாக்குதான் கொஞ்சம் நீளம். ஓயாமல் நக்கித் தொலைக்கிறார்கள் ”


இந்து புராணக் குப்பைகளில் சூப்பர் ஸ்டார் அவதாரம் என்று போற்றப்படும் கிருஷ்ணன், என்ற கிரிமினலின் லீலைகள் எப்படி வருணிக்கப்பட்டுள்ளன என்பதை நாம் படித்திருப்போம். கிருஷ்ணன் கோபியர்களின் சேலையைப் பிடித்து இழுத்தது, குளத்தில் குளிக்கும் போது எட்டிப் பார்த்தது போன்ற ‘ஈவ் டீசிங்’ வேலைகளை அன்றைய வியாசனில் இருந்து நேற்றைய கண்ணதாசன் வரை எப்படியெல்லாம் விதந்தோதி எழுதியிருந்தார்கள் என்பதைப் பார்த்திருக்கிறோம்.

அவன் துவாபர யுகத்தில் வெண்ணை திருடித் தின்றதையும், கோபியரோடு குத்தாட்டம் போட்டதையும் புராணமாகவும் வரலாறாகவும் போற்றும் ஒரு தேசத்திற்கு கலியுகத்தில் மீண்டும் ஒரு ‘அவதாரம்’ எழுந்தருளினால் காட்சிகள் எப்படியிருக்கும் என்பதை கடந்த சில நாட்களாகப் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

இந்த மாதம் 6ம் தேதி இந்திய ஆளும் வர்க்கத்தின் சமூகத்திலும் தரகு முதலாளிகளின் சமூகத்திலும் ‘ஒபாமாவதார்’ எழுந்தருளியது. அவதாரம் சும்மா வருமா…? கூடவே உளவுத்துறை, ஒற்றர்கள், அமெரிக்க அரசு அதிகாரிகள், பாதுகாப்புக்காக கமாண்டோக்கள், பத்திரிகையாளர்கள் என்று தன்னோடு சேர்த்து ஒரு மூவாயிரம் பேரையும் கூட்டி வந்துள்ளார். இந்த மந்தையையும், மந்தையின் மேய்ப்பரையும் பாதுகாக்க அமெரிக்க அரசு நாளொன்றுக்கு 900 கோடி ரூபாய் செலவு செய்கிறதாம். மூன்று நாள் கணக்கு – சுமார் 2700 கோடிகள்! கொஞ்சம் காஸ்ட்லியான அவதாரம் தான். போகும்போது “பில்லை சார் கையில கொடுத்திடு” என்று மன்மோகன்சிங்கை கையைக் காட்டி விட்டு பரிவாரங்கள் கிளம்பிவிடும். 2700 கோடி என்பது அமெரிக்காவின் செலவுக் கணக்கு தான் – இதற்குச் சற்றும் குறையாத வகையில் இந்திய அரசும் மொய் வைத்திருக்கும். மொய்க் கணக்கு நோட்டை நாம் எந்தக் காலத்திலும் பார்க்க முடியாது.

வந்து இறங்கியுள்ள துரைமார்களுக்கு துரைசானிகளுக்கும் மனம் கோணாமல் சேவை செய்து விட வேண்டும் என்ற பதைப்பில் இந்திய ஆளும் வர்க்கமும் அதிகார வர்க்கமும் நாணிக் கோணிக் கொண்டு நிற்பதைக் காணக் கண் கோடி வேண்டும். மும்பை தாஜ் ஓட்டலின் அத்துணை அறைகளையும் ஒபாமாவதாருக்கும் அவரின் சம்சாரவதாருக்குமாகச் சேர்த்து முன்பதிவு செய்து விட்டார்கள்.

சீமைத்துரைக்கும் அவரது பரிவார தேவதைகளுக்கும் லோக்கல் சோம பானமா ஊத்திக் கொடுக்க முடியும்? இவர்களுடைய தாக சாந்திக்காக வாங்கப்பட்டிருக்கும் சீமை பானம் பாட்டில் ஒன்றின் விலை மட்டும் 5 லட்சம் ரூபாயாம்! மூவாயிரம் பேருக்கும் மூன்று நாட்களுக்கு “தண்ணி செலவு” மட்டும் எவ்வளவு ஆகுமோ தெரியவில்லை. தலைக்கு “ஆஃப்” அடித்தாலும் மூணு நாளுக்கு 225 கோடி ரூபாய் கணக்கு வருகிறது.

அப்புறம் இந்த 3000 பேருக்கும் கம்பெனி கொடுத்த வகையில் நம்மூர் அதிகாரிகள், அமைச்சர் பெருமக்களுக்கான செலவு, அனைவருக்குமான சாக்கனா செலவு இதெல்லாம் தனி. மொத்தத்தில் என்ன செலவு ஆகியிருக்கும் என்பதை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்டுத் தெரிந்து கொள்ள முடியாது. இதெல்லாம் அரசாங்க ரகசியங்கள். அமெரிக்க சக்ரவர்த்தி திவாலாகி டவுசர் கிழிந்த நிலையில் விஜயம் செய்யும்போதே இவ்வளவு தடபுடலான வரவேற்பு! இன்னும் இருக்கவேண்டிய படி இருந்தால் என்ன நடக்குமோ, கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை.

“ரெம்ப நல்லவர்” என்று அமெரிக்காவிடம் பேரெடுத்தவரான, இதே மன்மோகன் சிங் தான் அழுகி வீணாகும் உணவு தானியங்களை ஏழைகளுக்கு வழங்க அத்தனை பகுமானம் காட்டியவர். முதலாளித்துவ ஊடகங்களுக்கு இந்த ஆபாசங்களெல்லாம் ஒரு பொருட்டேயில்லை – மிஷேல் ஒபாமா “பாண்டி” விளையாண்டது, பல்லாங்குழி விளயாண்டது, புருசனோடு சேர்ந்து டப்பாங்குத்து ஆடியது போன்ற அவதார லீலைகளையெல்லாம் கதை கதையாக முன்பக்கத்தில் வெளியிட்டு வருகின்றன. இன்றைய செய்தி நாளைய வரலாறு. நாளன்னிக்கு புராணம்.

செத்துப் போன பார்ப்பன இந்து மதத்தைப் புதைக்காமல் விட்டதைப் போல இந்த அதிகாரவர்க்கத் தரகர்களையும் விட்டுவிட்டால் இன்னும் சில நூற்றாண்டுகளுக்குப் பின் இந்த ஒபாமாவதார ஆபாசங்களும் கிருஷ்ணாவதாரக் கதையைப் போல் ஒரு புராணமாக செட்டில் ஆகிவிடும் வாய்ப்பும் இல்லாமல் இல்லை.

இந்தியாவின் ‘பெரும்’ இடதுசாரிக் கட்சியான சி.பி.எம் கட்சி தமது பலத்தை அணிதிரட்டாமல் ஒபாமாவுக்கு வெறும் அடையாள எதிர்ப்பு காட்டப்போதாக அறிவித்ததையே பொறுக்க முடியாமல் ஆன்மீகப் பேரொளி சிரீ.சிரீ ரவிசங்கர் கண்டித்திருக்கிறார்.

ஆளும் வர்க்கத்துக்கே மிகவும் பிடித்தமான ‘தீவிரவாதப்’ பிரச்சினையில் தான் சரியாக ஒத்துழைக்கவில்லை என்பது அவர்களது மனக்குறை. அதற்கே இந்த சாமியார் குதிக்கிறார். ’அதிதி தேவோ பவ:’ என்ற ஹிந்து கலாச்சாரமே பாதிக்கப்பட்டு விட்டதாக பதறுகிறார். ஹிந்துக்களின் உணர்வுகளைப் புண்படுத்தி விட்டதாகக்கூறி டாக்டர் ஸுப்ரமண்யம் ஸ்வாமி அவர்கள், ஸுப்ரீம் கோர்ட்டில் ஒரு ஸ்பெஷல் லீவ் பெட்டிஷன் போடக்கூடும். ஆர்.எஸ்.எஸ் டவுசர் பாண்டிகளும் களத்தில் குதிக்கக் கூடும்.

ஒபாமா வருகையின் ஒவ்வொரு நொடியும், ஆளும் வர்கத்தின் பவ்யமும், தரகு முதலாளி வர்க்கத்தின் ஏக்கப்பார்வைகளும் முதலாளித்துவ ஊடகங்களில் விரிவாக பதிவு செய்யப்பட்டு வருகின்றன. ஒரு காட்சி தான் பாக்கி; ஒபாமாவும் மிஷேலும் நடந்து வரும் போது ‘எசமான் காலடி மண்ணெடுத்து நெத்தியில பொட்டு வெச்சோம்…’ என்று பாடிக் கொண்டே சோனியாவும் மன்மோகனும் துண்ணூறு பூசிக் கொள்ளும் காட்சி!

வாராது வந்த இந்த மாமணி ஒன்றும் சும்மாங்காச்சுக்கும் இந்தியாவுக்கு இன்பச் சுற்றுலா வரவில்லை. இப்போது அமெரிக்காவில் நடந்த உள்ளாட்சித் தேர்தல்களில் ஒபாமாவின் ஜனநாயகக் கட்சி படுதோல்வி அடைந்துள்ளது. பொருளாதாரப் பெருமந்தத்தைத் தொடர்ந்து ஆட்சிக்கு வந்த ஒபாமா, தனது தேர்தல் வாக்குறுதிகளில் கூறியபடி அமெரிக்கர்களுக்கு வேலைவாய்ப்புகளை அளிக்க முடியவில்லை. அவர் கொண்டுவந்த காப்பீட்டு மசோதா அமெரிக்கர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்போது உள்நாட்டில் பணப்புழக்கத்தையும் வேலைவாய்ப்பையும் தூண்டிவிட்டாக வேண்டிய கட்டாயத்தில் அவர் உள்ளார்.

இந்தப் பின்னணியில்தான் இந்தியா இராணுவ தளவாட உற்பத்தியில் அந்நிய நேரடி முதலீட்டை 26 சதவீதத்திலிருந்து 49 சதவீதத்திற்கு உயர்த்தியுள்ளது. வரும் மார்ச் மாதத்திற்குள் மட்டும் சுமார் ஒன்றரை லட்சம் கோடிகள் ($30 Billion) மதிப்புக்கு இராணுவ தளவாடங்களை கொள்முதல் செய்ய இந்திய அரசு பட்ஜட் ஒதுக்கீடு செய்துள்ளதையும் இதனுடன் இணைத்துப் பார்த்தால் ஓரளவு தெளிவான சித்திரம் கிடைக்கும்.

மத்திய மற்றும் தெற்காசிய விவகாரங்களுக்கான அமெரிக்க அரசுச் செயலர் ராபர்ட் ஓ ப்ளேக்கின் கூற்றுப்படி, அமெரிக்காவின் F-16 ரக போர் விமானங்கள் இந்திய பாதுகாப்புத் துறையின் டென்டரில் பங்கேற்கிறது – இந்த டென்டரை அமெரிக்கா வென்றால் அது அமெரிக்காவில் 27,000 வேலைகளை உருவாக்கும் என்கிறார் பிளேக். அவர்கள் எப்போதுமே தொழிலாளிகளுக்கு கிடைக்கப்போகும் “ஜாப்” பற்றித்தான் கணக்கு சொல்வார்கள். முதலாளிகளுக்கு கிடைக்கப் போகும் இலாபக்கணக்கை சொல்வது அமெரிக்க மரபு அல்ல. அந்த இலாபமும், இந்திய பாதுகாப்புத் துறையின் சுயேச்சைத் தன்மையைக் குலைப்பதால் கிடைக்கப் போகும் பலனும் தனி கணக்கு. முதலில் F-16 ரக போர் விமானங்கள் டென்டரில் இருந்து நிராகரிக்கப் பட்டதையும், பின்னர் அதை திரும்பச் சேர்த்துக் கொண்டதையும் இப்போது நினைவு படுத்திப் பாருங்கள்.

இதுல ஒரு உள் குத்தும் இருக்கிறது. பாக்கிஸ்தான் விமானப்படையிலும் இந்த எஃப்-16 விமானங்கள் இருக்கின்றன. இந்தியாவிலும் வரப்போகின்றன என்றால் இரண்டில் எது உசத்தியான தேசபக்தி விமானமென்பது தெரியவில்லை.

மேலே சொன்னது இராணுவத் துறையில் மட்டும் தான். உலகளவில் உற்பத்தியாகும் மின்சாரத்தில் 15% அணு சக்தியிலிருந்து உற்பத்தியாகிறது. அணு உலைகளினால் ஏற்படும் கதிர்வீச்சு ஆபத்துகளைக் கணக்கில் கொண்டு அங்கே கழித்துக் கட்டப்பட்ட இந்தத் தொழில்நுட்பத்தை இந்தியாவின் தலையில் சுமத்தவும், அணு தொழில் நுட்பத்தில் இந்தியா பெற்றிருக்கும் சுயேச்சைத் தன்மையைக் குலைக்கவும் போடப்பட்டிருக்கும் இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தைத் தொடர்ந்து அணு உலைகளை அமைப்பதிலுயும் இந்திய அரசு அந்நிய முதலீடுகளை அனுமதித்திருக்கிறது.

இப்படி இறக்குமதி செய்து நிறுவப்படும் அணு உலைகளில் விபத்து ஏற்பட்டால், அதற்கான பொறுப்பில் இருந்து அந்நிய முதலாளிகளைக் கழற்றி விடும் வகையிலான சட்டத்தையும் அண்மையில்தான் மன்மோகன் அரசு நிறைவேற்றியிருக்கிறது தொழில்நுட்பக் கோளாறுகள், இயந்திரக் கோளாறுகள், பாதுகாப்புக் குறைபாடுகள் போன்றவற்றால் ஏற்படும் விபத்துகளுக்கான பொறுப்பில் இருந்து அமெரிக்க, அந்நிய முதலாளிகளைத் தப்புவிக்கும் CSC (Convention for supplimentary compensation for nueclear damage) ஒப்பந்தத்திலும் இந்தியா கையெழுத்து இட்டுவிட்டது. எல்லாம் திட்டமிட்டபடி வரிசைப் படி செய்து முடித்ததற்காக தன் அடிமைகளை ஒரு வார்த்தை பாராட்டி விட்டு ஒரு மேஸ்திரி பார்வை பார்த்து விட்டுச் செல்லவும், அப்படியே சம்சாரத்தோடு தீவாளி கொண்டாடவும் ஒபாமா வந்து விட்டார்.

இந்திய அமெரிக்க அறிவுத்துறை முன்முயற்சி, விவசாயத்துறையில் அமெரிக்கா கொண்டு வரும் உமியையும், இந்தியா கொண்டுவரும் அவலையும் ரெண்டு பேரும் சேர்ந்து ஊதி ஊதித் தின்பதற்கான ஒப்பந்தம், அப்புறம் 4 கோடி குடும்பங்களின் வயிற்றுப் பிழைப்பான சில்லறை வணிகம் முதலான சில்லறை சமாச்சாரங்களை அமெரிக்காவுக்கு திறந்து விடுவதற்கான சுபமுகூர்த்த நாட்கள்.. போன்றவை இந்த விஜயத்தின் போது முடிவாக இருக்கின்றன.

திவான் பகதூர் மன்மோகன் சிங்கின் விசுவாசத்தையும் சேவையையும் மெச்சி, தெற்காசியப் பிராந்திய பாதுகாப்பு என்ற எல்லையைத் தாண்டி, ஆப்பிரிக்கா உள்ளிட்டு உலகின் பல்வேறு பகுதிகளில் அமெரிக்காவின் சார்பில் ரோந்துப் பணியில் ஈடுபடும் “பங்களா நாய்” பதவியையும் இந்தியாவுக்கு வழங்கவிருக்கிறார் ஓபாமா.

குனிந்து, வளைந்து கும்பிடு போட்டு, கையது கொண்டு வாயது பொத்தி, “எசமான,.. அப்டியே இந்த பாகிஸ்தானை ‘லைட்டா’ கண்டிச்சி ஒரு வார்த்தை ஒங்க வாயால சொல்லிட்டு போனீங்கன்னா…” என்று ஒபாமாவிடம் இழுத்துப் பார்த்தார் மன்மோகன்சிங்.

“பாகிஸ்தானில் குழப்பம் நிலவுவது (அதாவது நீ குழப்பம் விளைவிப்பது) உனக்கு நல்லதல்ல. பாகிஸ்தான் வளமாகவும், வலிமையாகவும், ஸ்திரமாகவும் இருப்பதுதான் இந்தியாவுக்கு நல்லது” என்று கூறி நறுக்கென்று மன்மோகன் சிங்கின் தலையில் ஒரு குட்டு குட்டி விட்டார் ஒபாமா. டர்பன் மறைத்திருப்பதால், வீக்கம் வெளியில் தெரியவில்லை. “இருக்கட்டும்.. இருக்கட்டும்… அதனாலென்ன.. சும்மா ஒரு இதுக்கு சொன்னேன் மன்னா…” என்று தலையைத் தடவிக் கொண்டுவிட்டார் மன்மோகன்சிங்.

பரமசிவனுக்கு ஒரு பாம்பு. அமெரிக்காவின் கழுத்திலோ இந்தியா பாகிஸ்தான் என்று இரண்டு பாம்புகள். இருந்தாலும் “நீதான் நல்ல பாம்பு” என்று இந்தியாவுக்கு சான்றிதழ் கொடுத்திருக்கிறார் ஒபாமா.

மொதல்ல நல்லவரா இருந்தாதானே அப்புறமா இந்தியா வல்லவராக முடியும்?

திரும்பிச் செல்லும் போது ஒபாமார மிஷேலிடம் சொல்வாராயிருக்கும் – “நமக்கு வாய்த்த அடிமைகள் மிகவும் திறமைசாலிகள். ஆனால் ரெண்டு பேருக்கும் நாக்குதான் கொஞ்சம் நீளம். ஓயாமல் நக்கித் தொலைக்கிறார்கள் ” என்று!

மன்மோகன் சிங்: பிரதிநியா? எடுபிடியா?


பட்டினியோடு போராடி வரும் ஏழைகளுக்கு அரசின் தானியக் கிடங்குகளில் கெட்டுப் போகக்கூடிய நிலையிலுள்ள உணவு தானியங்களை இலவசமாகவோ அல்லது மிகக் குறைந்த விலையிலோ மைய அரசு வழங்க வேண்டும் எனச் சமீபத்தில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த உத்தரவைக் கேட்டு பிரதமர் மன்மோகன் சிங் கொதித்துப் போய்விட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். உணவு மானியம் உள்ளிட்டு மக்களுக்கு வழங்கப்பட்டுவரும் அனைத்து மானியங்களையும் ஒன்றன்பின் ஒன்றாக ஒழித்துக்கட்டி வரும் மன்மோகன் சிங்கிற்கு, உச்ச நீதிமன்ற உத்தரவின் மீது ஏற்பட்ட வெறுப்பு புரிந்துகொள்ளத்தக்கதுதான். “அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றம் தலையிடக் கூடாது” எனக் கூறி, நீதிபதிகளின் அத்துமீறலை இடித்துக் காட்டினார் மன்மோகன் சிங்.

‘‘நாயும் பன்றியும் தெருவில் சுற்றலாம்; ஆனால், பஞ்சமன் தெருவில் நுழையக் கூடாது” என்ற பார்ப்பன நீதியைப் போல, ஒரு உணவுக் கொள்கையை வைத்துக் கொண்டிருக்கிறார், மன்மோகன் சிங். “உணவுக் கிடங்குகளில் நிரம்பி வழியும் தானியங்களை இந்திய எலிகளும் ஐரோப்பிய மாடுகளும் தின்னத் தருவோமே தவிர, பசியால் வாடும் இந்திய ஏழைமக்களுக்கு அதிலிருந்து ஒரு பிடிகூட எடுத்துத் தரமாட்டோம்” என்பதுதான் அவரது கொள்கை.

மன்மோகன் சிங் சொல்லாமல் விட்டுவிட்ட இந்தக் கொள்கையை அவரது உணவு அமைச்சர் சரத் பவார் வெளிப்படையாகக் கூறினார். “அரசு ஏற்கெனவே உணவு மானியமாக 66,000 கோடி ரூபாயைக் கொடுத்து வருகிறது. இதற்கு மேல் எப்படி இலவசமாகத் தரமுடியும்?” இந்த உணவு மானியத்தை இந்திய எலிகளும் கடத்தல்காரப் பெருச்சாளிகளும் பங்கு போட்டுக் கொள்ளும் கதையைப் பிறகு பார்ப்போம். ஆனால், மன்மோகன் சிங் கும்பலைப் பொருத்தவரை தற்பொழுது கொடுக்கப்படும் உணவு மானியமே அதிகம் என்பதும், இதை வெட்ட வேண்டும் என்பதும்தான் கொள்கை.

மைய அரசிடம் தற்பொழுது 6 கோடி டன்னுக்கும் அதிகமாக அரிசியும், கோதுமையும் கையிருப்பில் இருக்கிறது. “இது வழக்கமாக அரசிடம் இருக்க வேண்டிய கையிருப்பைவிட இரண்டு மடங்கு அதிகம் என்றும், இதில் 1 கோடி டன்னுக்கும் அதிகமான உணவு தானியங்கள் கெட்டுப்போய்க் கிடப்பதாகவும்” சமூக நல ஆர்வலர்கள் கூறுகின்றனர். இந்திய உணவுக் கழகத்திடம் போதிய கிடங்குகள் இல்லாததால்தான், வெறும் 55,000 டன் உணவு தானியங்கள் மட்டுமே கெட்டுப் போயிருப்பதாக அரசு உச்ச நீதிமன்றத்திடம் கூறியிருக்கிறது.

எவ்வளவு டன் உணவு கெட்டுப் போயிருக்கக்கூடும் என்ற வாதப்பிரதிவாதம் ஒருபுறமிருக்கட்டும். யானையை வாங்கியவன் அதனை அடக்க அங்குசத்தை வாங்க மறந்துவிட்ட கதையாக, 6 கோடி டன் அளவிற்குக் கொள்முதலை நடத்தியிருக்கும் அரசு, அதனைச் சேமித்து வைக்க இந்திய உணவுக் கழகத்திடம் கிடங்குகள் இல்லை எனக் கூறுவது வேடிக்கையாக இருக்கிறது. இப்பொழுது இதற்குத் தீர்வாக, இந்த அபரிதமான கையிருப்பைப் பாதுகாப்பாகச் சேமித்து வைக்கத் தனியார் கிடங்குகளை வாடகைக்கு எடுக்கப் போவதாக மைய அரசு கூறியிருக்கிறது.

உணவு மானியத்தைக் குறைப்பதற்காக, தானியக் கொள்முதல் செய்வதிலிருந்தும் கிடங்குகளைக் கட்டுவதிலிருந்தும் அரசு விலகிக் கொள்வது; அரசுக்குப் பதிலாக இந்நடவடிக்கைகளில் தனியாரை அனுமதிப்பது என உலக வங்கி இந்தியாவில் தனியார்மயம் புகுத்தப்பட்ட காலத்தில் இருந்தே கட்டளையிட்டு வருகிறது. ஓட்டுப் பொறுக்கும் அரசியல் காரணங்களுக்காகத் தானியக் கொள்முதலை முழுவதும் கைவிடாத அரசு, சில ஆண்டுகளுக்கு முன்னதாகவே தானிய சேமிப்புக் கிடங்குகளைக் கட்டுவதைக் கைவிட்டதோடு, அதனைத் தனியாரிடமும் ஒப்படைத்தது. இன்று 1 கோடி டன்னுக்கும் அதிகமான உணவு தானியங்கள் கெட்டுப் போய்விட்டதாகக் கூறப்படுதவற்கு இந்த உலக வங்கியின் கட்டளையும், அதனைச் சிரமேற்கொண்டு செயல்படுத்திய ஆளும் கும்பலும்தான் காரணம்.

திறந்த வெளியில் கொட்டிக் கிடக்கும் உணவு தானியத்தைப் பசியோடு போராடும் ஏழைகளுக்கு ரேசன் கடைகளின் மூலம் வழங்குவது வீண் செலவாம்; அதே சமயம், ஏழை மக்களுக்குப் பயன்படாத இந்தக் கையிருப்பைத் தனியார் கிடங்குகளில் சேமித்து வைக்க – பதுக்கி வைக்க என்றும் சொல்லலாம் – வாடகையைக் கொட்டி அழுவது ஆக்கபூர்வமான பொருளாதார நடவடிக்கையாம்!

இப்படிப்பட்ட நிலைமை வரக்கூடும் என முன்னறிந்துதான் என்னவோ, மன்மோகன் சிங் அரசு மார்ச் மாதம் போட்ட பட்ஜெட்டிலேயே, தனியார் கிடங்கு களுக்கான குத்தகை கால வரம்பை உயர்த்தும் கொள்கை முடிவைத் தீர்க்க தரிசனத்துடன் எடுத்திருக்கிறது.

இந்த அபரிமிதமான கையிருப்பை, நாயிடம் சிக்கிய தேங்காயைப் போல மன்மோகன் சிங் தனியார் கிடங்குகளில் வைத்து ஏன் பாதுகாக்க வேண்டும்? இந்தக் கையிருப்பை முன்னரே விநியோகித்திருந்தால், அதைப் பாதுகாப்பதற்குச் செலவான பணமும் அரசுக்கு மிச்சமாகியிருக்கும்; தானியங்களும் கெட்டுப் போயிருக்காது என்ற சாதாரண உண்மை பொருளாதார அறிஞரான மன்மோகனுக்குத் தெரியாமலா போய்விட்டது?

அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் செங்குத்தாக உயர்ந்துகொண்டே செல்லும் இத்தருணத்தில், மன்மோகன் சிங் தன்னிடம் உள்ள கையிருப்பை ரேசன் கடைகளின் மூலமோ அல்லது வெளிச் சந்தையின் மூலமோ புழக்கத்துக்குக் கொண்டு வந்திருந்தால், விலைவாசி உயர்வு ஓரளவு கட்டுக்குள் வந்திருக்கும். ஆனால், அரசு இப்படி சந்தையில் தலையிட்டு விலைவாசி உயர்வைக் கட்டுக்குள் கொண்டு வருவதை மன்மோகன் சிங் விரும்புவதில்லை. தமக்கு ஓட்டுப் போட்ட ஏழை மக்கள் இவ்விலையேற்றத்தால் பாதிக்கப்படுவார்களே என்பது பற்றியெல்லாம் அக்கறையில்லாமல், விலைவாசி உயர்வு அவசியமானது என்றுதான் திமிர்த்தனமாக அறிக்கை விட்டுவருகிறார், அவர்.

அரசு சந்தையில் தலையிட்டால், மளிகைப் பொருட்கள் வியாபாரத்தில் நுழைந்துள்ள ரிலையன்ஸ், பிர்லா போன்ற தரகு முதலாளிகளின் நிறுவனங்கள் விலைவாசி உயர்வைப் பயன்படுத்திக் கொண்டு அடித்துவரும் கொள்ளை இலாபம் படுத்துவிடும் என்பதாலேயே, அவரது அரசு சந்தையில் தலையிடாக் கொள்கையைக் கடைப்பிடித்து வருகிறது. உச்ச நீதிமன்றம் உத்தரவை அவர் புறக்கணிப்பதற்கும் இதுதான் காரணம். விலைவாசியை உயர்த்துவதற்காக வியாபாரிகள் சட்டவிரோதமான பதுக்கல் நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள் என்றால், மன்மோகன் சிங் அரசோ உணவுக் கொள்முதல்/சேமிப்பு என்ற பெயரில் சட்டபூர்வமாகப் பதுக்கலை நடத்தி, வர்த்தகச் சூதாடிகளுக்கு உதவி வருகிறது.

உச்ச நீதிமன்றம் சமீபத்தில் வழங்கியுள்ள உத்தரவில், “வறுமைக் கோட்டுக்கு மேலே வாழ்பவர் என முத்திரை குத்தப்பட்டுள்ள குடும்ப அட்டைகளை முற்றிலுமாக ஒழித்துக் கட்ட வேண்டும்; அல்லது அவற்றின் எண்ணிக்கையைக் கணிசமாகக் குறைக்கும் வண்ணம் வருமான வரம்பு நிர்ணயிக்க வேண்டும்” என்ற ஆலோசனையும் வழங்கப்பட்டுள்ளது. வெளித் தோற்றத்தில் பட்டினி கிடக்கும் ஏழைகளுக்கு ஆதரவாகப் பேசுவது போலத் தெரியும் இந்த உத்தரவு, உண்மையில் உணவு வழங்கல் கொள்கையில் உலக வங்கியின் கட்டளைகளை விரைவாக நடைமுறைக்குக் கொண்டு வரவேண்டும் என்ற கண்ணோட்டத்தின் அடிப்படையில்தான் வழங்கப்பட்டுள்ளது என்பதற்கு இந்த ஆலோசனையே சாட்சி. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவிலுள்ள இந்த ஆலோசனையை டாக்டர் மன்மோகன் சிங் புறக்கணிக்க மாட்டார் என்று அடித்துக் கூறலாம்.

வறுமைக் கோட்டுக்கு மேலே என்ற முத்திரை குத்தப்பட்ட குடும்ப அட்டைகள் டாடா, அம்பானி குடும்பங்களுக்கா கொடுக்கப்பட்டுள்ளது? இந்தியாவிலேயே மிகப் பெரிய நகர்ப்புறச் சேரியான மும்பையில் உள்ள தாராவியில் விரல்விட்டு எண்ணக்கூடிய குடும்பங்கள் தவிர, அங்கே வசித்து வரும் பிற பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் வறுமைக் கோட்டுக்கு மேலே வாழுவதாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. குடும்ப அட்டைகளை இப்படிப் பிரிப்பது ஏழைகளைக் காவு கொள்ளும் திட்டம் என்பதற்கு இதைவிட வேறென்ன ஆதாரம் வேண்டும்?

திட்ட கமிசனும் தேசிய ஆலோசனை கவுன்சிலும் இணைந்து சமீபத்தில் நடத்திய கூட்டத்தில், “வறுமைக் கோட்டுக்குக் கீழே/மேலே என்ற பிரிவினையின்றி அனைவருக்குமான பொது விநியோகத் திட்டத்தை நடைமுறைப்படுத்தினால், அரசுக்கு ஆண்டுதோறும் 1,40,000 கோடி ரூபாய் உணவு மானியமாகச் செலவாகும்; அதனால், அது நடைமுறை சாத்தியமற்றது. மேலும், வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் மக்களுக்குக்கூட மாதமொன்றுக்கு 35 கிலோ அரிசி அல்லது கோதுமையைத் தவிர, வேறு அத்தியாவசிய உணவுப் பொருட்கள் எதையும் வழங்க முடியாது” எனத் திட்ட கமிசன் திட்டவட்டமாகக் கூறிவிட்டது.

அதாவது, அரசு தனது கையிருப்பிலுள்ள தேவைக்கும் அதிகமான உணவு தானியத்தை மானிய விலையில் ஏழைகளுக்கு வழங்காது என்பது உறுதியாகிவிட்டது. பூதம் புதையலைக் காத்த கதையாக மன்மோகன் சிங் இந்தக் கையிருப்பைப் பாதுகாத்துக் கொண்டிருக்கப் போகிறாரா அல்லது முன்னாள் பிரதமர் வாஜ்பாயி, அவரது ஆட்சியில் மக்கள் பட்டினி கிடந்த போதும் 2.8 கோடி டன் உணவுப் பொருட்களை ஐரோப்பிய மாடுகள் தின்பதற்காக ஏற்றமதி செய்தாரே, அதைப் போலச் செய்வாரா என்ற கேள்விக்கு எதிர்காலம் பதில் சொல்லக்கூடும்.

ஏழைகள் பட்டினி கிடக்கும்பொழுது அரசு அவர்களுக்கு உதவ முன் வர வேண்டும் என்ற அறநெறியெல்லாம் மன்மோகன் சிங்கிடம் கிஞ்சித்தும் கிடையாது. இரண்டு இலட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதையே அலட்சியப்படுத்தி வரும் அவர், ஏழைகள் பட்டினி கிடப்பதையா ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்வார்?

2010-11 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டில் உணவு மானியத்தில் 450 கோடி ரூபாயை வெட்டிய அவரது அரசு, பன்னாட்டு நிறுவனங்களுக்கும் தரகு முதலாளிகளுக்கும் 5,00,000 கோடி ரூபாயை வரிச் சலுகையாக வாரி வழங்கியது. இது பாமரனுக்கு ஓரவஞ்சனையாகத் தெரியலாம். ஆனால், மன்மோகன் சிங் – மாண்டேக் சிங் அலுவாலியா – ப.சிதம்பரம் கும்பலைப் பொருத்தவரை, இந்தப் பாதையில் சென்றால்தான் இந்தியா உலகத் தரத்தை அடைய முடியும் என்று கருதுகிறார்கள்.

அவர்கள் தமக்கு வாக்களித்த கோடிக்கணக்கான ஏழை – எளிய மற்றும் நடுத்தர மக்களின் பிரதிநிதியாக இருந்து ஆட்சி நடத்தவில்லை. பன்னாட்டு நிறுவனங்கள், தரகு முதலாளிகள், புதுப் பணக்கார மேட்டுக்குடிக் கும்பலின் பிரதிநிதியாகத்தான் மன்மோகன் சிங் பிரதமர் நாற்காலியில் உட்கார்ந்திருக்கிறார்.

சொல்லிக் கொள்ளப்படும் வளர்ச்சித் திட்டங்கள் அனைத்தும் இந்தக் கும்பலின் நலனை முன்னிறுத்தித்தான் போடப்படுகின்றன. அவ்‘வளர்ச்சி’த் திட்டங்கள் அடித்தட்டு மக்களின் வாழ்வை மேலும் மேலும் நாசப்படுத்தி வருவதை யாரேனும் கண்டித்தால், எதிர்த்துப் போராடினால், அவர்கள் அனைவரையும் “வளர்ச்சிக்கு எதிரானவர்கள்’’, “மாவோயிசத் தீவிரவாதிகள்” என முத்திரை குத்தி ஒடுக்கி வருகிறார், மன்மோகன் சிங். இப்படிப்பட்ட கும்பலிடம் உணவு மானியத்தை வெட்டக்கூடாது, ஏழை மக்களுக்கு கூடுதலாக உணவுப் பொருட்களை வழங்க வேண்டும் என ஆலோசனை கூறுவதெல்லாம், செவிடன் காதில் ஊதிய சங்காகவே முடியும்!

மயிர் பிளக்கும் ஆய்வுகள் விளக்கங்கள் …


”பாபர் மசூதியின் மொத்த வளாகமும் இந்துக்களுக்கு உரியது. அதுதான் இராமன் பிறந்த இடம், அது இராமனுக்கு சொந்தமானது. பாபரின் உத்தரவின் பேரில் கோயிலை இடித்துத்தான் மசூதி கட்டப்பட்டது. இது இசுலாமியக் கோட்பாடுகளுக்கு எதிரானது என்பதால், அந்தக் கட்டிடத்தை மசூதி என்றே கருத இயலாது. அதன்மீது முஸ்லிம்களுக்கு (சன்னி வக்ப் போர்டுக்கு) எந்த உரிமையும் இல்லை” என்பது நீதிபதி சர்மா அளித்துள்ள தீர்ப்பின் சாரம்.

”இராமன் பிறந்த இடம் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் அங்கே இந்துக்கள் வெகு நீண்ட காலமாக வழிபட்டு வருகிறார்கள். எனவே மசூதிக் கட்டிடத்தின் மையப்பகுதி இந்துக்களுக்கு சொந்தமானது. இஸ்லாமியக் கோட்பாடுகளின் படி அது ஒரு மசூதி அல்ல என்ற போதிலும் சர்ச்சைக்குரிய கட்டிடத்தின் உள் தாழ்வாரம் இரண்டு பகுதியினராலும் வரலாற்று ரீதியாகவே வழிபாட்டுக்கு பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. எனவே, தற்போது ராமன் சிலை வைக்கப்பட்டுள்ள மையப்பகுதி இந்துக்களுக்கு தரப்படவேண்டும். தாழ்வாரம் உள்ளிட்ட மொத்த இடம் மூன்றாகப் பிரிக்கப்பட்டு ராமஜன்மபூமி நியாஸ், சன்னி வக்ப் போர்டு, நிர்மோகி அகாரா ஆகியோர் மூவருக்கும் தரப்படவேண்டும்.” இது நீதிபதி அகர்வால் அளித்துள்ள தீர்ப்பின் சாரம்.

”சர்ச்சைக்குரிய இடம் பாபரால் அல்லது பாபரின் ஆணையின் பேரில் கட்டப்பட்ட மசூதி. ஏற்கெனவே இடிபாடுகளாக இருந்த ஒரு இடத்தின் மீது அது கட்டப்பட்டிருக்கிறதே அன்றி, கோயிலை இடித்து கட்டப்படவில்லை. அங்கே மசூதி கட்டப்படுவதற்கு நெடுநாள் முன்னதாகவே அந்தப் பரந்த பகுதியின் ஏதோ ஒரு சிறிய இடத்தில்தான் இராமன் பிறந்திருக்கிறார் என்ற நம்பிக்கை இந்துக்களிடம் நிலவியது. குறிப்பாக இந்த இடம் சுட்டிக்காட்டும்படியான கருத்து இந்துக்களிடம் நிலவவில்லை. ஆனால் மசூதி கட்டப்பட்ட சில காலத்துக்குப் பின்னர், இந்த இடத்தில் தான் ராமன் பிறந்தார் என்று இந்துக்கள் அதனை அடையாளப்படுத்த தொடங்கினர். 1855 இல் ராம் சபுத்ரா, சீதா ரசோய் என்ற கட்டுமானங்கள் அங்கே உருவாக்கப்படுவதற்கு முன்னரே மசூதியின் சுற்றுச்சுவர் அருகே இந்துக்கள் வழிபாடு செய்து வந்தனர். மொத்தத்தில் இரு தரப்பினருமே சர்ச்சைக்குரிய இந்த வளாகத்தில் வழிபாடு செய்து வந்திருக்கின்றனர்.

ஆனால் குறிப்பிட்ட மொத்த இடத்தின் மீதான தங்களது தனிப்பட்ட உரிமை (TITLE ) குறித்த எந்த ஆவணத்தையும் இரு தரப்பினராலும் தர இயலவில்லை. பகுதி அளவிலான உரிமையை நிலைநாட்டும் ஆவணங்களும் இருதரப்பினரிடமும் இல்லை. இது இரு தரப்பினருடைய அனுபவ பாத்தியதையாகவே இருந்து வந்துள்ளது. 1949 இல் அங்கே ராமன் சிலை வைக்கப்பட்டிருக்கிறது.

மேற்சொன்ன நிலைமைகளைக் கணக்கில் கொண்டு மையமண்டபத்திற்கு கீழே உள்ள பகுதி இந்துக்களுக்கு தரப்படுகிறது. மொத்த வளாகமும் மூன்றாகப் பிரிக்கப்பட்டு மூன்று பேருக்கும் வழங்கப்படவேண்டும்.” இது நீதிபதி கான் அளித்துள்ள தீர்ப்பின் சாரம்.

தீர்ப்பின் முழு விவரத்தையும் படித்து, அது குறித்து மயிர் பிளக்கும் ஆய்வுகள் விளக்கங்கள் இனி வழங்கப்படும். சன்னி வக்ப் போர்டு இதனை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்லப்போவதாக அறிவித்திருக்கிறது. இதில் வென்றவர் யார் தோற்றவர் யார் என்றெல்லாம் பார்க்கக் கூடாது என்று ஆர்.எஸ்.எஸ் தலைவர் பகவத் கூறியிருக்கிறார். அந்த இடத்தில்தான் இராமன் பிறந்தான் என்ற தங்களது கூற்று நீதிமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்டு விட்டதாக பாஜக வினர் புளகாங்கிதம் அடைந்துள்ளனர்.

“இது ஒரு கட்டப் பஞ்சாயத்து தீர்ப்பு. 1992 இல் அங்கே ஒரு மசூதி இருந்ததா இல்லையா, அது இடிக்கப்பட்டதை உலகமே பார்த்ததா இல்லையா, அந்த இடத்தின் உரிமையாளர் யார்? இதுதான் இந்த உரிமை மூல வழக்கில் எழுப்பப் பட்டிருந்த (TITLE SUIT) கேள்வி. அதற்கு பதில் அளிக்காமல், தான் பதிலிருக்கத் தேவையில்லாத, தனக்கு விசயம் தெரியாத மதம், மற்றும் வரலாறு சார்ந்த கேள்விகளுக்குள் நீதிமன்றம் மூக்கை நுழைத்திருக்கிறது. ” என்று கருத்து தெரிவித்திருக்கிறார் பிரபல உச்சநீதிமன்ற வழக்குரைஞர் ராஜீவ் தவான்.

ராஜீவ் தவான் கூறியிருப்பதுதான் இந்த தீர்ப்பைப் பற்றி கூறத்தக்க மிக மென்மையான விமரிசனம். “இந்த நாட்டின் இரண்டாம்தர குடிமகன் என்பதை ஒப்புக்கொள். உன்னை உயிர்வாழ அனுமதிக்கிறேன்” என்று குஜராத் படுகொலை நாயகன் மோடி சொன்ன செய்தியைத்தான், “சுக்குமி-ளகுதி-ப்பிலி” என்று வேறு விதமாகப் பதம் பிரித்து சொல்லியிருக்கிறது அலகாபாத் உயர்நீதிமன்றம்.

பாபர் மசூதி இருந்த இடத்தில் இராமன் கோயில் இருந்ததா, அது பாபரால் இடிக்கப்பட்டதா என்ற கேள்விகளுக்கு பதிலளிக்கும் பொறுப்பை மத்திய அரசு, உச்சநீதி மன்றத்திடம் தள்ளிவிட்ட போது, “இவை எங்கள் ஆய்வு வரம்புக்கு அப்பாற்பட்டவை” என்று கூறி அதனை நிராகரித்தது உச்சநீதிமன்றம். உச்ச நீதிமன்றம் எதனை நிராகரித்ததோ அந்தக் கேள்விகளுக்குள் புகுந்து தீர்ப்பும் சொல்லியிருக்கிறது லக்னோ உயர்நீதிமன்றம். “அங்கே ராமன் பிறந்தான் என்பது இந்துக்களின் நம்பிக்கை” என்று ஒரு உரிமையியல் வழக்குக்கு தேவைப்படும் எவ்வித ஆதாரங்களுக்குள்ளும் போகாமல் இந்து நம்பிக்கையையே ஒரு தீர்ப்புக்கான அடிப்படையாகக் கூறியிருக்கிறார்கள் சர்மாவும் அகர்வாலும். ”நம்பிக்கையை நீதிமன்றம் ஒப்புக்கொள்ள வேண்டுமேயன்றி, அதனை ஆராயக்கூடாது. தீர்ப்பு வழங்கும் அதிகாரமும் நீதிமன்றத்துக்கு கிடையாது” என்பதுதான் ஆர்.எஸ்.எஸ் இன் வாதம். தற்போது தீர்ப்பு தங்களுக்கு சாதகமாக வந்திருப்பதால் அவர்கள் நீதிமன்றத்தைக் கொண்டாடுகிறார்கள்.

”கோயிலை இடித்துத்தான் பாபர் மசூதியைக் கட்டினார் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை, மசூதிக்கு கீழே இருப்பது கோயிலும் இல்லை. அயோத்தி முன்னர் பவுத்த மையமாக இருந்தது. அதனைப் பார்ப்பனியம் கொன்றொழித்தது. அயோத்தி மட்டுமல்ல, தென்னகத்தின் கோயில்கள் அனைத்தும் பவுத்த, சமண வழிபாட்டிடங்களை ஆக்கிரமித்தும், கொள்ளையடித்தும் பார்ப்பன மதத்தினரால் உருவாக்கப்பட்டவை.. ”என்பவையெல்லாம் ஏராளமான ஆதாரங்களுடன் எழுதப்பட்டிருக்கின்றன.

இத்தனைக்கும் பிறகுதான் இப்படி ஒரு தீர்ப்பு வந்திருக்கிறது. “எப்படியோ, ஒரு வழியாக நல்லிணக்கம் வந்தால் சரி” என்று அமைதி விரும்பிகளைப் போல பார்ப்பன பாசிசக் கும்பல் நைச்சியமாகப் பேசத்தொடங்கியிருக்கிறது.

ஒரு உரிமை மூல வழக்கில் (TITLE SUIT) 16 ஆம் நூற்றாண்டு வரை பின்னோக்கி சென்று ஆவண ஆராய்ச்சியில் ஈடுபடலாம் என்பதை ஆர்.எஸ்.எஸ் காரர்கள் ஒப்புக்கொள்வார்களேயானால், நல்லது. இதனையே ஒரு முன்மாதிரியாக எடுத்துக் கொள்வோம். வரலாற்றில் நேர் செய்ய வேண்டிய கணக்குகள் நிறைய இருக்கின்றன. அசைக்க முடியாத ஆதாரங்களும் இருக்கின்றன.

நாகை புத்தவிகாரையின் தங்க விக்கிரகத்தை திருடி உருக்கித்தான் திருவரங்கம் கோயிலின் திருப்பணியை செய்ததாகவும், கோயிலின் மதில் சுவரை எழுப்புவதற்கு வேலை செய்த சூத்திர, பஞ்சம மக்களை கூலி கொடுக்காமல் ஏமாற்றி கொள்ளிடத்தில் மூழ்கடித்துக் கொன்றதாகவும் அந்தக் கோயிலின் வரலாற்று ஆவணமாக வைணவர்களால் அங்கீகரிக்கப்படும் கோயிலொழுகு நூலில் எழுதி வைக்கப்பட்டிருக்கிறது.

சமீபத்தில் 1000 ஆண்டு விழா கண்ட பெரியகோயிலும் கூட இலங்கையையும் கேரளத்தையும் கொள்ளையடித்த காசில் கட்டப்பட்டது. விவசாயிகளின் ரத்தத்தில் பராமரிக்கப்பட்டது. இவற்றுக்கும் அந்தக் கோயிலிலேயே கல்வெட்டு ஆதாரங்கள் இருக்கின்றன.

அல்லது சிதம்பரம் கோயிலை எடுத்துக் கொள்வோம், சைவ மெய்யன்பர்கள் போற்றிப் புகழும் பெரிய புராணத்தில் நந்தனை எரித்ததற்கு ஆதாரம் இல்லையா, அல்லது நடராசப் பெருமானின் சந்நிதிக்கு எதிரில் நந்தனாரின் சிலை இருந்தது என்று கூறும் உ.வே.சாமிநாதய்யரின் பதிவு இல்லையா?

எல்லா ஆதாரங்களும் தயாராக இருக்கின்றன. ஆனால் மேற்படி கோயில்களையோ, கோயில் பிரகாரங்களையோ அப்படியே வைத்துக்கொண்டு நீதி கேட்டால் நமது நீதிமன்றங்கள் நீதி வழங்கமாட்டார்கள். அவற்றை இடித்துத் தரைமட்டமாக்கி, “சர்ச்சைக்குரிய இடம்” என்று பெயர் சூட்ட வேண்டும். சில ஆயிரம் உயிர்களைக் கொன்று போடவேண்டும். அந்தப் பிணங்களின் மீதேறி ஆட்சிக்கட்டிலில் அமரவேண்டும்.

அப்புறம், பெரியபுராணம், கோயிலொழுகு, திவ்வியப்பிரபந்தம், கல்வெட்டு ஆதாரம் .. போன்றவற்றை வைத்து வாதம் செய்தால் நீதிமன்றம் நம்முடைய வழக்கை ஒரு உரிமை மூல (TITLE SUIT) வழக்காக எடுத்துக் கொண்டு ‘நீதி’ வழங்கும். ஆலகாபாத் நீதிமன்றத் தீர்ப்பிலிருந்து நாம் புரிந்து கொள்ளக்கூடிய நீதி இதுதான்.

பின்குறிப்பு – 1:

அப்படியானால் 1992 இல் உலகமே பார்த்திருக்க பாபர் மசூதியை இடித்துத் தள்ளினார்களே கரசேவகர்கள், அதுக்காக லிபரான் கமிசனெல்லாம் போட்டு முட்டைக்கு மயிர் பிடுங்கி அறிக்கை சமர்ப்பித்தார்களே அந்த வழக்குகளையெல்லாம் என்ன செய்வார்கள்? மசூதி இடிப்பை குற்றம் என்று இனிமேலும் கூறிக்கொண்டிருப்பது நியாயமாகுமா? 2010 ஆம் ஆண்டு செப்டம்பர் 30 ஆம் தேதியன்று லக்னோ உயர்நீதிமன்றம் வழங்கவிருக்கும் தீர்ப்பை, தம்முடைய தீர்க்கதரிசனத்தால் உணர்ந்து கொண்டு, அந்த தீர்ப்பை 1992, டிசம்பர் 6 ஆம் தேதியன்று முன்தேதியிட்டு அமல்படுத்தியிருக்கிறார்கள் கரசேவகர்கள். அன்று கடப்பாரை ஏந்திய ஒரு நாலு பேரின் கையிலாவது சுத்தியலைக் கொடுத்து உச்சநீதிமன்ற நீதிபதி ஆக்குவதுதான் நீதி தேவதைக்கு இந்தியா செலுத்தும் மரியாதையாக இருக்கும். இல்லையா?

பின்குறிப்பு – 2:

பாபர் காலத்து டைட்டில் சூட்டையே விசாரித்து அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பு சொல்லியிருக்கிறதே, தங்களுடைய நிலத்தை ராஜா ஹரிசிங் உடன் ஒரு கட்டப்பஞ்சாயத்து செய்து பறித்துக் கொண்ட இந்திய அரசுக்கு எதிராக காஷ்மீர் மக்கள் ஒரு டைட்டில் சூட் போட்டால், அயோத்தி வழக்கைப் போலவே அதனையும் விசாரித்து நேர் சீராக ஒரு தீர்ப்பை அந்த மக்களுக்கு இந்திய நீதிமன்றம் வழங்குமா?

பி.டி. கத்திரிக்காய், இது முத்தாது… குத்தும் !!


இரண்டு நாட்களுக்கு முன்பு திருப்பூரில் பி.டி கத்திரிக்காய்க்கு எதிரான உழவர் உழைப்பாளர் கட்சியின் ஆர்பாட்டமொன்று நடைபெற்றது. அபாயகரமான சாயக்கழிவுகளுடன் அசால்ட்டாக வாழ்க்கை நடத்தும் எங்கள் கவனத்தை கத்திரிக்காயா திருப்பும் ?? கொடி புதுசாயிருக்கே என ஒருசிலர் கவனித்ததுதான் மிச்சம். ஆனால் சந்திராயன் மயில்சாமி அண்ணாதுரையை வாழ்த்துரை வழங்கச்செய்து பி.டி கத்திரிக்காய்க்கு மாபெரும் விளம்பரம் ஒன்றை செய்திருக்கிறது விவசாயப் பல்கலைக்கழகமும் அவர்களின் சமீபத்தைய குலசாமியான மான்சாண்டோவும். இதுவரை அப்துல் கலாமை உதாரணபுருஷனாக கொண்டிருந்து கொஞ்சம் சலித்துப்போயிருந்த மக்களின் புதிய கண்டுபிடிப்புதான் மயில்சாமி அண்ணாதுரை.

சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத நான்கு பி.டி கத்திரிக்காய்களை கோவை வேளான் பல்கலைக்கழகம் அறிமுகம் செய்திருப்பதாக சொல்லியிருக்கிறார் ம.சா.அ.து. இதுவரை உள்ளூரில் விளைந்த கத்திரிக்காயால் சுற்றுப்புறத்திற்கு என்ன கேடு வந்துவிட்டது என்பது சத்தியமாக எனக்குப் புரியவில்லை. அதையும் ஒரு விண்வெளி ஆராய்ச்சியாளரை வைத்து சொல்லச் சொல்வதன் காரணம் என்ன ?? ஏற்கனவே அணுசக்தி ஒப்பந்தத்திற்கு மார்கெட்டிங் செய்ய அப்துல் கலாமை அனுப்பினார்கள், இப்போது அண்ணாதுரையின் முறை.பி.டி கத்திரிக்காயின் நல்லதா கெட்டதா என விவாதிக்கும் முன் அதன் தேவையைப்பற்றி தெரிந்துகொள்வது முக்கியம். பெரிய அளவில் தட்டுப்பாடு வராத, பயிரிடப்படுவதிலும் ஒரு பெரிய முக்கியத்துவம் இல்லாத கத்திரிக்கு ( தங்கள் நிலத்தின் ஒரு பாகத்தில் மட்டுமே பெரும்பாலான விவசாயிகள் கத்திரியை பயிரிடுகிறார்கள் ) மரபணு மாற்றம் செய்வது என்பது ஒரு முன்னோட்டமே. அடுத்து வரப்போகும் மற்ற மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்களுக்கான தடைகளை இப்போதே கத்திரியை அனுப்பி ஆழம் பார்க்கிறார்கள். நமது கேனத்தனத்தினைப் பொறுத்து பி.டி நெல் உள்ளிட்ட மற்ற பயிர்கள் இன்னும் சுலபமாக உள்ளே நுழையும்.

இந்தியாவில் மரபணு மாற்றம் செய்யப்பட்டு முதலில் பயன்பாட்டுக்கு வர இருப்பது கத்திரிக்காய்தான். பி.டி கத்திரிக்காய் உடலுக்கு ஏற்படுத்தும் கேடுகளைப்பற்றி ஆராயாமல் ஏதோ வீடு கட்டும் ஒப்புதலை வழங்குவதுபோல அதன் பயன்பாட்டுக்கு அனுமதி அளித்திருக்கிறது மத்திய மரபணுப் பொறியியல் ஒப்புதல் குழு ( genetic engineering approval committe ). கத்திரி மீதான ஆய்வு முடிவுகள் பொது மக்கள் பார்வைக்கு வைக்கப்படும் எனவும் அதன் பிறகு மக்களின் கருத்து கேட்கப்பட்ட பிறகே மத்திய அரசு முடிவெடுக்கும் என அமைச்சர் ஜெயராம் ரமேஷ் தெரிவித்திருக்கிறார். மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்களின் பல்வேறு விளைவுகள் பற்றி ஆய்வு செய்ய இந்தியாவில் வசதி இல்லை என்றும் உடனடியாக ஒரு ஆய்வகம் அமைக்கப்படவேண்டும் என மத்திய அரசை கோரியிருக்கிறார் புஷ்பா பார்கவா ( இவர் உச்ச நீதிமன்றத்தால் நியமனம் செய்யப்பட்ட GEAC யின் பார்வையாளர் ). மத்திய அரசும் பரிசீலிப்பதாக சொல்லியிருக்கிறது. அப்படியானால் ஜெயராம் ரமேஷ் மக்களுக்குத் தரப்போவது எந்த ஆய்வறிக்கை என்பது அவருக்கு மட்டுமே வெளிச்சம்.

உண்மையில் GEAC ஆய்வு என சொல்வது பி.டி கத்திரிக்காயை உருவாக்கிய மான்சாண்டோ செய்த ஆய்வைத்தான். அந்த ஆய்வு பத்து எலிகளைக் கொண்டு மூன்று மாதங்கள் மட்டும் நடைபெற்றது. இதில் நீண்டகால பாதிப்புகள் குறித்து எந்த தகவலை பெறமுடியும் ? முதலில் எலிகள் மீதும் பிறகு குரங்குகள் மீதும் ஆய்வுகள் செய்யப்படுவது வழக்கம். இப்போது இந்தியர்கள் கிடைத்துவிட்டதால் குரங்குகள் மீதான ஆய்வு தவிர்க்கப்பட்டு விட்டதுபோலும். விதைகளை மீண்டும் பயன்படுத்த முடியாமை, மகரந்த சேர்க்கை மூலம் மற்ற பயிர்களும் மலடாகும் போன்ற பிரச்சனைகள் பற்றி ஆய்வு செய்யும் சாத்தியம் இந்தியாவில் கண்ணுக்கெட்டியவரை கிடையாது. ரசாயன பூச்சிக்கொல்லிகள் அறிமுகப்படுத்தப்பட்டபோதும் அவற்றின் ஆபத்துக்கள் பற்றி பெரிய தெளிவு மக்களிடம் கிடையாது அல்லது அவர்களுக்கு விளக்கம் தரப்படவில்லை. தாய்ப்பால் முதல் அண்டார்டிகா வரை பூச்சிக்கொல்லிகளின் பாதிப்பு அறியப்பட்டபிறகும் அந்த விவரம் பெரும்பாலான பாமர மக்களுக்கு தெரியவில்லை. இதேகதைதான் பல ஆலைக்கழிவுகளின் விசயத்தில் இப்போதும் நடக்கிறது. இந்த லட்சணத்தில் மக்களிடம் கருத்து கேட்டு பி.டி கத்திரிக்காயை அனுமதிக்கப்போவதாக சொல்வது வேறு பயமுறுத்துகிறது.

இதன் இன்னொரு முகம் பொருளாதாரம் சார்ந்தது. விவசாயிகளை சகல வழிகளிலும் நிறுவனங்களை சார்ந்திருக்கச் செய்வது. ஏற்கனவே உரம் பூச்சி மருந்து என பல இடுபொருட்களுக்கு விவசாயிகள் அடிமையாக்கப்பட்டுவிட்டார்கள். விதைகளும் அந்த பட்டியலில் சேர்ந்துவிட்டால் தீர்ந்தது பிரச்சினை. எல்லா விவசாயியும் ஒப்பந்தப் பணியாளரைப்போல மாண்சான்டோவுக்கு வேலைசெய்ய வேண்டியதுதான். பி.டி பருத்தி விதைகள் அறிமுகம் செய்யப்பட்டபோது அதன் விலை 1750, அப்போது சாதாரண பருத்தி விதை முன்னூறு ரூபாய்கூட கிடையாது. அப்படி வாங்கியவர்களும் பெரிய மகசூல் எடுத்ததாக மான்சாண்டோவாலும்கூட நிரூபிக்க முடியவில்லை அவர்களின் உள்ளூர் எடுபிடிகளான வேளான் பல்கலை(ளை)க்கழகங்களாலும் நிரூபிக்க முடியவில்லை. பி.டி பருத்தியால் ஆயிரக்கணக்கான விவசாயிகள் தற்கொலைக்கு தள்ளப்பட்டார்கள். இப்போது கத்திரிக்காய் எத்தனை பேரை காவு வாங்கப்போகிறதோ தெரியாது. இது போதாதென்று இன்னும் ஐம்பத்தாறு பி.டி பயிர்கள் அறிமுகத்திற்காக காத்திருக்கின்றன.

விதை யார் கொடுத்தால் என்ன, கத்திரிக்காய் வழக்கம்போல கிடைக்கும்தானே என கேட்கவும் ஆட்கள் இங்கு இருக்கிறார்கள். அவர்களிடம் கேட்க என்னிடமும் ஒரு கேள்வி உண்டு, உங்கள் பிள்ளை எங்கிருந்து வந்தால் என்ன ? அது உங்களுடையதாக இருக்க வேண்டுமென்று என்ன அவசியம் இருக்கிறது ?

விதைக்கான உரிமை பறிபோகும் வேளையில் விளைபொருளின் மீதான உரிமையையும் பறிக்க ஒரு சட்டத்தை மத்திய அரசு அறிவித்திருக்கிறது. கரும்புக்கான நியாய ஆதரவு விலை அவசரச்சட்டம் என்பதுதான் அது. அதாவது இப்போது அமுலில் உள்ள குறைந்தபட்ச ஆதரவு விலையை விட சுமார் முன்னூறு ரூபாய் குறைவான விலையை ஒரு டன்னுக்கு “அவசரமாக” நிர்ணயம் செய்யும் சட்டம்தான் இப்போது பிரச்சினையாகியிருக்கிறது. ஒரு விளைபொருளின் விலையை குறைப்பதற்கு அவசர சட்டம் கொண்டு வர முயலும் ஒரே சாதனை அரசு இந்தியாவில்தான் இருக்கமுடியும். இத்தனைக்கும் கடந்த ஓராண்டில் மட்டும் சர்க்கரையின் சந்தை விலை கிட்டத்தட்ட மூன்று மடங்கு உயர்ந்திருக்கிறது.ஒப்புக்குக்கூட எந்தவிதமான காரணமும் சொல்லாமல் விவசாயிகளிடம் பிக்பாக்கெட் அடிப்பதற்கு ஒப்பான ஒரு திட்டத்தை சட்டமாக கொண்டு வர முயற்சி செய்திருக்கிறது காங்கிரஸ்.

ஏற்கனவே எண்ணெய் வித்துக்களின் உற்பத்தி திட்டமிட்டு குறைக்கப்பட்டு இறக்குமதி நிரந்தரமாகிவிட்டது. அடுத்து கரும்பு இறக்குமதி துவங்கியாயிற்று ( கரும்பு உற்பத்திப் பரப்பு 48% குறைந்துவிட்டதாக ( அல்லது குறைக்கப்பட்டுவிட்டதாக) மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. அடுத்து அரிசி இறக்குமதிக்கு சாக்குப்பையை வைத்துக்கொண்டு காத்திருக்கிறார் பிரணாப் முகர்ஜி. மேற்கூறிய எல்லா பொருட்களும் சமீப காலமாக கடுமையான விலையேற்றத்தை சந்தித்திருக்கின்றன. விவசாயிக்கும் விவசாயத்திற்கும் எதிரான எந்த ஒரு நடவடிக்கையும் மறுநாள் பாதிக்கப்போவது சாதாரண நுகர்வோரான இந்தியக் குடிமகனைத்தான். மன்மோகனும், மாண்டெக் சிங்கும் இந்தியாவை பணம் படைத்தோருக்கு மட்டுமான ஒரு தேசமாக மாற்றும் வரை ஓயப்போவதில்லை. அதுவரை நம்மை திசைதிருப்ப இருக்கவே இருக்கிறது பாகிஸ்தான் தீவிரவாதம். அதுசரி செத்தாலும் உள்ளூர்காரனால் சாவதுதானே தேசபக்தி.

கரும்பு விலை சட்டத்தின் மூலம் நமக்கு இன்னொரு முக்கியமான பாடம் கிடைத்திருக்கிறது. டில்லியை ஒருநாள் முற்றுகையிட்டாலே ஒரு அராஜகமான சட்டத்தை நிறுத்த முடியும் என்பதுதான் அது.

-நன்றி வில்லவன்

முதல் பகுத்தறிவாளனும் முதல் மத குருவும்…


காலம்: சுமார் 12000 ஆண்டுகளுக்கு முன்னால்
இடம்: தமிழ்நாடு தேனி மாவட்டம் மலைப்பகுதி, ஆஸ்திரேலியக் கடற்கரை, மத்திய ஆப்பிரிக்கக் காடு, வட அமெரிக்கப் புல்வெளி, டைகரிஸ் நதி ஓரம் – எல்லா இடங்களிலும் பல முறை நடந்தது இது

கதாநாயகன் வேட்டை முடிந்து குகைக்குத் திரும்பும் போது மாலை வெளிச்சம் மங்க ஆரம்பித்து விட்டது. மூட்டி வைத்த தீயின் முன் அமர்ந்திருந்த சக மனிதர்கள் மான்களையும், மாடுகளையும், குதிரைகளையும், தோலுரித்துத் தீயிலிட்டுக் கொண்டிருந்தனர். குழந்தைகள் சிறு குரங்குகளைத் துரத்திப் பிடித்து விளையாடிக் கொண்டிருந்தார்கள். வயது வந்த பெண்களும் ஆண்களும் அவர்கள் மார்புகளும் ஆண்குறிகளும் எல்லோர் முன்னாலும் காற்றில் ஆடிக்கொண்டு இருக்க அதற்காக வெட்கப் பட்டு மூடாமல் அருகருகே அமர்ந்திருந்தனர். சாப்பிட்ட பிறகு கலவி செய்வது மட்டும் தானே வேலையே! மூடி வைத்தால் யாருக்கு என்ன இருக்கென்று எப்படித் தெரியும்?

ஆனால் உண்பது, உடலுறவு கொள்வது என்ற அத்தியாவசியத் தேவைகள் நிறைவேறும் முன்னதாக அவர்களுக்கு வேண்டிய இன்னோரு சிறு தேவை, நடுநாயமாக உட்கார்ந்திருந்த அந்தப் பெருங்கிழவன் சொல்லும் கதை. இன்றும் எல்லோரும் அவனைக் கெஞ்சிக் கேட்டுக் கொள்ள கிழவன் தன்னிடமிருந்த காட்டுப் புல்லாங்குழலை இடையிடையே ஊதியபடியே பேச ஆரம்பித்தான்.

காலம் காலமாகக்கேட்டு வரும் பழங் கதைதான். ஆனாலும் தீயில் வேகும் விலங்குகள் தயாராகும் வரை, கிழவன் தாடியைத் தடவியபடி வானில் ஒலித்த பேரிடி, மலையை மூழ்கடித்த பெரு வெள்ளம், பத்து தலை கொண்ட நாகப் பாம்பு, அதை வீழ்த்திய மாவீரன் – என்று சொல்லிக் கொண்டே போக கூட்டம் முதல் முறை கேட்பது போல் திறந்த வாய் மூடாமல் கேட்டது.

கிழவன் சமர்த்தன். மழை வந்தால் அதற்கேற்றாற் போல் ஒரு கதை. அடுத்த ஊரிலிருப்பவர்கள் சண்டையிட வந்தால் வேறு கதை. குழந்தை இறந்தால் ஒரு கதை. பிள்ளை உருவாக்க முடியாதவனுக்கு விறைப்பு வர ஒரு கதை. சிரிக்கவும் அழவும் வேறு வேறு கதைகள். எல்லாமே அவனுக்கு அத்துப் படி. இந்தக் கதை சொல்வதற்குப் பரிசாக, வயதான காரணத்தால் வேட்டையாட முடியாத அவன் தின்ன சம பங்கு மான் கறியும், தினசரி அவன் புணர ஒரு பெண்ணும் தருவது ஊர் வழக்கம். அவனது எண்ணற்ற பிள்ளைகளில் ஒருவன் கிழவன் இறந்த பின் கதை சொல்ல இப்போதே தயாராகி வருகிறான்.

வேட்டையை முடித்து வந்த கதாநாயகனுக்குக் கதையில் மனம் ஈடுபடவில்லை. தனக்கு 20 பிள்ளைகளுக்கு மேல் பெற்றுக் கொடுத்துள்ள ஏழெட்டு பெண்மணிகளிடமோ அல்லது வேறு ஒரு பெண்ணிடமோ செல்லவும் மனம் நாடவில்லை. பசியும் எடுக்கவில்லை. காரணம் அவன் மனதை அரிக்கும் ஒரு கேள்விதான். அதை எல்லாம் தெரிந்த அந்தக் கிழவனிடமே கேட்பது என்று முடிவு செய்தான். தன் தோளில் இருந்த மானின் உடலை இறக்கி வைத்து விட்டு சத்தமாகக் கேட்டான்.

“கிழவா! எனக்கு ஒண்ணு தெரியணுமே..”

“இதென்னடாது வம்பாப் போச்சு! 20 பிள்ள பெத்தும் ஒனக்கு சந்தேகம் தீரலியா?”

கூட்டம் சிரித்தது. ஆனால் அவன் அதில் கவனம் சிதறாமல் கேள்வியைக் கேட்டான்.

“ஏன் வெளிச்சமா இருக்கு, அப்புறம் இருட்டு வருது, திரும்பவும் வெளிச்சம் வருது?”

கிழவன் இந்தக் கேள்வியை எதிர் பார்க்கவில்லை. கூட்டமும் எதிர் பார்க்கவில்லையென்பது அவர்கள் சிரிப்பை நிறுத்தியதில் புரிந்தது. கூட்டம் கிழவன் பக்கம் பார்வையைத் திருப்பியதில் அவனுக்கு பதில் சொல்லியே ஆக வேண்டும் என்பதும் புரிந்தது.

“என்ன கேக்குற?”

“தூங்கி எந்திரிக்கும் போது வெளிச்சமா இருக்கு, அப்பறமா திரும்ப இருட்டுது, திரும்பத் தூங்கி எந்திரிச்சதும் வெளிச்சமா இருக்கே. அது ஏன்?”

கிழவன் தன் வாழ்நாளில் “தெரியாது” என்று சொன்னதே கிடையாது. அப்படிச் சொல்லி விட்டால் தனக்கென்று இருக்கும் சிறப்பான இடம் போய்விடும் என்று அவனுக்குத் தெரியும்.

“அடப் போடா… இதெல்லாம் ஒரு கேள்வியா…. சூரியன் தொடர்ந்து இருந்துக் கிட்டே இருந்தா நாமெல்லாம் எப்பத் தூங்குறது? அதான் சாமி நம்ம மேல ஒரு பெரிய போர்வையப் போட்டு போர்த்தி விடுறாரு. இருட்டு வருது. நீ வேணுங்கிற அளவு தூங்கினதும் போர்வைய எடுத்திடறாரு. வெளிச்சம் வந்திடுது”

“ஆனா இருட்டின பெறகு மேல பாத்தா ஏதோ சின்ன சின்ன புள்ளியா நெறய வருதே! அப்பறம் பெரிசா வட்டமா ஒண்ணும் வருதே!”

“அதெல்லாம் போர்வைல இருக்குற ஓட்டைடா. இது கூடப் புரியலயா?”

கூட்டம் சள சளவென்று ஆமோதிக்க கதாநாயகனுக்கு மீண்டும் ஒரு முறை பேச வாய்ப்பே கிடைக்கவில்லை.

மெல்ல கூட்டத்திலிருந்து விலகி நடந்தான். மூட்டிய தீயின் வெளிச்சம் தீர்ந்து, காட்டின் இருள் துவங்கும் ஓரத்திற்கு வந்து தரையில் படுத்தான். வானத்தைப் பார்த்தான். தூரத்தில் கிழவன் சொல்லிக் கொண்டிருந்த கதைக்கும் அவன் கண்ணில் படும் காட்சிகளுக்கும் தொடர்பு இல்லையென்பது மெல்லத் தெரிந்தது.

இயல்பாகவே அவனுக்குள் கேள்விகள் தோன்றுவது உண்டு.

சில சமயம் ஏன் மேலிருந்து தண்ணீர் கொட்டுகிறது?
ஏன் ஆறுகள் திடீரென பொங்குகின்றன?
தூரத்து மலையிலிருந்து ஏன் நெருப்புக் குழம்பாக வடிகிறது?
தலை முடி ஏன் வெளுக்கிறது? தோல் ஏன் சுருங்குகிறது?
உடனிருப்பவர்கள் ஏன் திடீரென கண்மூடிப் படுக்கிறார்கள்? அதன் பின் எழவே மாட்டேனென்கிறார்கள்?

சாவு என்றால் என்ன? செத்த பிறகு அவர்கள் போகும் அதே இடத்திற்குத்தானா நான் கொல்லும் மானும் மாடும் போகின்றன?

கதாநாயகனுக்கு தலை வலித்தது.

அதையெல்லாம் விடு. இன்றைய கேள்வியை மட்டும் யோசி என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டான்.

மேலே தெரியும் இருட்டு கருப்புப் போர்வையா? இவ்வளவு பெரிய போர்வை எங்கிருந்து வருகிறது? போர்வைக்கு வெளியில் என்ன இருக்கிறது?

சாமி என்பவர்தான் போர்த்தி விடுகிறாரா? சாமி என்பவர் யார்? அவருக்கு ஏன் இப்படி ஒரு வேண்டாத வேலை?

இந்த ஊரையும் மக்களையும் உருவாக்கி அவர் என்ன சாதிக்கிறார்?அவரது ஊர் என்ன? அவரை உருவாக்கியது இன்னும் ஒரு சாமியா? அந்த சாமி ஏன் இந்த சாமியைப் படைத்தார்?

இப்படிப் போயிக் கொண்டே இருந்தால் எதுதான் ஆரம்பப் புள்ளி? அந்த ஆரம்பப் புள்ளி ஏன் தோன்றியது?

இதை எல்லாம் கிழவனிடம் கேட்டுப் பயனில்லை.

கடவுள் என்பவரைப் பற்றி எதுவும் கேள்வி கேட்கக் கூடாது. கேள்வி கேட்பவர்கள் கெட்டவர்கள் என்று கிழவன் சொல்லியிருக்கிறான். நல்லவனாக வாழ்ந்து கடவுளை வணங்குபவனுக்குதான் நல்ல மான் கறியும், தினசரி புணரப் புதுப் புதுப் பெண்களும் கிடைக்கும் – கிழவனுக்குக் கிடைப்பது போல. கடவுளை மதிக்காத கெட்டவர்களை புலி தின்னும். புதை குழி விழுங்கும். செத்தபின் கூட அவர்களுக்கு தண்டனை தொடர்ந்து கொண்டே இருக்கும்.

மீண்டும் கேள்விகள்.

கெட்டவன் நடந்து கொள்வது தவறென்றால் அவன் ஏன் கடவுளால் படைக்கப் படுகிறான்?
கெட்டதே நடக்காமல் கடவுளால் தடுக்க முடியாதா?
முடியாதென்றால் அவர் எல்லாம் வல்லவர் இல்லையே!

கெட்டதைத் தடுக்க முடிந்தும் தடுக்காமல் இருக்கிறாரா?
அப்போது அவரும் கெட்டவர் ஆகி விடுகிறாரே!

அவரால் தடுக்க முடியும், தடுக்க விருப்பமும் உள்ளது என்றால் ஏன் கெட்டது நடக்கிறது?
அல்லது கெட்டதை அவரால் தடுக்கவும் முடியாது, அவருக்கு அதைத் தடுக்கும் விருப்பமும் இல்லை என்றால் அவர் இருந்தென்ன இல்லாவிட்டால் என்ன?

கதாநாயகனுக்கு தலைவலி அதிகமாகி விட்டது.

கதாநாயகனுக்குத் தெரியாத இன்னும் ஒரு உண்மை. இதே கேள்விகள் இந்தப் பூமிப் பந்தில் பல இடங்களில் பல நாயகர்களுக்கு எழுந்தன. ஒவ்வொரு இடத்திலும் ஒரு கிழவனும் இருந்தான்.

தொடரும்

நன்றி: எபிகியூரஸ், கார்ல் சாகன், ரிச்சர்ட் டாகின்ஸ், பி.டி. ஸ்ரீநிவாச அய்யங்கார், பில் ப்ரைசன், ஈ.வே.ராமசாமி.

கேள்வியே புரியாமல் பதில் சொல்லும் அறிவாளிகளும், கேள்வியைப் புரிந்து கொண்டு பதில் தேடி வரும் முட்டாள்களும்…


காலம் மாறிக் கொண்டேதான் இருக்கிறது.

vote-012பல இலட்சம் ஆண்டுகள் பொழிந்த அமில மழை, அது நின்ற பின் பல ஆயிரம் ஆண்டுகள் மெதுவாக வெப்பம் அடங்கிய பூமி, படிப்படியாகக் குளிர் அதிகரித்து சில ஆயிரம் ஆண்டுகளுìÌள் நிலப் பரப்பை முழுதாக மூடிய பனி, உருகிய பனியில் தோன்றிய நீர்ப்பரப்புகள், நிலத்தடியில் அதிவெப்பத்தோடு கனன்று கொண்டிருக்கும் உருகிய திடப் பொருட்கள், நிலத்தின் மேல் சுழலும் வெதுவெதுப்பான வாயு மண்டலம், பிரபஞ்சம் உருவான நாள் முதல் அண்ட வெளியில் பரவியிருக்கும் மனிதக் கண்ணில் புலப்படாத கதிர் வீச்சுக்கள், ஒவ்வொரு திடப் பொருளும் இன்னொன்றைத் தன்னை நோக்கி இழுக்கும் ஈர்ப்பு விசை, இவ்விசையின் கோணங்களும் தாக்கங்களும் மாறுபடுவதால் ஒவ்வொரு கோளையும் நட்சத்திரத்தையும் இழுப்பதோடு சுழலவும் வைக்கும் சுழற்சி விசை … இவை எல்லாம் கால மாற்றத்தின் சாட்சிகள்.

கதாநாயகர்கள் நடத்தி வரும் புதையல் தேடலில் இதுவரை சிக்கியிருக்கும் சிற்சில முத்துக்களும், வைரங்களும் இவை.

பாக்டீரியாக்களும், வைரஸ்களும், தாவரங்களும், பூச்சிகளும், பறவைகளும், பாலூட்டிகளும், மனிதர்களும் இந்தக் காலமாற்றத்தின் சக விளைவுகள்.

கதாநாயகர்ளின் புதையல் தேடலில் சிக்கி உள்ள சிறு சிறு மாணிக்கங்கள், வைடூரியங்கள்.

இந்தத் முத்து மணிகளை மாலையாகக் கோற்கும் கயிறு இன்னும் கிடைக்காததால் தனித்தனியாக இத்தனை செல்வமும் சிதறிக் கிடக்கிறது.

கதாநாயகர்கள் கயிறு தேடிக் கொண்டிருக்கிறார்கள்

எல்லாம் தெரிந்த கிழவனுக்கு இந்தத் தேடுதல் பிரச்சினையே இல்லை. அவனிடம் ஏற்கனவே கயிறு இருக்கிறது.ஆத்திர அவசரத்திற்கு எப்போதோ நூற்ற ஒரு சணல் கயிறு. அதில் கோர்க்க ரத்தினக்கள் இல்லாவிட்டாலும் கைமாறிக் கைமாறிப் பல கிழவனார்கள் திரித்த ஒரு தடிமனான தாம்புக் கயிறு.

முத்தும் மணியும் சிதறிக் கிடக்கிறது என்று தெரியாதவர்கள், வேறு இடத்தில் அதி அற்புதமான நவரத்தின மாலை உருவாகிக் கொண்டிருப்பதை உணறாமல், பிரபஞ்சத்தின் புதையல் தேடலில் கலக்காமல், பெருமையுடன் அணிந்து கொண்டிருக்கும் ஒரு பயனுமில்லாத இல்லாத கயிறு.

இது அஸ்திவாரமில்லாமல் கட்டப் பட்ட ஒரு கூடாரம். காலப் போக்கில் கோட்டையாகக் கருதப் படுவது துர்பாக்கியம்.

இது என்ன கேள்வியென்றே தெரியாமல் ஒருவன் எழுதிய பதில். மீண்டும் மீண்டும் சொல்லப் பட்டதால் உண்மையாகக் கருதப் பட்டு நாள்பட பதிலுக்கேற்றாற் போல கேள்வியை உருவாக்கிக் கொண்டு உள்ள அக்கிரமம்.

கிழவனின் கயிறு சிறு சிறு நூல் பிரிகளால் ஆரம்பமானது.

மழை பெய்யும் போது பயப்படு; அழு; வானைப் பார்த்து இறைஞ்சு; மழை நிற்கும்.சூரியனுக்கும் மனிதர்களைப் போலக் கோபம் வரும். காலை வேளை தலை காட்டாது. தடுமாறிப் போவாய். எனவே அத்திசையைப் பார்த்து நன்றி சொல்லு. நெருப்புதான் உலகின் ஆதாரம். ஆதாரத்தை மதிக்க வேண்டும். இல்லையேல் அழிவு நிச்சயம்.

“மதிப்பது என்றால் எப்படி?” இன்னோரு மனிதன் ஆயுதத்தால் உன்னை வெல்லும் போது உன் ஆயுதத்தைத் தூக்கிப் போட்டு தரையில் விழுகிறாயே, அதே போல் தலை வணங்கு, கையெடுத்துக் கும்பிட்டு நீ நிராயுதபாணி என்று காட்டிக் கொள்ளு, உன் அடிமை நிலையை நிரூபிக்க எதிரின் கால் தொடுவாயே, அதேபோல் தரையில் விழு, வணங்கு. மனிதர்களுக்கு நீ மரியாதை காட்டுவது போல இயற்கைக்கும் காட்டு. அதற்குப் புரியும். இயற்கையைக் காக்காய் பிடித்து வைத்துக் கொள்.

“இயற்கைக்கு எங்கிருந்து மனிதனைப் போல காழ்ப்புணர்ச்சி வரும்? பொறாமை, சமாதானம், வன்மம், அன்பு இவையெல்லாம் இயற்கைக்கு எங்கிருந்து வரும்? ஒரு ஊரில் தலை வணங்குவது பணிவு, அடுத்த ஊரில் மூக்கால் மூக்கை உரசுவது அன்பு… இப்படி மனிதருக்குளேயே வேறுபாடுகள் இருக்கையில் உருவமில்லாத இயற்கைக்கு மனித சமிஞ்கைகள் மூலம் என் அடிபணிதல் எப்படிப் புரியும்?”

இக்கேள்விகள் கேட்கப் பட்டிருந்தால் இந்தக் கயிறு திரிக்கப் பட்டிருக்க வாய்ப்பே இல்லை! ஆனால், இவை கேட்கப் படவில்லை. கிழவனின் கயிறு கேள்வியில்லாமலே உருவான பதில். தற்காலிகமாக எழும்பிய கூடாரம். கேட்பாரில்லாததால் அது கோட்டையாக வளர ஆரம்பித்தது.

இயற்கையை வணங்க ஒரு வழி வகை இருக்கிறது. சம்பிரதாயங்கள் இருக்கின்றன. மழையின் மனித உருவம் இது. நெருப்பின் மனித உருவம் இது. காமத்தின் மனித உருவம் இது. இவற்றை வெல்ல வேறு வேறு வழிகள் இருக்கின்றன. இந்த உருவங்களை, கடவுள்களை, திருப்திப் படுத்த நான் வழி சொல்கிறேன்.

நிலவில்லாத நாளில் ஒரு வழி. முழு நிலவன்று ஒரு வழி. அறுவடைக்கு முன்…. வெள்ளம் வரும்போது…. உயிப் பலி கொடுத்து…. மலர் அணிவித்து….

பட்டினி கிடந்து ஒரு வழி. பலவகை விருந்தோடு ஒரு வழி. மேள தாளத்தோடு ஒரு வழி. மவுனமாக ஒரு வழி. வெவ்வேறு பிரச்சினகளை தீர்க்க வெவ்வேறு வழிகள், முறைகள், சம்பிரதாயங்கள்…

மறந்து விடாதே. இக்கடவுளுடன் உன்னால் பேச முடியாது. எப்படிப் பேச வேண்டுமென்று எனக்குத் தெரியும். எந்த மொழியில் பேச வேண்டுமென்றும் தெரியும். அதை உனக்கு சொல்ல மாட்டேன். காரணம் நீ கடவுளின் காலிலிருந்து வந்தவன். நான் நாக்கிலிருந்து. இவன் தோளிலிருந்து. இந்த ஊரை இவன் காவல் காக்கட்டும். நீ ஒதுங்கிப் போ. எனக்குப் பின் என் பிள்ளை வழி சொல்லுவான். இவன் பிள்ளை ஊர் காப்பான். நீ எங்களுக்கு ஏவல் செய்வாய்.

ஏனென்று கேட்காதே? நான் கடவுளின் மைந்தன். என் அம்மாவைத் தொடாமலே கர்ப்பமாக்கியது அவன் தான். அடுத்த ஊர் கிழவன் சொல்வதையெல்லாம் இனிமேல் நம்பாதே. என் அப்பன் என் காதில் மட்டும் தான் உண்மை சொன்னான். ஏழு நாளில் உலகம் படைத்தவன் அவன். ஒரு ஆணையும் அவன் விலாவிலிருந்து ஒரு பெண்ணையும் படைத்தான். வெள்ளத்தில் உலகம் முங்கியபோது ஒருவனின் படகில் எல்லா உயிரினத்தையும் ஏற வைத்தான். அவை பல்கிப் பெருகித்தான் இவ்வுலகம் உயிர்களால் நிறைந்தது. “இரண்டிரண்டு உயிர்களிலிருந்து எப்படி பல உயிர்கள் வந்தன? மூன்றாம் தலைமுறை உருவானதை நினத்தாலே கெட்ட எண்ணங்கள் வருதே?” எதிர்க் கேள்வி கேட்டால் நாக்கறுப்பேன்!!

என் இறைவன் தகப்பனை விட்டு மகனைக் கொல்வான். பாவிகளை நரகத்தில் தள்ளுவான். (“பாவம் என்றால் என்ன?” அப்புறம் சொல்கிறேன்.) காலகாலமாக எண்ணைச் சட்டியில் வறுத்து எடுப்பான். வெள்ளமும் பஞ்சமும் புயலும் நில நடுக்கமும் எரிமலையும் வீசுவான். நோயள்ளித் தெளிப்பான். ஆனால் அவன் எல்லையில்லாத அன்புள்ளவன். உன் பாவத்தை என் மேல் தள்ளி விட்டு விடு. உனக்காக அவனிடம் நான் ரத்தம் சிந்துகிறேன். நீ தப்பித்துக் கொள். போகும் வழியில் உன்னிடம் உள்ளதை அந்த உண்டியலில் போட்டு விட்டுப் போ.

“கடவுள் உன் அப்பன்தானே? பாவமே செய்யவிடாமல் தடுக்கச் சொல்லேன்.” உனக்குத் தெரியாது என் அப்பனுக்கு ஆகாதவன் இருக்கிறான் சாத்தானென்று பெயர். அவன் தான் பாவத்துக் காரணம். “அவன் உன் அப்பனை விட பெரிய ஆளாக இருப்பான் போலிருக்கிறதே! அவனைப் படைத்தது யார்?” இந்தக் கேள்விக்கு நான் ஏற்கனவே பதில் சொல்லி விட்டேன். “எப்போது?” அதெல்லாம் விளக்க முடியாது. என் வழியில் வா! இல்லையேல் நீ நரகம் தான் போவாய்.

கடவுளென்பவன் உருவமில்லாதவன். இன்றிலிருந்து மற்ற கிழவன்களை நம்பாதீர்கள். நான் மலைக் குன்றிலிருக்கும் போது என் காதில் மட்டும் ஆளனுப்பி சொன்னான். நான்தான் அவனால் தேர்ந்தெடுக்கப் பட்டவன். நான் சொல்வது மட்டும்தான் சரி. இறைவன் தன்னை தினமும் பல முறை வணங்கச் சொல்லியிருக்கிறான். ஏனென்று கேட்காதீர்கள்! அவனுக்கு கருவம் அதிகமாக இருக்கலாம். அதனாலென்ன? சொன்னதை செய்யுங்கள். இல்லையேல் சாவுங்கள்! ஒரு நிமிடம்… பெண்களெல்லாம் ஓரமாக வாருங்கள்… உங்களைப் பார்த்தால் ஆண்களுக்கு ஆசை வருகிறது… எல்லாவற்றையும் மூடுங்கள்…

கூடாரம் கோட்டையாகிவிட்டது. தவறான பதில்களால் பக்கங்கள் நிரம்பி விட்டன. ஆனால் கேள்வி மட்டும் இந்தக் கிழவன்களுக்குப் புரியவே இல்லை.

கதாநாயகர்களுக்கு கேள்வி என்னவென்று எப்போதோ தெரியும். கொஞ்சம் கொஞ்சமாக பதிலும் புரிய ஆரம்பித்தது. புதையல் கிடைக்கவும் ஆரம்பித்தது.

-வித்தகன்