ஒரு கானலை அதாவது காட்டை விவசாயம் செய்யும்படியான வயல்களாக ஆக்க வேண்டுமானால் முதலில் அதிலுள்ள புதர்களையும், முட்களையும், செடி, கொடிகளையும் பிடுங்கி நெருப்பிட்டுக் கொளுத்தி ஆகவேண்டும். பிறகு மேடுகளை வெட்டிப் பள்ளத்தில் போட்டு நிரவ வேண்டும். கல்லுகளையும், பாறைகளையும் உடைத்து வெளியாக்க வேண்டும். இந்தக் காரியங்களெல்லாம் செய்த பிறகே அந்தப் பூமி எந்த விதமான வெள்ளாமை செய்யப் பயன்படும் என்று கருதி அதற்கேற்ற எருக்களிட்டு பயிர்களைச் செய்து பயன்பெறவேண்டும். அப்படிக்கில்லாமல் உள்ள நிலையிலேயே பயிர் செய்வதானது மனிதனது முயற்சியும், ஆற்றலும், விதைப்பண்டமும் வீணாகப் போவதுடன் பயனற்ற கொடியும், செடியும் மேலும் வளர்ந்து துஷ்ட மிருகங்களும், விஷஜந்துக்களும் தாராளமாய்க் குடியிருக்கத் தகுந்த புதர்களாகத் தான் ஏற்பட்டுவிடும்.
ஆகையால், நாம் இப்போது புதர்களிலுள்ள கொடி, செடி, முள், புல், பூண்டு ஆகியவற்றை அழித்து நெருப்பு வைத்துக் கொளுத்தும் வேலையில் இருக்க வேண்டியவர்களாய் இருக்கின்றோம். இந்த வேலையைச் செய்யும் முன் பயிர் செய்யும் வேலையில் நாம் ஒருக்காலுமும் புகக்கூடாது. மேடுபள்ளங்களைச் சமனாக்காமல் அதில் தண்ணீர் பாய்ச்சும் வேலையை நாம் தொடங்க மாட்டோம். ஏனெனில், நாம் பாய்ச்சும் தண்ணீரெல்லாம் ஏற்கனவே தண்ணீர் நிறைந்திருக்கும் பள்ளத்திற்கே போய்ச் சேர்த்துவிடும். மேட்டிற்கு எவ்வளவு தண்ணீர் பாச்சினாலும் அங்குக் கொஞ்சம் கூடத் தங்காது. ஆகவே, தைரியமான அழிவு வேலை அதாவது காட்டைத் திருத்தி மேட்டை வெட்டிப் பள்ளத்தில் போட்டுச் சமனாக்கும் சமத்துவ வேலையைக் கைக் கொள்ள வேண்டும். அதற்குப் பயப்படக் கூடாது.
இந்த வேலையில் நமக்குப் பெரிதும் கஷ்டமுண்டு என்பதையும் மனதில் வைக்க மறந்துவிடக் கூடாது.
புதர்களில் இருந்து கொண்டு சுகமாய் வாழ்ந்து வரும் ஜந்துக்களால் நமக்குப் பல ஆபத்துகள் ஏற்படலாம். அதற்கும் துணிந்து தைரியத்தோடுதான் அழிவு வேலை செய்ய வேண்டியிருக்கின்றது.
ஆகவே சகோதரர்களே! இப்போது நமது நாட்டில் ஆக்க வேலை செய்வது என்பது சாத்தியப்படாது என்பதை நான் உங்களுக்குத் தெரிவித்துக் கொள்ளுகின்றேன்.
பாழும் மதத்தின் பேரால் உலகமே பல பிரிவுகளாகப் பிரிந்து கிடக்கின்றது.
குறிப்பாக, நமது நாடு மதத்தின் பேரால் பிரிந்தது மாத்திரமல்லாமல், ஜாதிகளின் பேரால் பல பிரிவுகளாகப் பிரிந்து கிடக்கின்றது.
இவை மாத்திரமல்லாமல் பணக்காரன் – ஏழை – படித்தவன் – பாமரன் என்கின்ற பிரிவுகளும் நிரந்தரமாய் இருக்கும்படி ஏற்பாடுகள் ஆகிக் கொண்டும் வருகின்றன. இந்தப்படி நிரந்தரமாயிருக்கும் படியாக ஏற்பாடு செய்து கொண்ட மேல் ஜாதி, கீழ்ஜாதி முதலாகிய பிரிவுகளை அழிக்க ஆரம்பித்தால், இதை ஆதரவாய்க் கொண்டு மற்றொரு கெடுதி நமது நாட்டில் நிரந்தரமாய் இருக்கும்படியாக அதாவது பணக்காரன் – ஏழை என்கின்ற பிரிவு நிரந்தரமாய் இருக்கும்படி ஒரு புது முயற்சி நமது நாட்டில் இப்போது அதிகமாகச் செய்யப்பட்டு வருகின்றது. முதலாளி தொழிலாளித் தன்மையும் நிரந்தரமாய் இருக்க ஏற்பாடாகி வருகின்றது. இவை எல்லாம் அரசியல் கிளர்ச்சியாலும், சீர்திருத்த முயற்சியாலுமே தான் செய்யப்படுகின்றன.
அதாவது, இவ்வேற்பாடுகளைத்தான் இன்றைய முன்னேற்றமென்றும், சீர்திருத்தமென்றும், சுதந்திரமென்றும் சொல்லப்பட்டு வருகின்றன. நமது பாமர ஜனங்கள் இதன் இரகசியத்தைத் தெரியாமல் அதில் விழுந்து விளக்கில் விட்டில் பூச்சிகள் விழுவது போல விழுந்து மடிந்து வருகின்றார்கள். இதற்காகவே தான் கடவுளும், மதமும், ஜாதியும், அரசியலும் ஏற்படுத்தப்பட்டதென்றும் அந்தப்படியே பயன்படுத்தப்பட்டு வருகிறதென்றும் நான் உறுதியாய்க் கூறுகிறேன். இவற்றை எல்லாம் அடியோடு ஒழிப்பது தான் நாம் மனித சமூகத்திற்குச் செய்ய வேண்டிய உண்மையான தொண்டாகும். இதை விட்டு விட்டுச் செய்யும்படியான வேறு எந்தத் தொண்டும் மனித சமூகத்திற்குக் கேடு விளைவிப்பதாகும்.
ஆகவே, நாட்டிற்கு நன்மை செய்வதாய்க் கூறிக் கொண்டு மக்களை மீளாத அடிமையிலும், கொடுமையிலும் ஆழ்த்தப்போகும் பாதகமான வேலைகளை எல்லாம் கூட நாம் அழிக்க வேண்டியவர்களாய் இருக்கின்றோம். நாட்டுச் செல்வங்களை நாட்டிலுள்ள மக்களில் சிலர் தங்கள் தேவைகளுக்கு மேலாகவும், தகுதிக்கு மேலாகவும் சேர்த்து வைத்துக் கொண்டு அவற்றையெல்லாம் அக்கிரமமான வழியில் செலவு செய்து கொண்டு மக்களை அடிமைப்படுத்தி ஆனந்தமாய் வாழ்ந்து கொண்டு இருக்கின்ற மக்களே தான் இன்று “இந்த நாடு தரித்திர நிலையில் இருக்கின்றது” விடுதலை பெற வேண்டும் என்று பாசாங்கு செய்கின்றார்கள். கஷ்டப்படும் மக்களும், ஏழை மக்களும் – தங்கள் மீது திரும்பாமல் இருக்கட்டும் என்று அன்னிய நாட்டுக்காரர்களை நமக்குக் காட்டி நம்மை அந்தப் பக்கம் திருப்பி விடுகின்றார்கள்.
சாதாரணமாக நம் குழந்தைகளிடம் இருந்து ஏதாவது சாமான்கள் எடுத்துக் கொள்ள வேண்டும்மென்றால், எப்படி அதற்கு வேறு ஒரு வேடிக்கையைப் பார்க்கச் சொல்லி ஆகாயத்தைப் பார், அந்தப் பக்கம் பார் என்பதாகப் பராக்குக் காட்டி, அது அந்தப் பக்கம் திரும்பிப் பார்க்கும் போது நாம் அந்தச் சாமானை எடுத்துக் கொள்ளுகின்றாமோ அது போலவே, பாமர மக்களைச் சுயராஜ்யம் பார் – பூணர சுயேச்சையைப் பார் – மோட்சம் பார் – கடவுளைப் பார் – என்று பராக்குக் காட்டி அவர்கள் வேலையின் பயனையும், அவர்களது செல்வத்தின் பங்குகளையும் சிலரே கொள்ளை அடித்துக் கொள்ளுகின்றார்கள். இந்தக் கூட்டத்தாரின் தந்திரமே தான் இந்த நாட்டில் தரித்திரம் என்பதற்கும் அடிமைத்தனம் என்பதற்கும், அறிவும், ஆராய்ச்சியும் அற்ற தனம் என்பதற்கும் ஆதாரமாய் இருக்கின்றன.
இந்த நாட்டில் செல்வத்தில் எவ்வளவு பெரிய பாகத்தை மதமும், கடவுளும் என்கின்ற பேரால் வேலை செய்யாத சோம்பேறிகள் அனுபவிக்கின்றார்கள் என்பதை, நமது மூட ஜனங்கள் அறியாமலேயே இந்த நாடு தரித்திரமான நாடு என்று அழுகின்றார்கள். இந்த நாட்டில் உள்ள சந்நியாசிகள் துறவிகள் மதச்சாரிகள் என்பவர்களுக்கு உள்ள சொத்துக்களும், வரும்படிகளும் வேறு யாருக்காவது இருக்கின்றதென்று யாராவது சொல்ல முடியுமா? அவர்களுக்கு எதற்காக அவ்வளவு சொத்தும், வரும்படியும் வேண்டி இருக்கின்றதென்று எந்தப் பொருளாதாரவாதியாவது கவனிக்கின்றானா?
ஒரு சந்நியாசி கோடிக்கணக்கான ரூபாய் சொத்தும், வருஷத்திய இலட்சக்கணக்கான ரூபாய்கள் வரும்படியும் உடையவனாக இருந்தால் அந்த நாடு ஏழைநாடு – தரித்திரநாடு என்று யாராலாவது சொல்ல முடியுமா? என்று கேட்கின்றேன். ஒரு முழம், முக்கால் முழம் உயரமுள்ள குழவிக்கல்லுக்கு நமது நாட்டில் எத்தனை கோடி ரூபாய்கள் சொத்தும் எத்தனை இலட்ச ரூபாய் வரும்படியும் இருக்கின்றன என்று பாருங்கள். இப்படி எத்தனை நூற்றுக்கணக்கான – ஆயிரக்கணக்கான குழவிக்கல்லுகள் நமது நாட்டில் செல்வத்தோடு யானை, ஒட்டகம், குதிரை, பல்லக்கு, தேர், ரதம் முதலிய வாகனங்களோடு – பல பெண்டாட்டிகளோடு – பல கலியாணங்களோடு வாழ்கின்றன என்பதை நேரில் பார்க்கும் ஒரு யோக்கியன் உண்மையில் நமது நாடு தரித்திரமுள்ள நாடு என்று சொல்ல வருவானா?
இதை எந்தப் பொருளாதார நிபுணனாவது கவனித்து நமது தரித்திரமுள்ள நாடு என்று சொல்லுகின்றானா? மற்றும் பிரபுக்கள் – செல்வவான்கள் – லட்சுமி புத்திரர்கள் என்று சொல்லிக் கொண்டு எத்தனை ஆயிரக்கணக்கான ஏக்கர் பூமிகள் உடையவர்களும், எத்தனை ஆயிரக்கணக்கான ரூபாய்கள் இன்கம்டாக்ஸ் வரி கொடுக்கக்கூடிய இலாபம் அனுபவித்துக் கொண்டு இலட்ச இலட்சமாய்க் கோடி கோடியாய் பொருள் சேர்த்து, தாசி, வேசி, ராஜபோகம் அனுபவித்துக் கொண்டு, நிரந்திர ராஜாவாகவும், நிரந்தர ஜமீனாகவும், நிரந்தர பிரபுவாகவும், நிரந்தர பாளையக்காரராகவும் இருக்க முயற்சி செய்து கொண்டு இருக்கும் மக்கள் பல நூற்றுக்கணக்கான – ஆயிரக்கணக்கான இருந்து கொண்டு இருக்கும் இந்த நாட்டைத் தரித்திரமுள்ள நாடு என்று யாராலாவது சொல்ல முடியுமா? மற்றும் நாள் ஒன்றுக்கு 100, 200, 500, 1000- ரூபாய்கள் வீதம் சம்பாதிக்கும் வக்கீல்களும், டாக்டர்களும் ஏராளமாய் இருந்து கொண்டு ஒவ்வொருவரும் அய்ந்தாயிரம், இலட்சம், அய்ந்து இலட்சம் பெறும்படியான பங்களாக்களில் வாழ்ந்து கொண்டு நிலத்தில் கால்படாமல் – நகத்தில் அழுக்குப்படாமல் – சரீரத்தில் வேர்வை இல்லாமல் பிழைத்துக் கொண்டிருக்கும் மக்கள் பல ஆயிரக்கணக்கான – இலட்சக்கணக்கான வாழும் இந்த நாட்டைத் தரித்திரமுள்ள நாடு என்று யாராவது சொல்ல முடியுமா என்று யோசித்துப் பாருங்கள்?
மற்றும் இந்தக் கூட்டத்தினர்கள் தானே இன்றையத்தினம் இந்த நாடு தரித்திர நாடு, ஏழை நாடு, அடிமை நாடு – சுதந்திர நாடு என்று ஆகவேண்டும் சுயராஜ்ஜிய நாடு ஆகவேண்டும் என்றும் பிரமாதமாய்க் கூப்பாடு போடுகின்றார்கள். ஒவ்வொரு காலத்திலும் வருகின்ற சீர்திருத்தங்களில் எல்லாம் இந்த மாதிரி ஜனங்கள் தானே நமது பிரதிநிதிகளாய் இருந்து நமக்காக என்று ஆட்சி புரிந்து வருகின்றார்கள். இப்படிப்பட்டவர்களுக்குத் தானே இன்னமும் அதிகாரமும், பெருமையும், கீர்த்தியும், பணமும், வரவும் ஏற்படவும், நாம் மதத்தையும், கடவுளையும், ஜாதியையும் காப்பாற்ற முயற்சிப்பதோடு, சுயராஜ்ஜியமும் பெற வேண்டுமென்று பெரிய பாடுகளைப் படுகின்றோம்.
நமது நிலைக்குக் காரணம் என்ன? நமது தரித்திரத்திற்கு யார் காரணம்? நமது செல்வமும் பாடும் என்ன ஆகின்றன? என்கின்ற அறிவு நமக்கு இல்லாமல் இருக்கிற முட்டாள்தனமே நமது இன்றைய இழிவு நிலைக்குக் காரணமாயிருக்கின்றது. மதத்தையாவது, ஜாதியையாவது, கடவுளையாவது உண்மையென்று நம்பி அவற்றைக் காப்பாற்ற முயற்சிக்கும் எவனாலும் மக்களுக்குச் சமத்துவமும், அறிவும், தொழிலும், செல்வமும் ஒருக்காலும் ஏற்படவே ஏற்படாது என்பது எனது உறுதி.
ஆனால், இவற்றை அழிக்க மக்கள் ஒருக்காலமும் சம்மதிக்க மாட்டார்கள். இவற்றைக் காப்பாற்ற அனேக விதமான ஸ்தல ஸ்தாபனங்கள் ஆதியிலேயே ஏற்பாடு செய்யப்பட்டு வந்து குழந்தைப் பருவ முதலே நமக்குள் புகுத்தப்பட்டு வந்திருப்பதால், இது சுலப சாத்தியமான காரியமாக இருக்க முடியவில்லை. இவற்றில் எங்குக் கை வைத்தாலும் நமது எதிரிகள் நம்மீது நாஸ்திகன் என்னும் ஆயுதத்தை வீசி எறிந்து நம்மைக் கொல்லப்பார்த்து விடுவார்கள். நம் மக்களும் பெரும்பாலும், மூடர்களாயிருப்பதால் அந்த நாஸ்திகம் என்னும் ஆயுதத்தைக் கொண்டே நமது எதிரிகளுக்கு உதவியாகவும், நமக்கு எதிராகவும் நின்று நம் முயற்சிகளுக்கு இடையூறு செய்வார்கள்.
ஆகையால் நாம் இன்றைய நிலையில் இருந்து ஒரு சிறுமாறுதல் செய்ய வேண்டுமானாலும் நம் எதிரிகளின் ஆயுதமாகிய நாத்திகத்திற்குப் பயப்படாமல், “ஆமாம் நான் நாஸ்திகன் தான்” என்று சொல்லிக் கொண்டு அந்த நாஸ்திகத்தையே நாட்டில் எங்கும் மூலை முடுக்குகளில் கூடப் பரப்ப நாம் துணிய வேண்டும். அப்போதுதான் நமது எண்ணம் ஈடேற முடியும். ஆதலால், நாம் இனிச் செய்ய வேண்டியது முக்கியமாய் நாஸ்திகப் பிரசாரமேயாகும். அதாவது, “எனக்கு இந்த மதம் வேண்டாம்; இந்தச் சாதி வேண்டாம்; இந்தச் சாஸ்திரம் வேண்டாம்; இவை இல்லாமல் ஜீவிக்க என்னால் முடியும். எனக்கு வேண்டியதெல்லாம் சமத்துவமும் மனிதத் தன்மையுமேயாகும் என்று தைரியமாய்ச் சொல்ல வேண்டும். அதுவும் இந்த நாட்டில் – இந்த உலகத்திலேயே வேண்டுமே ஒழிய, மேல் உலக சங்கதியை இதில் கலக்க வேண்டாம் என்று தைரியமாகப் பிரசாரம் செய்ய வேண்டும். இன்றைய வாலிபர்களுக்கு இதுதான் முக்கிய வேலை என்பது எனது உறுதியான அபிப்பிராயமாகும்.
பெரியார்
[07.09.1930- தேதி அன்று கேரளா சீர்திருத்த மாநாட்டில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவில் இருந்து சில…. – ´குடிஅரசு´ 14.09.1930]