நாயை ஆட்டும் வால்…


வாலாட்டும் நாய் எல்லோருக்கும் தெரியும், ஆனால் அந்த வால் நாயை ஆட்டினால்… தற்போதைய நிதி சந்தையின் நிலைமை இதைப்போலத்தான் உள்ளது. ஒரு சாதாரண வீட்டுக்கடன் சிக்கல் இப்பொழுது உலகையே ஆட்டிக்கொண்டு உள்ளது.
அமெரிக்காவில் தொடங்கிய சிக்கல், மெதுவாக சில ஐரோப்பிய நாடுகளை பாதித்து தற்பொழுது ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அனைத்தையும் பாதித்து உள்ளது. ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் நிதி அமைச்சர்களின் அவசர கூட்டத்தில் வங்கிகளில் உள்ள மக்களின் சேமிப்பிற்கு வெறும் 50 ஆயிரம் யுரோ வரை மட்டுமே காப்பு அளிக்க முடியும் என்று அறிவித்து உள்ளனர். நேற்று உலகின் 6 நாடுகளின் தேசிய வங்கிகள் வட்டி விகிதத்தை ஒரு சேர குறைத்து உள்ளன. இதனால் பணப்புழக்கம் அதிகரிக்கும் என்று நம்புகின்றனர். அமேரிக்காவில் செப்டம்பர் மாதத்தில் மட்டும் 1.65 இலட்சம் மக்கள் வேலை இழந்து உள்ளனர். இதில் நிதி நிறுவங்களை சார்ந்து வேலை செய்த இந்திய மென்பொருள் வல்லுனர்களும் அடக்கம்.
இதற்கு இடையில் ஐஸ்லாந்து நாட்டின் தேசிய வங்கி திவாலாகி, அந்த நாட்டில் பொருளாதாரமே வீழ்ந்து உள்ளது. முதன் முறையாக ஒரு நாடு இந்த பொருளாதார சரிவு சூறாவளியில் திவாலாகி உள்ளது. இங்கு ஒரு சில விடயங்களை நாம் கவனத்தில் எடுத்து கொள்ள வேண்டும், 2007 ம் ஆண்டு உலக வங்கியின் அறிக்கை படி ஐஸ்லாந்து நாட்டின் மக்கள் அமெரிக்காவை விட அதிக வருமானம் ஈட்டுபவர்களாக இருந்து உள்ளனர். சரியாக சொல்ல வேண்டும் என்றால் உலகில் அதிகமாக சம்பாதிக்கும் மக்கள் உள்ள நாடுகளில் அது முதல் பத்து இடங்களுக்குள் இருந்தது. அந்த நாட்டின் மக்களின் சராசரி ஆண்டு வருமான 41 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் . இப்படிப்பட்ட ஒரு நாட்டின் பொருளாதாரமே வீழ்ந்து உள்ளது எனும் போது நம்மில் பலருக்கும் நம் எதிர்காலத்தின் மீது பயத்தையும் பீதியையும் ஏற்படுத்துகின்றது.

இப்படி பல பல பெரிய வங்கிகளும், நிறுவனங்களும் , நாடுகளும் திவாலாகி கொண்டு இருக்கும் போது.. நம்மில் பலருக்கும் இந்த முதலாளித்துவ பொருளாதார அமைப்பு எப்படி இயங்குகிறது என்ற தெளிவு இல்லாமல், கண்ணை கட்டி காட்டில் விட்டவர்களை போல் உள்ளோம். ஆனால் சிலரோ இந்த முதலாளித்துவ அமைப்பின் மீது இன்னும், இவ்வளவு நடந்தும் தீராத நம்பிக்கை கொண்டு , இது மீண்டு வரும் என்று காத்துக்கிடக்கின்றனர் இவர்கள் ஒரு வகையில் பசித்தாலும் புல்லை தின்னாத காகித பணப் புலிகள். இவர்களிடம் இந்த திறந்த சந்தை பொருளாதாரத்தில் வங்கிகள் சோசலிச அரசை விட வேகமாக நாட்டு உடமை ஆக்கப்படுவதை பற்றி கேட்டால் இப்பொழுது நாட்டு உடமை ஆக்கிக்கொள்ளுங்கள் , பிறகு எல்லாம் சரியானவுடம் மீண்டும் தனியாருக்கு கொடுத்து விடலாம்.. மேலோட்டமாக பார்த்தல் இது சரியென்றே தோன்றும்.. அமெரிக்க வங்கிகளின் திவாலனதற்கு அமெரிக்க அரசு 700 பில்லியன் டாலர் நிதி உதவி அளிக்கிறது.. அந்த பணம் யாருடையது… ? அனைத்தும் அமெரிக்க மக்களின் வரிப்பணம்.. ஒரு வங்கி நிறுவனம் தனது முறையற்ற செயல்களால் திவாலாகும் பொழுது மக்களின் வரிப்பணம் அவர்களை காக்க வேண்டும் ஆனால் அதே சமையம் அவர்கள் பல பில்லியன் டாலர்கள் இலாபம் ஈட்டும் பொழுது, அவர்களின் இலாபத்தில் பங்கு கேட்கக் கூடாது.. இழப்பில் மாட்டும் அரசாங்கத்தின் பணம் வேண்டும்.. இலாபமாக இயங்கும் பொழுது அரசாங்கத்தின் தலையீடு கூடாது. இது எந்த வகையில் நியாயம்? பொருளாதாரம் வளர்ந்து கொண்டு இருந்த போது, இதே பொருளாதார வல்லுனர்கள் அமேரிக்காவில் அரசு, நிதி சந்தையில் தலை இடக்கூடாது என்று வாதிட்டு அதை நடைமுறையிலும் செயல்படுத்தினர். ஆனால் இப்பொழுது அவர்களுக்கு நட்டம் எனும் பொழுது அரசு அனைத்து நட்டத்தையும் ஏற்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர்.. இவர்களின் இந்த போலித்தனம் தான் முதலாளித்துவத்தின் முக்கிய கொள்கை. இப்படிப்பட்ட கொள்கை கொண்ட ஒருவர் தான் ஆலன் பிஷர்மன் எனும் நபர்.

இவர் வாஷிங்க்டன் மியுச்சுவல் (Washingon Mutual — WaMu) என்ற நிதி நிறுவனத்தில் தலைமை நிறுவன அதிகாரியாக (CEO) பணியாற்றியவர்.. இவர் அந்த நிறுவனத்தில் பொறுப்பேற்று வெறும் 17 நாட்களே வேலை செய்தார், சரியாக 18 வது நாள் அந்த நிதி நிறுவனம் திவால் ஆனது. ஆனால் அந்த 17 நாட்கள் வேலை செய்ததற்காக அவருக்கு கொடுக்கப் பட்ட சம்பளம் 20 மில்லியன் டாலர்கள், இதில் அவரின் போனசும் அடக்கம்.. ! இது ஏதோ ஒருவருக்கும் மட்டும் கிடைத்த லாட்டரி பரிசு அல்ல , இவரை போன்று பல நிதி நிறுவன அதிபர்களும் இந்த நெருக்கடி நிலையில் பல மில்லியன் டாலரை சம்பளமாக பெற்று உள்ளனர். வங்கிகளில் உள்ள மக்களின் சேமிப்பு பணத்திற்கு உத்திரவாதம் இல்லை ஆனால் அந்த வங்கி தலைமை அதிகாரிகளுக்கு போனசுடன் சம்பளம்.. !!!

இவர்களின் இன்னொரு முக்கிய வாதம் என்ன வென்றால் 1930 களிலும் இதை போன்ற பொருளாதார சரிவு ஏற்பட்டது என்றும், அதற்கு பின்னும் உலக பொருளாதாரம் மீண்டு வந்து உள்ளது என்பதே. இதைப்பற்றி சிறிது பார்ப்போம் 1929 இல் 5.7 பில்லியன் டாலராக இருத்த அமெரிக்க ஏற்றுமதி 1930 இல் திடீரென 1.7 பில்லியன் டாலராக குறைந்தது, இதனால் உள்ளநாட்டு சந்தையில் பொருட்கள் தேக்கம் அடைந்து பொருட்களின் விலை குறைந்தது. இதனால் இலாபம் என்ற ஒரு குறிக்கோளையே தாரக மந்திரமாக கொன்டுள்ள முதலாளித்துவம் நிலை தடுமாறியது. அந்த கால கட்டத்தில் பல வங்கிகள் திவாலாகின , இது மிகப்பெரும் வேலை இழப்பிற்கும் , பொருளாதார சரிவிற்கும் இட்டு சென்றது. இதைப்பற்றி அமெரிக்க தேசிய வங்கியின் (Federal Reserve) தலைவராக 1934-48 வரை இருந்த மரிநேர் எக்லஸ் தனது புத்தகத்தில் பின்பு இவ்வாறு குறிப்பிட்டார்.. “மக்களின் செல்வம் பரந்து பட்டு உள்ள பொழுது மட்டுமே அந்த நாடு உற்பத்தி செய்யும் பொருட்களை வாங்கும் சக்தி மக்களுக்கு இருக்கும், இப்படி பெரும்பான்மை மக்கள் பொருட்களை வாங்குவதன் மூலமே இந்த பொருளாதாரம் வளர்ச்சி பெரும்.. ஆனால் 1929-30 களில் மக்களிடம் செல்வம் பரந்து பட்ட நிலையில் இல்லாமல் செல்வம் ஒரு சிலரிடம் மட்டுமே குவிந்தது. இப்படி சமசீரற்ற முறையில் செல்வம் மக்களிடம் பரவி இருந்ததே பொருளாதார சரிவிற்கு முக்கிய காரணம்”
இப்படி உலகின் பல, ஏறக்குறைய அனைத்து முதலாளித்துவ நாடுகளும் சரிவில் இருந்த போது, அப்பொழுதைய சோவியத் குடி அரசை இந்த பொருளாதார சரிவால் சிறிதளவும் பாதிக்கப்படவில்லை என்பது மக்கள் பொருளாதாரத்திற்கு கிடைத்த வெற்றி. இந்த பொருளாதார சரிவு அப்பொழுது புதிய சந்தைகளை கைப்பற்றியதன் மூலம் மீண்டு வந்தது, இந்தப் போட்டியும் இரண்டாம் உலகப் போருக்கு காரணமாய் அமைந்தது.
ஆனால் தற்பொழுது பொருளாதாரங்கள் உலக மயத்தால் இணைக்கப்பட்டு உள்ளன. ஒரு நாட்டில் விளையும் சிறு உற்பத்தி பெருக்கமோ அல்லது உற்பத்தி தேக்கமோ உலகின் பல நாடுகளை திவாலகச் செய்யும் நிலைமைக்கு இட்டு செல்கின்றன. முதலாளித்துவம் பெரும்பான்மையான மக்கள் பொருட்களை வாங்குவது/நுகர்வதை அடிப்படையாகக்கொண்டே இயங்குகிறது. இதனால் மக்களின் தேவைக்கு ஏற்ப பொருள் உற்பத்தி என்பது மாறி , இலாபத்திர்க்காகவே பொருள் உற்பத்தி என்ற நிலைக்கு மாற்றப்படுகிறது. இந்த இலாப வெறி உள்ள வரை செல்வம் சிறிது சிறிதாக சிலரிடம் மட்டுமே குவிக்கப்பட்டுகொண்டே இருக்கும். ஒரு கட்டத்திற்கு பிறகு இந்த பொருளாதார கட்டமைப்பு நீர்க்குமிழியை போன்று உடையும்.
இந்த பொருளாதார சரிவில் இருந்து மீண்டு வர இந்த முதலாளித்துவ அமைப்பின் முன்னே உள்ள ஒரே தீர்வு இயற்கை வளங்களை சூறையாடுவதும்… இந்தியா, சீனா போன்ற நாடுகளில் உள்ள மக்களின் நுகர்வை அதிகரிப்பதும்… இந்தியாவிற்கு அணு தொழில் நுட்பத்தை 3 இலட்சம் கோடிகளுக்கு வழங்கியதை போல், பல பல ஒன்றுக்கும் உதவாத தொழில் நுட்பங்கள் இந்தியாவைப்போன்ற நாடுகளின் தலையில் கட்டுவதும்.. இதனால் இருக்கும் கொஞ்ச நஞ்ச இன்பத்தையும், செல்வத்தையும் இழக்கப் போகும் அப்பாவிகள் உழைக்கும் மக்கள் மட்டுமே.
ஆனால் ஏழைக்கும், பணக்காரனக்கும் உள்ள தூரம் முன்பு எப்பொழுதையும் விட மிக விரைவாக அதிகமாகிக் கொண்டே வருகிறது, விரைவில் உழைக்கும் மக்களின் போராட்டம் வெடிக்கும் , அதே சமயம் ஆட்சியாளர்களும் தனது சர்வாதிகாரப் படைகளின் மூலம் அடக்குமுறையை மேற்கொள்வர். பகத் சிங் சொன்னதைப் போல் இந்த போராட்டம் தொடரும்.. ஒரு சோசலிச குடியரசு நிறுவப்படும் வரை தொடந்து கொண்டே இருக்கும்…
அது வரை வால் தெருவின் பேராசைக்கும், ஊழலுக்கும் சிக்கி சீரழிவது மக்களும் அவர்களின் வரிப்பணமும் தான்..
இப்பொழுது சொல்லுங்கள் நாய் வாலாட்டுகிறதா இல்லை வால் நாயை ஆட்டுகிறதா என்று…..

அணு குண்டா ? வேண்டாம்.. மரபணு மாற்றிய சோயா போதும்..


ஒரு நாட்டை அடிமையாக்க முன்பெல்லாம் போரிட்டு அந்த நாட்டை வெல்வது ஒரு வழியாய் இருந்தது.. பின்பு இரண்டாம் உலகப் போருக்கு பின் ஆதிக்க நாடுகள் நாம் அந்த நாட்டில் சென்று கொள்ளை அடிப்பதை விட நம் நாட்டில் இருந்து கொண்டே மாற்ற நாடுகளின் இயற்க்கை வளங்களையும், மனித வளங்களையும் கொள்ளை அடிக்கலாம் என்று வந்தது…அப்பொழுது மக்களிடம் வறுமை இருந்தாலும்.. அரை வயிறு சாப்பிட்டு ஓரளவு நலமுடன் வாழ வழி இருந்தது… ஆனால் அதற்கும் வேட்டு வைத்து விட்டார்கள் இப்பொழுது இன்னும் ஒரு படி மேல் போய் உலகமயம், தாராளமயம் என்ற கருத்துக்களால்.. மனிதனின் உணவிற்கும் , ஆயிரம் ஆயிரம் ஆண்டு காலமாக மனிதன் செய்து வரும் இயற்கை விவசாயத்திற்கும் அழிவை நமது இந்திய ஆட்சியாளர்கள் அறிவித்து உள்ளனர்..

GM Food, Source : The Hindu

இந்திய வெகு விரைவில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட உணவுகளை உற்பத்தி மற்றும் இறக்குமதி செய்யப் போகிறது. இதில் என்ன பிரச்சினை என்று யோசிக்கும் அன்பர்களுக்கு சில விபரங்களை அளிக்க விரும்புகிறேன்..

இந்தியாவில் மரபணு மாற்ற உணவு, விதைகள், மாற்ற உயிர்மங்களை கட்டுப்படுத்துவது.. மரபணு தொழில் நுட்ப அனுமதி குழு (Genetic Engineering Approval Committee (GEAC) ). இந்தியாவில் செப்டம்பர் 22, 2006 ஆண்டு விதித்த தடையை நீக்கி உச்ச நீதிமன்றம் திருத்தப்பட்ட அனுமதியை மே 8, 2007 அன்று வழங்கியது. அதன்படி விவசாய நிலங்களில் மரபணு மாற்றம் செய்யப் பட்ட பருத்தி, அரிசி, கத்தரி , வெண்டை, உருளை கிழங்கு இன்னும் சில காய் கறிகளுக்கு பயிரிட அனுமதி கிடைத்தது.

இன்று இந்தியாவில் பெரும்பாலும் Bt cotton எனப்படும் பருத்தியை விவசாயிகள் பயிரிடுகின்றனர்..

மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளால் அரசும், அதனை ஆதரிக்கும் மற்றவர்களும் சொல்லும் வாதம் என்னவென்றால்..

1. இதனால் பயிர்களுக்கு நோய் பாதிப்பு குறைவு

2. குறைந்த அளவே பூச்சிகள் இதை தாக்குகின்றன, இதனால் பூச்சி மருந்து செலவும் குறைவு

3. பூச்சி மருந்து செலவு குறைவால், பயிரால் கிடைக்கும் லாபம் அதிகம்

4. இந்த மரபணு மாற்ற விதைகள் அதிக மகசூலை தரக் கூடியவை

இவை எல்லாம் நமக்கு மிகவும் நல்ல விடயமாகப் பட்டாலும்… இதன் உள்ளே இருக்கும் உண்மையை இந்த அரசு திட்டமிட்டே மறைத்து வருகிறது…

இந்தியாவின் ஹரியானா மாநிலத்தில் மரபணு மாற்ற பருத்தி பயிரடப்படும் விவசாயிகளிடம் நடத்திய ஆய்வில்.. முதலாம் ஆண்டு குறைவான பூச்சி தாக்குதலால் , சிறிது அதிக மகசூல் மற்றும் லாபம் கிடைத்து உள்ளது என்றும்.. ஆனால் அதே சமயம் அதில் பணியாற்றும் விவசாய தொழிளார்களுக்கு தோல் ஒவ்வாமை, மற்றும் பலவித ஒவ்வாமைகள் வந்துள்ளதும் தெரிய வந்தது.

ஒரு சர்வதேச விவசாய அறிவியல் மற்றும் தொழில் நுட்பக் கழகம் (International Assessment of Agricultural Knowledge, Science and Technology for Development -IAASTD Report) நடத்திய ஆய்வில் மரபணு மாற்ற பயிர்களின் மகசூல் சில இடங்களில் 10 -33 % வரை அதிகரித்த அதே வேளையில், மற்றும் சில இடங்களில் அதன் மகசூல் குறைந்தும் இருந்தது. இது மட்டும் அல்லாது மரபணு மாற்ற பயிர்கள் வயல் வெளியில் அருகில் இருக்கும் அதேவகை மற்ற சாதாரண பயிர்களுடன் மகரந்த சேர்க்கை நடைபெறும் போது.. அது பலவித புதிய பாதகமான விளைவுகளை ஏற்படுத்துகிறது, இதனால் இது சுற்றுப்புற சூழலுக்கு கேடானது என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.

உலகில் இந்த மரபணு மாற்ற தொழில் நுட்பத்தில் முதலிடத்தில் இருப்பது மான்சென்டோ என்ற அமெரிக்க நிறுவனம். இந்த நிறுவனம் தான் நம் நாட்டில் இருக்கும் ஒரு உள்ளூர் நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்து இந்த தொழில் நுட்பத்தை அறிமுகம் செய்ய விளைகிறது. இந்த நிறுவனம் இந்தோனேசியாவில் மரபணு மாற்றிய புதிய பருத்தியை அறிமுகம் செய்த பொழுது இதற்காக செய்யப்படும் சுற்றுச்சூழல் பாதிப்பு ஆய்வை நடத்த வேண்டாம் என்று அந்நாட்டின் மூத்த விவசாய துறை அதிகாரிக்கு கையூட்டு வழங்கியது தெரிய வந்து பெரும் கண்டனத்திற்கு உள்ளானது. மற்றும் ஒரு ஆய்வின் படி கிட்ட தட்ட 140 தற்பொழுதைய மற்றும் முந்தைய இந்தோனேசிய அரசு அதிகாரிகளுக்கு இந்த நிறுவனம் கையூட்டு அழிந்து உள்ளதும் அம்பலம் ஆகி உள்ளது.இதற்காக இந்த நிறுவனத்திற்கு 1.5 மில்லியன் டாலர் அபராதமும் விதிக்கப் பட்டது…

உலகில் 90% மரபணு தொழில் நுட்பத்தை கட்டுப்படுத்தும் இந்தைகைய நிறுவனம் எதற்காக சுற்றுச்சூழல் ஆய்வை தவிர்க்க கையூட்டு வழங்க வேண்டும்… ?

இந்தியாவில் நானாபடேகர் என்ற வட இந்திய நடிகர், 2005 ம் ஆண்டு மான்சென்டோ நிறுவனத்தின் பி.டி. பருத்தி விதைக்கு ஆதரவு வழங்கி விவசாயிகளிடம் பிரச்சாரம் செய்தார்.. ஆனால் அடுத்த ஆண்டு இதற்கான ஆதரவை திரும்ப பெற்றார்.. அதற்காக சொல்லப்பட்ட காரணங்கள் இரண்டு..

1. இந்த பருத்தி விளைச்சலால் விவசாயிகளுக்கு ஏற்ப்பட்ட நட்டம்

2. இந்த நட்டதால் ஏற்பட்ட விவசாயிகளின் தற்கொலைகள்.

இன்று இந்தியாவில் பி.டி பருத்தி மட்டுமே, அரசாங்கத்தால் அனுமதி வழங்கப்பட்டு பயிரிடப்படுகிறது, தற்பொழுது இந்திய அரசு பி.டி.கத்தரிக்காயை அறிமுகம் செய்ய முயற்சி செய்து வருகிறது.

இந்த பி.டி பருத்தி , பருத்திகளை தாக்கும் அமெரிக்க புல்வோர்ம் என்ற பூச்சிக்கு எதிராக உருவாக்கப் பட்டது. இந்த புல்வோர்ம் பூச்சியை கொள்ளும் நஞ்சை நேரடியாக பருத்தியின் மரபணுவில் மாற்றம் செய்வதால், இந்த பூச்சி பருத்தியை தாக்காது, இதனால் மகசூல் அதிகரிக்கும், லாபம் அதிகரிக்கும், இவைதான் இந்த பி.டி பருத்தி அறிமுகமானபோது (2004 ம் ஆண்டு ) மான்சாண்டோ நிறுவனத்தால் சொல்லப்பட்ட முக்கிய கருத்துக்கள். இன்று ஒரு சில ஆண்டுகளில் பருத்தியை தாக்கும் புல்வோர்ம் பூச்சி , பி.டி பருத்தியின் நச்சுத்தன்மைக்கு எதிராக எதிர்ப்பு சக்தி பெற்றுள்ளது தெரிய வந்துள்ளது.. இதனால் இன்று விவசாயிகள் மீண்டும் பலவித பூச்சிகொல்லி மருந்துகளை உபயோக்கின்றனர்.
சமீபத்தில் நவதான்யா எனும் அமைப்பு விதர்பா நகரத்தில் நடத்திய ஆய்வில்.. பி.டி. பருத்தி விளைச்சல் செய்த நிலத்தில் மூன்று ஆண்டுகளில் மண்ணிற்கு நன்மை செய்யும் முக்கிய நுண்ணுயிர்களின் எண்ணிக்கை பெருமளவு குறைந்தது தெரியவந்தது. வேறு வார்த்தைகளில் கூறுவது என்றால் விவசாய நிலத்தில் மலட்டுத்தன்மையை ஏற்படுத்துகிறது. இதனை தவிர்த்து பி.டி.பருத்தி பூக்களை சுவைத்த பட்டாம் பூச்சிகளின் மரணம், பல புதிய வகை பூச்சிகளின் தாக்குதல் என பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. இந்த அமைப்பின் கருத்துக்கணிப்பின்படி 2004 ம் ஆண்டில் இருந்து இன்றுவரை விவசாயிகளின் தற்கொலை எண்ணிக்கை உயர்ந்து உள்ளதாக கூறுகிறது. இதற்க்கு பருத்தியின் விலை சரிவும் ஒரு காரணம் என்றாலும், பி.டி பருத்தியும் ஒரு முக்கிய காரணம் என்பதை இந்த அமைப்பின் அறிக்கை உறுதியுடன் கூறகிறது.

பி.டி பருத்தியின் விளைவுகள் இவை என்றால், பி.டி. மக்கா சோளத்தின் விளைவுகள் இதனைவிட மோசமாக உள்ளன. மரபணு தொழில் நுட்ப அனுமதி குழு (Genetic Engineering Approval Committee (GEAC) ) கொடுத்த அனுமதியின் படி இந்தியாவில் உள்ள சில விவசாய பல்கலை கழகங்களில் பி.டி மக்கா சோளம் ஆய்வுக்காக பயிரிடப்பட்டு வருகிறது. ஆஸ்திரிய விஞ்ஞானிகள் 30 சதவீத பி.டி சோளத்தை 7௦ சதவீத இயற்கை சொலதுடன் கலந்து சில எலிகளுக்கும், வெறும் இயற்கை சோளத்தை வேறு சில எலிகளுக்கும் உணவாக கொடுத்து நடத்திய ஆய்வில், பி.டி.சோளத்தை உணவாக கொண்ட எலிகள் , குறைந்த அளவு எலிகளை ஈன்று எடுத்தும், அந்த எலி குட்டிகள் சாதாரண எலிகளின் குட்டிகளை விட அளவில் சிறியவையாக இருந்தும் தெரியவந்தது.
ரசிய விஞ்ஞானிகள் பி.டி. சோயா பாலை , எலிகளுக்கு உணவாக அளித்து நடத்திய மற்றொரு ஆய்வில் புதிதாய் பிறந்த எலிகுட்டிகளில் பாதிக்கும் மேற்பட்டவை முதல் மூன்று வாரங்களுக்குள் இறந்ததும், ஆறு மடங்கு அதிக எலிகள் மிகவும் அதிகமாக எடை குறைவாக இருந்தும் கண்டு அறியப்பட்டு உள்ளது. இதேபோல் இத்தாலிய விஞ்ஞானிகளின் ஆய்வின் படி பி.டி சோயா எலிகளின் கல்லீரலை பாதிப்பதையும் உறுதி படுத்தி உள்ளனர்.

புவியின் தட்ப வெட்ப நிலை, பருவ காலங்கள் பல்வேறு காரணிகளால் வேகமாக மாறுபட்டு கொண்டு இருக்கும் சூழலில், உணவு உற்பத்தியில் இயற்கையோடு இணைந்த புதிய தொழில்நுட்பங்களின் தேவையும் அதிகரித்து வரிகிறது. இந்த தேவையை தனது லாப வெறிக்காக பயன்படுத்தி கொள்ள, பல பன்னாட்டு நிறுவனங்கள் முயன்று வருகின்றன. மனிதன் பல நூறு ஆண்டுகளாக இயற்கையோடு இணைந்து, விவசாயம் செய்து தனது உணவு தேவையை எந்த வித பாதிப்புகளும் இல்லாமல் பூர்த்தி செய்து வந்துள்ளான், ஆனால் கடந்த சில பத்து ஆண்டுகளில் ஒரு சில நிறுவனகளின் லாப வேட்டைக்காக இயற்க்கை விவசாயம் அளிக்கப்பட்டு, மண்ணை நஞ்சாக்கும் பூச்சிக் கொல்லிகளும், செயற்கை உரங்களும் அறிமுகப்படுத்தப் பட்டு அதன் விளைவுகளை நாம் இன்று உணர ஆரம்பித்து வருகிறோம். இப்படிப்பட்ட நிலையில் மனிதனால் செயற்கையாக மரபணு மாற்றம் செய்யப்பட்ட உணவு பொருட்கள் நம் மீது, நமது சூழலின் மீது பல தாக்கங்களை ஏற்படுத்தும்.
சுற்றுச் சூழலையும், மனிதனியும் அழிக்க வெறும் ஆயதங்கள் மட்டும் அல்ல, உணவுகளும் இப்போதெல்லாம் பயன்படுகின்றன. விழிப்புடன் இருப்போம், மக்களை விழிப்படைய செய்வோம், உணவில் பன்னாட்டு நிறுவனகளின் ஆதிக்கத்தை முறியடிப்போம்.