காந்தி, நேரு, அண்ணா வரிசையில் சேர விரும்பி, கனவு கண்டு இப்போது சேர்ந்ததாக எண்ணும் கருணாநிதி சமீபகாலமாக என்ன செய்கிறார்? காலையில் வண்டியை அரசினர் தோட்டத்திற்கு விடுகிறார். 500 கோடியில் கட்டப்படும் புதிய சட்டப் பேரவையை காரிலிருந்தபடியே பார்க்க, அதிகாரிகள் வரைபடத்தின் மூலம் கர்ம சிரத்தையாக விளக்க, கலைஞரின் வரலாற்றுச் சாதனையை நிறைவேற்ற உயரத்தில் நூற்றுக்கணக்கான வட மாநிலத் தொழிலாளிகள் தமிழினித்தின் தனிப்பெருமை கட்டிடத்தை புயல் வேகத்தில் கட்டுகின்றனர்.
அப்புறம் வண்டி கோட்டூர்புரத்தில் கட்டப்படும் அண்ணா நூலகத்திற்கு செல்கிறது. அங்கும் அதே அதே. பிறகு தலைமைச் செயலகத்தில் செம்மொழி மாநாட்டிற்கு வருபவர்களுக்கு என்ன தீனி போடுவது என்று அதிகாரிகள், அமைச்சர் பெருமக்களுடன் ஆய்வு. குடிமைப்பணி இப்படி முடிய வீடு செல்லும் தலைவர் அப்புறம் இருமனைவிமார்களின் வாரிசுப் பிரச்சினைகள் பற்றி பேசும் குடும்பப்பணி, பஞ்சாயத்துக்கள். இடையில் ஜெயாவின் கேள்விகளுக்கு பதில் சொல்லும் அறிக்கை, கேள்விபதில்களை ரெடிமேடான வங்கியிலிருந்து எடுத்துக் கொடுக்கும் உதவியாளர்கள் மூலம் சரிபார்த்து விட்டு, கலைஞர் டி.வியின் அடுத்த வார மானாட மயிலாட நிகழ்ச்சிக்கு வந்த தீம்களை ஒகே செய்து முடித்தால் வருகிறது மாலை.
வள்ளுவர் கோட்டத்திலோ, ஜவஹர்லால் உள்ளரங்கு விளையாட்டு மைதானத்திலோ நடத்தபடும் பிரம்மாண்டமான ஜால்ராபிஷேகம். கோட்டத்தில் கவிதை மழை என்றால் மைதானத்தில் குத்தாட்ட மழை. கன்னத்தில் கை வைத்து முழுவதையும் இரசித்து உருகி மருகி தோய்ந்து நனைந்து இதற்குமேல் வார்த்தைகள் தேவைப்படுவோர் வைரமுத்துவிடம்தான் கேட்க வேண்டும். நடனம், நாடகம், நகைச்சுவை, சொற்பொழிவு எல்லாம் அந்தத் தங்கத் தலைவனை தமிழின் எல்லா வார்த்தை மற்றம் கலைகளைக் கொண்டு பாராட்டி, சீராட்டி, தாலாட்டித் தள்ள தலைவர் அடையும் மோன நிலை இருக்கிறதே அதோடு ஒப்பிடத்தகுந்தது இந்த உலகில் ஜெயமோகன் அடையும் படைப்பு மோன நிலை மட்டும்தான்.
ஜெயலலிதா கட்டவுட்டில் தன்னைக் கண்டு புளகாங்கிசத்திற்கு புதுமை படைத்திட்டதைப் போல கருணாநிதி வார்த்தைகளில் தன்னைக் கண்டு புல்லரிப்பிசத்திற்கு இலக்கணம் படைக்கிறார். இந்த இரண்டு இசங்களும் சேர்ந்தால் அது நார்சிசம். தன்னையே மோகமுறுதல். தலைவரின்றி வேறுயாருக்கும் கிட்டாத இந்த மோகம்தான் தள்ளாத வயதிலும் அந்த தங்கத் தலைவனை குடும்பத்திற்காக ஓயாது ஓடி ஓடி உழைக்க வைக்கிறது.
அதிலும் திரைப்பட ரசிகர்கள் விசிலடித்து, தமது மனைவிகளின் தாலியறுத்து பிளாக்கில் வாங்கி ஆராதிக்கும் நட்சத்திரங்களே தலைவனது முன்னால் நாணிக்கோணி வாழ்த்தும் போது அடையும் பரவசம் வார்த்தைகளில் பிடிபடாது. பெண் பெயரில் ஒரு ஆண் சும்மா கலாய்ப்பதற்காக சாருவை கண்டேன், வாசித்தேன், விழுந்தேன் என்று விட்டு விளையாடினால் சாருநிவேதிதாவிற்கு மூன்று நாள் தூக்கம் கெடும் போது கருணாநிதிக்கு அழைத்து வரப்படும் ஐஸ் கட்டிகள் அதுவும் பிரிட்ஜில் வைக்கப்படும் கோடம்பாக்கத்து கட்டிகள் என்றால் என்னவெல்லாம் கெடும்?
விலைவாசி உயர்வா, முல்லைப்பெரியாறு பிரச்சினையா, ரயில் பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிப்பா எல்லாம் பஞ்செனப் பறந்து போகும். கண்ணில் அந்த அலங்கார மனிதர்களைக் கண்டு, கேட்டு, இரவில் படுக்கும் போது அடையும் பிரம்மநிலையை யாரும் கனவில் கூட புரிந்து கொள்ள முடியாது. கட்டாயப் பாராட்டா, வெறுப்புப் பாராட்டா, பயந்து பாராட்டா, ஆளும் கட்சிக்கு ஜே போடும் சீசனல் பாராட்டா, எதுவாக இருந்தால் என்ன? பாராட்டுக்கு உருகும் அந்தப் ‘பச்சைப்பிள்ளை’க்கு எந்த பேதமும் இல்லை.
பாராட்டு தலைவனுக்கு என்றால் அதை வைத்து தலைவனது குடும்பம் பணமாக்குவதற்கு கலைஞர் டி.வி. ஒரே கல்லில் இரண்டு ஸ்டாராபெர்ரி. சூப்பர் ஸ்டார், உலக ஸ்டார், அல்டிமேட் ஸ்டார், இளையத தளபதி ஸ்டார், என எல்லா ஸ்டார்களும், ஸ்டார்ரினிகளும் வந்தால்தான் டி.விக்கு ஸ்பான்சர். ஸ்டார்களை வரவழைக்க என்ன செய்தார்கள்? பையனூர் அருகே 115 ஏக்கர் நிலத்தை சினிமாத் தொழிலாளிகளுக்கு என்று கலைஞர் தனது சட்டைப்பையிலிருந்த சொந்த சொத்திலிருந்து கொஞ்சம் கிள்ளிக் கொடுக்க முடிந்தது மேட்டர். இப்போ ஒரு கல்லில் மூணு ஸ்டாரபெரி. பாராட்டு, பணம், ஏழைப் பங்காளன்.
எல்லாம் கூடிப் பேசி திரைக்கதை எழுதி, செட்போட்டு, ரிகர்சல் பார்த்து மூகூர்த்த நாளும் வந்தது. திட்டமிட்டபடி ஐஸ் நிகழ்வு நல்லபடியாக செல்லும்போது அஜித் மட்டும்,” எங்கள மிரட்டுராங்கையா” என்று வரலாற்றில் இடம்பெற்று விட்ட வார்த்தையைப் பேச, ரஜினி ஆவேசமாய் எழுந்து கைதட்ட விழுந்தது கரும்புள்ளி.
தானைத் தலைவன் அப்செட்டாகி தொழிலாளிகளுக்கு கட்டிக்கொடுப்பதாக இருந்த வீட்டுத் திட்டத்தையும், முதலாளிகளுக்காக கட்டவிருந்த பிரம்மாண்டமான ஸ்டூடியோவைக் குறித்தும் தனது பேச்சில் டெலிட்டோ, எடிட்டோ செய்து விட்டதாக பெப்சி சங்கம் குமுற அப்புறம் ஜாகுவார் தங்கத்தின் பேட்டி, வீடு தாக்கப்படுதல், வி.சிறுத்தை ஆதரிப்பு, ரெட் கார்டு, நடிகர் சங்கம் – பெப்சி மோதல், தயாரப்பாளர் சங்கம் பஞ்சாயத்து எல்லாம் கேள்விப்பட்டிருப்பீர்கள். இப்போதைக்கு அஜித் வருத்தம் தெரிவிக்க வேண்டும், ரஜினிக்கு கண்டனம் என்ற வகையில் முடித்திருப்பதாக சொல்கிறார்கள்.
ஆனால் அஜித்தின் அடுத்த படம் அண்ணன் அழகிரியின் பையனது தயாரிப்பு என்பதால் அல்டிமேட் போங்கடா வெண்ணைகளா என்று போல்டாக இருப்பதாகவும் கூறுகிறார்கள். இதற்கு மேல் அந்தக் கரும்புள்ளியை அழிக்க சூப்பரும், அல்டிமேட்டும் கோபாலபுரத்திற்கு மலையேறி சாமியைக் குளிர்வித்திருக்கிறார்கள். தலைவரும் சூப்பரின் மகள் நிச்சயதார்த்ததிற்கு சென்று வாழ்த்தியிருக்கிறார்.
இத்தோடு இதை உண்மைத் தமிழன் முடித்திருந்தால் நாம் இந்த இடுகையை எழுதியிருக்க வேண்டியதில்லை.
இதற்குமேல் அல்டிமேட்டும், சூப்பரும் மாபெரும் கலகக்காரர்களாக, அவர் காட்டியதையும் அதற்கு கிடைத்த ஆதரவும்தான் நீங்கள் இதை வாசிக்க வேண்டிய தண்டனைக்கு ஆளாகியிருக்கிறீர்கள்.
இந்த உலகிலேயே பெரும் வித்தியாசமான அவலமான தொழிற்சங்கமென்றால் அது பெப்சி சங்கம்தான். பெரும் சினிமா முதலாளிகளின் சுரண்டல் கொடுமைக்கு எதிராக நிமாய் கோஷ் போன்ற மூதாதைகள் கம்பீரமாக ஆரம்பித்த அந்த சங்கம் இன்று அதே முதலாளிகளின் கைப்பாவையாய் பலவீனமாகிவிட்டது. ஒரு ஆட்டோ தொழிற்சங்க கிளைக்கு இருக்கும் குறைந்த பட்ச வர்க்க உணர்வு கூட இங்கு குறைந்து வருகிறது.
நிலையான வேலை, ஒழுங்கான வேலை நேரம் இல்லை. சங்கங்களில் சேர்ந்தால்தான் சினிமா வாய்ப்பு. அதற்கு கட்டணம். நடனம் போன்ற சங்கங்கங்களில் கட்டணமும் அதிகம். சுமார் பத்தாண்டுகளுக்கு முன்பு பெப்சி படைப்பாளிகள் பிரச்சினை வந்த போது இந்த சினிமா தொழிலாளர்களை அணிதிரட்டி பொதுக்கூட்டமெல்லாம் நடத்தினோம். துணை நடிகர்கள், லேட்மேன் போன்ற சாதாரண மக்களின் துன்பமும் அந்த துன்பத்தை உணர்ந்து அணிதிரளவிடாத சினிமா கலாச்சாரமும் அவர்களை என்றும் விடுவிக்கப் போவதில்லை.
வி.சி குகநாதன் இன்று பெப்சியின் தலைவராக இருக்கிறார். இவருக்கும் தொழிலாளிகளுக்கும் என்ன சம்பந்தம் என்பது அந்த முருகனுக்குத்தான் தெரியும். தி.மு.க ஆதரவினால் குகநாதன் ஏதோ கொஞ்சம் ஏக்கர் நிலங்களை கலைஞரின் சட்டைப்பையிலிருந்து தொழிலாளிகளுக்கு தானம் பெற்றார். இது உண்மையிலேயே தொழிலாளிகளுக்கு போகிறதா என்றால் அதிலும் தி.மு.க தொழிலாளிகள், கமிஷன் கொடுக்கும் தொழிலாளிகள் என்று ஏகப்பட்ட வில்லங்கங்கள் உள்ளன. சரி சில தி.மு.க ஆதரவு தொழிலாளிகளுக்கு கூட அந்த இடம் கிடைத்துவிட்டு போகட்டுமே. அடுத்து அம்மா வந்தால் அ.தி.மு.க தொழிலாளிகளுக்கு வாங்கிக்கொடுத்தால் போயிற்று. ஜவகர்லால் விளையாட்டரங்கமும், ஜெயா டி.வியும் ஓடவா போகிறது?
கலைஞரின் தானத்திற்கு நன்றி தெரிவிக்கும் ஐஸ் நிகழ்ச்சிக்கு, ஏதோ நம்ம நடிப்பிற்கு லைட் பிடித்து, டூப்பாக உயிரைக் கொடுத்து நடித்து பாடுபடும் தொழிலாளிகளை மனதில் நினைத்தாவது தலையைக் காட்டிவிட்டு, கொஞ்சம் வார்த்தைகளை பாராட்டாக கொட்டி விட்டு வந்திருக்கலாம். தொப்புளில் ஆம்லெட் போடுவது, டூயட்டிற்காக உலக அதிசயங்களை கேவலப்படுத்துவது, சண்டைக்காக காய்கனி வண்டிகளை உடைப்பது போன்ற லூசுத்தனங்களை ஒப்பிடும்போது இது ஒன்றும் அவ்வளவு இழிவானவையல்ல.
ஏற்கனவே ஈழத்திற்காக தமிழ் சினிமா நடிகர்கள் நடத்திய ஆறு மணி நேர உண்ணாவிரதத்தில் ஈழமும் ஈழத்தமிழ் மக்களும் என்னபாடு பட்டார்கள் என்பதை வினவில் எழுதியிருக்கிறோம். அந்த உலக மகா ஃபிராடு நிகழ்ச்சியைக் கூட நம்ம அல்டிமேட்டால் தாங்கமுடியவில்லை. மேடைக்கு போனவர் “சினிமா இன்டஸ்ட்ரியை சினிமா இன்டஸ்ட்ரியாக இருக்க விடுங்கள்” என்று முழங்கிவிட்டுத்தான் சென்றார். அய்யா அல்டிமேட் கூறியபடிதான் அந்த சினிமா மேக்கப் நிகழ்ச்சி படு செட்டப்பாக சீனைப் போட்டிருந்தது. சினிமா ஈழத்திற்காகப் போராடுகிறது என்று அகமதாபாத் ஐ.ஐ.எம்மில் படித்த முட்டாள் கூட நம்ப மாட்டானே? இது எல்லாருக்கும் தெரிந்ததுதானே?
அல்டிமேட் கூறுவிரும்புவது என்னவென்றால் நைட் ஒரு ஃபுல்லை போட்டுவிட்டு காலையில் லேட்டாக எழுந்து அல்லக்கைகளோடு ஷூட்டிங்கிற்கு போய் கையையும், காலையையும் சோம்பல் முறிப்பது போல நடித்துவிட்டு அதில் களைத்துப் போய் சொகுசு கேரவானில் ஓய்வு எடுத்துக் கொண்டு இப்படி ஒரு முப்பதோ, அறுபதோ நாட்களைக் கழித்தால் ஐயாவுக்கு ஊதியமாய் ஐந்தோ இல்லை பத்தோ கோடிகள் வரும். அந்தக் கோடியும் சினிமா ஓப்பனிங்கில் ஏலமிடப்பட்ட காட்சிகள் மூலம் ரசிகர்கள் அடகுவைத்து அழும் ரத்தப்பணம்தான். இதுதான் சினிமா இன்டஸ்ட்ரி இருக்க விரும்பும் இலட்சணம்.
“ஒரு லைட்மேன் வாங்கும் 250 அல்லது 350 ரூபாய் சம்பளத்தை நடிகனான எனக்கும் கொடுங்கள், இயக்குநருக்கும் கொடுங்கள், நாமெல்லாம் ஒரு இன்டஸ்டரியாக இருப்போம்” என்று சொன்னால் கூட ஒரு அர்த்தம் இருக்கிறது. இவரு கோடி கோடியாக வாங்குவாராம். அந்த கோல்மால்களையெல்லாம் கண்டுகொள்ளாமல் அவர் மேல் ஒரு தூசிகூட விழக்கூடாதாம். இதுதான் அல்டிமெட்டின் தன்மானக் கர்ஜனையின் பின்னணி.
நட்சத்திரப் பதவி, அதை முதலாளிகள் உருவாக்கும் விதம், இரசிகர்கள் கொடுக்கும் அங்கீகாரம், ஊடகங்களில் பில்டப்புக்கள் எல்லாம் இருந்தால்தான் கோடி சம்பளமும், சொர்க்க வாழ்வும் கிடைக்கும். அப்படிக் கிடைப்பதால் ஆளும் கட்சிக்கு ஜால்ரா போடுவதும் செய்யவேண்டும். எல்லா ஊழலும் ஒன்றோடு ஒன்று கலந்ததுதான். இதில் நான்மட்டும் யோக்கியம் என்று காட்டுவது அம்மணாண்டிகளின் ஊரில் கோவணம் கட்டியவனின் கதைதான்.
ஒப்பனிங் காட்சிகள் ஏலம் கிடையாது, பிளாக் டிக்கெட் கிடையாது, திரையரங்கின் வழக்கமான கட்டணம்தான் என்று நேர்மையாக இருந்திருந்தால் சூப்பர் ஸ்டார் எப்படி மில்லியனராக மிளிர்ந்திருக்க முடியும்? இந்தப் பகல் கொள்ளைக்கு முதலாளிகள், அரசு, அதிகாரிகள், போலீசு, பத்திரிகைகள் எல்லாருடைய ஆதரவை வைத்துத்தானே ஜமாய்க்கிறீர்கள்? அது உண்மையெனில் நீங்கள் கருணாநிதி காலில் விழுந்து நாக்கால் நக்கினால் கூட தப்பில்லையே முண்டங்களா?
ஆபாசத்தையும், அண்டப் புளுகையும் வைத்து இரசிகனை உணர்ச்சியால் திறமையாக சுரண்டுவதினால்தானே நீங்கள் நட்சத்திரங்கள்? பதிலுக்கு அந்த இரசிகர்கள் ‘அண்ணன் வருங்கால முதலமைச்சரானால் நாமளும் பொறுக்கித் தின்னலாமே’ என்றுதானே உங்களுக்கு தோரணம் கட்டுகிறார்கள்? நடிகன் – இரசிகன் உறவே இப்படி ஊழல்மயமாக இருக்கும் போது வெள்ளித்திரையில் போடும் டூபாக்கூர் ஹீரோ வேடத்தை வெளியில் காட்டுவதை சகிக்க முடியவில்லை.
அஜித் உண்ணாவிரத்த்திற்கு வரவில்லை என்ற செய்தியினால் ஏகன் படத்திற்கு ஈழத்தமிழர்கள் எதிர்ப்பு தெரிவித்த போது அல்டிமேட் என்ன செய்திருக்கவேண்டும்? வெளிநாடு ரைட்ஸை என்ன ரேட்டுக்கு விற்றீர்களோ அதன் நட்டத்தை நான் தருகிறேன் என்று அப்போதே தன்மானஸ்தனாக காட்டியிருக்கலாமே? அதே போல குசேலன் படம் பெங்களூருவில் வெளியிட எதிர்ப்பு வந்த போது ரஜினியும் தயாரிப்பாளரிடம் கர்நாடகா ரைட்சுக்குரிய பணத்தை திருப்பியிருக்கலாமே? ஆனால் இரண்டு ஸ்டார்களும் என்ன செய்தார்கள்?
அஜித் கருப்பு சட்டையைப் போட்டுவிட்டு உண்ணாவிரத்த்தில் போஸ் கொடுத்தார். ரஜினி ஒகேனக்கல் பிரச்சினைக்காக கர்நாடக மக்களிடம் மன்னிப்பு கேட்டார். ஏன்? தனது ஊதியம், வர்த்தகத்திற்கு பிரச்சினை என்றால் இவர்கள் அவுத்துப்போட்டு ஆடவும் செய்வார்கள். விட்டால் ஊர் ஊராக ஓடவும் செய்வார்கள்.
இத்தகைய மோசடிப் பேர்வழிகளைப் போய் தன்மானத்திற்காக குரல் கொடுத்த சிங்கங்கள் என்று புகழ்ந்தால் சுண்டெலிகள் கூட தற்கொலை செய்து கொள்ளும். எனில் ரஜனி மற்றும் அஜித்தின் தன்மான பின்னணியில் இருப்பது என்ன? பச்சையான சுயநலம். தனது நட்சத்திர அந்தஸ்தை மட்டும் தக்க வைத்துக் கொள்ளும் திமிர். பொது நலன், அரசியல் போன்ற விசயங்களில் எங்களை இழுக்காதீர்கள் என்று ஒதுங்கிக் கொள்ளும் தந்திரம். இவர்களைப் போல சுயநலவெறியர்களாக இருந்திருந்தால் சார்லி சாப்ளின் என்ற அந்த மகத்தான கலைஞனின் இறுதி வாழ்க்கை பிரச்சினையில்லாமல் இருந்திருக்கும். ஆனால் மக்களுக்காகவும் நீதிக்காகவும் அந்தக் கலைஞன் தனது நட்சத்திர தகுதியை கைவிட்டான்.
இந்த விடயத்தை பலரும் கலைஞருக்கு ஜால்ரா போட மறுத்த விசயமாக மட்டும் பார்ப்பதில் பலனில்லை. கருணாநிதியை எதிர்ப்பது வேறு. அதற்காக இரண்டு அல்பைகளை தூக்கி வைத்துக் கொண்டாடுவது வேறு. ரஜினியை வைத்து முதலாளிகள் சம்பாதித்தது போல அந்த முதலாளிகளை வைத்து ரஜினியும் சம்பாதிக்கிறார். அதற்கு மாஸ் நடிகன் என்ற பம்மாத்து தேவைப்படுகிறது. ஆனால் ரஜினியின் மாஸ் பேஸ் என்ன என்பதை அவரது புகழ்பெற்ற பாபா படம் வரும்போது ரஜினி தலைமை ரசிகர் மன்றம் இருக்கும் திருச்சியிலேயே நேருக்கு நேர் சந்தித்து விரட்டியிருக்கிறோம்.
தமிழ்சினிமா உருவாக்கியிருக்கும் இரசனைதான் தமிழ்மக்களின் எல்லாப் பார்வைகளிலும் ஊடுருவியிருக்கிறது. அரசியல், சமூகப் பிரச்சினைகளின் பால் உள்ள அக்கறையற்ற நிலைக்கும் கூட இதுவே அடிப்படைக் காரணம். இந்த பலவீனத்தை வைத்தே தமிழ் சினிமாவின் பிரபலத்தை எல்லா அரசியல் கட்சிகளும் பயன்படுத்திக் கொள்ள முனைகின்றனர். இன்று கட்சிக் கூட்டங்கள் கூட குத்தாட்ட நடன கேளிக்கைகளாக மாறிவருகின்றன. இப்படி சினிமா என்பது நம்மை மேலும் மேலும் சமூகத்திடமிருந்து அன்னியப்படுத்துகிறது.
விலைவாசி உயர்வு, முல்லைப் பெரியாறு, பழங்குடி மக்களின் துயரம், வன்னி முகாம் அவலம் என்ற கண்ணை அறுக்கும் யதார்த்தத்தில் அஜித்தின் தன்மானப் பிரச்சினைதான் நமது பேசுபொருளாக என்றால், நம்மை அந்த பழனி பிக்கினி முருகனால் கூட காப்பாற்ற முடியாது.