அய்யப்பனுக்குப் பெண் வாடையே ஆகாதாம்!


அடக்கி ஆள்வதற்கும், அடிமைப்படுத்துவதற்குமே உருவாக்கப்பட்ட கடவுள் எனும் சர்வாதிகாரக் கோட்பாட்டை, மனித சமூகம் தங்களுக்கான நெறியாகக் கொண்டாடத் தொடங்கியதிலிருந்துதான் – வெளிப்படையாக அரங்கேறின பல்வேறு அசிங்கங்கள். கடவுளும், கடவுளின் பெயரால் உருவாக்கப்பட்ட மதம் இரண்டு நிரந்தர இழுக்குகளை இந்தச் சமூகத்தின் மீது சுமத்தின. அழிக்க அழிக்க, வீறு கொண்டு எழுந்து நின்று அச்சுறுத்தும் அவை, ஜாதியும் பெண்ணடிமைத்தனம். சமூகத்தின் ஒரு பிரிவு மக்களைத் தீண்டத்தகாதவர்களாக ஒதுக்கி வைத்ததைப் போலவே அது ஒட்டுமொத்த பெண் சமூகத்தையே தீண்டாமைக்கும், வன்முறைக்கும் இரையாக்கியது. மதம், மனிதர்களுக்கான நெறியாக உருவாக்கப்படவில்லை. அது, மனிதர்களைக் கூறு போடவே பயன்படுகிறது. எளியோரை, வலியோர் சூறையாட மதம் அனுமதியளிக்கிறது.

பெண் உடலின் இயற்கையான வளர்ச்சியையும் மாற்றங்களையும், இந்து மதம் ‘தீட்டு’ என்கிறது. பெண்ணை பலவீன மானவளாகவும் பேதையாகவும் சித்தரிப்பதோடு, கடவுளின் அருகில் செல்லத் தகுதியற்றவளாக்குகிறது. ஆணை ஆளப் பிறந்தவனாகவும், பெண்ணை அடங்கிப்போக வேண்டியவளாகவும் நிர்பந்திக்கிறது. ஆண் தலைமையிலான குடும்ப அமைப்பை வலியுறுத்தி, கணவனைத் துதிக்கச் சொல்கிறது. தாலியை வேலியாக்கி, தனக்கெதிரான வன்முறைகளை எதிர்த்து வெளியேறும் / ஆண் சார்ந்து வாழ்வதைப் புறக்கணிக்கும் பெண்களை அது ‘வேசி’ என்கிறது. பார்ப்பன இந்து மதம், அதன் சட்டதிட்டமான மநு தர்மமே இன்றைய சமூகத்தின் அத்தனை பெண்ணடிமைத் தனங்களுக்கும் ஆணி வேர். அதை உணர்ந்தோமா நாம்? பகுத்தாய்ந்தோமா? அந்த ஆணிவேரைப் பிடுங்கி எறிவதற்குப் பதிலாக, அதற்கு நாள்தோறும் நீர் வார்த்தல்லவா செழிக்க வைத்திருக்கிறோம்!

ஆண்களை விடவும் பெண்கள், பக்தியிலும் கடவுள் நம்பிக்கையிலும் தீவிரமாக இருப்பதன் காரணம் என்ன? பெண் அப்படிப் பழக்கப்படுத்தப்படுகிறாள். உண்பதையும் உறங்குவதையும் போல, தொழுதல் அவளின் அன்றாடக் கடமையாக்கப்படுகிறது. பெண்களின் அணிகலன்களாகக் கருதப்படும் அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு இவற்றை மறுதலிக்கத் துணிகிறவர்கள், களங்கற்றவர்களாகிறார்கள். அதனாலேயே பெண் சிறு வயது முதலே அடக்கமானவளாகவும், கடவுளை வணங்குகின்றவளாகவும், அதன் மூலம் ‘ஆண்மை’க்கு அடங்கிப் போகின்றவளாகவும் வளர்க்கப்படுகிறாள். இந்த அடிமைத்தனக் கட்டமைப்பின் சிறு கல் ஆட்டம் கண்டாலும் சமூகமே கொதித்தெழுகிறது; ஆண்களோடு சேர்ந்து கொண்டு பெண்களும் அதற்கு ஆமோதிக்கின்ற நிலையே நிலவி வருகிறது. இதற்கெல்லாம் முக்கிய காரணம், எது அடிமைத்தனம் என்ற தெளிவு பெண்களிடம் இல்லாததுதான்.

கேரள மாநிலம் சபரிமலை அய்யப்பன் கோயிலுக்கு ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான (ஆண்) பக்த கோடிகள் ‘பாதயாத்திரை’ செல்கின்றனர். இங்கு பெண்களுக்கு அனுமதியில்லை. அதாவது பருவமடையாத பெண்களும், மாதவிலக்கு நின்ற முதியவர்களும் செல்லலாமாம். அதற்கான வயது வரம்பையும் கோயில் நிர்வாகமே நிர்ணயித்துள்ளது. சபரிமலை கோயிலுக்கு ஆண்டுதோறும் தமிழகத்தில் இருந்தும், குறிப்பாக கிராமங்களிலிருந்தும் ஏராளமானோர் செல்கின்றனர். அது வரையிலும் ஊரில் ரவுடியாகவும் பொறுக்கியாகவும் திரிந்த ஆண்கூட, திடீரென மாலை போட்டு ‘சாமி’யானவுடன் அவனுக்கு கிடைக்கும் மரியாதையைப் பார்க்க வேண்டுமே!

முருகனுக்கும், அய்யப்பனுக்கும் மாலை போடும் கார்த்திகையும் மார்கழியும், பெண்களுக்கு சபிக்கப்பட்ட மாதங்கள். ஏற்கனவே இருக்கும் குடும்பப் பொறுப்புகள் மற்றும் வேலைப்பளுவோடு, இந்த ‘சாமி’களுக்காக இன்னும் சீக்கிரம் எழுந்து பணிவிடைகளைத் தொடங்க வேண்டும். இதிலெல்லாம் நம்பிக்கை இல்லையென்றோ, விருப்பமில்லையென்றோ எந்தப் பெண்ணும் சொல்லிவிட முடியாது. ஆண் நிலை அப்படியில்லை. தனக்கான கடவுளை வணங்கும் உரிமை, மாற்றிக்கொள்ளும் உரிமை, மறுதலிக்கும் உரிமை அவர்களுக்கு உண்டு. அதே நேரத்தில் ஆண் சார்ந்த வழிபாடுகளைச் செய்ய மட்டுமே பெண்கள் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

அய்யப்பனுக்குப் பெண் வாடையே ஆகாதாம்! அதனால் பெண்களுக்கு அனுமதியில்லையாம். ஆனால், இவை எதைப் பற்றியும் கவலைப்படாமல் கன்னட நடிகை ஜெயமாலா, பதினெட்டு ஆண்டுகளுக்கு முன்பு அதாவது அவருடைய இளம் வயதில், அய்யப்பன் கோயிலுக்குள் சென்றது மட்டுமின்றி, பாதங்களையும் தொட்டு வணங்கியதாகப் பேட்டியளிக்கத் தொடங்கிய குழப்பம் மாதக்கணக்கில் நீடிக்கிறது. ‘பெண்களைத் தன் கோயிலுக்குள் வரவிடாதது பற்றி அய்யப்பன் எதிர்ப்பு காட்டவில்லையே. இதிலிருந்தே தெயவில்லையா பெண் வாடை ஆகாதென்று!’ என வாதிடுவோர் உண்டு. பதினெட்டு ஆண்டுகளுக்கு முன் அய்யப்பனைத் தொட்டு வணங்கியதாக ஜெயமாலா இன்று சொன்னதைத் தொடர்ந்து, இன்னும் சில நடிகைகள் தாங்களும் சென்றதாக ஒப்புக் கொண்டிருக்கிறார்கள். இதற்கும் அய்யப்பன் எதிர்ப்புக் காட்டவில்லையே! பதினெட்டு ஆண்டுகளாக செல்வச் செழிப்போடு மகிழ்ச்சியாகத் தானே வாழ்கிறார் ஜெயமாலா! தெய்வக்குத்தம் என்றால், ரத்தம் கக்கி செத்துப்போயிருக்க வேண்டுமே?!

அய்யப்பனை விட்டுவிடுவோம். ஆண்களுக்கு என்ன பிரச்சனை என்றால், தங்களின் சர்வாதிகார வட்டத்துக்குள் ஒரு பெண் நுழைந்தால் எல்லாம் கண்காணிக்கப்படும், கேள்விக்குள்ளாக்கப்படும் என்ற பதட்டம்! அதனால்தான் ஒரு பெண், அய்யப்பன் சந்நிதானத்துக்குள் நுழைந்தாள் என்ற உண்மையை ஏற்க மறுக்கின்றனர்! சட்டம், தீண்டாமையை குற்றம் என்கிறது. ஆணுக்கும் பெண்ணுக்கும் சம உரிமை என்கிறது. ஆனால், யார் கண்டு கொண்டார்கள்?

சமூகத்தின் எல்லா விதிகளும் ஆணுக்காகவே உருவாக்கப்படுவதும், ஆண் தன் வசதிக்கேற்ப மாற்றிக் கொள்வதுமே கண்கூடு. அய்யப்பன் கோயிலின் தந்தி, வழிபாட்டுக்கு முன் பம்பை ஆற்றில் நீராட வேண்டும் என்பது விதி. கன்டரரு மோகனரு தந்தி ஷவரில் குளிப்பது வழக்கம். கேட்டால், பம்பை ஆற்று நீர்தானே ஷவரில் வருகிறது என்கிறார். நியாயம்தான் என அய்யப்பன் மன்னித்துவிடக்கூடும். அதே தந்தி, பாலியல் தொழிலாளியிடம் போனதையுமா பெண் வாடையே பிடிக்காத அய்யப்பன் மன்னிப்பது?!

இங்கு சங்கராச்சாரிக்கு இருக்கும் பெண்கள் தொடர்பைப் போலவே, தந்தி மோகனருக்கும் இருப்பதாக நாளொரு தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. சாமியார்களின் அய்யோக்கியத்தனங்கள் வெறும் கிளுகிளுப்பான செய்திகளாக மட்டுமே இங்கு சித்தரிக்கப்படுகின்றன. மாறாக, அதனால் பெருகும் சமூகச் சீர்கேட்டை யாரும் உணர்ந்தபாடில்லை. கொலையும் செய்து, கோடி கோடியாக கொள்ளையும் அடித்து, பெண்களுடனும் கூத்தடித்ததாக சங்கராச்சாரி கையும் களவுமாகப் பிடிபட்டபோதும் சுதந்திரமாக வெளியில் உலவ முடிகிறது. அதற்கு இந்த மதவாத சமூகம் அனுமதிக்கிறது. கடவுள், மதம், சாதியை நம்பும் இளிச்சவாய் மக்கள் கூட்டம் இருக்கும் தைரியத்தில் தான் கொஞ்சம் கூட வெட்கமே இல்லாமல் குற்றவாளி சங்கராச்சாரியால் தனது 75 ஆவது பிறந்த நாளுக்காக கும்பாபிஷேகத்தை நடத்திக் கொள்ள முடிகிறது.

ஒரு காலத்தில் கோயில் நுழைவுப் போராட்டங்கள் தீவிரமாக நடைபெற்றன. மனிதர்களுள் ஏற்றத் தாழ்வுகளை ஏற்படுத்தி, மூடநம்பிக்கைகள் பரவக் காரணமாயிருந்த கோயில் சிலைகளை பெரியார் செருப்பால் அடித்தார். உரிமைகளை வென்றெடுக்கும் முயற்சியாகவே அவை நடந்தேறின. ஜெயமாலா செய்தது அந்த மாதியான ஒரு போராட்டமா என்றால்,அதுதான் இல்லை. மூட நம்பிக்கையின் உச்சபட்சமே அவரை அய்யப்பன் கோயிலுக்குள் நுழைய வைத்தது. பிரச்சன்னம் பார்த்து அய்யப்பன் கோபமாக இருப்பதாக உன்னிக்கிருஷ்ணன் சொன்னவுடன், தன் குடும்ப நலனுக்காகப் பகார பூசை செய்யும் மழுங்கிப் போன மதவாதிதான் அவரும்.

ஆக, பிரச்சனை இதுதான். ஆண்கள் கண்டுபிடித்த கடவுளும், கடவுளின் பெயரால் உருவான மதம், மதம் வலியுறுத்தும் சாதியும் பாலினப் பாகுபாடுகளும், பாகுபாடுகளைத் தூக்கிப் பிடிக்கும் ஆண்களும், ஆண்கள் தலைமையிலான குடும்ப அமைப்புமே பெண்களுக்கெதிரான எல்லாத் துன்பங்களுக்கும் காரணம். பெண் விடுதலைக்காகப் போராடும் யாரும் இதைத் துல்லியமாகக் கணிக்கவில்லை. பெரியார் மட்டுமே அதைத் துணிச்சலாக செய்தார். இன்றைய பெண்ணியவாதிகள் யாருக்கும் அத்தகையதொரு தெளிவு இருப்பதாகச் சொல்வதற்கில்லை. பிரச்சினையின் ஊற்றுக்கண்ணை அவர்கள் தப்பவிட்டு, அதன் வெளிப்பாடுகள் மீதுதான் பெண்ணியவாதிகள் பெரும்பாலும் தாக்குதல் நிகழ்த்துகிறார்கள். வரதட்சணையை எதிர்க்கிறார்கள், இடஒதுக்கீடு கேட்கிறார்கள், குடும்ப வன்முறையை எதிர்க்கிறார்கள். எல்லாம் சரி. ஆனால், அடிமைத்தனத்தை அடியோடு அழிக்கும் அந்த ஆயுதத்தை யாரும் கையிலெடுத்த பாடில்லை. அது, பகுத்தறிவைப் பரப்புவது.

கடவுள் நம்பிக்கை என்பது, அவரவர் தனிப்பட்ட விருப்பமாகவே பார்க்கப்படுகிறது. அது மிகப் பெரிய சமூக அவலம் என்பதைச் சொல்ல இன்றைக்கு ஆளில்லை. வரதட்சணைக்கு எதிராக எத்தனை காலமாகப் போராடுகிறோம்! அது ஒழிந்ததா? பாலியல் வன்முறைக்கு எதிரான கடுமையான சட்டங்கள் இருக்கின்றன. ஆனாலும் இந்தியாவில் அரை மணி நேரத்துக்கு ஒரு பெண், பாலியல் வன்முறைக்கு ஆளாகிறாள். ஏன்? பெண் உரிமைக்கு குரல் கொடுப்பவர்களும், சட்டம் பிரச்சனையை மேலோட்டமாக அணுகுவதே காரணம். இந்து மதம் அழிந்தால்தான் சாதியும் அழியும் என்பது எவ்வளவு உண்மையோ, அது போலதான் பெண்ணடிமைத்தனம். சாமியிடம் போய் சாதி அழிய வேண்டுவது முட்டாள்தனம். பெண்ணடிமைத்தனம் அப்படியே!

படிப்பறிவு வேறு, பகுத்தறிவு வேறு. நம் கல்வி அமைப்பு, சமூக அறிவையும் பகுத்தறிவையும் அளிப்பதில்லை. அதனாலேயே பெரிய படிப்பு படித்து உயர் பதவியிலிருக்கும் பெண்களாகட்டும், நவ நாகரிக மங்கைகளாகட்டும், அவர்களால் குடும்ப வன்முறையை எதிர்க்க முடிவதில்லை. மாவட்ட ஆட்சித் தலைவரான அமுதா, தீ மிதிக்கும்போது, கல்வியறிவற்ற பெண்கள் என்ன செய்வார்கள்? இப்போதைக்கு நாம் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான். உரிமைகளுக்கான முழக்கங்களோடு, வன்முறைகளுக்கான எதிர்ப்புகளோடு உடலை, உணர்வை கொண்டாடும் வீரிய படைப்பிலக்கியங்களோடு, கடவுள் – மதம் – ஜாதி அழிந்தொழிய பாடுபடும்போதுதான் பெண்ணியம் வலிமைமிக்கதாகும். இல்லையெனில், இப்படித்தான் வரதட்சணை பெருகும்; இடஒதுக்கீடு கானல் நீராகவே இருக்கும்; குடும்ப வன்முறைக்கும் பாலியல் வன்முறைக்கும் பலியாவது அதிகரிக்கும்; பெண்ணை வெறும் உடலாகப் பார்க்கும் பார்வை மாறவே மாறாது… பெண்ணிய அமைப்புகள் தங்களுக்கானத் திட்டங்களை வகுக்கும்போது, பகுத்தறிவுப் பரவலை தன்மைப்படுத்த வேண்டியது அவசியம்.

பகுத்தறிவை எட்டிய பெண், பலவீனமானவளாக இருக்க மாட்டாள். கடவுளைப் புறக்கணிக்கும் பெண், அடிமைத்தனங்களைப் புறக்கணிப்பவளாகிறாள். தன்னை வெறும் உடலாகப் பாவிப்பதை எதிர்ப்பாள். தனக்கெதிரான அநீதிகளைத் துணிச்சலாக சந்திப்பாள். சமத்துவத்தைக் கொண்டாடுவாள். பெண் விடுதலை வேண்டுமெனில், ஒவ்வொரு பெண்ணும் தங்கள் மீது சுமத்தப்பட்ட கடவுளை மறுத்து, மதங்களைத் துறந்து, சாதியைப் புறக்கணித்துப் பகுத்தறிவாளராக வேண்டும். அந்த அறிவும் தெளிவும் யாரையும் யாருக்கும் அடிமையாக வாழவும் அனுமதிக்காது, அடிமைப்படுத்தவும் துணியாது.

இந்தியாவில் பிறந்ததற்காக வெட்கப்படுகிறேன்


தன் எல்லா இழிவுகளையும் திணிப்பதற்கென்றே ஒடுக்கப்பட்ட சமூகத்தை உருவாக்கி வைத்திருக்கிறது இந்த நாடு. பரந்து விரிந்த இந்நாட்டின் கட்டற்ற வளங்களையும், சுகங்களையும் மட்டுமல்ல; ஜனநாயகத்தை நிலைநிறுத்த, ஒடுக்கப்பட்டோருக்கென நடைமுறையில் உள்ள சட்டங்களையும், நலத் திட்டங்களையும்கூட ஆண்டு அனுபவித்து வருகிறது ஆதிக்க வர்க்கம். சாதிய ஒடுக்குமுறை என்னும் கொடுமையால், இந்தியாவில் ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்து உன்னதக் கலைஞர்கள் உருவாகாமலேயே தொலைந்திருக்கின்றனர். உருவானோரும் எங்கும் நிறைந்திருக்கும் சாதியின் கூரிய ஆயுதங்களால் உருக்குலைந்து போயிருக்கின்றனர்.

தீண்டத்தகாதோரை திறமையானவர்களாக ஏற்க மறுக்கும் இந்நாட்டின் சாதியச் சூழலில், வறுமையும் ஒடுக்குமுறையும் மாறி மாறி அழுத்த, அடிமையாகப் பிறந்த ஒவ்வொரு கலைஞனும் அறிவாலும், திறமையாலும் தனிப்பட்ட தன் போர்க்குணத்தாலும்தான் முன்னேறியிருக்கிறார்கள். துச்சமான பார்வைகளையும், கேவலமான நய்யாண்டிகளையும், புறக்கணிப்புகளையும் மீறி தன் அடையாளங்களைப் பதிய வைக்க போராடுவோரை – ஆதிக்கவாதிகளுக்கான இந்த ஜனநாயக நாடு கருணையின்றி கைவிட்டிருக்கிறது.

இந்நாட்டில் பிறந்ததற்காகவும், இச்சமூகத்தில் வாழ நேர்ந்ததற்காகவும் – ஒவ்வொரு ஒடுக்கப்பட்ட உள்ளமும் வெட்கத்திலும், வேதனையிலும் கொந்தளித்துக் கிடக்கிறது என்பதே உண்மை. கண்ணுக் கெட்டிய உயரங்களையும், கைகளுக்கெட்டிய வெற்றிகளையும் தலித்துகள் தொட்டுவிடாதபடி தடுத்துக் கொண்டே இருக்கிறது ஆதிக்க வர்க்கம். ஒன்றல்ல இரண்டல்ல… சாதிய சவுக்கால் அடித்து வீழ்த்தப்பட்டோர் ஆயிரமாயிரம். தடகள வீராங்கனை சாந்தியும் அதில் ஒருவர்.

வாழ்வின் அடிப்படைத் தேவையான அமைதியை முற்றிலுமாக இழந்துவிட்ட ஓர் உயிர். நான்காண்டுகளுக்கு முன்னர் அந்த பரபரப்பு எழுந்தபோதே சாந்தியை சந்தித்து, மனம்விட்டு உரையாட வேண்டும் என்ற உந்துதல் உண்டானது. ஆனால், அப்போது அவருக்கிருந்த நெருக்கடியில், யாராக இருந்தாலும் தனிமையைத்தான் விரும்பியிருப்பர். ஏற்கனவே ஊடகங்கள் துரத்திக் கொண்டிருந்த நிலையில், வெளிச்சத்தில் முகம் காட்டவே அவர் அச்சப்பட்டு முடங்கியிருந்தார் என்பதுதான் உண்மை. ஆசிய விளையாட்டுப் போட்டியில் எழுந்த சர்ச்சையின்போது, சந்திக்க வேண்டும் என்ற கோரிக்கையும், பேட்டி என்ற பெயரில் கேட்க வேண்டிய கேள்விகளும், அதற்கு சாந்தி கொடுத்தாக வேண்டிய விளக்கங்களும்கூட அவருக்கு மிகப் பெரிய துன்புறுத்தலாகவே அமையும் என்பதால், அம்முயற்சியைக் கைவிட்டு – “சாந்தியைக் கொண்டாடுவோம்’ என்ற கட்டுரையை மட்டும் “தலித் முரசு’ இதழில் பதிவு செய்தேன். அப்போதிருந்து பல நூறு முறை சாந்தியை சந்திக்க வேண்டுமென தோன்றியிருக்கிறது. அதற்கு சிறப்பான காரணங்கள் இருந்தன!

மதங்களும் சாதியும் வாழ்வியல் நெறியாகவும், பண்பாட்டுக் குறியீடாகவும் ஆக்கப்பட்டிருப்பதைப் போலவே, பாலின மாறுபாடுகளும், விருப்பங்களும்கூட, வறட்டுத்தனமான பண்பாட்டு வட்டத்திற்குள் வளைக்கப்பட்டிருக்கின்றன. பகுத்தறிந்து பார்த்தால் மட்டுமே இவற்றுள் இருக்கும் பிறழ்வுகளையும் சிக்கல்களையும் ஒருவரால் புரிந்த கொள்ள இயலும். மதத்தையும், அது உருவாக்கிய சாதிப்படி நிலையையும் புரிந்து கொள்ள முடிந்தவர்களால்கூட, மனிதரின் பாலியல் மாறுபாடுகளை அறிய முடிவதில்லை. அறிவார்ந்த சமூகத்திடம்கூட பாலினப் புரிதலில் நிலையானதோர் ஊனம் இருக்கிறது. ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பெருமைக்குரிய பதக்கங்களை வென்றும், பாலியல் சோதனையில் தோல்வியடைந்ததாக இழிவுபடுத்தவும்பட்ட சாந்தி, வறுமையும் ஒடுக்குமுறையும் நிறைந்த தலித் சமூகத்தில் பிறந்ததும் – அவருடைய வாழ்வைப் பதிவு செய்ய வேண்டியதன் அவசியத்தை அதிகப் படுத்துகிறது. பெரும் முயற்சிகளுக்குப் பிறகு அண்மையில் சாந்தியை சந்திக்கும் சூழல் அமைந்தது.

புதுக்கோட்டை மாவட்டம் கத்தக்குறிச்சியில் சவுந்தரராஜன் – மணிமேகலை தம்பதியினரின் மூத்த மகளாகப் பிறந்தவர் சாந்தி. குறுகிய ஓட்டு வீட்டில் வசித்து, கூலி வேலைக்குச் செல்லும் பெற்றோர், ஆண் குழந்தை ஆர்வத்தில் அடுத்தடுத்து மூன்று மகள்களையும், அய்ந்தாவதாக ஒரு மகனையும் பெற்றனர். ஒரு வேளை பசியாற்றிய பழைய சோற்றை பங்கிட்டுக் கொள்வதில் எந்த சிரமமும் இருக்கவில்லை. கொஞ்சம் சோறும் நிறைய தண்ணீரும் கலந்து நீராகாரம்தான் சாந்தி அறிந்த ஒரே உணவு வகை! கத்தக்குறிச்சியின் தலித் குடியிருப்புகளில் வாழ்ந்த எல்லோருமே ஒருவேளை உணவிற்கு அல்லல்பட்டவர்கள்தான். அதுவும் கிடைக்காத நாட்களில், பகல் முழுவதும் பட்டினி கிடந்து விட்டு இரவு வேளையில், உயர்த்தப்பட்டோர் வசிக்கும் பகுதிக்குச் சென்று, வீட்டிற்கு வெளியே நின்று இறைஞ்சி கேட்டு உணவு வாங்கி வருவது வழக்கம். மிக நிச்சயமாக, அதுவும் பழைய சோறாகத்தான் இருக்கும்.

சாந்தி : “பசி வாட்டுறப்போ எப்படியாவது ஒருவாய் சோறு கிடைக்காதாங்கற ஏக்கம்தான் நிறைஞ்சிருக்கும். அது எங்கயிருந்து வருதுனெல்லாம் ஆராயத் தோணாது. எங்களுக்கு விவரம் தெரியல. ஆனா, வீடு வீடா போய் சோறு வாங்குவது, அப்பா அம்மாவுக்கு அவமானமா இருந்திருக்கலாம். வேலை செஞ்சுட்டு கூலி வாங்குற மாதிரிதான் இதுவும் ரொம்பா இயல்பான விஷயமா எங்களுக்கு இருந்துச்சு. நல்ல சோறு கிடைக்குமாங்கற எதிர்பார்ப்பு, எஸ்.சி. குழந்தைகளோட அதிகபட்ச கனவுன்னு சொல்லலாம்.’

சத்துக் குறைபாட்டினால் எலும்பும் தோலுமாகவே எல்லா குழந்தைகளும் வளர்ந்தன. உடுத்த உடையும் குடிக்க கஞ்சியும் இல்லாத நிலையிலும் பிள்ளைகளைப் படிக்க வைப்பதில் உறுதியாக இருந்தனர் – சவுந்தரராஜனும் மணிமேகலையும். கத்தக்குறிச்சியிலிருந்து அய்ந்து கிலோ மீட்டர் தொலைவிலிருந்த ராமசாமி தெய்வானையம்மாள் மேல்நிலைப் பள்ளியில் சாந்தியும் சகோதரர்களும் படித்தனர். அய்ந்து கிலோ மீட்டரையும் நடந்தே கடக்க வேண்டியிருந்தது. இலங்கையில் வாழ்ந்தவரான சாந்தியின் தாத்தா முத்தையாவிற்கு, விளையாட்டில் குறிப்பாக ஓட்டத்தில் ஆர்வமிருந்தது. சாந்தியின் திறமையை முதலில் கண்டறிந்ததும் உறுதியாக நம்பிக்கையூட்டியதும் அவர்தான். ஏழாம் வகுப்பு வரை வீட்டிலேயே பயிற்சி மேற்கொள்ள முத்தையா ஊக்கப்படுத்தினார். வீட்டுக்கு அருகிலிருந்த சிறிய இடத்திலும், வயல்வெளியிலும் ஓட்டப் பயிற்சி செய்தார் சாந்தி.

சாந்தி : “காலையிலும் மாலையிலும் பயிற்சி செய்ற பழக்கம் இருந்துச்சு. பசங்களோட சேர்ந்து விளையாடாம தனியா ஓடிட்டிருந்தா கிண்டல்தானே பண்ணுவாங்க. நான் எதையும் காதுல போட்டுக்க மாட்டேன். பி.டி. உஷா பற்றி தாத்தா சொல்லியிருந்ததால, அப்பவே எனக்குள்ள ஒரு லட்சியம் உருவாகிடுச்சுனு சொல்லலாம். பள்ளிக் கூடத்துல விளையாட்டுப் போட்டிகள்ல நான்தான் ஜெயிப்பேன். பரிசா கிடைக்குற சோப்பு டப்பாவும், டிபன் பாக்சும்தான் என்னோட அதிகபட்ச ஆர்வம். வீட்டுக்கு சின்னச் சின்னதா ஏதாவது பொருள் கொண்டு வந்து கொடுக்குறதுல ஒரு சந்தோஷம் இருந்துச்சு.’

பத்தாம் வகுப்பிலிருந்துதான் முறைப்படியான பயிற்சி சாத்தியப்பட்டது. விளையாட்டு ஆசிரியரான பழனிவேல், சாந்தியின் தனித் திறமையை கவனித்து பயிற்சியளிக்கத் தொடங்கினார். ஒடுக்கப்பட்ட சூழலில் சேரியில் வளரும் சிறுவர்களுக்கு கிடைக்கும் சிறு வழிகாட்டலும் ஊக்கமும் – இருண்டு கிடக்கும் அவர்களின் எதிர்காலத்தின் மேல் விழும் ஒளிக்கீற்று. தனக்கு கிடைத்த ஒரே ஊன்றுகோலை இறுகப் பற்றிக் கொண்டதால், சாந்தியின் சாதனைகள் பள்ளியிலேயே தொடங்கின. வேங்கடகுளம் செயின்ட் ஜோசப் மேல்நிலைப்பள்ளியில் படித்தபோது, முதன்முறையாக மாநில அளவிலான போட்டியில் ஈட்டி எறிதல் பிரிவில் தங்கம் வென்று, தன் கணக்கைத் தொடங்கினார்.

சாந்தி : “ரொம்ப சந்தோஷப்பட்ட நாள் அதுன்னு சொல்லலாம். வாழ்க்கையில பெரிசா எந்த மாற்றமும் உண்டாகலன்னாலும் என் லட்சியத்தை நோக்கி நான் போயிட்டிருக்கேன்னு புரிஞ்சது. அப்பவும் என்னோட மிகப் பெரிய கவலையாவும் தடையாவும் இருந்தது என்னோட வறுமை, ஊட்டச் சத்துள்ள உணவு. கிராமத்துக் குழந்தைகளுக்கு இயற்கையா இருக்குற உடல்/மன வலிமை எனக்குமிருந்ததால சாதிக்க முடிஞ்சதுன்னாலும், புரதச் சத்துக்காக முட்டையும் பாலும் மிகப் பெரிய கனவாவே இருந்துச்சு! என்னோட குடும்பச் சூழல்ல அதையெல்லாம் நான் எதிர்பார்க்க முடியாது. கூட விளையாட வர்ற பசங்கள்லாம் திடமா ஆரோக்கியமா இருக்கிறப்போ நான் மட்டும் கறுத்து, மெலிஞ்சு சுருங்கிப் போயிருந்தேன். தாழ்த்தப்பட்ட, ஏழைக் குடும்பத்துல பிறந்ததுக்காக நான் வருத்தப்பட்டது அப்போதுதான்.’

திருச்சி ஜே.ஜே. கல்லூரியில் பி.பி.ஏ. படிக்க சேர்ந்தார் சாந்தி. மகளின் எந்த முடிவையும் தடுக்காமல் சுதந்திரமாக செயல்பட அனுமதித்தனர் பெற்றோர். இதனால் எந்நேரமும் பயிற்சியிலேயே கழிந்தன பொழுதுகள். சாதிக்க வேண்டும் என்ற வெறி உள்ளுக்குள் கனன்று கொண்டிருந்தது. 2002 ஆம் ஆண்டு பெங்களூருவில் நடைபெற்ற தேசிய அளவிலான போட்டிகளில் 400 மீட்டர் ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கத்தை வென்று, சர்வதேசக் களத்திற்குள் நுழைவதற்கான தகுதியைப் பெற்றார். அடுத்த ஆண்டு தென்கொரியாவில் நடைபெற்ற “ஏஷியன் ட்ராக் அண்ட் பீல்ட்’ போட்டிகளுக்கு தேர்வானார் சாந்தி. வெளிநாட்டுப் பயணத்திற்கான தங்கும் மற்றும் பயணச் செலவுகளை விளையாட்டுத் துறை ஏற்றுக் கொண்டிருந்தாலும், நல்ல உடைகளோ, சொந்த செலவிற்கு பணமோ இன்றி வெற்றியை மட்டுமே இலக்காகக் கொண்டு கிளம்பினார். அய்யாயிரம் மீட்டரில் முதல் பரிசு, எண்ணூறு மீட்டரில் இரண்டாம் பரிசு, நானூறு மீட்டரில் மூன்றாம் பரிசு என மூன்று பரிசுகளைப் பெற்றிருந்தும், சாந்தியின் ஒடுக்கப்பட்ட மனம் அதைக் கொண்டாட முடியவில்லை.

சாந்தி : “வெறும் ரெண்டாயிரம் ரூபா எடுத்துட்டுப் போனேன். எங்க அப்பா அம்மானால அதுதான் முடிஞ்சது. அதையே கடன் வாங்கிதான் கொடுத்தாங்க. நான் ஜெயிப்பேன்னு நிச்சயமாகத் தெரியும். ஏன்னா தினமும் காலையிலயும் மாலையிலயும் பத்து கிலோ மீட்டர் ஓடுவேன். பயிற்சியை யும் முயற்சியையும் சரியா செஞ்சேன். மூணு பதக்கங்களை வாங்கியும் அங்க நான் தனியாவே இருந்தேன். என்கூட வந்த மற்ற போட்டியாளர்கள் என்னை ஒரு பொருட்டாகவே மதிக்கல. என்னாலயும் அவங்களோட இயல்பாகப் பழக முடியல. போட்டி நேரம் போக ஷாப்பிங் போவாங்க. நிறைய செலவு செய்வாங்க. என்னால அது முடியாது. என்னோட அறையிலேயே அடைஞ்சு கிடப்பேன். ரெண்டாயிரம் ரூபாயோட போன நான், 39 ஆயிரம் ரூபாய் பரிசுத் தொகையா கொண்டு வந்தேன். என்னை தவிர்த்தவங்க ஒரு மெடல்கூட வாங்கல. பரிசுப் பணத்தை செலவு செய்யாம அப்படியே கொண்டு வந்து வீட்டுல கொடுத்தேன். சந்தோஷப்பட்டாங்க. அவங்களுக்கு அது பணம்; கொஞ்ச நாளைக்கு நல்ல சாப்பாடு சாப்பிடலாம் அவ்ளோதான். ஆனால், என் சாதனையோட மதிப்பை புரிஞ்சுக்க யாருமே இல்øலயேன்னு ரொம்ப வருத்தப்பட்டேன்.’

ஒரே போட்டியில் 5000, 800, 400 மீட்டர்களில் பதக்கங்கள் வெல்வது அசாதாரணமான செயல். எவருமே கணிக்காத சூழலில் சாந்தியின் சாதனை அமைந்தது. எந்த சந்தேகங்களோ, சர்ச்சைகளோ இன்றி பதக்கங்களைப் பெற்று வந்தார். இந்த இமாலய வெற்றிக்குப் பின்னான இரண்டாண்டுகள், கவனத்தை மீண்டும் பயிற்சியின் பக்கம் திருப்பியதில், 2005 ஆம் ஆண்டு முழுவதும் வெற்றி மாலைகள் சாந்தியின் மேல் விழுந்து கொண்டே இருந்தன. தென்கொரியாவில் 800 மீட்டரில் வெள்ளிப்பதக்கமும், தாய்லாந்தில் இரண்டு தங்கங்களையும், கிராண்ட் ப்ரிக்ஸ் போட்டிகளில் தாய்லாந்தில் நடைபெற்ற முதல் ஆசியப் போட்டியில் தங்கத்தையும், அதே ஆண்டு கொழும்பில் நடைபெற்ற தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் இரண்டு தங்கம் மற்றும் ஒரு வெள்ளியையும் வென்றார். இத்தனை வெற்றிகளுக்குப் பின்னர்தான் தன் லட்சியத்தை அடைந்து கொண்டிருக்கும் பூரிப்பு கொஞ்சமாக அவருள் பூத்தது. எந்த விளையாட்டு வீரருக்கும் ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வதே அதிகபட்ச இலக்கு என்பதால், சாந்தியும் அதை குறி வைத்தே இயங்கிக் கொண்டிருந்தார்.

சாந்தி : “ஊருக்குள்ள எனக்குனு ஒரு மரியாதை உருவாகி இருந்துச்சு. எல்லோரும் அன்பாவும் மரியாதையாவும் பார்க்க ஆரம்பிச்சாங்க. 2005 முழுக்க பதக்கங்களா வாங்கிட்டிருந்தேன். எங்க ஓட்டு வீட்டுக்குள்ள அதை வைக்குறதுக்குதான் இடமில்லை. 2005 ஆம் வருஷத்தோட விளையாடவே முடியாமப் போகும்னு நான் எதிர்பார்க்கவே இல்ல. ஒவ்வொரு விளையாட்டு வீரருக்கும் அவங்க ஓடி முடிச்சதுக்கப்புறம் சிறுநீர் பரிசோதனை செய்வாங்க. போதை மருந்து, ஊக்க மருந்து சாப்பிட்டது உறுதியாச்சுன்னா, அடுத்த ரெண்டு வருஷத்துக்கு விளையாட முடியாது. ஒவ்வொரு முறையும் இந்த பரிசோதனையை தைரியமா செஞ்சுக்குவேன். போட்டி நாட்கள்ல தலைவலி மாத்திரைகூட எடுத்துக்க மாட்டேன். ஏன்னா நாம் சாதாரணமா எடுத்துக்குற வலி நிவாரணிகள்லகூட ஸ்டீராய்ட்ஸ் இருக்கலாம். கஷ்டப்பட்டு பெற்றதை கவனக்குறைவுனால இழந்துடக் கூடாதில்லையா?’

ஊக்க மருந்து விஷயத்தில் இத்தனை கவனமாக இருந்த சாந்தி, உடல் கூறு தேர்வில் தோற்றுப் போவோம் என அதுவரையும் நினைத்திருக்கவில்லை! 2005 டிசம்பரில் கத்தார் தலைநகர் தோஹாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்று, 800 மீட்டரில் வெள்ளிப் பதக்கம் வென்றபோது, இந்திய ஊடகங்கள் அவரை வாழ்த்தின. அடுத்த ஒரு வாரத்தில் எல்லாமே தலைகீழாய் மாறியது. பெண்ணென்று பொய் சொல்லி சாந்தி ஏமாற்றிவிட்டதாகவும், பாலினச் சோதனையில் தோல்வியடைந்துவிட்டதாகவும் ஊடகங்கள் அறைகூவ, அந்த அலறல்களுக்கு நடுவே உடைந்து நொறுங்கிப் போனார் சாந்தி.

சாந்தி : “முதல்ல எனக்கு எதுவுமே புரியல. தோஹாவுல 800 மீட்டர் பந்தயத்துல வெள்ளிப் பதக்கம் ஜெயிச்சதோட என்னோட போட்டிகள் முடிஞ்சது. மற்ற வீரர்கள் விளையாடிட்டிருந்தாங்க. நான் என்னோட அறையிலயே இருந்தேன். ரெண்டு நாள் கழிச்சு. என்னை பரிசோதனை செய்யணும்னு கூட்டிட்டுப் போனாங்க. ரத்தம், சிறுநீர், பொது உடல் பரிசோதனைகளும் பண்ணாங்க. என்னோட பயிற்சியாளர்கிட்ட எதுக்கு இந்த பரிசோதனைன்னு கேட்டேன். என்னோட அறையில் தங்கியிருந்த சக வீராங்கனைகள், என் மேல புகார் செஞ்சிருக்குறதா சொன்னார். குழப்பமா இருந்தது. பதக்கத்தோட நான் நாடு திரும்பினேன். ஒரு வாரம் கழிச்சு டி.வி. செய்திகள்ல பார்த்துதான் என்ன பிரச்சனைன்னு தெரிஞ்சுக்கிட்டேன். என்னோட பயிற்சியாளர் ரஷ்யக்காரர். பெங்களூருவில் இருக்கார். அவர்கிட்ட விளக்கம் கேட்க முடியாதுங்கறதால விட்டுட்டேன். ஆனா என் வாழ்க்கை, லட்சியம், கனவு இந்த ஒரு விஷயத்துனால நொறுங்கிப் போச்சு. அதுவரைக்கும் இருந்த சாந்தியா அதுக்கப்புறம் நான் வாழவே முடியல.’

பாலினச் சோதனையில் தோல்வி என்ற முதல் செய்தி வந்தபோது, காரைக்குடியில் தன் மாமா வீட்டில் இருந்தார் சாந்தி. தொடர்ச்சியாக தொலைக்காட்சி செய்திகளில், சாந்தி ஆணா, பெண்ணா என்ற விவாதம் நடந்ததால், செய்திச் சேனல்களை தற்காலிகமாகத் தடை செய்து வைத்தனர் சாந்தியின் உறவினர்கள். கல் தடுக்கி விழுந்திருந்தால் அத்தனை காயம் ஏற்பட்டிருக்காது. சாந்தி சரிந்ததோ மலை உச்சியிலிருந்து! தனித்த உழைப்பாலும் முயற்சியாலும் வெற்றியின் உயரங்களில் ஏறிக் கொண்டிருந்த நேரம் இப்படியொரு சரிவு, எத்தனை பெரிய வலியை உண்டாக்கியிருக்கும்?! பெண்ணாகப் பிறந்து, பெண்ணாகவே உணர்ந்து, பெண்ணாகவே வாழ்ந்து வந்த நிலையில், சில சோதனைகள் பெண்ணில்லை என விலக்கி வைக்க, அகதியைப் போன்ற கையறு நிலைக்குத் தள்ளப்பட்டார் சாந்தி.

சாந்தி : “நான் பொண்ணுதான். ஒரு பொண்ணாதான் பிறந்தேன். அதனாலதான் எனக்கு சாந்தினு பேர் வச்சாங்க. நான் பிறந்தப்போ, என்னோட உறவினர்களும் ஊர்க்காரர்களும் வந்து பார்த்தாங்க. என்னை வேறு எப்படி நிரூபிக்கச் சொல்றீங்க? பெண்ணுக்குனு விதிக்கப்பட்ட அடையாளங்களோட இருக்குறதுக்காக, உடலில் அட்டைகளைப் பொருத்திக்கிட்டு என்னால திரிய முடியாது. கருப்பை இல்லேன்னா பொண்ணில்லையா? பருவமெய்தலேன்னா பொண்ணில்லையா? பருவமெய்தாமலேயே திருமணம் செஞ்சுகிட்டு வாழ்றவங்கள எனக்குத் தெரியும். உங்களோட விதிமுறைகளும் சோதனைகளும் என்னை பெண்ணில்லனு சொன்னா, அதை நான் ஏத்துக்கணுமா? என் பாலினம் குறித்து எனக்கு எந்த சந்தேகமும் இல்ல. சிகிச்சை எடுத்துக்குறதுக்கு நான் நோயாளி இல்ல. எனக்கு தோணுச்சுனா திருமணம் செஞ்சுக்குவேன்; இல்லேன்னா தனியாவே இருப்பேன். அதை வச்சு என் பாலினத்தை யாரும் உறுதி செய்ய முடியாது. இந்த சமுதாயத்துல எப்பவுமே நான் தலைநிமிர்ந்து வாழ முடியாத நிலையை உருவாக்கிட்டாங்க. ஆம்பளையா, பொம்பளையானு என் காதுபட கிண்டல் செய்றவங்களை தினமும் கடந்து போறேன். என் வாழ்க்கை முழுசும் தொடரப் போற கொடுமையான கேள்வி இது