தமிழ் இந்து “தமிழர்களின் தாய் மதம்” என்ற அடைமொழியுடன் பெரியாரை நோக்கி அவதூறு கிளப்பபுறப்பட்டு இருக்கிறது பார்ப்பன கும்பல் ஒன்று. வழமையாக இவர்கள் பெரியாரை நோக்கி அவதூறு கிளப்புபவர்கள் என்பது நாம் அறிந்ததே. ஆனால் இந்தமுறை பெரியாரின் நூல்களில் இருந்து பல செய்திகளை எடுத்து அங்கொன்றும் இங்கொன்றுமாக வார்த்தைகளை வெட்டி பெரியாரின் வார்த்தைகளுக்கு புதிய விளக்கம் கொடுக்க புறப்பட்டு இருக்கிறார்கள். பெரியாருக்கு எதிரான இந்துமத பூசாரிகளுக்கும், வலதுசாரி தமிழ்தேசியம் பேசும் சில போலிதமிழ்தேசியவாதிகளுக்கும் இவர்கள் பெரியார்வாதிகளுக்கு எதிராக ஆயுதம் தயாரித்துதரும் வேலைகளை செய்துகொண்டு இருக்கிறார்கள்.
இவர்கள் பெரியார் குறித்து வைக்கும் குற்றசாட்டுகளுக்கு பெரியார்வாதிகள் யாரேனும் கண்டிப்பாக பதில் கூறுவார்கள் என்ற நம்பிக்கையில் இதுவரை காத்திருந்தேன். தமிழ் ஓவியா போன்ற பெரியார்வாதிகள் எதிர்வினை ஆற்றி வருவது ஆறுதல் அளிக்கிறது. மதிமாறன் இதுபற்றி எழுதினால் சரியாக இருக்கும் என்பதே எனது கருத்தாக இருந்து வந்தது. சமீப காலமாக மதிமாறன் வேறுதிசையில் பயணிக்க ஆரம்பித்துவிட்டார் என்று தோன்றுகிறது. தமிழ் இந்துவில் ஆயுள்கால சந்தாதாரராக செயல்படும் திருச்சிக்காரன் மதிமாறன் வலைப்பூவை குத்தகைக்கு எடுத்து கொள்ள ஆரம்பித்து விட்டார்.பெரியாரும் அண்ணாவும் இணைந்து கொள்ளை அடித்துவிட்டு அதனை பகிர்ந்து கொள்ள சினிமா பாணியில் சண்டை பிடித்தனர் என்று கருத்து தெரிவித்த திரிச்சிகாரர் இப்பொழுதுதான் மதிமாறன் சரியான திசையில் பயணிப்பதாக பாராட்டு பத்திரம் வாசிக்கிறார். மதிமாறன் அளவிற்கு நான் ஒன்று பெரிய ஆய்வாளன் அல்ல நேற்று எழுத துவங்கிய சின்னப்பயலாக நான் இருந்தபொழுதும் பெரியாரை நேசிப்பவன் என்ற முறையில் தமிழ் இந்துவிற்கு பதில் சொல்லும் கடமை எனக்கும் உள்ளது என்பதால் எனது எதிர்வினையை பதிவு செய்கிறேன்.
தாழ்த்தப்பட்டோருக்குப் பாடுபட்டவரா ஈ.வே.ராமசாமி நாயக்கர்?
என்ற தலைப்பில் பெரியாரை தாழ்த்தப்பட்டோருக்கு எதிரானவர் என்று நிறுவ முயன்று இருக்கிறார்கள். காந்தி சூத்திரர்கள் போலவே பஞ்சமர்களும் கோவிலுக்குள் செல்லும் உரிமை உள்ளது என்று கூறியபொழுது பெரியார் இவ்வாறு கூறினார் “நடுநிலைசாதியான சூத்திரர்கள் கிழே இறங்கி கடைநிலைசாதியான பஞ்சமர்களோடு சேரலாம் என்று காந்தியாரின் கூற்று இருக்கிறது . சூத்திரர்கள் ஏற்கனவே இருந்தநிலையில் இருந்து ஒருபடி கிழே இறங்கலாம் ஆனால் பார்பனர்கள் அப்படியே இருக்க வேண்டும். இது பார்ப்பனர்களின் மனுதர்மத்தை காப்பதாக இருக்கிறது. இதை கடுமையாக எதிர்க்க வேண்டும். காந்தியாரின் பேச்சு வர்க்க வேறுபாடுகளை களைவதாக இல்லாமல். வர்க்க வேறுபாடுகளை காப்பதாகவே இருக்கிறது. “
காந்தியின் அறிவித்த கோவிலுக்குள் தாழ்த்தப்பட்டவர்களும் செல்லலாம் என்ற அறிவிப்பு பார்ப்பனர்களின் நிலையை காப்பதோடு வர்ணாசிரம சித்தாந்தங்களை காப்பதுமாக இருக்கிறது என்பதே பெரியாரின் கருத்து.
இதனை இவர்கள் இவ்வாறு திரித்து எழுதி இருக்கிறார்கள்.
தமிழ் இந்துவிலிருந்து:
காந்திஜி, ”கோவிலுக்குள் தாழ்த்தப்பட்ட மக்கள் செல்வதில் எந்தக் கோவிலிலும் சூத்திரர்கள் எதுவரையில் செல்லமுடியுமோ அந்த அளவுவரையில்தான் தாழ்த்தப்பட்ட மக்கள் (அரிஜனங்கள்) செல்லலாம்” என்று சொன்னபோது அதன் மீது ஆத்திரப்பட்டு ஈ.வே.ராமசாமி நாயக்கர் கூறியது என்ன தெரியுமா?
”தீண்டாமை விலக்கு என்பதும் கோவில் பிரவேசம் என்பதும் சூத்திரனைப் பறையனோடு சேர்ப்பதுதானா? பறையன் கீழ்சாதி என்பது மாற்றப்படவில்லையானால் அதற்காக சூத்திரனைப் பறையனோடு சேர்ப்பதா? இந்த அனுமதியானது இதுவரை நடுசாதியாக இருந்த சூத்திரர் என்பவர்கள் இப்போது கீழ்சாதியாகவே ஆக்கப்பட்டுவிட்டார்கள். ஆனதால் இதை நாம் அனுமதிக்கக்கூடாது” என்று ஈ.வே.ராமசாமி நாயக்கர் கூறுகிறார்.
(நூல்: வைக்கம்போராட்ட வரலாறு – வீரமணி)
தாழ்த்தப்பட்டவர்களுக்காக உழைத்தவர் என்று சொல்லுகின்ற ஈ.வே.ராமசாமி நாயக்கர்தான், பறையர்களை சூத்திரர்களோடு ஒன்றிணைக்கக்கூடாது என்று சொல்கின்றார். காரணம் சூத்திரர்களோடு சேர்த்தால் நடுசாதியாக இருந்த சூத்திரர் கீழ்ச்சாதியாக ஆக்கப்பட்டுவிடுவார்களாம். இதுதான் ஈ.வே.ராமசாமி நாயக்கரின் சாதிப்பற்று
/////////////////
இங்கே பார்பனர்கள் அப்படியே இருப்பார்கள் என்று பெரியார் கூறியதை வெட்டி வீசிவிட்டு பெரியார் சாதிய அபிமானி என்று போலி ஆவணம் தயாரித்து இருப்பது அம்பலமாகிறது.
பெரியார் தாழ்த்தப்பட்டோர் படித்து வருவதால்தான் வேலையில்லா திண்டாட்டம் ஏற்படுகிறது என்று சொன்னதாகவும் தாழப்பட்ட பெண்கள் ரவிக்கை அணிவதால் பருத்தி பஞ்சம் ஏற்படுவதுவாக கூறினார் என்று கற்பனைக்கு எட்டாத புனைவுகளை எடுத்து வைக்கிறார்கள்.
தமிழ் இந்துவிலிருந்து:
அதே போல, துணி விலை ஏறிவிட்டதற்குக் காரணம் இப்போது பறைச்சிகளெல்லாம் ரவிக்கைப் போடுவதுதான். வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரிப்பதற்கு காரணம் பறையன்களெல்லாம் படித்துவிட்டதுதான் என்று ஈ.வே.ராமசாமி நாயக்கர் கூறியதாக தாழ்த்தப்பட்ட தலைவர்கள் இன்றும் கூறுகின்றனர். இது உண்மை இல்லை என்று இதுவரை திராவிடர்க் கழகம் தெளிவுப்படுத்தவில்லை
//////////////////////////////
திராவிடர் கழகம் தெளிவு படுத்தாவிட்டால் என்ன? இவர்களின் கற்பனைத்திறன் நமக்கு தெளிவாகிவிடுகிறது. வர்ணாசிரம கொள்கைகள் முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும் என்று முழங்கினார் பெரியார் என்பது சிறுவர்களுக்கும் தெரியும் அப்படி இருக்க இந்த அறிவாளிகளுக்கு தெரியாமல் இருப்பது ஆச்சரியம்தான்
மனுதர்மத்தினை போதித்த பகவான் ஹரியையே செருப்பால் அடித்த பெரியார். அந்த மனுதர்மவாதிகளின் கூற்றை நம்பி தாழ்த்தப்பட்டவர் பத்தி அவதூறு செய்தார் என்பவர்களை செருப்பால் அடிப்பது போன்று பெரியார் பேசியதை கவனிக்கவும்.
யாரடா சொன்னா, உன்னைத் தேவடியா மகன்னு, சூத்திரன்னு சொன்னா? கிருஷ்ணன் சொன்னான்! எங்கடா சொன்னான்? கீதையிலே சொன்னான்! கிருஷ்ணனையும் கீதையையும் செருப்பால் அடிக்கத் துணியாமல் போனால் நீ சூத்திரன் தானே! பயந்தீன்னா நீ சூத்திரனாக இருந்துக்கோ!
———- தந்தைபெரியார்- நூல்: “சிந்தனையும் பகுத்தறிவும்”————-
அப்படியே போகும்போக்கில் பெரியார் பார்பனர்களை மட்டுமே எதிர்த்தார் ஆதிக்கசாதியினரை எதிர்த்தாரா? முதுகுளத்தூர் கலவரம் பத்தி பேசினாரா என்று சில போலி தலித்போராளிகளின் குரலை கடனுக்கு வாங்கி இந்த பார்ப்பன பகதர்கள் நமக்கு எதிராக கேள்வியினை முன்வைக்கிறார்கள்.
முதுகுளத்தூர் கலவரம் குறித்து பேசிய ஒரே தலைவன் பெரியார் என்பது அந்த அறிவாளிகளுக்கு தெரியாமல் போய்விட்டது போலும். . முதுகுளத்தூர் கலவரம் அடங்க ஒரேவழி முத்துராமலிங்கத்தை கைது செய்வதுதான் என்றும். பக்வத்சலத்தின் அறிக்கை மிகத்தெளிவாக இருக்கிறது அதன்படி நடவடிக்கை எடுக்கலாம் என்றும் கூறிய தலைவன் பெரியார் என்பது பெரியவாள் பக்தர்களுக்கு தெரியவில்லை என்பது நம்பும்படியாக இல்லையே.
அப்படியே இந்த மனுதர்மவாதிகள் அம்பேத்காரை பெரியார் அவதூறு செய்தார் என்று அள்ளிவீசுகிறார்கள். இந்துமதத்தை அதன் வேதநூல்களின் வாயிலாகவே அம்பலப்படுத்தியவர் அண்ணல் அம்பேத்கார் என்பதை இவர்கள் வசதிக்காம மறைக்க முயல்கிறார்கள். இந்துவாதிகளின் திடீர் அம்பேத்கார்பாசம் நமக்கு விந்தையாக இருக்கிறது. எனது தலைவர் என்று அம்பேத்காரை பெரியார் கொண்டாடியதை இவர்கள் எவ்வளவு முயன்றாலும் மறைக்க முடியுமா என்ன? அம்பேத்காரை இவர்கள் பெரியார் எதிர்ப்பிற்கு கருவியாக நிறுவமுயல்வது இங்கே அம்பலப்பட்டு போய்விடுகிறது.
தமிழ் இந்துவில் பெரியாருக்கு எதிராக ஒரு தொடரே எழுதி கொண்டிருக்கிறார்கள். விட்டால் பெரியார்தான் தமிழகத்தில் சாதியத்தை கொண்டுவந்தார் என்று வரலாறு எழுதினாலும் எழுதிவிடுவார்களோ என்ற ஐயம் எழாமல் இல்லை. எல்லோரும் வேதநூல் படிக்கலாம் என்றும் ஒரு தொடர் போனசாக போய்க்கொண்டு இருக்கிறது. ஆனால் மனுதர்மம் வேறுமாதிரியாக சொல்லுகிறது.
மனு தனது அத்தியாயம் 12, ஸ்லோகம் 4 இல் இவ்வாறு சொல்கிறார்:
“வேதத்தைக் கற்க முனையும் சூத்திரனின் காதில் ஈயத்தையும், அரக்கையும் காய்ச்சி ஊற்ற வேண்டும், மீறிப் படிப்பானேயானால், அவனது நாக்கைத் துண்டிக்க வேண்டும், வேதத்தை முழுமையாக ஒரு சூத்திரன் படித்து அறிவானேயானால் அவனைக் கண்டதுண்டமாக வெட்டிக் கூறு போடவேண்டும்”.
இவர்கள் புதிதாக வேதம் எல்லோருக்கு பொது என்று கதைவிட்டு கொண்டிருக்கிறார்கள்.
மூட நம்பிக்கையில் ஒட்டுமொத்த குத்தகைதாரர்களாக தம்மை தமிழ் இந்து நம்பிக்கொண்டு இருக்கிறது போலும். சுயமரியாதை இயக்கத்தினரின் எழுதிய புத்தகங்களை பெருச்சாளி போல குடைந்து குடைந்து எங்காவது இவர்களுக்கு சாதகமாக ஏதாவது எழுதிவிடமாட்டர்களா? என்று ஏங்கிய ஏக்கம் நமக்கு புரிகிறது.
“சகோதரர்களே! நான் சொல்வன எல்லாம் எனது சொந்த அபிப்ராயங்கள்தாம் என்று சொல்வதோடு நான் ஒரு சாதரண மனிதன்தான். எவ்விதத் தன்மையும் பொருந்திய தீர்க்கதரிசியல்லன். ஆகையால் தனிமனிதன் என்கிற முறையில்தான் என்னுடைய அபிப்ராயங்களையும் – நான் பார்த்தும் ஆராய்ச்சி செய்தும் அனுபவத்தில் அறிந்ததுமானவைகளைத்தாம் – எதிலும் எனக்குச் சரியென்று பட்டதைத்தான் உரைக்கிறேன். ‘ஒரு பெரியார் உரைத்துவிட்டார்’ என நீங்கள் கருதி அப்படியே கேட்டு நம்பிவிடுவீர்களானால் அப்போது நீங்கள் யாவரும் அடிமைகளே!… யார் உரைப்பதையும் நாம் கேட்டு ‘வேத வாக்கு’ என்று நம்பி நடப்பதால் தான் நாம் இன்று அடிமைகளாக இருக்கிறோம். ஆகவே நான் உரைப்பவைகளை ஆராய்ந்து பாருங்கள். உங்களுக்கு அவை உண்மையென்று தோன்றினால் அவைகளை ஏற்றுக்கொள்ளுங்கள்; இல்லாவிட்டால் தள்ளி விடுங்கள்”
– பெரியார்
இன்னும் சந்திரகிரகணகாலங்களில் பாம்பு நிலவை விழுங்கிவிடுகிறது என்று நம்பிக்கொண்டு அலையும் இந்த மூடநம்பிக்கை கூட்டம் சுயமரியாதை இயக்கத்திற்கே பகுத்தறிவை போதிக்கிறது. உதாரணமாக சம்பூகனை ராமன் கொலைசெய்ததற்கு காரணம் வர்ணாசிரம கொள்கைகள்தானே? என்று சுயமரியாதை இயக்கத்தினர் கேட்டால் இவர்கள் பொங்கி விடுகிறார்கள்.
உங்களுக்குத்தான் ராமாயணத்தின் மீது நம்பிக்கை இல்லையே ராமன் மீது நம்பிக்கையில்லையே அப்புறம் எதுக்கு ராமாயணம் பத்தி எல்லாம் கேள்வி கேட்குறீங்க? என்று சுயமரியாதைக்காரர்கள் பகுத்தறிவுவாதிகளுக்கு பகுத்தறிவை போதிக்கிறார்கள். இவர்களிடம் கொஞ்சமாவது பகுத்தறிவு இருந்தால் இவர்கள் இப்படி எழுதுவதை நாம் கருத்தில் கொள்ளலாம் ஆனால் இவர்கள் மூடநம்பிக்கைகளின் காவலர்களாக இருந்துகொண்டு நமக்கே பகுத்தறிவினை போதிப்பது கிராமத்தில் நடைமுறையில் இருக்கும் ஒரு பழமொழிதான் நியாபகத்திற்கு வருகிறது.
இவர்களின் தயாரிப்புகள்தான் தேவநாதன் கருவறைக்குள் செய்தது குறித்து பகுத்தறிவாளர்கள் எழுதினால் “உங்களுத்தான் கோவில் பிடிக்காதே அப்புறம் எதற்கு கோவில் குறித்து கவலை படுகிறீர்கள் என்று புத்திசாலித்தனமாக கேள்வி கேட்கிறார்கள் போலும்.
எதனால் வேதத்தை எதிர்க்கிறோம் என்பதற்கான காரணங்களை நாம் சொல்ல கூடாதாம். உங்களுக்கு நம்பிக்கை இல்லையே பிறகு எதற்கு அதை பற்றி பேசுகிறீர்கள் என்கிறார்கள்.
மணியம்மை மனசோர்வு ஏற்படும் பொழுதெல்லாம் பெரியார் கூறிய வாசகங்கள் என் மனதில் தோன்றி என் சோர்வை நீக்கி விடுகிறது என்று எழுதியதை ஏதோ புராணக்கதைகளில் வானத்தில் இருந்து ஒலிக்கும் அசரிரீயோடு ஒப்பிட்டு மணியம்மை அவர்களை மூடநம்பிக்கைவாதி என்று முத்திரை குத்த முயல்கிறார்கள்.
பெரியார் தனது மனைவி நாகம்மையார் இறந்தபொழுது அங்கே வந்த பெண்களை அழவிடாமல் செய்தார் அதே பெரியார் ராஜாஜி இறந்தபொழுது கண்ணீர்விட்டு அழுதார் பார்த்தீர்களா ஊருக்கு ஒரு நியாயம் பெரியாருக்கு ஒரு நியாயம் என்று தப்பாக அர்த்தம் கற்பிக்கிறது தமிழ் இந்து.
பொதுவாக ஒருவர் இறந்துவிட்டால் “ஒப்பாரி” என்ற பெயரில் இறந்தவரின் உடலைசுற்றி அமர்ந்து கொண்டு பெண்கள் ஒப்புக்காக அழுவார்கள். அது உண்மையில் அழுவதில்லை வெறும் ஒப்புக்கு அழுவதால்தான் அதன் பெயர் ஒப்பாரி அதனை தடை செய்யவேண்டும் என்று பெரியார் விரும்பினார் நடத்தி காட்டினார். ஒருவரின் பிரிவால் வருந்துவது வேறு பாசங்கிற்காக அழுவது வேறு. இறந்தவீட்டின் இறுக்கமான சூழலை மேலும் இறுக்கமாக்கும் ஒப்பாரியை தடை செய்தததை ஏதோ பெரியார் உறவினர் யார் இறந்தாலும் அழக்கூடாது என்று சொன்னது போல திரித்து எழுதி தனது வன்மத்தை தீர்த்து கொள்கிறது.
இறந்தவர்களின் உடலை சுற்றி மத சடங்குகள் என்ற பெயரில் நடக்கும் அவலங்களைத்தான் பெரியார் கண்டித்தார் என்பதை நாம் உணர்ந்துகொள்ள வேண்டும். ஒருவரின் பிரிவினால் கண்ணீர் அரும்புவது இயற்கையான ஒன்று அதனை சுயமரியாதை என்றும் தவறு என்று சொல்லவில்லை.
அதாவது பெரியாரின் பிரிவால் மணியம்மை கண்ணீர் சிந்தினாலும் ராஜாஜி இறந்ததும் பெரியார் கண்ணீர் சிந்தினாலும் அது தவறு என்கிறது தமிழ் இந்து. சுயமரியாதைக்காரனுக்கு கண்ணீர் விடுவது கூட மூடநம்பிக்கை என்று புதிதாக நமக்கு பகுத்தறிவு போதிக்கிறது இந்த மூடநம்பிக்கை குழு.
பெரியார் நிகழ்விற்கு மொமரியல் ஹாலில் அனுமதி கிடைக்கவில்லை என்பதற்காக பெரியார்திடல் நிறுவப்பட்டது அந்த நிகழ்வில் பெரியார் கருத்து சுதந்திரத்திற்கு மதிப்பளித்து இந்த அரங்கை யார் வேண்டுமானாலும் மாற்று கருத்து இருப்பினும் அவர்கள் நிகழ்வை நிகழ்த்த அனுமதிக்கும் படி இந்த திடல் திகழட்டும் என்று பேசினார்.
தமிழ் இந்துவிலிருந்து
ஈ. வே. ராமசாமி நாயக்கர் எவ்வளவு முட்டாள்தனமான காரியத்தை செய்திருக்கிறார் என்பது புலனாகும். மற்றொன்றையும் யோசிக்கும்போது ஈ. வே. ராமசாமி நாயக்கரே, மூடநம்பிக்கை வளர ஏற்படுத்தித்தந்த இடம்தான் பெரியார் திடல் என்பதையும் யாராலும் மறுக்கமுடியாது.
ஈ. வே. ராமசாமி நாயக்கருடைய இந்த வழி எப்படி தவறானது என்பதை இப்போது பார்க்கலாம்.
மெமோரியல் ஹால் என்ற கிறிஸ்தவர் இடம் கொடுக்கவில்லை என்றால் யாருக்கு நஷ்டம்? இடம் கொடுக்காதவர்களுக்குத்தானே நஷ்டம்! அந்த இடம் இல்லையென்றால் வேறு இடத்தில் நடத்தலாம் அல்லவா? அதைவிட்டுவிட்டு அவர் இடம் தரவில்லை. அதனால் பொது மன்றம் ஒன்றை ஆரம்பித்தேன் என்று ஈ. வே. ராமசாமி நாயக்கர் சொன்னது பகுத்தறிவின் செயலா? அதுவும் கொண்ட கொள்கைக்கு ஆபத்து ஏற்படுவதென்றால் அது வீண்வேலை தானே!
உதாரணமாக ஒன்றை நினைத்துப்பாருங்கள்.
ஈ. வே. ராமசாமி நாயக்கரின் பேட்டியை ஒரு பத்திரிகை அவர்களின் கொள்கைக்கு முரணாக இருப்பதால் வெளியிடவில்லை என்பதற்காக எல்லோருடைய கொள்கைகளையும் சொல்லும் பத்திரிகை ஒன்றை ஆரம்பிக்கிறேன் என்று ஈ. வே. ராமசாமி சொல்வாரா?
###################################################
பெரியார் கருத்துகளை பார்பன ஊடகங்கள் இதுவரை வெளியிட்டத்தில்லை அவரது சிந்தனைகளை குடியரசு மூலம்தான் மக்களை அடைந்தது இவர்களுக்கு தெரியாது போலும். எங்களோடு மாற்று கருத்து இருந்தாலும் தைரியமாக எங்கள் திடலை தருகிறோம் நிகழ்வு நடத்தி கொள்ளுங்கள் என்ற தைரியம் பெரியார் தவிர்த்து வேறு யாரிடமும் இருந்ததாக தெரியவில்லை. பார்பன ஏடுகள் முதல் அரங்கங்கள் வரை அவர்கள கொள்கைகைகளோடு ஒத்து போகாதவர்களை புறக்கணிக்கும் சூழலில் மாற்று கருத்தை மதிக்கும் பெரியாரின் உயர்ந்த உள்ளம் இது போன்று பார்பனிய கும்பலிடம் நாம் எதிர்பார்க்க முடியாதுதான்.
பிறமாநிலங்களில் இன்னும் சாதிய பெயர்களை தாங்கிக்கொண்டு நாயர், நாயுடு, கவுடா என்று அலையும் வேளையில் பெயரில் இருக்கும் சாதிய பெயரை விட்டொழித்துள்ளது தமிழ்நாடு அதற்கு முழு காரணம் பெரியாரும் அவரது இயக்கமும். சாதி வெறிபிடித்த பார்பனிய கும்பல் இன்னும் பெரியாரை நாயக்கர் என்று அழைத்து தங்கள் அரிப்பை தீர்த்து கொள்கிறார்கள்.
தான் இறக்கும் பொழுது இந்துவாக இருக்கமாட்டேன் என்றும் இந்துமதத்தின் புராண குப்பைகளை அதன் வேத நூல்களின் வாயிலாகவே அம்பலப்படுத்திய அண்ணல் அம்பேத்காரை துணைக்கு அழைக்கிறார்கள் பெரியாரை எதிர்க்க. பெரியாரை எதிர்க்க இவர்கள் அண்ணலை நாடுகிறார்கள் என்றாலே அது பெரியாரை கண்டு இவர்கள் எவ்வளவு நடுங்கி போயிருக்கிறார்கள் என்பது தெளிவாகிறது.
சில அறிவிலிகள் பெரியார் எங்களுக்காக உழைக்கவில்லை அவர்களுக்காக உழைக்கவில்லை என்று உளறி கொண்டு இருக்கிறார்கள் அவர்களுக்கான பதிலை அடுத்த கட்டுரையில் கொடுக்கலாம் என்று இருக்கிறேன். தமிழ் இந்துவின் முகத்திரை தொடர்ந்து கிழிப்போம்.