”மத மாற்றம் என்பது வெறும் கடவுளை மட்டும் மாற்றிக் கொள்ளும் விசயமல்ல. அது ஒரு தேசிய மாற்றம்.


மதம் மாறினால் தேசிய உணர்வு மாறுமா?
”மத மாற்றம் என்பது வெறும் கடவுளை மட்டும் மாற்றிக் கொள்ளும் விசயமல்ல. அது ஒரு தேசிய மாற்றம். இந்து மதத்திலிருக்கும் போது ‘வணக்கம்‘ சொன்னவர், முசுலீமாக மாறும்போது ‘அஸ்ஸலாமு அலைக்கும்‘ என்கிறார்.

கிறித்தவர் ‘தோத்திரம்‘ அல்லது ‘குட்மார்னிங்‘ என்கிறார். வேட்டி மாறி பேண்ட்டோ, லுங்கியோ நிரந்தர உடையாக மாறுகிறது. பெண்கள் பூச்செடி, பொட்டு வைத்து, கோலமிட்டு, குத்துவிளக்கு ஏற்றுவது நின்று போகிறது. தேங்காய் உடைத்து, குத்துவிளக்கு கற்பூரம் ஏற்றி பாரதப் பண்பாட்டின்படி ஆரம்பிக்கப்படும் காரியங்கள் ரிப்பன் வெட்டி ஆரம்பிக்கப்படுகிறது. பிறந்த நாட்களுக்குக் கோவிலுக்குப் போகும் பழக்கம் மாறி கேக் வெட்டும் பழக்கம் வருகிறது.

‘ஒருவனுக்கு ஒருத்தி‘ என்ற பண்பாடு மாறி பலதாரமணம், விவாகரத்து செய்வதுமான கலாச்சாரச் சீர்கேடு ஏற்படுகிறது. பாரதத்தில் உள்ள புனித ஸ்தலங்கள் மறந்து விதேசங்களிலுள்ள மெக்கா, மெதினா, வாடிகன், கான்ஸ்டாண்டிநோபிள், ஜெருசலேம் – புனித நகரங்களாகக் கருதப்படுகின்றன. முன்னோர்கள், தாத்தா, பாட்டிகளை முட்டாள்கள், அறிவிலிகள் என்று கருதும் எண்ணம் வளர்கிறது. சித்திரை முதல் தேதியைப் புத்தாண்டாகக் கொண்டாடியது போய் ஜனவரி 1 கொண்டாடப்படுகிறது.

மொத்தத்தில் ஆன்மீக நாட்டம் நொடிந்து லோகாயதவாதம் பெருகி கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற எண்ணற்ற குற்றங்கள் பெருகி வளர்கின்றன. மதமாற்றத்தில் ஏற்படும் தேசிய மாற்றங்களுக்கு இவை ஒரு சில உதாரணங்களே.”

– இந்து முன்னணி வெளியிட்டிருக்கும் ‘மதமாற்றத் தடைச் சட்டம் ஏன்?’ என்ற வெளியீட்டில் இருந்து.

____________________________________________________________________________

அ) நமஸ்காரம் போய் குட்மார்னிங், தோத்திரம், அஸ்ஸலாமு அலைக்கும்.
வணக்கம் என்ற வார்த்தை பார்ப்பன இந்துப் பண்பாடல்ல என்பது முதல் விசயம். ‘நமஸ்காரத்தை’ ஒழித்து தமிழகத்தில் ‘வணக்கத்தை’க் கொண்டு வந்தது திராவிட இயக்கத்தின் முயற்சியாகும். அது மட்டுமல்ல, க்ஷேமம் நலமாகவும், அபேட்சகர் வேட்பாளராகவும், பொதுக்கழிப்பிட ஸ்திரீ – புருஷன், ஆண் – பெண்ணாகவும், இன்னும் ஏராளமான சொற்கள் மாற்றப்பட்டு மக்களுக்கு உதவி புரிந்தன. ஆனால், இன்றும் ஆர்.எஸ்.எஸ்.- இல் இருக்கும் இளித்தவாய்த் தமிழர்கள் கூட ‘நமஸ்தே ஜீ’ எனக் கூற வேண்டும் என்பதுதான் அவர்கள் மரபு.

அடுத்து, ‘குட் மார்னிங்’ சொல்பவர்களெல்லாம் கிறித்தவரா? வெள்ளையர்கள் கொண்டு வந்த மரியாதை குறித்த சொற்களும் பழக்கங்களும்தான் இந்தியாவில் பரப்பப்பட்டன; அநேக நாடுகளிலும் வழக்கத்திலிருக்கிறது. அரசு அதிகார வர்க்கத்தில் தொடங்கிய இந்த ஆங்கில மரியாதையை அனைவருக்கும் பரப்பி விட்டதே ‘அவாள்’தான். இன்று ‘குட்மார்னிங்’ பழைய சம்பிரதாயமாகி, ”ஹாய், ஹல்லோ” தான் நகரங்களில் கொடிகட்டிப் பறக்கின்றது. இதைப் பரப்பிவிட்டவர்கள் பாதிரியார்களா என்ன?

தோத்திரம் என்ற சொல் ஸ்தோத்திரம் என்ற சமஸ்கிருதச் சொல்தான். பார்ப்பனர்கள் கிறித்துவ மதத்திற்கு மாறியோது சடங்குகளையும் சமஸ்கிருதத்தையும் கொண்டு சென்றதன் விளைவே இது. அதிலும் ‘ஸ்’-ஐ உருவிவிட்டு வெறும் தோத்திரமாக்கியது தாழ்த்தப்பட்ட கிறித்தவ மக்களே.

கிறித்தவர்களின் கை குலுக்கவும், இசுலாமியர்களின் ஆரத் தழுவும் முறையும், பார்ப்பனியத்தைவிட நாகரீகமான பழக்கங்களாகும். நமஸ்காரம் என்பது கை கூப்பி, தலை தாழ்த்தி முழு உடலையும் கிடத்தி வணங்கும் முறையாகும். அதுவும் கடவுள், பார்ப்பனர்கள், மன்னர்கள், மடாதிபதிகள், மேல்சாதியினர், தற்போது தலைவர்கள் – அதிகாரவர்க்கம் – மந்திரிகள் போன்றோருக்குச் செலுத்தப்படும் அடிமைத்தனமாகும்.

மக்களுக்குள் மனிதர்களுக்குள் ஒருவருக்கொருவர் மரியாதை செலுத்தி விசாரித்தல் என்பது இந்து மரபிலேயே இல்லை. பார்ப்பனியத்தின் கறைபட்ட தமிழின் ‘வணக்கமும்’ இதற்கு விதி விலக்கல்ல. முக்கியமாக நமஸ்காரம் யாரையும் தொட வேண்டிய அவசியமில்லாமல், தீண்டாமையை க்ஷேமமாகப் பாதுகாக்கிறது.

ஆக கிறித்தவ, இசுலாமிய மேலை நாட்டுப் பண்பாட்டின்படி சகமனிதனைக் கைகுலுக்கி, ஆரத்தழுவும் முறையையே நாம் மேற்கொள்ள வேண்டும். இதற்கேற்ற புதிய தமிழ்ச் சொல்லும் கண்டுபிடிக்க வேண்டும். இம்முறையில் தீண்டாமை ஒழிப்பும் உள்ளது. எனவே அவமரியாதையின் பிறப்பிடமான பார்ப்பனப் பண்பாட்டின் சொந்தக்காரர்களுக்கு மரியாதை குறித்துப் பேசும் அருகதையில்லை.

ஆ) வேட்டி போய் பேண்ட், லுங்கி
இந்துப் பண்பாட்டின்படி வெளி ஆடைகள் மட்டுமல்ல, உள் ஆடைகளும் மாறியிருக்கிறதா என்று ஏன் ஆராயவில்லை? கோவணம், லங்கோடு அணியாதவர்கள் எப்படி ‘இந்து’க்களாக இருக்க முடியும்? ஏதோ குர்ஆனிலும், பைபிளிலிலும் சொல்லப்பட்டிருப்பதுபோல லுங்கி இசுலாத்திற்கும், பேண்ட் கிறித்தவத்திற்கும் சொந்தமானது என்பது முழு முட்டாள்தனமாகும். அரேபியாவில் எந்த முசுலீம் லுங்கி உடுத்துகின்றான்? உடைகள் என்பது வர்க்கம், தொழில், தட்பவெப்ப நிலை சம்பந்தப்பட்டதுதான். பேண்ட் உலகத்திற்கும், லுங்கி ஆசியாவுக்கும் பொதுவான உடைகள்தான்.

உழைக்கும் மக்களுக்கு லுங்கி உடுத்தினால் வேலை செய்ய வசதியாக இருக்கிறது. லுங்கி உடுத்துபவர்கள் எல்லாம் முசுலீம்கள் என்றால் இந்துக்கள் எண்ணிக்கை சிறுபான்மையாகிவிடும். சேலையைவிட முகலாயர்கள் அறிமுகப்படுத்திய சுரிதார், சல்வார் கமீஸ் வசதியாக இருக்கிறது என்பதால்தான் பெண்கள் விரும்பி அணிகிறார்கள். வேண்டுமானால் அதை ஆர்.எஸ்.எஸ் தடுக்கட்டுமே? அவ்வளவு ஏன்? ஷாகாவில் பயிற்சி பெரும் ஸ்வயம் சேவக குண்டர்கள் அணியும் அரைக்கால் சட்டை, பெல்ட் ஷூ எல்லாம் இந்துப் பண்பாடா? இன்னும் இராணுவம், போலீசு, கமாண்டோ எல்லாருக்கும் வேட்டி, மரச்செருப்பை மட்டும் போட வைத்து பாரதப் பண்பாட்டைக் காப்பாற்றுங்கள். டெண்டுல்கருக்கு பஞ்சக்கச்சம் உடுத்துங்கள். பி.டி.உஷாவிற்கு மடிசார் கட்டி ஓடச் சொல்லுங்கள்.

இவற்றைவிட சட்டை, பேண்ட் துணி தயாரிக்கும் விமல், அர்விந்த், ஜே.சி.டி, குவாலியர், ரேமண்ட்ஸ், மதுரா கோட்ஸ், லட்சுமி மில் போன்ற இந்து பனியா முதலாளிகளிடம் அதை நிறுத்திவிட்டு, வேட்டி, கோவணம் லங்கோடு மட்டும் தயாரிக்க ஆணையிடுங்களேன்.

இ) பெண்கள் பூச்சூடி, பொட்டு வைத்து கோலமிட்டு, குத்து விளக்கு ஏற்றுவது நின்று போகிறது
வீடு வாசல் தெளித்து கோலமிட வேண்டுமென்றால் முதலில் வீடும் வாசலும் வேண்டும். அப்படியே இருந்தாலும் ‘அழகு படுத்துவது’ என்பது வர்க்கம், வசதிக்கேற்பவே மாறுகிறது. மீனவப் பெண் வீட்டின் முன் கருவாடும், விவசாயப் பெண்ணின் வீட்டில் தானியமும், குயவர் பெண் வீட்டில் களிமண் சேறும், கால்நடை வளர்க்கும் பெண்வீட்டில் புழுக்கைகளும் நிறைந்திருக்கும்.

ஆனால், பார்ப்பன – மேல்சாதி – மேல்தட்டுப் பிரிவினரின் வீடுகள் முன் பெரிய வாசல், துளசி மாடம், சிறு கோவில், தோட்டம் எல்லாம் இருக்கும். ஏதோ உலகிலேயே இந்து வீடுதான் சுத்தமாக இருப்பது போலவும் ஏனைய வீடுகள் பன்றித் தொழுவமாக இருப்பதாகவும் இவர்கள் கூறுவது பிதற்றல். குத்து விளக்கு வகையறாவெல்லாம் என்றைக்குமே ஒடுக்கப்பட்ட சாதிப் பெண்கள் பயன்படுத்தியது கிடையாது; முடியாது. முதலில் அகல் விளக்கு, காடா விளக்கு, சிம்னி, அரிக்கன் என்றுதான் மாறியது. தற்போதுதான் குத்துவிளக்கு அறிமுகமாகியது என்றாலும் அது இல்லாத வீடு இந்து வீடில்லை என்றால் இந்துக்கள் சிறுபான்மையினராகி விடுவார்கள்.

அதேபோல பட்டுச் சேலை உடுத்தி, தலை நிறைய பூச்சூடி, உடல் முழுவதும் ஆபரணங்கள் அணிவது மேல்சாதி மேட்டுக்குடியினர் மட்டும்தான். உழைக்கும் பெண்களைப் பொறுத்தவரை இப்பேர்ப்பட்ட அலங்காரங்களெல்லாம் வெகு அரிது. மேலும் இந்த அழகுக் கலைகளெல்லாம் பெண்களைப் போகப் பொருளாக்கி நுகர்வதற்காக ஆணாதிக்கமும், மதமும், முதலாளித்துவமும் உருவாக்கிய அடிமைத்தனம்தான். எனவே அனைத்து மதங்களும் பெண்ணைப் போக பொருளாக வைப்பதற்கு விதித்திருக்கும் பூ, பொட்டு, பர்தா போன்றவைகளை ஒழிக்க வேண்டும் என்கிறோம். தற்போது சுஷ்மிதா சென், ஐஸ்வர்யா ராய் தொடங்கி ஏகப்பட்ட இந்து அப்சரஸ்கள் உலக அழகி பட்டங்களை வென்று பாரத மாதாவின் புகழை எட்டுத் திக்கும் பரப்பி வந்தாலும், அவர்கள் அழகை வளர்த்த விதமே ‘கிறித்தவ’ப் பாணியிலான மேற்கத்திய அலங்கார முறைகளில்தான்.

இது குறித்துக் கவலைப்படும் இந்து மதவெறியர்கள், இந்துப் பண்பாட்டின்படி அழகிகளை உருவாக்கி உலகை வீழ்த்துவதற்கு, காமசூத்திரம், சௌந்தர்யலகரி, கனகதாரா ஸ்தோத்திரம், ஜெயதேவரின் அஷ்டபதி போன்ற பக்தி ரசம் சொட்டும் இலக்கியங்களைத் தமிழில் மொழி பெயர்த்து, ஆர்.எஸ்.எஸ். தொண்டர்களை வைத்துக் கல்லூரிப் பெண்களிடம் விநியோகிக்கலாம்.

அவ்வாறு செய்தால், பெண்களே இவர்களை செருப்பாலடித்து ‘ஈவ் டீசிங்’ கேஸில் பிடித்துக் கொடுப்பார்கள்.

ஈ) பாரதப் பண்பாட்டின்படி ஆரம்பிக்கப்படும் காரியங்கள் மறைந்து போதல்
விமானத் தாங்கிக் கப்பல்களோ, கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைகளோ, அணுகுண்டு வெடிப்போ அனைத்தையும் நாள் நட்சத்திரம் பார்த்து, யாகம் வளர்த்து, கற்பூரம் – குத்து விளக்கு ஏற்றி, தேங்காய் உடைத்துத்தான் இன்றும் இயக்கி வைக்கின்றார்கள். அன்னியச் செலாவணித் தட்டுப்பாடோ, பணவீக்கமோ என்றால் ரிசர்வ் வங்கியில் உடனே ஒரு பூசை செய்கிறார்கள். குடமுழுக்கிற்கு மட்டுமல்ல, தேர்தல் நாளையே சங்கராச்சாரிதான் குறிக்கிறார். பெரும் நிறுவனங்கள் வருடந்தோறும் தமது அலுவலகங்களை வாஸ்து சாஸ்திரப்படி கன்னாபின்னாவென்று இடித்து மாற்றுகின்றன. இந்தியா என்பது ‘பாம்பாட்டிகளின் தேசம், பண்டாரங்களின் நாடு’ என்று பெயர் வருவதற்குக் காரணமே இந்தப் பார்ப்பன முட்டாள்தனங்கள்தான்.

அறிவியல், பகுத்தறிவு, மதச்சார்பற்ற நோக்கில் முன்னேறிவரும் வாழ்க்கைக்கு மதச் சடங்குகள் தேவையில்லை. ஏனென்றால் இம்மூன்றும் வளருவதற்குத் தடைவிதித்ததே மதங்கள்தான். எனவே, இலட்சக்கணக்கான ரூபாய்கள் வீணடிக்கப்பட்டு ‘பாரத பண்பாட்டின்படி’ ஆரம்பிக்கப்படும் காரியங்கள் அனைத்தும் தடை செய்யப்பட வேண்டும். இவைகளுக்கு ரிப்பன் வெட்டுவது எவ்வளவோ மேல். அதிருக்கட்டும். துவக்க விழாக்களில் ‘இந்து’ குத்துவிளக்கை ‘கிறித்துவ’ மெழுதுவர்த்தியால்தான் கொளுத்துகிறார் அத்வானி. பாரதப் பண்பாட்டின்படி அவர் கையில் தீவிட்டியைக் கொடுத்து விடலாமே! பொருத்தமாகவும் இருக்கும்.

உ) ‘ஒருவனுக்கு ஒருத்தி‘ என்ற பண்பாடு பலதாரமணம், விவாகரத்து போன்ற சீரழிவுகளுக்கு மாறுகிறது.
‘ஒருவனுக்கு ஒருத்தி’ என்பது இந்துப் பண்பாடல்ல. ‘ஒருத்திக்கு ஒருவன்தான்’ இந்துப் பண்பாடாகும். அதாவது ஆணுக்கு எத்தனை மனைவிகள் வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், பெண்ணுக்கு ஒருவன் மட்டுமே கணவனாக முடியும். மேலும் இந்தப் பண்பாடு உலகெங்கிலும் இருக்கும் ஆணாதிக்கப் பண்பாடுதான்.

பலதாரமணத்தை ஒழித்து ‘ஒருவனுக்கு ஒருத்திதான்’ என்பதை 1950-இல் அம்பேத்கார்தான் சட்டமாகக் கொண்டு வந்தார். அதை மட்டுமல்ல, குழந்தை மணத்தடை, விதவை மறுமணம், விவாகரத்து அனைத்தையும் இந்துமத வெறியர்கள்தான் எதிர்த்தார்கள்; முசுலீம்கள் அல்ல. எனவே சமீபகாலம் வரை ஒருவன் பல பெண்களை வைத்திருப்பதுதான் இந்துப் பண்பாக இருந்தது. 7-ஆம் நூற்றாண்டிலாவது நபி நாயகம் 4 மனைவிக்கு மேல் மணக்கக்கூடாது எனக் கட்டுப்பாடு விதித்தார். ஆனால், இந்து மதத்தில் 20-ம் நூற்றாண்டு வரை அந்தக் கட்டுப்பாடு கூட இல்லை என்பதே முக்கியம்.

விவாகரத்து என்பது மேற்கிலிருந்து வந்த சாபக்கேடு என்கிறார்கள். இல்லை, அது ஒரு ஜனநாயக உரிமையாகும். இந்து தர்மப்படி புல்லாகப் பொறுக்கியாக இருந்தாலும் கணவனே கண்கண்ட தெய்வம் என்று வாழும் அடிமைத்தனத்திலிருந்து விடுவித்து, விவாகரத்து ஒரு பெண்ணுக்குரிய உரிமைகளைக் கொடுக்கின்றது. எனவே, மேற்கோ, கிழக்கோ சரியான பண்பாடு எங்கிருந்து வந்தாலும் முதலில் மரியாதை செய்யக் கற்றுக் கொள்ள வேண்டும்.

இந்து மத இலக்கியங்களில் தெய்வங்களும் பார்ப்பனர்களும் மாறுவேடம் பூண்டு கள்ள உளவு கொள்வது, கற்பழிப்பது என்பது சாதாரண விசயம். இத்தகைய ‘உரிமைகள்’ இன்று பறிபோன நிலையில்தான் இந்து மத வெறியர்கள், குய்யோ முறையோ என்று கத்துகிறார்கள். இந்தக் கொடுமைகள் பெருமளவு இல்லாமல், விவாகரத்து, மறுமணம் போன்றவை நம்நாட்டு உழைக்கும் மக்களிடம் இயல்பாக இருந்தது. இதை எண்ணித்தான் நாம் பெருமைப்பட வேண்டும்.

ஊ) பாரத புனித ஸ்தலங்களை மறந்து விதேச புனித நகரங்களை நினைப்பது
இதன்படிப் பார்த்தால் இந்துக்களின் புனித இடங்களான பசுபதிநாத் நேபாளத்திலும், கைலாயமும் மானசரோவரும் சீனாவிலும் இருக்கின்றது. இவ்விடங்களுக்குச் செல்லும் இந்துக்கள் இந்தியாவின் தேசவிரோதிகள் என்றே கருத வேண்டும். உலகெங்கும் வாழ்ந்து வரும் புத்த மதத்தினர் தென் கிழக்காசிய நாடுகளில் பெரும்பான்மையினராக வாழ்கின்றனர். இவர்களுக்கு இந்தியாவின் புத்த கயா புனிதமான இடமென்பதால், அவர்கள் அந்தந்த நாடுகளின் தேச விரோதிகளா?

அதேபோல் இந்தியாவில் இருந்து பல தலைமுறைகளுக்கு முன்பே, இலங்கை, பர்மா, சிங்கப்பூர், மலேசியா, பிஜித் தீவுகள், மொரீஷியஸ், மாலத்தீவு, ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் இந்தியர்கள் குடியேறி வாழ்கிறார்கள். இன்று அந்நாடுகளின் குடிமக்களாக, ஏன் அமைச்சர்களாகக் கூட இருக்கிறார்கள். இந்தியா மறந்து போனாலும் மதம் என்ற அடிப்படையில் இங்குள்ள புனித இடங்கள்தான் அவர்களுக்கும் புனிதம். இதனால் இவர்களைத் தேசத்துரோகி என்று அந்நாடுகள் அடித்துத் துரத்தலாமா?

வாடிகனும், பெத்லஹேமும், மெக்கா, மெதினாவும் உலக கிறித்தவ, முசுலீம் மக்கள் அனைவருக்கும் புனிதமான இடங்களாகும். ஆர்.எஸ்.எஸ். கணக்குப்படி உலகிலுள்ள மற்ற கிறித்தவ, முசுலீம் நாட்டு மக்களுக்கு தேசபக்தி இல்லை என்றாகிறது. அல்லது உலகில் ஒரு கிறித்தவ நாடும், ஒரு முசுலீம் நாடும் மட்டும்தான் இருக்க வேண்டும். ஏன் அப்படி இல்லை? அப்படி இருக்க முடியாது என்பதைத்தான், ஒரு தேசத்தையோ, தேசபக்தியையோ ஒரு மதத்தால் உருவாக்க முடியாது என்ற உண்மை நமக்கு உணர்த்துகிறது. தேசம் உருவாக அரசியல், சமூகம், பொருளாதாரம், மொழி, பண்பாடு – போன்றவைதான் காரணமாக முடியும். மத நம்பிக்கையும், புனித நகரங்களும் யாருக்கும் தேசபக்தியை உருவாக்க வக்கற்றவையே!

பார்ப்பன, மேல் சாதியினரைத் தவிர்த்து பெரும்பான்மை உழைக்கும் மக்களின் பண்பாட்டில் தீர்த்த யாத்திரைகளெல்லாம் கிடையாது. நாட்டுப்பற்று என்றால் என்ன? ஸ்வயம் சேவகர்கள் பாரத மாதா போட்டோவுக்குப் பூசை செய்வது அல்ல. நாட்டு மக்களைச் சுரண்டல், ஒடுக்கு முறை, பிற்போக்கு அனைத்திலும் இருந்து விடுவிக்க தளராமல் போராடுவதுதான் நாட்டுப்பற்றைக் குறிக்கும். இது காசிக்கோ, மெக்காவுக்கோ யாத்திரை செல்வதால் வருவதல்ல.

எ) முன்னோர்கள், தாத்தா, பாட்டிகளை – முட்டாள்கள், அறிவிலிகள் என்று கருதும் எண்ணம் வளருகிறது
”கங்கைக் கரையிலும், காவிரிக் கரையிலும் அரிசியை உணவாக உட்கொண்டு வாழும் சில ஜந்துக்கள், வேதத்திலேயே எல்லாம் கண்டுபிடிச்சாச்சாக்கும் என்று மமதையுடன் பிதற்றுவதை” புதுமைப்பித்தன் குறிப்பிடுகிறார். வேதம் மட்டுமல்ல அனைத்துப் பிற்போக்குத் தன்மைகளையும் முதியோருக்குக் கட்டுப்படல் என்ற இன்னொரு பிற்போக்கின் மூலம்தான் பார்ப்பனியம் வாழையடி வாழையாகத் தொடருகின்றது. அதனால்தான் எல்லாப் பிரிவினரிடமும் உள்ள புதுமையும், துடிப்பும் கொண்ட இளைய பிரிவினர்கூட இத்தகைய முட்டாள் முதியவர்களால் விரைவில் முதியவராக்கப்படுகின்றனர்.

எனவே முதுமை, இயலாமை, ஓய்வு என்ற அளவிலே மட்டும்தான் முதியவர்களைக் காப்பாற்றும் பொறுப்பு ஒரு சமூகத்துக்கு இருக்கவேண்டும். அதேநேரத்தில் அவர்களது முட்டாள் தனங்கள் பிற்போக்குக் குணங்கள் ஆகியவற்றை ஒழிப்பதற்குப் போராடுவதையும் அதே சமூகம் செய்ய வேண்டும் என்கிறோம்.

ஏ) சித்திரைபோய் ஜனவரி கொண்டாடுதல், ஆன்மீகம் அருகில் லோகாயதம் சீர்கேடுகள் பெருகுதல்
இந்துப் பஞ்சாங்கத்தின்படியே எல்லா இந்துக்களுக்கும் ஒரே வருடப்பிறப்பு என்பது கிடையாது. தமிழ், தெலுங்கு, பஞ்சாபி, வடகிழக்கு போன்று பல வருடப் பிறப்புக்கள் கொண்டாடப்படுகின்றன. வழக்கம்போல இவையும் பார்ப்பன மேல்சாதி – மேல் தட்டினர் கொண்டாடுபவைதான். வாழ்நாள் முழுதும் ஏழ்மையில் உழலும் அடித்தட்டு மக்களுக்கு பழைய – புதிய என்ற வருடப் பிரிவினைக்கு முக்கியத்துவம் ஏதுமில்லை.

ஜனவரி ஆரம்பத்தை – கிறித்தவ மதத்தினர் மட்டுமல்ல, உலகமே கொண்டாடி வருகின்றது. கோவிலில் போய் அர்ச்சனை செய்து புத்தாண்டு கொண்டாடுவது நடுத்தர வர்க்க மக்களின் பழக்கமாக ஏற்பட்டு விட்டது. பல இசுலாமிய நாடுகளிலும் இத்தினம் விடுமுறையாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது. பிறந்த நாளுக்குக் கோவிலுக்குப் போவதோ, கேக் வெட்டுவதோ முக்கியமல்ல. அப்படி ஒரு நாள் இருப்பதே தெரியாமல்தான் சாதாரண மக்கள் வாழுகின்றனர். மேலும் ‘ஜன்ம நட்சத்திரம்’ என்ற கடவுளர்கள், மன்னர்கள், பார்ப்பனர்கள் ஆகியோரது தினங்கள்தான் இந்துக்களுக்கு முக்கியமாகும்.

மற்றபடி பொதுமக்கள் தங்கள் பிறந்தநாள், திருமண நாள் கொண்டாடுவது ஆங்கிலேயர்கள் அறிமுகப்படுத்திய பண்பாடு. இதையும் காசு உள்ள நடுத்தர வர்க்கம்தான் கொண்டாடுகிறது. கேக்கோ, பாயசமோ எல்லாம் நுகர்வுக் கலாசாரத்தின் மூலம் பன்னாட்டு நிறுவனங்களுக்குத்தான் லாபம் தருமே ஒழிய, மக்களுக்கல்ல. சர்வதேச மூலதனச் சுரண்டலுக்கு மத லேபிளெல்லாம் கிடையாது. ‘லோகாயதம் பெருகி அராஜகங்கள் வளருவது’ என்று, சாரத்தில் பார்ப்பனிய எதிர்ப்புப் போராட்டங்களைத்தான் குறிப்பிடுகிறார்கள். அதாவது சாதி, தீண்டாமை எதிர்ப்பு, இந்தி எதிர்ப்பு, பெண்ணடிமைத்தன எதிர்ப்பு, இட ஒதுக்கீடு ஆதரவு, தேசிய இன ஒடுக்குமுறை எதிர்ப்பு ஆகிய போராட்டங்கள்தான் அவர்களுக்குக் கலிகாலத்தை உணர்த்துகின்றது.

மற்றபடி கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்றவைகள் மதமாற்றத்தினால் நடக்கிறது என்றால் எதைச் சொல்லி அழ? பிரேமானந்தா, சந்திராசுவாமி, சாயிபாபா, ஜெயா – சசி கும்பல், அர்ஷத்மேத்தா, ஜெயின் சகோதரர்கள், சம்பல் கொள்ளையர்கள், இன்டர்நெட் விபச்சாரி பிரகாஷ் போன்றோர்களெல்லாம் ரகசியமாக மதம் மாறியவர்களா? இதற்கு இராம.கோபாலனைப் போட்டு ஒரு விசாரணைக் கமிஷன் நியமித்து, வெள்ளை அறிக்கை வெளியிடுங்களேன்!

சி.பி.ஐ : சிரிப்புப் போலீஸ் ஆப் இந்தியா !


லோக்கல் போலீசு சரியில்லை, சி.பி.ஐதான் உலகத்தரம் என்று நினைத்துக் கொண்டிருக்கும் மிடில்கிளாஸ் மாதவன்கள் இனியாவது உண்மை என்ன என்பதை தெரிந்து கொள்ளட்டும்.

சி.பி.ஐ என்றழைக்கப்படும் மத்தியப் புலனாய்வுத் துறை பற்றி நீங்கள் கேள்விப்படாமல் இருக்க முடியாது. ஊர் நாட்டில் ஓட்டுக் கட்சித் தலைவர்கள் வீட்டிலிருந்து காணாமல் போன ஜிம்மியில் ஆரம்பித்து லோக்கல் போலீசால் ‘கண்டு’ பிடிக்க முடியாத கோழி களவாணி வரை துப்புத் துலக்கிக் கண்டு பிடிக்கும் சூராதி சூரர்களாக இவர்களை ஊடகங்கள் உங்களுக்கு அறிமுகப்படுத்தியிருக்கலாம். கருணாநிதி வீட்டில் சி.பி.ஐ விசாரணை ரெய்டு என்றும் ஏதோ இந்த சூரப்புலிகளைப் பார்த்து கருணாநிதி குடும்பமே நடுநடுங்கி வீட்டின் மூலையில் குந்த வைத்து உட்கார்ந்திருப்பது போல தினமலர் அடிக்கடி குதூகலிப்பதையும் கூட நீங்கள் பார்த்திருப்பீர்கள்.

தமிழ்த் திரையுலகின் தீவிரவாத ஒழிப்புப் பிரிவின் சூப்பர் கமாண்டோவான கேப்டன் விஜயகாந்த் பல படங்களில் டில்லி சி.பி.ஐ அதிகாரியாகத் தோன்றி பாகிஸ்தான் தீவிரவாதியிடம் தங்கத் தமிழில் லெச்சர் அடித்தே டயர்டாக்கி மடக்கிப் பிடிப்பதைப் பார்த்திருப்பீர்கள். மலையாளத் திரைப்படங்களிலும் கூட மம்மூட்டி மோகன்லால் வகையறாக்கள் சி.பி.ஐ அதிகாரிகளாகத் தோன்றி உள்ளூர் போலீசால் கண்டே பிடிக்கமுடியாத பல்வேறு சிக்கலான வழக்குகளைத் தீர்த்துக் கொடுத்திருக்கிறார்கள். சில ஆண்டுகளுக்கு முன் ஏதோ கோழியோ ஆடோ களவு போன மேட்டரில் சி.பி.ஐ விசாரணை கோரி தொடுக்கப்பட்ட ஒரு வழக்கில் “அட விடுங்கப்பா… இவங்க எத்தனை ஊர் பஞ்சாயத்தைத் தான் தீர்க்க முடியும்” என்று சி.பி.ஐயின் மேல் கருணையோடு ஒரு நீதிபதி தீர்ப்பு கூட வழங்கியிருந்தார்.

இப்படியாக சி.பி.ஐ பற்றிய ஒரு பயங்கரமான இமேஜும், அவர்களின் விசாரணையின் மேல் மக்களிடையே ஒரு நம்பிக்கையையும் பல ஆண்டுகளாகவே திட்டமிட்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது. எதுக்கு இத்தனை பில்டப் என்று நீங்கள் யோசிப்பது புரிகிறது. இப்படி ஊடகங்களாலும் சினிமா உலகத்தாலும் ஷெர்லக் ஹோம்சுக்கு இணையான துப்பறிவாளர்களாக ஜாக்கி வைத்து தூக்கிப் பிடிக்கப்பட்ட சி.பி.ஐ, சமீப நாட்களாக மக்கள் நினைத்துக் கொண்டிருப்பது போல் அல்லாமல் எதார்த்தத்தில் சீரியஸான காமெடி பீஸ்களாகத் தான் இருக்கிறார்கள் என்கிற உண்மை இப்போது அம்பலமாகியிருக்கிறது.

ஹால் டிக்கட்டை மறந்து விட்டு பரீட்சைக்குப் போன கதை!
கிம் டேவி, புரூலியா, பீட்டர் ப்ளீச், ஆனந்த மார்க்கம் போன்ற பெயர்களை நீங்கள் மறந்திருக்கலாம்; எனவே ஒரு சிறிய நினைவூட்டல். 1995-ம் ஆண்டின் டிசம்பர் மாதத்தில் மேற்குவங்க மாநிலம் புரூலியா மாவட்டத்தில் திடீர் என்று ஒரு மர்ம விமானத்தில் வந்த சிலர் ஆயுத மூட்டைகளைப் போட்டனர். அப்போது அது தேசிய அளவில் மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்டது. அந்த சமயத்தில் அம்மாநிலத்தில் அதிகாரத்திலிருந்த சி.பி.எம் கட்சியை எதிர்த்துப் போராடிக் கொண்டிருந்த ஆனந்த மார்க்கம் என்கிற தீவிரவாத சாமியார் கும்பலுக்குத் தான் இந்த ஆயுத மூட்டைகள் போடப்பட்டதாக சொல்லப்பட்டது. பின்னர் ஆயுதத்தைப் போட்ட விமானம் திரும்பும் வழியில் மடக்கிய சி.பி.ஐ அதிகாரிகள், அதில் பயணம் செய்த விமானக் குழுவினரையும் ஆயுத வியாபாரி பீட்டர் ப்லீச் மற்றும் ஆயுதக் கடத்தலின் சூத்ரதாரியான நீல்ஸ் க்ரிஸ்டியன் நீல்ஸன் என்கிற கிம் டேவியையும் கைது செய்தது.

கைது செய்யப்பட்டவர்களில் கிம் டேவி ‘மர்மமான’ முறையில் தப்பியோடி விட்டான் என்று சொன்ன சி.பி.ஐ, அவனைத் தேடி உலகெல்லாம் ஆட்களை அனுப்பிக் கொண்டிருந்தது. சரி. அடுத்து கையிலிருக்கும் பீட்டர் ப்ளீச்சையாவது விசாரித்து தண்டித்திருக்கும் என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கலாம் – மன்னிக்கவும். அவருக்கு ஜனாதிபதியின் மன்னிப்பை வாங்கிக் கொடுத்து பத்திரமாக வழியனுப்பி வைத்தது.

இதற்கிடையே இப்போது திடீர் ஞானோதயம் பெற்று டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகனில் ‘தலைமறைவாக’ இருக்கும் கிம் டேவியைப் பிடிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக உதார் காட்ட ஆரம்பித்தது சி.பி.ஐ. இதைக் கேள்விப்பட்ட கிம் டேவி, கடந்த மாதம் இந்திய செய்தித் தொலைக்காட்சிகளில் தோன்றி, தான் மறைந்து வாழவில்லையென்றும், பல ஆண்டுகளாக கோபன்ஹேகனில் தான் வாழ்ந்து வருவதாகவும், அங்கே பத்திரிகைகளுக்கு பேட்டியளித்துக் கொண்டும் நீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்து கொண்டும் வெளிப்படையாகவே செயல்பட்டுக் கொண்டிருந்ததாகவும் தெரிவித்தார். மேலும், தான் கோபன் ஹேகனில் இருப்பது சி.பி.ஐக்குத் தெரியும் என்றும் அப்படியிருந்தும், சி.பி.ஐ அதிகாரிகள் இந்திய மக்களின் வரிப்பணத்தில் தன்னைத் ‘தேடி’ இத்தனை ஆண்டுகளாக உலகச் சுற்றுலா போய்க் கொண்டிருந்தாரத்கள் என்று இந்திய துப்பறியும் புலிகளின் டவுசரைக் கிழித்தார்.

இன்னும் ஒரு படி மேலே போய், தான் ஒன்றும் தப்பிக்கவில்லையென்றும், தன்னை பாதுகாப்பாக நேபாள எல்லைக்கு அழைத்துச் சென்று வழியனுப்பி வைத்ததே சி.பி.ஐ தான் என்றும் உண்மையை போட்டு உடைத்தார். ஏனெனில் அப்போது மத்தியிலிருந்த காங்கிரசு அரசு மேற்கு வங்கத்திலிருக்கும் சி.பி.எம் அரசைக் கலைப்பதற்கு ஒரு முகாந்திரம் வேண்டுமென்று, திட்டமிட்டே இந்த ஆயுதக் கடத்தலை நடத்தியதாகவும், அவர்கள் எதிர்பார்த்தது போல் நடவாமல் மொத்த திட்டமும் சொதப்பலாகி விட்டதால், தன்னை நீதிமன்றத்தில் நிறுத்தி விசாரிக்க பயந்து கொண்டு தான் தன்னை பாதுகாப்பாக தப்ப விட்டனர் என்றும் சொல்கிறார்.

இதற்கு மேல் இவனை விட்டால் மிஞ்சியிருக்கும் கோவணத்தையும் உருவி விடுவான் என்று முடிவு கட்டிய சி.பி.ஐ, உடனடியாக கிம் டேவியை டென்மார்க்கிலிருந்து கைது செய்து அழைத்து வர ஒரு குழுவை அனுப்புகிறது. உடனே உங்களுக்கு காஷ்மீருக்குள் புகுந்து தீவிரவாதியை தோளில் தூக்கிப் போட்டுக் கொண்டு வரும் விஜயகாந்த் நினைவுக்கு வரலாம் – முதலில் அந்தக் கற்பனைகளை எல்லாம் ரப்பர் வைத்து அழித்து விடுங்கள். இங்கேயிருந்து விமானம் ஏறி இன்னொரு நாட்டுக்கு பயங்கரமான தீவிரவாதியைப் பிடித்து வரப் போன சூரப்புலிகள் போகும் போது அதற்குத் தேவையான வாரன்டை எடுத்துப் போக ‘மறந்து’ விட்டார்களாம். ஏதோ ஹால் டிக்கட்டை மறந்து விட்டு பரீட்சைக்குப் போன அப்பாவி மாணவன் போல அங்கே டென்மார்க் அதிகாரிகள் முன் பல்லைக் காட்டிக் கொண்டும் பின் மண்டையைச் சொறிந்து கொண்டும் இப்போது நின்று கொண்டிருக்கிறார்கள்.

இதுக்குப் பேசாமல் விஜயகாந்தையே அனுப்பியிருக்கலாம். டென்மார்க் காவல் துறையினரிடம் தமிழில் வாதாடி தீவிரவாதியை மட்டுமல்ல எக்ஸ்ட்ரா பிட்டிங்காக அந்த நாட்டு பிரதமரையே கூட தூக்கி வந்திருப்பார். இப்ப பாருங்க வட போச்சு.

ஊரெல்லாம் தேடிவிட்டு தன் தொப்பைக்குக் கீழே குனிந்து பார்க்க மறந்த கதை
சமீபத்தில் ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்ட உடன், பாகிஸ்தானில் தான் உலகத்துத் தீவிரவாதிகளெல்லாம் இருப்பது போலவும் ஒரு சீன் போட்டது இந்திய வெளியுறவுத்துறை. இதற்காக பாகிஸ்தானில் பதுங்கிக் கிடக்கும் ‘அதிபயங்கரமான ஐம்பது தீவிரவாதிகள்’ பட்டியல் ஒன்றைத் தயாரித்த உள்துறை அமைச்சகம், அதைப் பாகிஸ்தான் அரசிடம் கொடுத்து இவர்களைப் பிடித்துக் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டது. அதைத் தொடர்ந்து களத்திலிறங்கிய இந்திய முதலாளித்துவ ஊடகங்கள், தமது பஜனையை ஆரம்பித்து சிறப்பாக நடத்தி வந்தது.

இந்நிலையில், பாகிஸ்தானில் பதுங்கியிருப்பதாகச் சொல்லப்பட்ட மேற்படி தீவிரவாதிகள் பட்டியலில் இருக்கும் வாஜுல் காமர் கான் என்பவர், மும்பையின் அருகே உள்ள தானேவில் தான் பல ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறார் என்கிற உண்மை ஊடகங்களில் அம்பலமானது. உடனே இதற்கு விளக்கமளித்த மத்திய உள்துறை அமைச்சர் செட்டிநாட்டுச் சிதம்பரம், இது ஏதோ சின்னத் தவறு தான் என்றும், தெரியாமல் நடந்து விட்ட இத்தவறைப் பற்றி தீவிரமாக விசாரித்து சம்பந்தப்பட்டவர்களைத் தண்டிப்பதாகவும், நடந்ததற்குத் தானே பொறுப்பேற்றுக் கொள்வதாகவும் அறிவித்தார்.

அவர் சொல்லி வாய் மூடவில்லை. அதற்குள் அதே பட்டியலில் இருக்கும் இன்னொரு தீவிரவாதியான பெரோஸ் அப்துல் ரஷீத் கானும் இந்தியாவில் தான் இருக்கிறார் என்கிற உண்மை அம்பலமாகிறது. முதல் நபராவது ஒளிந்து வாழும் நபர். இரண்டாவது நபரோ ஏற்கனவே இந்த வழக்கில் கைதாகி சிறையில் இருப்பவர்.

ஏற்கனவே கைதான பெரோஸ் கான் மீது சர்வதேச போலீஸில் சொல்லி ஒரு பிடி வாரண்ட்டையும் வாங்கி வைத்துக் கொண்டு உலகமெல்லாம் தேடியலைந்துள்ளது சி.பி.ஐ. அது மட்டுமல்லாமல், இந்தியச் சிறையிலிருக்கும் இந்த நபர் பாகிஸ்தானில் ‘ஒளிந்து’ கொண்டிருப்பதாகவும், பாகிஸ்தான் அரசு இந்தத் தீவிரவாதியைப் பிடிக்க ஒத்துழைக்கவில்லை என்றும் எனவே பாகிஸ்தான் தீவிரவாத நாடு என்றும் தீவிரமாக பிரச்சாரமும் செய்து வந்தது.

தேடப்படுவது யார் பிடிபட்டது யார் என்கிற சாதாரண விவரத்தைக் கூட சரிபார்க்கத் துப்பில்லாத இந்த விசாரணை அமைப்பு தான் ஸ்பெக்ட்ரம், ஆதர்ஷ் உள்ளிட்ட பல்வேறு ஊழல் முறைகேடுகளை விசாரித்து வருகிறது என்பதை வாசர்களுக்கு நினைவூட்டுகிறோம். தீவிரமான போலீஸ் பயிற்சி, ஒற்றறிவதிலும், உளவுத் தகவல்களைச் சேகரிப்பதிலும், விசாரணை முறைகளிலும் உலகத்தரமான பயிற்சி, என்று சகல வகைகளிலும் தேர்ச்சி பெற்ற தொழில் முறை நிறுவனமே இந்த லட்சணத்தில் இருக்கும் போது, அண்ணா ஹசாரே உருவாக்க நினைக்கும் ஜன் லோக்பால் விசாரணை அமைப்பு எந்த லட்சணத்தில் இருக்கும் என்பதை வாசகர்கள் முடிவுக்கே விட்டு விடுகிறோம்.

சி.பி.ஐ, ஐ.பி, என்.ஐ.ஏ உள்ளிட்ட புலனாய்வு அமைப்புகளும் உளவுப் பிரிவும் உண்மையில் குற்றத்தடுப்பு, உண்மையைக் கண்டறிதல் என்கிற மக்கள் நல நோக்குக்காக இல்லாமல் வெறும் ஆளும் வர்க்க சேவைக்கென்றே வளர்த்தெடுக்கப்பட்டிருப்பதன் விளைவு தான் இப்போதைய இந்த அவமானங்களுக்குக் காரணம். ஃபோபார்ஸ் முதல் ரிலையன்சு வரை பல்வேறு ஊழல் வழக்குகளில் குற்றவாளிகளையும், முதலாளிகளையும் காப்பாற்றிய நிறுவனம்தான் இந்த சி.பி.ஐ.

ஆட்சிக்கு எதிரானவர்களைக் கண்காணிப்பது, மிரட்டுவது என்பதற்காகவே பயன்படுத்தப்படும் இந்தக் கருவிகள், என்ன தான் பயிற்சியளிக்கப்பட்டாலும் கடைசியில் இப்படி காமெடிப் பீஸுகளாக சீரழிந்து போவது தவிர்க்க முடியாது என்பதே நிதர்சனம். லோக்கல் போலீசு சரியில்லை, சி.பி.ஐதான் உலகத்தரம் என்று நினைத்துக் கொண்டிருக்கும் மிடில்கிளாஸ் மாதவன்கள் இனியாவது உண்மை என்ன என்பதை தெரிந்து கொள்ளட்டும்.

தமிழக மக்களை அவர்களே வெட்கப்படுமளவு பாராட்டினால் தகுமா?


புரட்சித் தலைவியின் பொற்பாதங்களை வணங்கி தினமணியும், ஹிந்துவும் ஜால்ரா சங்கீதத்தை ஆரம்பித்துவிட்டன. அந்த இசையின் இம்சையோடு தேர்தல் முடிவு குறித்த ஓர் ஆய்வு!

கேள்வி 1:
இது அ.இ.அ.தி.மு.க வின் அபார வெற்றியா!
இல்லை தி.மு.க வின் பயங்கர தோல்வியா???

கேள்வி 2:
என்ன காரணம்?

கேள்வி 3:
இந்த வெற்றியில் விஜய்க்கு பங்கு எந்த அளவு?

– மஹாதீர் முஹம்து

_____________________________________________________________________

அன்புள்ள மஹாதீர் முஹம்து

இந்தத் தேர்தல் முடிவில் இளைய தளபதிக்கு எந்தப் பங்கும் இல்லை. எனினும் ஆத்தா வெற்றி பெற்றதும் நெஞ்சிரைக்க ஓடி வந்து வாழ்த்து தெரிவித்து விட்டு இந்த தேர்தலுக்கு வேலைசெய்த தனது இரசிகக் குஞ்சுகளுக்கு அவர் வலிந்து நன்றியை தெரிவித்தார். எல்லாம் ஜெயிக்கிற குதிரையில் பணம் கட்டும் காரியவாதம்தான். இத்தனைக்கும் அவர் தேர்தலில் வெளிப்படையாக பிரச்சாரமோ, டி.வியில் தோன்றி வேண்டுகோளோ கூட தெரிவிக்கவில்லை. எல்லாம் மழுப்பலான அறிக்கைகளோடு முடித்துக் கொண்டார். ஒரு வேளை தி.மு.க மீண்டும் வெற்றி பெற்றால் என்ன நடக்குமோ என்ற சுயநல பயம்தான்.

இதையே சில அரசியலற்ற காரியவாதிகள் “இதற்கு மேல் விஜய் என்ன செய்ய முடியும்” என்று ‘தத்துவ’ விளக்கமும் கொடுப்பார்கள். ஒரு வேளை விஜய் வெளிப்படையாக பிரச்சாரம் செய்திருந்தாலும் அவருக்காக மட்டும் மக்கள் வாக்குகள் சிலிர்ப்புடன் அணிவகுத்திருக்காது. தமிழ்நாட்டில் நட்சத்திரங்கள் அரசியலில் செல்வாக்கு செலுத்தும் நிலை எம்.ஜி.ஆரோடு முடிந்து விட்டது. ஆனானப்பட்ட ரஜினயே ப்யூஸ் போன நிலையில், விஜயகாந்தெல்லாம் கூட்டணி தயவில் குப்பை கொட்ட வேண்டிய காலத்தில் விஜயெல்லாம் எம்மாத்திரம்? ஆனால் அப்பா எஸ்.ஏ. சந்திரசேகரன் ஒரு தேர்ந்த காரியவாதியாக தனது மகன் பிற்காலத்தில் முதலமைச்சராக வருவான் என்று கனவு காண்கிறார். அது தமிழ்சினிமா கதைமாந்தர்கள் சைக்கிளை மிதித்து ஒரு வட்டத்தில் முதலமைச்சராக எழுவதான ரீல் போன்றது.

இந்த வெத்து வேட்டு ஹீரோக்களை விட ஆனது ஆகட்டும் என்று களத்தில் இறங்கிய காமெடியன் வடிவேலு எவ்வளவோ மேல். இதற்கு மேல் விஜய்க்கு முக்கியத்துவம் கொடுப்பதோ, விளக்கம் அளிப்பதோ தமிழுக்கும், வினவு வாசகருக்கும் இழைக்கப்படும் அநீதி. இந்த பதில் கூட மஹாதீர் முஹம்து போன்ற நல்லவர்கள் கேட்டு விட்டதினாலே எழுதியதுதான். ________________________________________________

இனி முக்கிய கேள்விக்கு வருவோம். இந்த தேர்தல் வெற்றியை எப்படி பார்ப்பது? இது குறித்து வினவில் முன்னர் வந்த இடுகைகளில் சில விசயங்களை கோடிட்டு காண்பித்திருக்கிறோம். இங்கு சற்று விரிவாக…..

_________________________________________________

அ.தி.மு.கவின் மாபெரும் வெற்றி, தி.மு.வின் மரண அடி தோல்வி இரண்டையும் வாக்குப்பதிவு, ஊழல், குடும்ப ஆட்சி, மக்களின் மௌனப் புரட்சி, தேர்தல் கமிஷன்தான் ரியல் ஹீரோ என்று ஒரு பொதுவான ஃபார்முலாவில் மட்டும் வைத்து விட்டு ஊடகங்களும் அறிஞர் பெருமக்களும் எளிமையாக முடித்து விடுகின்றனர். இவையெல்லாம் உண்மையல்ல என்று சொல்ல முடியாது. அதே நேரம் முழு உண்மைதான் என்று கொள்ளவும் இயலாது.

தி.மு.க பிடிக்கவில்லை என்றால் அ.தி.மு.க, அ.தி.மு.க பிடிக்கவில்லையென்றால் தி.மு.க இதைத் தாண்டி தமிழக மக்கள் அதி புரட்சிகரமாக யோசிப்பதற்கு வழி ஏதும் இருக்கிறதா? இதுவும் உண்மையல்ல என்று சொல்ல முடியாது. இதையே ஒரு ஃபார்முலாவாகக் கொண்டால் மாத்திப் போடு, மாத்தி யோசி, அது இல்லையினா இது என்றும் கூட இந்த தேர்தல் முடிவுகளை சொல்லலாமே?

இந்த தேர்தலில் வரலாறு காணாத அளவு வாக்குப்பதிவு அதிகம் இருந்தது உண்மைதான். அதனால் ஆளும் கட்சி மீது மக்கள் கடும் சினத்தோடு இருந்திருக்கிறார்கள் என்று ஒரு ஃபார்முலாவையும் இவர்கள் கூறுகிறார்கள். இந்த அதிக வாக்குப்பதிவுக்கும் அந்தக் கடுஞ்சினத்திற்கும் என்ன தொடர்பு? ஏன்? தொடர்பு இல்லையென்றால் வேறு என்ன காரணம்?

நண்பர்களே, தேர்தலையும், அரசியலையும் ஒரு சில கணக்கு விவரங்கள், நல்லது கெட்டது, ஊழல் நேர்மை, என்று சில வாய்ப்பாடுகளோடு மட்டும் சிந்திப்பதற்கு பழக்கப்படுத்தப் பட்டுள்ளோம். தேர்தல் அரசியலோடு தொடர்புடைய சமூக இயக்கம், மக்கள் மனவோட்டம் என்ன விதிமுறைகளோடு இயங்குகிறது, என்ன விசைகளால் உந்திச் செல்லப்படுகிறது என்பனவற்றை ஆய்வு செய்து கண்டுபிடித்தால் மட்டுமே இந்த தேர்தலில் வெற்றியின் தரத்தையும், தோல்வியின் மகிமையையும் நாம் கொஞ்சமாவது அறிந்து கொள்வோம்.

இந்த தேர்தல் முடிவினை வைத்து தினமணி பத்திரிகை, “”தமிழனென்று சொல்லடா, தலைநிமிர்ந்து நில்லடா!” என்கிற நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளையின் வரிகளுக்கு உயிர் கொடுத்திருக்கும் தமிழக வாக்காளப் பெருமக்களை “”தினமணி” பெருமிதத்துடன் தலைவணங்கிப் பாராட்டுகிறது!” என்று மெய்சிலிர்க்கிறது. தமிழக மக்கள் பயங்கரமாக ஆர்த்தெழுந்து ஊழல், குடும்ப ஆட்சிக்கு எதிராக ஒரு ருத்ரதாண்டவமே ஆடியிருக்கிறார்கள் என்று வார்த்தைகளே வெட்கப்படுமளவு உச்சிமோருகிறது தினமணி.

அதிலும் பணம் கொடுத்து வாக்களிப்பவர்கள் என்ற அவப்பெயரை துடைத்தெறிந்து இந்தியாவுக்கே முன்னுதாரணமாக மாறி நாட்டையே காப்பாற்றிவிட்டார்களாம், தமிழக மக்கள்! இந்த வரலாறு காணாத தோல்விக்கு காரணமென்று தி.மு.கவின் குற்றப் பட்டியல்களை பட்டியலிடும் தினமணி, இந்த வெற்றிக்கு அருகதையானவர்தானா என்று ஜெயலலிதாவைப் பற்றி மறந்தும் கூட எழுதவில்லை. மட்டுமல்ல, சசிகலாவின் குடும்ப ஆதிக்கம் இருந்தாலும் பரவாயில்லை என்று தமிழக மக்கள் ஜெயா கும்பலை வெற்றிபெற வைத்துவிட்டார்களாம். இந்த ‘பரவாயில்லை’ என்பதன் அரசியல் தரத்தை பரிசீலித்துப் பார்க்கும் போது அந்த இமாலாய சாதனையின் அரசியல் வீழ்ச்சியை புரிந்து கொள்ள முடியாதா என்ன?

தி.மு.க படுதோல்வி, அ.தி.மு.க மாபெரும் வெற்றி என்பதை மற்றுமொரு தேர்தல் முடிவாக எடுத்துக் கொண்டு போனால் கூட பிரச்சினை இல்லை. அதை ஜாக்கி வைத்து வானத்துக்கு தூக்குவதையும், தங்களது பல்வேறு அபிலாஷைகளை ஏற்றி அழகு பார்ப்பதையும் பார்த்தால் இவர்கள் அ.தி.மு.கவிற்கு மட்டுமல்ல, தி.மு.கவிற்கும் கருணாநிதியே நினைத்திராத ஆழமான பெருமைகளையெல்லாம் வழங்கி விடுகிறார்கள். தங்களது சொந்த முயற்சியில் எதையும் செய்ய முனையாத, விரும்பாத நடுத்தர வர்க்க அறிவு ஜீவிகள் பாமரர்களின் அரசியல் நடவடிக்கைகளுக்கு மட்டும் பொழிப்புரை, விளக்கம் கொடுத்து தன்னை சூப்பர்மேனாக கருதிக்கொள்ளும் அபத்தத்தைத்தான் சகிக்க முடியவில்லை.

தினமணியின் வானாளாவிய பாராட்டின் விளக்கம் ஜெயலலிதாவின் அணுகுமுறையில் பெறும் ஒளிதான் என்ன? மே 13 வாக்கு எண்ணிக்கை துவங்கி முன்னணி நிலவரம் உறுதியான நிலையில் மதியம் ஊடகங்களை சந்தித்த ஜெயலலிதா என்ன கூறினார்? தி.மு.க ஆட்சி மாநிலத்தை குட்டி சுவராக்கிவிட்டதாம், கஜானா காலியாம், சட்டத்தின் ஆட்சி நடக்கவில்லையாம் என்றெல்லாம் சொல்லிவிட்டு அடுத்து அவர் சொன்னதுதான் முக்கியமானது.

தி.மு.க ஆட்சி முடிந்து தான் ஆட்சிக்கு வந்த 91, 2001, 2011 ஆகிய மூன்று முறையும் இப்படித்தான் மாநிலத்தை மீட்டு வளம் கொழிக்க வைத்தாராம். 91 இல் ஆட்சிக்கு வந்து மாநிலத்தை மேம்படுத்தி அடுத்த தேர்தலில் தோல்வியுற்று 96-இல் ஆட்சி தி.மு.கவிற்கு போனதும் மாநிலம் சீர்கேடு அடைந்ததாம்.

கவனியுங்கள் நண்பர்களே, 91-96 ஆட்சிக்காலத்தில் ஜெயா-சசி கும்பல் ஆட்டம் போட்டதும், முழுத் தமிழகத்தை மொட்டை போட்டதும், பின்னர் வந்த தேர்தலில் அமைச்சர்கள் செருப்படி பட்டதும்தான் வரலாறு. இன்று ஜெயா அதை பொற்காலம் என்கிறார். எனில் பாசிச ஜெயா ஒரு துரும்பளவு கூட மாறவில்லை முன்னிலும் திமிராக பேசுகிறார் என்பதைக்கூடவா தினமணி அம்பிகள் புரிந்து கொள்ள முடியாது?

தினமணி தமிழ் அம்பிகளின் கதை இதுவென்றால் ஹிந்து இங்கிலீஷ் அம்பிகளின் கதையைப் பாருங்கள்! சனிக்கிழமை அன்று ஹிந்து பத்திரிகை தலையங்கத்தில் தினமணியின் கருத்தையே ரொம்பவும் பணிவான மொழியில், பிரச்சினையில்லாமல் எழுதியிருந்தார்கள். அதன் சாரமென்னவென்றால் இந்த ஆட்சி மாற்றம் ஆளுங்கட்சிக்கு எதிரான எதிர்ப்பு அலைதான் என்பதே. கான்வென்டு வர்க்கத்தின் தலைவியான ஜெயலலிதாவுக்கு ஹிந்து பத்திரிகைதான் மிகவும் முக்கியமானது. மற்றவர்கள் பேசினால் கூட கவலையில்லை, ஹிந்து பத்திரிகை இப்படி பேசுகிறார்கள் என்றதும் ஜெயலலிதா ஊடகங்களிடம் பகிரங்கமாக அறிவிக்கிறார்,

“இந்த தேர்தலில் ஆளுங்கட்சிக்கு எதிரான எதிரான அலையால் நான் வெற்றி பெறவில்லை. 2001-2006இல் எனது பொற்கால ஆட்சியை மக்கள் நினைவு கூர்ந்து அந்த ஆட்சி வேண்டுமென்றுதான் எனக்கு வாக்களித்திருக்கிறார்கள்” என்று கூறுகிறார். அடுத்த நாள் இந்த நாலுவரிச் செய்தி ஹிந்து பத்திரிகையில் தலைப்பு செய்தியாக வெளிவருகிறது. இடையில் என்ன நடந்திருக்கும்?

ஏற்கனவே மாலினி பார்த்தசாரதியை எப்படியும் கைது செய்ய வேண்டுமென்று மிரட்டிய ஜெயாவின் தர்பாரை மவுண்ரோடு மகாவிஷ்ணு மறந்திருக்கமாட்டார். அதே போன்று தலையங்கத்தில் இந்த முடிவு எதிர்ப்பு அலை என்று எழுதியது அம்மா காதுக்கு போய் மிரட்டல் வந்திருக்கலாம். அல்லது குடும்ப சண்டையில் மூழ்கியிருக்கும் ராம் தலையங்கத்தின் வரிகளை பார்த்து விட்டு அடுத்த நாளே இதை தணிக்கும் வகையில் இந்த செய்தியை திட்டமிட்டு வெளியிட்டிருக்கலாம். ஏனெனில் இந்த தலைப்புச் செய்தி வேறு எந்த ஊடகங்களிலும் முக்கிய செய்தியாக வெளிவரவில்லை.

ஆக இந்த தேர்தல் முடிவுகள் தனது பொற்கால ஆட்சிக்கு ஏங்கிய மக்களின் விருப்பம் என்று பேசும் ஜெயலலிதாவை , வைத்தியநாதனின் தினமணி மேம்போக்காவாவது கண்டிக்குமா?

சரி, 2001லிருந்து ஐந்து ஆண்டுகாலம் ஆட்சி பொற்காலமா, இல்லை அடக்குமுறைக் காலமா? மதமாற்றத் தடை சட்டம், ஆடு-கோழி பலி தடுப்புச் சட்டம், இலட்சக்கணக்கான அரசு ஊழியர்கள் பதவி நீக்கம் என்று பார்ப்பனிய பாசிசம் ஆட்டம் போட்டது இந்தக் காலம்தான். இதனாலேயே 2004 தேர்தலில் 39 பாராளுமன்றத் தொகுதிகளிலும் அ.தி.மு.க படுதோல்வி அடைந்தது. அதன் பின்னரே ஜெயலலிதா மேற்கண்ட அடக்குமுறைச் சட்டங்களை திரும்பப் பெறுகிறார். வரலாறு இப்படியிருக்க இதுதான் பொற்காலமென்று மக்கள் விரும்புகிறார்கள் என்று ஜெயலலிதா பேசுகிறார் என்றால் யார் மீது உள்ள நம்பிக்கையில்?

எல்லாம் தினமலர், தினமணி, ஹிந்து அடிமை அம்பிகள் மேல் உள்ள நம்பிக்கையில்தான். இல்லையென்றால் இன்று தலையங்கம் எழுதியிருக்கும் தினமணி, ஜெயலலிதாவுக்கு சில பல ஆலோசனைகளை மிக மிகப் பணிவாக எடுத்து வைத்து, இதெல்லாம் ஜெயலலிதாவுக்கு தெரியாதது அல்ல என்று காலில் விழுகிறது. ஏ துப்பு கெட்ட தினமணியே, ” 91இல் ஊழல் செய்தாய், 2001இல் அடக்குமுறை செய்தாய், இந்த முறையாவது ஒழுங்காக ஆளுகின்ற வழியைப் பார்” என்று கூட சொல்வதற்கு உங்களுக்கு தைரியமில்லையா? பிறகு என்ன நீங்கள் தேர்தல் முடிவு குறித்து தமிழனுக்கு வீரப்பட்டம் கொடுக்கிறீர்கள்?

தேர்தலுக்கு முந்தைய கூட்டணி பேரத்தில் காங்கிரசு, தி.மு.க முரண்பாடு வந்து அமைச்சர்கள் ராஜினாமா என்ற நாடகத்தை தினமலர் என்ன எழுதியது தெரியுமா? இது அத்தனையும் ஜெயலலிதாவின் மாஸ்டர் பிளானாம். இது இன்று நேற்றல்ல, ஜெயா கும்பல் ஆட்சியைப் பிடித்தது முதல் இப்படித்தான் பேசுகிறார்கள். ஜெயா ஒரு தைரியமான நபராம். முழு கட்சியும் அவரது காலில் விழுந்து கிடப்பதுதான் அதன் அடையாளமாம். பாசிசத்தையே இப்படி தைரியமென்று வியந்தோதும் அம்பிகள் தமிழ்நாட்டில் மட்டும்தான் இருக்கிறார்கள் என்பதை அறிந்தால் உலகம் காறித் துப்பும்.

கருணாநிதியை எதிர்ப்பதில்தான் கொஞ்சம் அரசியல் இருக்கிறதேயன்றி, ஜெயாவை ஆதரிப்பதில் கொஞ்சம் கூட அரசியல் இல்லை. இதுதான் இந்த தேர்தல் முடிவின் யோக்கியதை. அந்த வகையில் அ.தி.மு.கவின் வெற்றி என்பது ஒரு விபத்துதானே ஒழிய அது நேர்மறையில் நடந்ததல்ல.

ஒப்பீட்டளவில் 96-2001 தி.மு.க ஆட்சி என்பது பெரிய ஊழல்கள், ஏகபோகம், குடும்ப ஆட்சியோ இல்லாமல் இருந்தது. எனினும் 2001 தேர்தலில் தி.மு.க தோற்றது. அதை ஒட்டி தலையங்கம் எழுதிய தினமணி ” இது அதிர்ச்சியூட்டும் தீர்ப்பு, எனினும் ஜனநாயகத்தின் அழகே தனிதான்” என்றது. ஆக தினமணியே ஒத்துக்கொள்ளும் விதத்தில் இருந்த தி.மு.க ஆட்சி தோற்றதற்கு என்ன காரணம்?

பொதுவில் எம்.ஜி.ஆர், அ.தி.மு.க ஆட்சி குறித்து பாமர மக்களிடையே சில மூடநம்பிக்கைகள் உண்டு. ” இவர்கள் ஆட்சிக்காலத்தில்தான் மழை பெய்யும், விலைவாசி குறையும், பணப்புழக்கம் இருக்கும்”. இப்போது கூட ஜெயா டி.வியில் பேசிய ஒரு கட்சிக்காரர் இவற்றையே காரணங்களாக கூறுகிறார். அதாவது எந்த அரசியல் விழுமியங்களுமற்ற ஒரு லும்பன் சிந்தனையைக் கொண்டிருக்கும் பாமரர் கூட்டம் அ.தி.மு.கவின் வாக்கு வங்கியாக எப்போதும் இருக்கிறது. இந்த தேர்தலில் படித்த லும்பன் கூட்டமும் இதில் சேர்ந்திருக்கிறது.

அதனால்தான் இவர்கள் எல்லாரும் கருணாநிதியை திட்டுகிறார்களே தவிர, நேர்மறையில் அம்மா தகுதியானவர் என்று சொல்வதற்கு தயாரில்லை. ஆனால் ஊடகங்கள் அந்த வேலையை பெரும் ஜால்ரா சத்தத்துடன் செய்து வருகின்றன.

சாராமாகக் கூறில் கருணாநிதி தோற்கடிக்கப்பட்டதில் இருக்கும் அரசியல் ஜெயலலிதாவின் வெற்றியில் இல்லை. இவையெல்லாம் வேறுவழியின்றி போடப்பட்ட வாக்குகளால் மட்டும் வரவில்லை. அரசியலற்ற காரியவாதத்தின் செல்வாக்கு காரணமாகவே இது நடந்திருக்கிறது.

ஜெயாவை முசுலீம்களின் காவல் தெய்வமாக அங்கீகரித்த த.மு.மு.கவின் முகத்தில் கரி பூசும் விதமாக இந்த பதவியேற்பு விழாவில் கொலைகார மோடி கலந்து கொள்கிறார். இப்படி இன்னும் ஒரு சில நாட்களில் பழைய ஜெயலலிதாவை நாம் அப்படியே பார்க்கலாம். ஆனாலும் அதற்கும் கூட நமது ஜால்ரா ஊடகங்கள் புதுப்புது விளக்கங்கள் அளிக்கும். ‘அம்மா’ ஆதரவு காரியவாத மக்கள் கூட்டமும் அதை திக்கெட்டும் புகழாய்ப் பரப்பும்.

இந்த தேர்தல் பரப்புரையில் ஜெயா என்ன பேசினார்? ஆசியாவிலேயே முதல் பெரும் பணக்காரக் குடும்பமாக கருணாநிதி குடும்பம் மாறிவிட்டது, ஊழல் செய்வதில் புது சாதனை படைத்து விட்டது என்றெல்லாம் பேசினார் அல்லவா? இப்போது அதன் பொருட்டு என்ன செய்யப் போகிறார்? கருணாநிதி குடும்பத்திலிருந்து அந்த சொத்துக்களை திரும்ப பறிக்கப் போகிறாரா? அது நடக்க வேண்டுமென்றால் ஜெயாவுக்கு எதிராக கருணாநிதி போட்ட வழக்குகளிலேயே நடந்திருக்க வேண்டுமல்லவா? அத்தனையும் ஊத்தி மூடப்பட்ட நிலையில் இப்போது கருணாநிதிக்கு மட்டும் என்ன நடக்கும்?

கடந்த இரண்டு ஆண்டுகளாக மிடாசின் சரக்கு கருணாநிதி அரசாங்கத்தால் கொள்முதல் செய்யப்பட்ட உண்மையை பார்க்கும் போது சன்.டிவியிலிருந்து மாதந்தோறும் ஒரு கப்பம் போகாமாலா இருக்கும்? ஆக தமிழக மக்கள் இவ்வளவு ஆர்த்தெழுந்து வாக்கு போட்டு விரட்டியடித்த கருணாநிதிக்கு என்ன தண்டனை? கருணாநிதியே சொன்னது போல மக்கள் அவருக்கு ஒய்வு கொடுத்ததுதான். ஊழலுக்கு தண்டனை பதவி கிடையாது என்றால் அதன் பெயர் தண்டனையா?

இந்த ‘தண்டனை’யை வாங்கிக் கொடுத்த தமிழக மக்களைப் போய் அவர்களே வெட்கப்படுமளவு பாராட்டினால் தகுமா?

உங்க வரலாற்று பட்டியலில் எங்கிருக்கிறோம்???


காலகாலமாக இந்த சமுகத்தின் அழுக்கை சுமக்க வைத்திடவேன்றே ஒரு சமுகத்தை இந்து மதம் கட்டமைத்து வைத்தது. காத்திருந்தும் செவிடர்களாய், கண்ணிருந்தும் குருடர்களாய், வாயிருந்தும் ஊமைகளாய் சமூகத்தின் விளிம்பில் நிறுத்தி வைக்கப்பட்ட அருந்ததியர்கள் உரிமை கேட்டு எழுந்திட துவங்கினர். அவர்கள் எழும் போதுதான் தெரிந்தது அவரகள் சாதி இந்துக்களுக்கு மட்டுமல தலித்தில் உள்ள சாதி ஆதிக்கவாதிகளுக்கும் எரிச்சலை கொடுத்தார்கள் என.

வாக்காளர் பட்டியலில் வந்திருக்கிறோம் – உங்க
வரலாற்று பட்டியலில் எங்கிருக்கிறோம்
என வரலாற்றை கேள்வி கேட்டு, இத்துனை நாள் அடங்கிக்கிடந்தவன் உள் ஒதுக்கிட்டு கேட்டது, தலித் அண்ணன்களுக்கு கோபத்தை கொடுத்தது. ஒடுக்கப்பட்டவர்களுக்காக போராடிய செங்கொடி இயக்கம் ஒடுக்கப்பட்டவர்களிலும் ஒடுங்கிக்கிடந்த அருந்ததியர்களை விதியில் இறங்கி போராட வைத்தது மட்டுமல்ல அவர்கள் உரிமையை பெற்றுத்தந்தது.
அப்படி போராட்ட காலங்களில் பல இலக்கியங்கள் எழுந்தது. அப்போது தெருக்களில் அருந்ததிய மக்கள் முழுங்கிய ஒரு பாடல் இது.

நாத்தமுன்னா கை பிடிக்குது மூக்க – அந்த
நரகலுல கெடக்குது எங்க வாழ்க்க
போனவுக வந்தவுக பார்க்கவேயில்ல – எங்க
பொருமல்கள ஒரு காதும் கேட்கவேயில்ல
தோட்டிகளை மனுசனோட சேர்கவேயில்ல – எங்க
தோட்டத்திலே ஒரு பூவும் பூக்கவேயில்ல.
(நாத்தமுன்னா)

எதுகலிக்கும் குமட்டல்களை செறிச்சிருக்கிறோம் – நீங்க
ஏசும் போது கண்ணீரோடு சிரித்து நிற்கிறோம்
வாக்காளர் பட்டியலில் வந்திருக்கிறோம் – உங்க
வரலாற்று பட்டியலில் எங்கிருக்கிறோம்

(நாத்தமுன்னா)

பொழுதெல்லாம் உங்களுக்கு புலர்ந்திருக்குது – எங்க
புன்னகையை புடுங்கித்தானே பூசிரிக்குது
வேதனையின் தீ உள்ளே வளர்ந்திருக்குது – எங்க
விடியலுக்கு சூரியன்கள் அதிலிருக்குது

(நாத்தமுன்னா)

தேசத்தின் கொடிகளெல்லாம் தள்ளி நின்றது – எம்மை
செங்கொடியின் கைகள் தானே அள்ளிக் கொண்டது