அம்பேத்கர் நினைவு தின நிகழ்ச்சிகள் தேவையா?


படம்
 
 
உலகில் தோன்றிய மாமனிதர்கள் தங்களுடைய இருப்புக்கு பின்னால் தங்கள் அடையாளங்களினூடாக வாழ்ந்துக்கொண்டே இருக்கிறார்கள். அவர்களை தங்கள் குழுக்களுக்கான அடையாளமாய் மாற்றிக்கொள்ள பலர் தொடர் முயற்சியர்சிகளை மேற்கொண்டாலும் அவர்களது மேதமை அதையும் தாண்டி சமூகம் முழுமைக்குமான உந்துசக்தியாக திகழ்கிறது.
 
அத்தகைய ஆளுமைகளில் அம்பேத்கர் ஒரு மகத்தான இடத்தை பிடித்தவராவார். அவர் சமூகத்தில் பல தளங்களில் தன்னுடைய பங்களிப்பை செய்துள்ளார். அரசியல் அமைப்பு சட்டத்தை உருவாக்கிய சட்ட மேதை. கொலம்பியா பல்கலைக்கழகத்தில் தினமும் 18 மணி நேரம் பயின்று 1916ல் எம்.ஏ பட்டம் பெற்றவர். நியூயார்க் நகரில் 2000 புத்த்கங்களை வாங்கியவர். லண்டன் மியூசியத்தில் காலையில் நுழைந்து இரவு காவலர் வந்து கூறுகிறவரை படித்து டாக்டர் பட்டம் பெற்றவர். இப்படியாக அவரது பரிமாணங்களை சொல்லிக்கொண்டே போகலம் ஆனால் அவர் இந்திய நாட்டில் ஒடுக்கப்பட்ட மக்களாக தள்ளிவைக்கப்பட்ட பெருந்திரள் சமூகத்திற்காக தன் வாழ்நாள் முழுவதையும் அர்பணித்த மாமேதையாவார்.
 
அந்த மக்கத்தான மனிதனின் கல்விச் சிந்தனைகள் கல்வியை நேசிக்கும் அனைவரும் உள்வாங்க வேண்டிய கருத்து பெட்டகங்களாகும். 1891 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி பிறந்து 1956 ஆம் ஆண்டு டிசம்பர் 6 ஆம் தேதி மறைந்த அம்பேத்கர் தன்னுடைய வாழ்நாள் அனுபவத்தினூடாக ஒடுக்கப்பட்ட மக்களின் கல்வியின் அவசியத்தை கண்டுணர்ந்தார். ஆரம்ப கல்வியில் அவர் வயதையத்த குழந்தைகள் கையில் புத்த்கங்களையும், உணவு பைகளையும் சுமந்து வந்த போது அவர் கூடுதலக சாக்கு பையையும் சுமந்து வந்தார். இன்னும் பிற அவலங்கள் அவர் வாழ்க்கையில் கடுமையான உறுதியை கொண்டு வந்தது. விடாப்பிடியுடன் கற்றலின் உச்சிக்கு சென்றார்.
 
தான் மட்டும் கல்வி பெற்றால் போதாது ஒடுக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் அது கிடைத்திட தனது சொந்த முயற்சியால் அவர்களுக்கான கல்வி நிலையங்களை துவக்கினார். 1924 ஆம் ஆண்டு மார்ச் 9 ஆம் தேதி மும்பை தாமோதர் ஹாலில் நடந்த கூட்டத்தில் “பஹிஷ்க்ரித் ஹித்காரினி சபா” என்ற அமைப்பை உருவாகினார். விடுதிகள், நூலகங்கள், படிப்பு வட்டங்கள் ஆகியவைகளை தனது நோக்கமாக இந்த அமைப்பு அறிவித்தது. அந்த அமைப்பின் சார்பில் ஷோலாப்பூருக்கு அருகில் இலவச விடுதி ஒன்று கட்டப்பட்டது. பைகுல்லா என்ற இடத்தில் நூலகம் ஒன்றையும், மாணவர்களுக்காக “வித்யா விலாஸ்” என்ற மாதப்பத்திரிக்கையும் உருவாக்கப்பட்டது. 
 
இதனை தொடர்ந்து 1928 ஆம் ஆண்டு ஜூன் 14 ஆம் தேதி அம்பேத்கர் “ஒடுக்கப்பட்டோர் கல்வி கழகம்” என்ற அமைப்பை துவங்கினார். இதன் சார்பில் ஐந்து விடுதிகள் நடத்தப்பட்டதாக தெரிகிறது. 1945 ஆம் ஆண்டு “பீப்பிள்ஸ் எஜுகேஷ்ன் சொஸைட்டி” என்ற அமைப்பை உருவாக்கினார். தானே முன் நின்று பதினைந்து லட்சம் செலவில் (அரசின் உதவி 6 லட்சம்) ஒரு கல்லூரியை உருவாக்கினார். இந்த அமைப்பு இப்போது ஆல்போல் தழைத்துள்ளது. இப்போது ஒன்பது உயர்நிலைப் பள்ளிகளும், பொறியியல் கல்லூரி. சட்டக் கல்லூரி உட்பட பதினான்கு கல்லூரிகளையும், மூன்று விடுதிகளும் ஒரு தொழிற்பயிற்ச்சிக் கல்லூரியும் நடத்தப்படுகிறது. 
 
சைமன் கமிஷன் இந்தியா வந்த போது, 1813 முதல் பிரிடிஷ் அரசாங்கம் இந்தியாவில் கடைபிடித்த கல்வி கொள்கையை அவர் ஆராய்ந்து கொடுத்த மனு மிகவும் புகழ்பெற்ற மனுவாகும். இந்திய கல்வியை பற்றி ஆராய அமைக்கப்பட்ட ஹன்டர் கமிஷன் புள்ளி விபரங்களை அவர் மிகவும் சாதுர்யமாக பயன்படுத்தி அந்த அறிக்கையை தயாரித்து இருந்தார். அதே போல அவர் 1920 களில் பம்பாய் மாகாண் சட்ட மேலவை விவாதங்களில் கலந்துக்கொண்டு பேசிய பேச்சுக்கள் அவரது கல்வி மீதான அக்கறையை காட்டும்.
 
வெறும் பட்டப் படிப்பு அல்லது சட்டத்துறைப் படிப்பு படித்து முடிப்பது தாழ்த்தப்பட்ட சாதியினருக்கு அதிக பயன் அளிக்காது. அது சாதி இந்துக்களுக்கே பயன்படவில்லை. ஆக விஞ்ஞானத்திலும் தொழில் நுட்பத்திலும் கற்றபதுதான் பயன்தரும். ஆனால் இதை கற்பதற்கான கதவுகள் அவர்களுக்கு அடைக்கப்பட்டிருக்கும். இது அவர்களது சக்திக்கு அப்பாற்பட்டது. எனவே அரசு உதவி இல்லாமல் இது சாத்தியமில்லை என அவர் வாதாடினார்.  
 
கல்வி அரசின் கையில் இருக்கவேண்டும் என அவர் விடாபிடியாக இருந்த காரணம் அப்போதுதான் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு கொஞ்சமேனும் கல்வி கிடைக்கும் என உறுதியா நம்பினார். அது ஒருவகையில் உண்மையும் கூட. ஆனால் இந்திய சாதி அமைப்பை கலைக்க அல்லது சீர்குலைக்க விரும்பாத ஆங்கிலேயர்கள் ஒடுக்கப்பட்ட மக்கள் கல்வியில் போதிய ஆர்வம் செலுத்தவில்லை.   
 
இதற்கு சிறந்த உதாரணத்தை அவர் சைமன் கமிஷனுக்கு கொடுத்த் அறிக்கையிலிருந்து பார்க்கலாம்..
 
“இப்போது நாம் நமது கவனத்தை ஓர் உண்மையின்பால் செலுத்த வேண்டும்; இதுவரை நாம் பெரிதும் அலட்சியப்படுத்தி வந்த உண்மை அது; இதனை நாம் ஒப்புக் கொள்ளதான் வேண்டும்; அந்த அசைக்க, மறுக்க முடியாத உண்மை இதுதான்; வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திற்கும் பெரிது உகந்ததான, பயனுள்ள, நடைமுறைக்கு ஏற்ற கல்வி அறிவை மிகப்பெரும் திரளான மக்களுக்குக் கிடைக்கச் செய்வது மிக மிக அவசியம்; எத்தகைய கல்வியையும் தங்களது முயற்சியினால் கிடைக்கப் பெற இயலாத துர்பாக்கியசாலிகளாக அவர்கள் இருந்து வருகிறார்கள்” என 1854 ஆம் ஆண்டு ஜூலை 19 ஆம் தேதி இந்திய மக்களுக்கு கல்வியை கொடுக்க பிரிடிஷ் அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பது உண்மையா என அவர் கேட்டார். அப்படி இந்த கவலை உண்மையெனில் இது யாருகான கவலை? சாதி இந்துக்களுக்கும் பிறருக்குமா? அப்படியெனில் தலித்துக்கள் உங்களுக்கு சுமையா? என மறைமுகமாக கேட்டார்.
 
இவைகளை ஆதாரங்களுடன் அடுக்கினார்…
 
1881- 82 கல்வியாண்டை அய்வு செய்து அவர் கணக்கிட்டார். அப்போது தொடக்க கல்வி பயின்றவரகள் மொத்தம் 3,15,635 பேர். கிறித்தவர்கள், பிராமணர்கள், இதர இந்துக்கள், முகமதியரக்ள், பார்சிகள், ஆதிவாசிகளும் மலைசாதியினரும், கீழ்சாதி இந்துக்கள், யூதர்களும் ஏனையோரும் என பட்டியல் இட்டதில் தலித்துக்கள் 0.87 சதவிதமே படித்தனர். அதாவது இந்த மொத்த எண்ணிக்கையில் 2,862 பேர் மட்டுமே. (பிராமணர்கள் 20.17 சதம்.)
 
அப்போது நடுநிலைப் பளிகளில் கல்வி பயின்றவரக்ள் மொத்தம் 11,254 பேர். கிறித்தவர்கள், பிராமணர்கள், இதர இந்துக்கள், முகமதியரக்ள், பார்சிகள், ஆதிவாசிகளும் மலைசாதியினரும், கீழ்சாதி இந்துக்கள், யூதர்களும் ஏனையோரும் என பட்டியல் இட்டதில் தலித்துக்கள் 0.14 சதவிதமே படித்தனர். அதாவது இந்த மொத்த எண்ணிக்கையில் 17 பேர் மட்டுமே. (பிரமணர்கள் 30.70 சதம்.)
 
அப்போது உயர்நிலைப் பள்ளியில் கல்வி பயின்றவரக்ள் மொத்தம் 4959 பேர். கிறித்தவர்கள், பிராமணர்கள், இதர இந்துக்கள், முகமதியரக்ள், பார்சிகள், ஆதிவாசிகளும் மலைசாதியினரும், கீழ்சாதி இந்துக்கள், யூதர்களும் ஏனையோரும் என பட்டியல் இட்டதில் தலித்துக்கள் 0.00 சதவிதமே படித்தனர். அதாவது இந்த மொத்த எண்ணிக்கையில் ஒருவர்கூட இல்லை. (பிரமணர்கள் 40.79 சதம்.)
 
அப்போது கல்லூரியில் பயின்றவரக்ள் மொத்தம் 480 பேர். கிறித்தவர்கள், பிராமணர்கள், இதர இந்துக்கள், முகமதியரக்ள், பார்சிகள், ஆதிவாசிகளும் மலைசாதியினரும், கீழ்சாதி இந்துக்கள், யூதர்களும் ஏனையோரும் என பட்டியல் இட்டதில் தலித்துக்கள், 0.00 சதவிதமே படித்தனர். அதாவது இந்த மொத்த எண்ணிக்கையில் எவரும் இல்லை. (பிரமணர்கள் 50.05 சதம்.)
 
ஆக பிரிடிஷ்காரர்கள் இவைகளை கவனிக்க வேண்டுமென கூறினார். அவரது கொள்கை ஒடுக்கப்பட மக்களுக்கு கல்வி கொடுப்பதும், அவர்களை வாழ்க்கையில் முன்னேற்றுவதும் என இருந்த காரணத்தினால் தனது வாழ்வியல் அனுபவ அடிப்படையில் சாதி இந்துக்களை சந்தேகக் கண்ணோடு பார்த்தார். சாதி இந்துக்கள் தாழ்த்தப்பட்ட சமூகத்தை எப்போதும் அடக்கியே வைத்திருப்பார்கள் என்ற உண்மையை கண்டுணர்ந்தார். 
 
இன்றும் அதுதான் நடக்கிறது. அறிவு ஜீவிகளாக தங்களை புறிந்துக் கொள்கிற ஐ.ஐ.டி “டுபாக்கூர்கள்” முதல் மதிப்பெண் பெறும் தலித் மாணவனை கோட்டா அடிப்படையில் தள்ளிவைத்து, அவர்கள் இடத்தை பரித்து பிழைத்துக்கொண்டிருக்கிறார்கள்.
 
இப்போது சொல்லுங்கள் அன்றைய கல்வியை, சமூக நிலைகளை ஆய்வு செய்த அம்பேத்கர் போல இன்றைய கல்வியையும், சமூகத்தையும் நாம் ஆய்வு செய்யவேண்டுமா இல்லையா?  அவரது நினைவு தினமான டிசம்பர் 6 ஆம் தேதியை ஏன் ஒரு துவக்கமாக நாம் எடுத்துக்கொள்ளக்கூடாது?! 
 
ஆகவே கனவான்களே! இனி அம்பேத்கர் நினைவு தின நிகழ்ச்சிகள் தேவையா? இல்லையா? நீங்களே முடிவு செய்யுங்கள்.

வன்னிய குல ஷத்திரியர்கள்


ன்னியர்களை மணமுடிக்கும் தலித்துக்களின் காதலை நாடகக்காதல் என்று வெறி கொண்டு எதிர்க்கும் பாமக, இதற்காக தமிழகமெங்கும் ஆதிக்க சாதி வெறியர்களை அணிதிரட்டி வருவது நமக்கு தெரியும். இதற்காகவே தருமபுரி தலித் இளைஞரான இளவரசனிடம் இருந்து வன்னியப் பெண்ணான திவ்யாவை மிரட்டி பிரித்து வைத்து அழகு பார்த்தவர்கள் இந்த வன்னிய குல ஷத்திரியர்கள் ! நிர்ப்பந்தத்தில் பேசும் திவ்யாவின் அவலத்தை வைத்தே வன்னிய மானம் மீட்கப்பட்டதாக துள்ளிக் குதிப்பவர்கள் இந்த சாதி வெறியர்கள்.

ஆனாலும் வரலாறு அவர்களின் துள்ளலை எத்தனை நாட்களுக்குத்தான் அனுமதிக்கும்? சொந்த சாதியில் பெற்றோர், உற்றோர் உறவினர் பார்த்து திருமணம் செய்து கொண்டு நாடகக் காதலை எதிர்க்கும் பாமகவினர் தமது சொந்த வாழ்க்கையில் எத்தகைய ஒழுக்கத்தை கடைபிடிக்கின்றனர்? இதோ கொலை செய்யப்பட்ட ஆறுமுகத்தின் கதையை படியுங்கள்!

அரசியல் ரவுடி

திடீர்ப் பணக்கார அரசியல் ரவுடிகளின் பாட்டாளி மக்கள் கட்சி.

ஆத்தூர் அருகே கல்பகனூர் புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் 47 வயதான ஆறுமுகம். அந்தப் பகுதியில் பாட்டாளி மக்கள் கட்சியின் முக்கிய பிரமுகராக விளங்கிய இவர் பா.ம.க. நடத்திய அனைத்துப் போராட்டங்களிலும் கலந்து கொண்டு கைதானவர்.

மே மாதம் காதலுக்கு எதிராக போராட்டங்கள் நடத்திய டாக்டர் ராமதாஸ் கைது செய்யப்பட்டு வெயிலுக்கு அஞ்சி திருச்சி சிறையில் இருந்த போது மேற்படி ஆறுமுகமும் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்திருக்கிறார். மே 22-ம் தேதி நடந்த அவரது மகள் திருமணத்துக்குக் கூட சிறையில் இருந்து வெளியில் வர முடியாமல் அவர் இல்லாமல் திருமணம் நடந்திருக்கிறது. பின்னர் மே 27-ம் தேதி நிபந்தனை ஜாமீனில் வெளிவந்து ஆத்தூர் போலீஸ் நிலையத்துக்கு சென்று கையெழுத்து போட்டு வந்திருக்கிறார். இப்படி பாமக கொள்கையிலும், போராட்டங்களிலும் புடம் போடப்பட்ட மாபெரும் வன்னிய குல ஷத்திரிய வீரர்தான் இந்த ஆறுமுகம்.

கள்ளக் காதலுக்கும் நாடகக் காதலுக்கும் எதிரான பா.ம.க.வின் உண்மையான களப் போராளியான ஆறுமுகம் மே மாதம் 30-ம் தேதி கொத்தாம்பாடி வழியாகச் செல்லும் வசிஷ்ட நதிக்கரையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது உடல் அருகே வளையல்கள் உடைந்து கிடந்ததால் ஆறுமுகத்தின் மனைவி காசியம்மாள் மர்ம நபர்கள் கொலை செய்ததாக போலீசில் புகார் கொடுத்திருக்கிறார். ஒரு பாமக பிரமுகரும் களப் போராளியுமான ஆறுமுகம் உடைந்த வளையல்கள் சூழ ஏன் மர்ம நபர்களால் கொல்லப்பட்டிருக்க வேண்டும்? கொள்கைக்காக கொல்லப்பட்டிருந்தால் வெளிப்படையாக இன்னார்தான் எதிரிகள் என்று தெரிந்திருக்கும். கொள்கை இடத்தில் மர்மமும் வளையலும் இருந்தால் என்ன பொருள்?

பா.ம.க.வின் சமூக நீதி கோட்பாட்டின்படி முறையாக திருமணம் செய்து வாழ்ந்து கொண்டிருந்த ஆறுமுகத்திற்கு 25, 21 வயதான இரண்டு மகன்களும் 22 வயதான மகளும் உள்ளனர். அதாவது பேரன் பேத்தி எடுக்க வேண்டிய வயதில் அய்யா ஆறுமுகம் இருந்திருக்கிறார் என்பது முக்கியமானது. வன்னிய மக்களின் மானத்திற்கும், பொறுப்பிற்கும் சொந்தக்காரர்களான பாமக கட்சியின் பிரமுகரே அதுவும் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டிருக்கிறார் என்பதால் ‘அம்மாவின்’ ஆத்தூர் போலீசு கொலையை விசாரிக்க இரண்டு தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்தியிருக்கின்றனர். தமிழகத்திலேயே புகழ் பெற்ற மோப்ப நாய் அர்ஜூன் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டது. பாமகவின் மானத்தையும், மர்மத்தையும் கண்டு பிடிக்க வேண்டிய கடமையை நாய் அர்ஜூன் லேசாக எடுத்துக் கொள்ளவில்லை.

விசாரணையின் போது கல்பகனூரைச் சேர்ந்த செல்வி என்பவருடன் ஆறுமுகத்துக்கு கள்ளத் தொடர்பு இருந்தது தெரிய வந்தது. உடனே ஒரு பாமக பிரமுகர் கள்ள உறவு வைத்திருப்பதா என்று பாமக சொந்தங்கள் பொங்கி எழுமென்று யாரும் எதிர்பார்க்கவேண்டாம். கள்ள உறவு இல்லையென்றால் ஷத்திரிய குலத்தின் ஆண்மைக்கு பெருமையில்லை.

எனினும் போலீசார் மனதை இரும்பாக்கிக் கொண்டு அந்த செல்வியிடம் விசாரித்தார்கள். ஆரம்பத்தில் அவர்களிடம் செல்வியும் அழுது அரற்றியவாறு கூறியது என்னவென்றால் வசிஷ்ட நதிக்கரையில் அவர்கள் இருவரும் தனிமையில் இருந்ததை பார்த்து ஆத்திரமடைந்த செல்வியின், “மாஜி’ கள்ளக் காதலன் வனராஜா எட்டி உதைத்தபோது, ஆறுமுகத்தின் ஆண் குறியில் அடிபட்டு அவர் இறந்துவிட்டார் என்று வாக்குமூலம் கொடுத்தார். ஷத்திரிய குலத்தின் மானமும், மர்மமும், கொலையும் பாரத நாட்டின் புகழ்பெற்ற வசிஷ்ட நதிக்கரையில்தான் நடந்திருக்கிறது என்பது முக்கியம்.

இப்படி புராணச் சிறப்புள்ள இந்த மர்மக் கொலையின் மூலத்தை ஆத்தூர் போலீசு தொடர்ந்து தேடியபோது முதலில் வனராஜாவை குறிவைத்தார்கள். சம்பவம் நடப்பதற்கு ஒரு வாரம் முன்பாகவே வனராஜா காஷ்மீர் போகும் லாரியில் ஓட்டுனராக சென்று விட்டதும், அவர் இப்போது குஜராத்தில் இருப்பதும் தெரிய வந்தது. வனராஜா, வசிஷ்ட நதி, காஷ்மீர், குஜராத் எல்லாம் சேர்ந்து பார்த்தால் இதில் மகாபாரதமே இருக்குமோ என்ற சந்தேகத்தை நமக்கு ஏற்படுத்துகிறது.

வனராஜாவுக்கு இந்தக் கொலையில் தொடர்பில்லை என்பதை போலீசார் பல சுற்று விசாரணையில் கண்டுபிடித்தனர். அதற்கு முன்னரே போலீசிடம் கதை சொன்ன செல்வி பின்னர் தலைமறைவாக இருந்து விட்டு வேறு வழியின்றி ஜூன் 6-ம் தேதி கல்பகனூர் வி.ஏ.ஓ. அத்தியப்பன் முன்பு ஆறுமுகத்தை கொலை செய்ததாக ஒப்புக் கொண்டார்.

பிறகு போலீசில் செல்வி அம்மையார் கொடுத்த வாக்குமூலத்தை படியுங்கள்:

“என் சொந்த ஊர் சேலம் அருகே உள்ள அனுப்பூர். தாய்மாமன் ரத்தினவேலை நான் திருமணம் செய்தேன். அதன்பின், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, ரத்தினவேலின் சகோதரர் கணேசனை திருமணம் செய்தேன். கணவர் கணேசன், வேறு பெண்ணை திருமணம் செய்ததால், நான் கல்பகனூரில் உள்ள எனது தாய் பழனியம்மாளுடன் வந்து வசித்து வந்தேன்.

அப்போது, பா.ம.க., கட்சியில் உள்ள பிரமுகர் ஆறுமுகம் உள்ளிட்ட பலருடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்தேன். சில மாதங்களுக்கு முன் ஆறுமுகம் எனக்கு 20 ஆயிரம் ரூபாய் கடனாக கொடுத்தார். கடந்த, 29-ம் தேதி, கொடுத்த பணத்தை அவர் கேட்டதால், பணத்தை திருப்பி கொடுக்ககூடாது என்று முடிவு செய்த நான் இரவு 9.30 மணியளவில் அவரை “வா நாம் உல்லாசமாக இருக்கலாம்” என்று வசிஷ்ட நதிக்கு அழைத்துச் சென்று, ஆறுமுகத்தின் ஆண் உறுப்பை நசுக்கிப் பிடித்து கசக்கி கொலை செய்தேன், பின்னர் நான் வீட்டுக்கு போய்விட்டேன்.”

இதுதான் செல்வி அளித்திருக்கும் வாக்குமூலம்! செல்வி கைது செய்யப்பட்டு சேலம் மகளிர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

மேலே எழுதிய அனைத்தும் எமது சொந்தச் சரக்கு அல்ல. அனைத்து ஊடகங்களிலும் வெளிவந்த செய்திகளைத்தான் தொகுத்து எழுதியிருக்கிறோம். பொதுவில் கள்ளக்காதல் கொலை என்றால் ஊடகங்கள் அதை மலிவான ரசனையை தூண்டும் விதத்தில் எழுதும். அதை தவிர்த்து விட்டு பார்த்தால் இங்கே ஒரு முக்கியமான பாமக பிரமுகர் கள்ளக் காதலியால் கொலை செய்யப்பட்டிருக்கிறார்.

காதல், நாடகக் காதல், வன்னிய குல ஷத்திரிய வீரம், அக்னிக்கு பிறந்தவர்கள், ஒழுக்கம், என்று ஏகப்பட்ட விசயங்களைப் பேசும் அய்யாவின் பாமக நபர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதற்கு இந்த ஆறுமுகம் ஒரு சான்று இல்லையா? பெண்டாளுவதையே ஆண்மையின் வீரம் என்று கொண்டாடுவது எல்லா ஆதிக்க சாதியிடத்திலும் உண்டு. அதிலும் இந்த ‘ஷத்திரிய’ வகை சாதிகளில் இது இன்னும் அதிகம். இந்த ஆணாதிக்க திமிர்தான் சாதிப் பெருமை என்று தலித்துக்களின் காதலை வெறுப்புணர்வுடன் ஒழிக்க நினைக்கிறது.

ஊருக்கே நல்லொழுக்க போதனை செய்து, இளைஞர்களின் காதலை அடித்தும், மிரட்டியும், பிரித்து வைக்கும் பாட்டாளி மக்கள் கட்சியினரின் யோக்கியதைக்கு ஆறுமுகம் ஒரு உதாரணம்.

எனினும் அனைத்து சாதிவெறியர்களையும் அவர்களது சாதித்திமிர் எனும் ஆண்குறியையும் தமிழக மக்கள் நசுக்கி ஒழிக்கும் காலம் வராமல் போகாது.

தினமலர்

ஜூன் 04,2013

ஆத்தூர்: ஆத்தூர் அருகே, வசிஷ்ட நதிக் கரையில், மர்மமான முறையில் இறந்து கிடந்த பா.ம.க., பிரமுகர், கள்ளத் தொடர்பு காரணமாக, அடித்துக் கொலை செய்யப்பட்டிருப்பது, போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.ஆத்தூர் அருகே, கல்பகனூர் புதூர் கிராமத்தை சேர்ந்தவர், பா.ம.க., பிரமுகர் ஆறுமுகம், 45. அவர், கடந்த, 30ம் தேதி, கொத்தாம்பாடி வழியாக செல்லும் வசிஷ்ட நதிக்கரையில், மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.அவரது உடல் அருகே, வளையல்கள் உடைந்து கிடந்ததால், ஆறுமுகத்தின் மனைவி காசியம்மாள், மர்ம நபர்கள் கொலை செய்ததாக, ஆத்தூர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்தார். ஆத்தூர் இன்ஸ்பெக்டர் சம்பத் தலைமையில், இரண்டு தனிப்படைகள் அமைத்து, விசாரணை நடத்தி வந்தனர்.இதில், கல்பகனூர் புதூரை சேர்ந்த செல்வி என்பவருடன், ஆறுமுகத்துக்கு கள்ளத் தொடர்பு இருந்துள்ளது. அதையடுத்து, செல்வியை, போலீஸார் கைது செய்து, விசாரணை செய்தனர்.விசாரணையில், செல்வி, ஆறுமுகம் ஆகிய இருவரும், வசிஷ்ட நதிக்கரையில், உல்லாசமாக இருந்துள்ளனர். அப்போது, செல்வியின், “மாஜி’கள்ளக் காதலன் வனராஜா, இருவரும் தனிமையில் இருந்ததை பார்த்து, அதிர்ச்சியடைந்தார்.ஆத்திரமடைந்த வனராஜா, ஆறுமுகத்தை கடுமையாக தாக்கி கொலை செய்தார். வனராஜாவை, ஆத்தூர் போலீஸார் தீவிரமாக தேடிவருகின்றனர்.

ஜூன் 07,2013

ஆத்தூர்: ஆத்தூர் அருகே, கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்டதால், ஆத்திரமடைந்த கள்ளக்காதலி, பா.ம.க., பிரமுகரின் ஆண் உறுப்பை கசக்கி, “கொடூரமாக’ கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது.
ஆத்தூர் அருகே, கல்பகனூர் புதூர் கிராமத்தை சேர்ந்தவர், பா.ம.க., பிரமுகர் ஆறுமுகம், 47. அவர், மே, 30ம் தேதி, கொத்தாம்பாடி வழியாக செல்லும் வசிஷ்ட நதிக்கரையில், மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார்.
அவரது உடல் அருகே, வளையல்கள் உடைந்து கிடந்ததால், ஆறுமுகத்தின் மனைவி காசியம்மாள், மர்ம நபர்கள் கொலை செய்ததாக, ஆத்தூர் போலீஸில் புகார் செய்தார். ஆத்தூர் இன்ஸ்பெக்டர் சம்பத் தலைமையில், இரண்டு தனிப்படைகள் அமைத்து விசாரணை செய்து வந்தனர்.
இதில், கல்பகனூரை சேர்ந்த செல்வி என்பவருடன், ஆறுமுகத்துக்கு கள்ளத் தொடர்பு இருந்தது தெரியவந்ததால், அவரை தேடி வந்தனர். நேற்று, கணேசன் மனைவி செல்வி, 34, என்பவர், கல்பகனூர் வி.ஏ.ஓ., அத்தியப்பன் முன்னிலையில், ஆஜராகி ஆறுமுகத்தை கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார்.
தொடர்ந்து, செல்வி அளித்த வாக்குமூல விபரம்:
சேலம், கூட்டாத்துப்பட்டி, அனுப்பூரை சேர்ந்த தாய்மாமன் ரத்தினவேலை, திருமணம் செய்தேன். அதன்பின், ரத்தினவேல் சகோதரர் கணேசனை திருமணம் செய்தேன் அதில், பிரபு, விஜய் என, இரு குழந்தைகள் உள்ளனர்.
கணவர் கணேசன், வேறு பெண்ணை திருமணம் செய்ததால், கல்பகனூரில் உள்ள தனது தாய் பழனியம்மாளுடன், வசித்து வந்தேன். அப்போது, பா.ம.க., பிரமுகர் ஆறுமுகம் உள்ளிட்ட பலருடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்தேன். சில மாதங்களுக்கு முன், ஆறுமுகம், எனக்கு, 20 ஆயிரம் ரூபாய் கடனாக கொடுத்தார்.
கடந்த, 29ம் தேதி, இரவு, 9.30 மணியளவில், கொடுத்த பணத்தை கேட்டதால், உல்லாசத்துக்கு அழைத்துச் சென்று, ஆறுமுகத்தின் ஆண் உறுப்பை கசக்கி கொலை செய்தேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
அதையடுத்து, ஆத்தூர் இன்ஸ்பெக்டர் சம்பத், செல்வியை கைது செய்து, சேலம் மகளிர் சிறையில் அடைத்தார்.

இன்றைய அரசியலில் விஸ்வரூபம்


தமிழக திரையுலகில் கமலஹாசன் பங்களிப்பை யாராலும் மறுக்க முடியாதது. கடின உழைப்பு, திரையுலகின் தலைவாயிலில் நின்று கொண்டு, புதிதாகப் பிறப்பெடுக்கும் அனைத்தையும் தானே பரிசோதனை செய்து பார்க்க வேண்டும் என்ற ஆர்வம், என்று இவருடைய தனித்த ஆளுமையை, பட்டியலிட்டு சொல்ல முடியும். இழப்புகளைப் பற்றி கவலை கொள்ளாமல், படைப்பின் புதிய பரிமாணங்களை உருவாக்கிக் காட்டியவர் என்ற வகையில், எளிதில் மறந்துவிடக் கூடியவர் அல்லர் கமல். விஸ்வரூபம் இவரது அண்மைகால திரைப்படைப்பு. அது பிரச்சனைகளில் சிக்கிக்கொண்ட போது, வருத்தமுற்ற மனம் இப்பொழுது தடை நீங்கித் திரைக்கு வந்த போது, பெரிதும் மகிழ்ச்சி அடைகிறது.

கமலஹாசனின் திரைப்படங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்கள் மத்தியில் புதிய எதிர்பார்ப்பை உருவாக்கிவிடுகிறது. வழக்கமாக ஒரு குறிப்பிட்ட வட்டத்துக்குள்ளேயே சென்று கொண்டிருக்கும் கதைப் பாதையை மாற்றுவழி அமைத்து, ரசிகர்களுக்கு அதிர்ச்சி தரும் இவரது பாணியால், புதிய படங்களில் இந்த எதிர்பார்ப்புகள் கூடுதலாகி விடுகின்றன. இந்த வகையில் 90 கோடி செலவில் உருவாக்கப்பட்ட விஸ்வரூபம் பெரும் எதிர்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. சின்னத்திரைகளில் திடீர் திடீர் என்று தோன்றி மறையும், விளம்பரங்கள் இந்த திரைப்படத்தை பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தை உருவாக்கிவிடுகிறது. விளம்பரத்திற்கான செலவுகளும் கூடுலானது தான் என்பதையும் புரிந்து கொள்ள முடிகிறது.

கமலஹாசன் ஒரு மாபெரும் கலைஞன் என்பதைப் போலவே, அவருடைய திரைப் படைப்புகளும் மாபெரும் விவாதத்தை உருவாக்கிவிடுகின்றன. இது எவ்வாறு நிகழ்கிறது என்பதை புரிந்து, உணர்ந்து கொள்வதில் சிரமங்கள் இருக்கின்றன. இதற்கான காரணங்களை இன்னமும் நம்மால் ஆராய்ந்து தெரிந்து கொள்ள முடியவில்லை. ஹேராம், விருமாண்டி, ஆளவந்தான், உன்னைப்போல் ஒருவன் என்று எல்லாத் திரைப்படங்களும், ஏதாவது ஒருவிதத்தில் சர்ச்சைகளில் சிக்கிக் கொண்டன. இதற்கு கலைஞனுக்கே உரிய இவருடைய அப்பாவித்தனமான எதார்த்த இயல்புகள் காரணமா? படைப்பாளிகளுக்குரிய, தான் என்ற ஞானச்செருக்கு காரணமா? இந்திய தேசியத்தைப் பற்றியும், இந்திய ஒற்றுமையின் இலக்குகள் பற்றியும் இவர் உணர்ந்து கொண்ட புரிந்துணர்வு காரணமா? என்பதை அறிந்து கொள்வதில் சிரமம் ஏற்பட்டு விடுகிறது.

திரைப்படைப்பாளிகள் இந்திய அளவிலும், தமிழக அளவிலும், விவாதங்களில் சிக்கியிருப்பது புதிதானது அல்ல. கௌதம் கோஷ் வங்கத் திரைப்பட இயக்கத்தின் புகழ்மிக்கவர். இவர் அந்தர் ஜாலி யாத்ரா என்னும் படத்தை இயக்கினார். உள்முகப் பயணம் என்பது இந்த திரைப்படத்தின் பெயர். உடன் கட்டை ஏறுதலில், பார்ப்பன சனாதன தர்மங்களில் வளர்க்கப்பட்ட பெண்ணொருத்தி, பிணம் எரிக்கும் ஆடவன் ஒருவனுடன் சேர்ந்துவிடும் எதார்த்தையும், வாழ்க்கையின் அழகையும் காட்சிப்படுத்துகிறார். திரைப்படத்தின் கருவும், காட்சி அமைவும் நம்மை பெரிதும் பாதித்துவிடுகின்றன.

இது எத்தகைய எதிர்ப்பையும், விவாதத்தையும் படம் வெளிவந்த காலத்தில் உருவாக்கியிருக்கும். சத்யஜித்ரே, சியாம் பனகல், ரித்விக் கட்டாக் போன்ற மாபெரும் படைப்பாளிகள் இத்தகையப் பிரச்சனைகள் எத்தனையோ எதிர் கொண்டிருக்கிறார்கள். எல்லாமும் சமூக ஏற்றதாழ்வுகளை தீவிரமாக கவனப்படுத்தும் கருத்து ரீதியானப் போராட்டத்தை உள்ளடக்கியவை. காலங்காலமாக நிகழ்ந்து வரும் இந்தக் சமூக கொடுமைகளை காட்சி அமைப்பின் மூலம் வீரியப்படுத்திக் காட்டினார்கள். சமூக மனிதனின் மனசாட்சி உறுத்தலால், ஏற்றத்தாழ்வுக்கு எதிரான சமூக அசைவுகள் தோன்றின.

தமிழ் திரையுலகில் முதன் முதலில் மிகவும் கடுமையான எதிர்ப்பை சந்தித்தவர் இயக்குநர் சுப்ரமணியம் அவர்கள். இவர் 1939 ஆண்டில் இயக்கிய திரைப்படம் தான் தியாக பூமி. இப்பொழுது யோசித்துப் பார்த்தாலும், அந்த கதை அமைப்பு நம்மை மிகவும் அதிர்ச்சியுற வைத்துவிடுகிறது. பார்ப்பன‌ சமூகத்தின் பின்னணியில் அமைந்த திரைப்படம் அது. ஒரு இளம் விதவைப் பெண், தலித் இளைஞன் ஒருவனை மணமுடித்துக் கொள்கிறாள். தீவிரம் மிகுந்த பல்வேறு திருப்பங்களை திரைக்கதை கொண்டிருந்தது. இயக்குநர் சுப்பரமணியம் அவர்கள் பிறந்தது கும்பகோணத்தில். அங்குள்ள பார்ப்பன சங்கத்தினர் ஒன்று கூடி, சாதியிலிருந்து, இவரை ஒதுக்கி வைப்பதாக அறிவித்தார்கள். அன்றைய காலத்தில் இது இயக்குநருக்கு ஏற்பட்ட சமூக ரீதியான நெருக்கடியாகும். இதற்காக இவர் அஞ்சவில்லை. எதிர்த்துப் போராடுவது என்ற முடிவுக்கு வந்துவிட்டார்.

பத்திரிக்கையாளர் சந்திப்புக்கு அழைப்பு விடுத்தார். ‘நான் சமரசம் செய்து கொள்ளப் போவதில்லை. என் கருத்தில் உறுதியுடன் இருக்கிறேன். இதற்காக எந்த இழப்பையும் சந்திக்கவும் தயாராகவும் இருக்கிறேன்’ என்று பகிரங்கமாக அறித்தார். இதைப் போலவே ‘என்னை சாதியிலிருந்து நீங்கள் ஒதுக்கி வைத்தால் உங்களை சமூகத்திலிருந்து ஒதுக்கி வைக்கும் உரிமை எனக்கு இருக்கிறது. உங்களை ஒதுக்கி வைக்கிறேன்’ என்று அறிவித்தார். இவ்வாறான எத்தனையோ கருத்து ரீதியானப் போராட்டங்களை கடந்த காலத்தில் தமிழகம் சந்தித்துள்ளது.

எப்படி பார்த்தாலும், தமிழக, இந்திய அடிப்படை பிரச்சனைகளில் முக்கியமானதாகக் கருதப்படுபவை மதமோதல்களும், சாதிய மோதல்களும் தான். இன்றைய நெருக்கடி மிகுந்த சூழலில் மதப்பிரச்சனையை பற்றி கமல் யோசித்திருப்பதில் தவறு இல்லை. இதற்கான கமலின் துணிச்சலை நாம் பாராட்டலாம். இந்திய நாடு சுதந்திரத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருந்த போது, எத்தனை படுகொலைகளை நாடு சந்தித்தது! கொலையுண்ட மனிதர்களின் உயிர்மூச்சு தேசத்தின் சமவெளி முழுவதும் ஆக்ரமித்து நின்றன அன்று. ஹேராம் படத்திலும் இதனை ஓரளவிற்கு காட்சிப்படுத்தியிருக்கிறார் கமல். இதிலும் விமர்சனங்கள் இருக்கலாம், அது வேறு பிரச்சனை.

இந்திய பாக்கிஸ்தான் பிரிவினை காலத்தில் பிறந்த படைப்பிலக்கியங்க‌ள் பலவற்றை தமிழக படைப்புலகம் வாசிப்பது இப்பொழுது அவசியமானதாகும். மாண்ட்டோ என்னும் புகழ் மிக்க படைப்பாளி ஒருவரின் பிரிவினை காலத்தின் எழுத்தைப் படிக்கும் வாய்ப்பு அண்மையில் எனக்குக் கிடைத்தது. தேசம் பிரிந்த போது இத்தகைய பிரச்சனைகளை நாடு சந்தித்த‌தா? இலக்கியத்தை இவ்வாறு கூட படைக்க முடியுமா, என்ற உணர்வை இந்த நூல் எனக்கு உருவாக்கியது. காலத்தின் குரூரத்தைப் புரிந்து கொள்ள, மண்ட்டேயின் எழுத்துகளில் ஒரு பகுதியை வாசகர்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இதனை ராமனுஜம் தெளிந்த தமிழில் மொழியாக்கம் செய்துள்ளார். புலம் என்னும் பதிப்பகம், நூலை பதிப்பித்துள்ளது.

பிழை சரி செய்யபட்டது என்னும் தலைப்பில் இதனை இவர் எழுதியிருக்கிறார். சொற் சித்திரம் என்னும் வடிவத்தில் மறைபொருளில் கூறும் யுத்தியில் இது அமைக்கப்பட்டுள்ளது. மூர்க்கம் கொண்ட கும்பலில் சிக்கிக் கொண்ட ஒருவனுக்கும், கும்பலுக்குமான உரையாடலாக இது அமைக்கிறது.

யார் நீ?

நீ யாரு?

ஹர் ஹர் மகாதேவ்

என்ன அத்தாட்சி இருக்கிறது.

அத்தாட்சி இருக்கிறது. என்னுடைய பெயர் தரம் சந்த்.

இது அத்தாட்சியே இல்லை.

சரி, வேதங்களிலிருந்து எதை வேண்டுமானாலும் என்னைக் கேளுங்கள்.

எங்களுக்கு வேதங்களில் எதுமே தெரியாது. ஆனாலும் எங்களுக்கு அத்தாட்சி வேண்டும்.

என்ன அத்தாட்சி வேண்டும்?

நீ அணிந்திருக்கும் பைஜாமா நாடாவை அவிழ்த்திவிடு

அவன் பைஜமா நாடாவை அவிழ்ப்பதற்குப் பதில், இறுக்கி கட்டுகிறான். இதனால் கும்பலில் பெரும் கோபக்குரல் எழுகிறது.

அவனைக் கொல்லுங்கள்! கொல்லுங்கள்!! என்னும் குரல் கேட்டுக்கொண்டேயிருக்கிறது.

கொஞ்சம் பொறுங்கள். தயவு செய்து கொஞ்சம் பொறுங்கள். நான் உங்களில் ஒருவன் உங்கள் சகோதரன். பகவான் மீது ஆணையிட்டுச் சொல்கிறேன். நான் உஙகள் சகோதரன்.

அப்படி என்றால் இதற்கு என்ன அர்த்தம்.

நான் வந்து கொண்டிருந்த பகுதி, விரோதிகளின் கட்டுப்பாட்டில் இருந்தது. அதனால் வேறு வழியில்லாமல் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டியதாயிற்று. என் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள, இது ஒன்று தான் நான் செய்த பிழை. மற்ற அத்தாட்சிகளை வைத்துப் பாருங்கள், நான் உங்கள் சகோதரன் தான்.

அந்தப் பிழையை வெட்டி எறியுங்கள். கும்பல் வெறி கொண்டு கத்துகிறது.

அந்தப் பிழை வெட்டி எறியப்படுகிறது.

அன்றைய சமூகப் பதட்டத்தையும், அதனால் எழுப்பட்ட மத அரசியலின் முதுகுப்புறத்தையும் இந்தக் கதை நமக்கு படம் பிடித்துக் காட்டுகிறது.

ஈஸ்வர அல்லா தேரே நாம் என்ற காந்தியடிகளின் முழக்கத்தில் இந்த ஒற்றுமைக்கான பாதை உருவாக்கப்பட்டது. வேற்றுமையில் ஒற்றுமை என்னும் வழிகாட்டும் நெறி கூட இதன் காரணம் கருதியே உருவாக்கப்பட்டன. காந்தி காலத்தில் பிறந்த காங்கிரஸ் கொடியிலும், சுதந்திரத்திற்குப் பின்னர் அமைந்த தேசியக் கொடியிலும், கொடியின் நிறங்கள் மதஒற்றுமைக்கான குறியீடாக்கப்பட்டன. காவி, வெள்ளை, பச்சை ஆகிய மூன்று நிறங்களுக்கான மத அடையாளத்தையும், அதன் ஒற்றுமையையையும் நாம் புறக்கணித்துவிட இயலாது. இந்த மத ஒற்றுமைக்காகத்தான் காந்தியடிகளும் தன்னுடைய இன்னுயிரை தியாகம் செய்தார்.

சென்ற நூற்றாண்டின், எண்பதுகளுக்குப் பின்னர் மதஒற்றுமை, ஆட்சி அதிகாரத்தின் சுயநலத்திற்காக பெரும் கேள்விக்கு உள்ளாக்கப்பட்டது. பாபர் மசூதி தகர்க்கப்பட்டது. பம்பாயில் மதக்கலவரங்கள் தோற்றுவிக்கப்பட்டன. குஜராத் படுகொலைகள் நிகழ்ந்தன. இந்திய பாக்கிஸ்தான் பிரிவினைக்குப் பின்னர், இந்திய தாய், இரண்டாம் முறையாக தமது மக்கள் ஒற்றமையை இழந்து, மோதிக்கொள்வதைப் பார்த்து, தவிக்கத் தொடங்கிவிட்டாள். மரண ஓலங்கள், புலபெயர்வுகள், இடப்பெயர்வுகள் என்று, இந்தியா இரண்டாவது முறையாக மக்களில் ஒரு பகுதியை மீண்டும் அனாதையாக்கிக் கொண்டது.

முஸ்லீம் மக்கள் பெரும் எண்ணிக்கையில் வாழும் நாடுகளில் இந்தியா முதலிடம் வகிக்கிறது. இவர்களை ஒருபுறம் ஒதுக்கிவிட்டு இந்திய ஒற்றுமையை யாராலும் கட்டி எழுப்ப முடியாது. இந்திய முஸ்லீம் மக்கள் தாங்கள் தனித்துவிடப்பட்டதாக உணரத் தொடங்கிவிட்டார்கள். தங்கள் முழுசமூகத்தின் மீதும் பயங்கரவாத முத்திரைக் குத்தப்பட்டதாக கருதுகிறார்கள். சொந்த குடிமக்களின் மீதே குடியரசு சந்தேகக் கண்கொண்டு பார்த்தால் தாங்கள் என்ன செய்வது என்ற வேதனை அவர்களை வதைத்துக் கொண்டிருக்கிறது. கோவை குண்டு வெடிப்பு நிகழ்ந்து அப்பாவி முஸ்லீம் இளைஞர்கள் இன்னமும் விசாரணையின்றி சிறைச்சாலையில் இருக்கிறார்கள். இந்திய சிறைகள் அனைத்திலும் முஸ்லீம் இளைஞர்கள் பயங்கரவாதிகள் என்ற பெயரில் அடைப்பட்டுள்ளார்கள்.

இந்தியாவில் எங்கு குண்டு வெடித்தாலும், முஸ்லீம் இளைஞர் கைது செய்யப்படுகிறார்கள். பாக்கிஸ்தானுக்கும் இதற்கும் தொடர்பு இருக்கின்றது என்பது அனைவரும் அறிந்த உண்மை தான். இஸ்லாமிய அடிப்படைவாதத்தை பாக்கிஸ்தான் இந்தியாவிற்கு எதிராகப் பயன்படுத்துகிறது. இதிலும் யாருக்கும் மாறுபாடு இருக்க முடியாது. ஆனால் பாக்கிஸ்தான் பயங்கரவாத செயல்பாட்டிற்காக இந்திய முஸ்லீம் மக்களுக்கு தண்டனை வழங்கலாமா? காவல்துறையாலும், ராணுவ உளவுத்துறைகளாலும் பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபடும் உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய இயலுவதில்லை. அவர்கள் கைது செய்யப்பட்டதாக அறிவிக்க வேண்டும். இதற்கு இவர்களுக்கு மிகவும் சுலபமாகக் கிடைப்பவர்கள் அப்பாவி, ஏழை முஸ்லீம் இளைஞர்கள் தான்.

ஒருகாலத்தில் கம்யூனிஸ்டுகளை எதிரிகளாக அறிவித்துக் கொண்டது அமெரிக்க ஏகாதிபத்தியம். இன்றும் கம்யூனிஸ்டுகளை ஒழிப்பதில் ஏகாதிபத்திய ஆதிக்கச் சக்திகள் மிகுந்த கவனத்துடன் தான் செயல்படுகின்றன. கம்யூனிஸ்டுகளைப் போலவே, இன்று அவர்கள் மிகுந்த வெறுப்பைக் கொண்டிருப்பது முஸ்லீம் மக்களின் மீது தான். அமெரிக்காவில் இரட்டைக்கோபுரம் தகர்க்கப்பட்டது மட்டும் காரணம் இல்லை. உலகமயப் பொருளாதாரத்தில் பெட்ரோலிய எண்ணெய் ஆதிக்கத்தை தன் கையில் வைத்துக் கொள்வதற்கும் இது தேவைப்படுகிறது. உலக நாகரிகத் தொட்டில்களில் ஒன்றான டைகிரிஸ் யூப்ரட்டிஸ் நதிக் கரையில் அமைந்தது தான் ஈராக். இது அமெரிக்காவால், எவ்வாறு நிர்மூலமாக்கப்பட்டது என்பதை யாரும் மறந்துவிட முடியாது.

இவை எல்லாவற்றையும் மீறி ஒரு உண்மை நாம் அனைவரும் புரிந்து கொள்ளத்தான் வேண்டும். ஆனால் இது யாரும் அறிந்து விடாதவாறு மூடிமறைத்து வைக்கப்பட்டுள்ளது. இதற்கு மூடுதிரை உருவாக்கி உண்மையை முற்றாக மறைப்பதற்கு இன்றைய ஆதிக்க ஊடகங்கங்கள் வெகுவாக பாடுபட்டுக் கொண்டிருக்கின்றன. அமெரிக்காவின் இரட்டை கோபுரத்தை தகர்த்தது பின்லேடனும், அதன் பின்னணியில் அமைந்த இயக்கமும் என்பது எத்தனை உண்மையானதோ அதைப்போலவோ பின்லேடனையும் அதன் பின்னணியில் அமைந்த இயக்கத்தையும் பெரும் பண உதவி செய்து வளர்த்தெடுத்தது அமெரிக்காவும், அதன் சிஐஏ உளவு நிறுவனமும் தான் என்பது இன்று வெளிச்சத்திற்கு வந்துவிட்டது.

அமெரிக்கா உலகில் பரப்பி வரும் பயங்கரவாத சுமையையையும் இந்திய முஸ்லீம்கள் சுமக்கிறார்கள். இந்தப் பின்னணியில் கலையும் இலக்கியமும், ‘சகோதரர்களே நீங்கள் கவலை கொள்ளாதீர்கள்’ என்ற நம்பிக்கையை அவர்களுக்கு அளிக்க வேண்டும். இவ்வாறான சூழல் இங்கு இல்லை. திரைப்படங்கள் மனிதாபிமானம் கொண்டு மக்களுக்கு மிகுந்த ஆறுதலை அளித்திருக்க வேண்டும். மாற்றாக, படைப்புலகின் எதிர்மறைப் பார்வையில் இவர்கள் அந்நியப்படுத்தப் பட்டிருக்கிறார்கள். இதனால் முஸ்லீம்கள் அமைதியற்றவர்களாகி விடுகிறார்கள்.

தமிழ் திரையுலகில் 1960 முதல் 1985 வரை முஸ்லீம் பாத்திரங்கள் பிறருக்கு உதவி செய்பவர்களாக, சமூக இணக்கம் கொண்டவர்களாக காட்டப்பட்டனர். இதன் பின்னர் இவர்கள், தீவிரவாதிகளாகவும், பயங்கரவாதிகளாகவும் காட்டப்படுகிறார்கள். இந்தப் போக்கு தமிழுக்கு எப்படி வந்தது? வடஇந்தியாவிலிருந்து வந்ததா? உலக ஆதிக்க அரசியலிலிருந்து வந்ததா? இவை எல்லாவற்றையும் நாம் யோசித்துப் பார்க்க வேண்டும்.

இந்தப் பின்னணியில் தான் கமலின் விஸ்வரூபம் பெரும் பிரச்சனைகளை சந்தித்தது. இதனை கமலுக்கும் தமிழக முஸ்லீம்களுக்கும் இடையில் அமைந்த பிரச்சனையாகப் பார்க்காமல், இன்றைய தமிழ் சினிமாவின் மீது முஸ்லீம் மக்களுக்கு ஏற்பட்டுள்ள, மாறுபட்ட கருத்தின் அடையாளமாக புரிந்து கொள்ள வேண்டும்.

இன்றைய திரையுலகில் நிகழ்ந்து வரும் மாற்றங்களையும், படைப்பாளிகளின் இன்றைய நெருக்கடியையும் நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். படைப்பு பல்வேறு நெருக்கடிகளை எதிர் கொள்கிறது. ஒருவிதத்தில் பார்த்தால், இது உலகமயத்தின் விளைவு என்பதை உணர்ந்து கொள்வது அவசியமானது. கலைஞன் மானுடத்தின் பொதுவுடமை. அவனது வாழ்வு தாழ்வு அனைத்தும் சமூகம் சார்ந்தது. முஸ்லீம் கூட்டமைப்பு மாறுபாடுகளை தெரிவித்ததும், மீண்டும் இணக்கம் கண்டதும் வரவேற்கக் கூடிய ஒன்றாகும்.

கமல் மீது எனக்கு தனிப்பட்ட மதிப்பு இருந்த போதிலும் மனத்தின் அடி ஆழத்தில் ஒருவிதமான வேதனை தேங்கி நிற்கிறது. அதனை மனதில் போட்டு அழுத்தி வைக்காமல், வெளிப்படையாகவே வெளியிட விரும்புகிறேன். முள்ளிவாய்க்கால் படுகொலை இரண்டாம் உலகப்போருக்கு பின் நிகழ்ந்த மாபெரும் இன அழிப்பு. 2008 ஆம் ஆண்டு தொடங்கிய தமிழ் மக்கள் மீதான தாக்குதல் 2009 மே மாதம் 18 ஆம் தேதியோடு முடிவடைந்தது. இறந்தவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 45 ஆயிரம் பேர் என்பதை ஐக்கிய நாடுகள் சபையே ஏற்றுக் கொண்டுள்ளது. இந்த அதிர்ச்சியிலிருந்து உலகம் முழுவதும் வாழும் 10 கோடி தமிழ் மக்களும் இன்னமும் விடுபடவில்லை. இரண்டாம் உலக போரின் மாபெரும் மனித அவலங்களிலிருந்து தோன்றியது தான், ஐரோப்பாவின் புகழ்மிகுந்த இலக்கியங்கள், திரைப்படங்கள், உள்ளிட்ட அனைத்துப் படைப்புகளும். தாலிபான் பிரச்சனை பாதித்த அளவிற்கு கமலுக்கு ஏன் ஈழத் தமிழர்களின் இனப்படுகொலை பாதிப்பைத் தரவில்லை என்பது மனதுக்குள் நீங்காத ஆதங்கமாகவே இருக்கிறது.

– சி.மகேந்திரன் ( thamarai_mahendran@yahoo.co.inஇம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும் )

இது தீண்டாமை தேசம்!


தீண்டாமை என்பது பலருக்குச் சென்ற நூற்றாண்டின் கொடுங்கனவாகவே இருக்கும். ‘இப்பெல்லாம் யாருங்க சாதி பார்க்கிறாங்க?’ என்ற குரல்களுக்கும் ‘சர்ட்டிஃபிகேட்டில் சாதி கேட்பதால்தான் சாதி இருக்கிறது’ என்கிற குரல்களுக்கும் தீண்டாமையின் வலியும் வடுவும் தெரியாது. இந்திய வரலாற்றுப் பாதை முழுக்கச் சேறு அப்பிய கால்களின் சுவடுகளாக இன்னமும் இருக்கிறது தீண்டாமை. அன்பு, மனிதாபிமானம், உபசரிப்பு என்று விழுமியங்களின் உறைவிடமாகக் கட்டப்பட்டு இருக்கும் கிராமங்களுக்கு விஷம் தோய்ந்த ஒரு கோரப் பல் இருக்கிறது என்பதை நம்புவதற்கு உங்களுக் குச் சிரமமாகத்தான் இருக்கும்!
சமீபத்தில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநாட்டில் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், ”கடந்த தி.மு.க. ஆட்சி யில் தமிழகத்தின் சமூகக் கொடுமைகள், தீண்டாமை, மூடப்பழக்க வழக்கங்கள் குறித்து ஆய்வு செய்ய சமூகச் சீர்திருத்தக் குழு அமைக்கப்பட்டது. அதில் பேராசிரியர் மா.நன்னன், பொன்னம்பல அடிகள், நான் உள்ளிட்ட பலர் இடம் பெற்றோம். நான்கைந்து முறை பல்வேறு விஷயங்களை விவாதித்த அந்தக் குழு, பின்பு என்ன ஆனது எனத் தெரியவில்லை. அரசுக்கும் அறிக்கை ஏதும் அளிக்கவில்லை. எனவே, தற்போதைய அ.தி.மு.க. அரசு மீண்டும் அதே போன்ற ஓர் ஆய்வுக் குழுவை அமைக்க வேண்டும்!” என்று வேண்டுகோள் விடுத்தவர், ”தமிழகத்தில் 85 வகையான தீண்டாமைக் கொடுமைகள் நிலவுகின்றன” என்றும் கவலை தெரிவித்து இருக்கிறார்.
ஜி.ராமகிருஷ்ணனிடம் பேசியபோது, ”சமூகச் சீர்திருத்தக் குழு திருச்சி, ஈரோடு மாவட்டங்களில் தீண்டாமை குறித்து மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டங்களை நடத்தியது. ஆனால், ஒரு கட்டத்துக்கு மேல் அந்த முயற்சிகள் தொடரவில்லை. கோவை மாவட்டத்தில் மட்டும் 22 வகையான தீண்டாமை வடிவங்கள் இருக்கின்றன. ஒரு காலத்தில் கீழத்தஞ்சை மாவட்டத்தில் சவுக்கடி, சாணிப்பால் போன்ற தலித் மக்கள் மீதான வன்கொடுமைகளுக்கு எதிராக கம்யூனிஸ்ட்டுகள் போராடியதால், இப்போது அவை அங்கு இல்லாது ஒழிந்துவிட்டன. அது மாதிரியான செயல்பாடுகளை எல்லா இயக்கங்களும் மேற்கொள்ள வேண்டியது அவசியம்” என்று வலியுறுத்தினார்.
85 வகையான தீண்டாமைகள் மட்டும் இல்லை, உண்மையில் தமிழகக் கிராமங்களில் 100-க்கும் மேற்பட்ட தீண்டாமைகள் உள்ளன. தமிழகத்தில் 12 மாவட்டங்களில் உள்ள கிராமங்களில் நிலவும் தீண்டாமைகள் குறித்து எவிடென்ஸ் அமைப்பு ஓர் ஆய்வை வெளியிட்டு இருக்கிறது. மதுரை, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை, தஞ்சை, நாகப்பட்டினம், சேலம், நாமக்கல், கடலூர், விழுப்புரம், கோவை, திருப்பூர் ஆகிய 12 மாவட்டங்களில் 213 கிராமங்களில் நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகள் இவை. அவற்றில் இருந்து சில மாதிரிகள் மட்டும் இங்கே…
 213 கிராமங்களில் 70 கிராமங்களில் ரேஷன் கடைகளில் சாதியப் பாகுபாடு நடைமுறையில் உள்ளது. 23 கிராமங்களில் தலித் மக்கள் ஆதிக்கச் சாதியினருடன் ரேஷன் கடைகளில் ஒன்றாக வரிசையில் நிற்க முடியாது. 31 கிராமங்களில் ஆதிக்கச் சாதியினருடன் வரிசையில் நின்றாலும் தலித்துகள் அவர்களைத் தொடக் கூடாது. 2 சதவிகித நியாய விலைக் கடைகள் மட்டுமே தலித் குடியிருப்புப் பகுதிகளில் உள்ளன. ஆதிக்கச் சாதியினர் வசிக்கும் பகுதிகளில் அமைந்திருக்கும் பிற ரேஷன் கடைகளுக்குத்தான் தலித் மக்கள் செல்ல வேண்டும்.
24.09.2009 அன்று கள்ளக்குறிச்சி அருகில் உள்ள தச்சூர் கிராமத்தைச் சேர்ந்த தலித் பெண் காசியம்மாள், ரேஷன் கடை வரிசையில் நிற்கும்போது அவரது கை, ஆதிக்கச் சாதிப் பெண்மணி மீது பட்டதற்காக அவர் பொது இடத்தில் மானபங்கப்படுத்தப்பட்டார்.
 தலித் மக்களின் பிணங்களை பொதுப் பாதையில் எடுத்துச் செல்ல முடியாது. ஆதிக்கச் சாதியினரின் குடியிருப்புகளின் வழியாக எடுத்துச் செல்ல முடியாது ஆகிய தீண்டாமைகள் மயானம் தொடர்பாக நிலவுகின்றன. தலித் மக்களுக்குத் தனிச் சுடுகாடும் மற்ற சாதியினருக்குத் தனிச் சுடுகாடும் இன்னும் பல கிராமங்களில் உண்டு.
02.01.2011 அன்று தேனி அருகில் உள்ள கூழையனூ ரில் ராஜு என்கிற தலித் பெரியவரின் சடலத்தைப் பொது சுடுகாட்டில் அடக் கம் செய்யக் கூடாது என்று ஆதிக்கச் சாதியினர் எதிர்ப்புத் தெரிவித்தனர். இது தொடர்பாக நடந்த மோதலில், 27.01.2011 அன்று சின்னாயி என்ற தலித் மூதாட்டி பெட்ரோல் வெடிகுண்டு வீசப்பட்டுக் கொல்லப்பட்டார். கூழையனூரில் அரசு அதிகாரிகளே உறுதிமொழிப் பத்திரம் ஒன்று எழுதி, தலித்களும் மற்ற சாதியினரும் தனித் தனி மயானங்களைப் பயன்படுத்த வேண்டும் என்று எழுதிக் கையெழுத் திட்டு உள்ளனர்.
67 சதவிகிதக் கிராமங்களில் சலூன் கடைகளில் தலித் மக்கள் மீது பாகுபாடு காட்டப்படுகிறது. 142 கிராமங்களில் தலித் மக்களுக்கு முடிவெட்டக் கூடாது என்று சாதிக் கட்டுப்பாடு உள்ளது. 13 கிராமங்களில் கத்தரிக்கோல், சீப்பு, கத்தி போன்றவை தலித்துகளுக்குத் தனியாகவும் மற்றசாதி யினருக்குத் தனியாகவும் பயன்படுத்தப் படுகின்றன. 25 கிராமங்களில் சலூன் கடை நாற்காலிகளில் தலித்துகள் அமரக் கூடாது.

12.01.2008 அன்று உத்தமபாளையம் மார்க்கையன்கோட்டை கிராமத்தில் தன் குழந்தைகளுக்கு முடி வெட்டுவதற்குச் சலூன் உரிமையாளர் மறுத்ததால் பெரியசாமி என்னும் தலித் எதிர்ப்புத் தெரிவித்து இருக்கிறார். அதனால் அவர் குழந்தைகள் முன்பே சாதி இந்துக்களால் தாக்கப்பட்டார்.
 68 சதவிகிதக் கிராமங்களில் பொதுக் குழாயில் நீர் எடுக்கவும் பொதுக் கிணற்றில் தண்ணீர் எடுக்கவும் தலித் மக்களுக்கு உரிமை இல்லை. 131 கிராமங்களில் தலித் மக்களுக்கும் சாதி இந்துக்களுக்கும் தனித் தனி நீர்நிலைகள் உள்ளன.
விழுப்புரம் மாவட்டம் பெரியசெவலை கிராமத்தில் 2009-ம் ஆண்டு சந்தோஷ்குமார் என்ற தலித் இளைஞர் பொதுக் கிணற்றில் குளித்ததற்காக 30 பேர் கொண்ட ஆதிக்கச் சாதிக் கும்பலால் தாக்கப்பட்டார்.
 சில கிராமங்களில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் டாக்டர்கள் தலித்துகளைத் தொட்டு மருத்துவம் பார்ப்பது இல்லை. மருத்துவமனை ஊழியர்களும் இத்தகைய தீண்டாமைகளைக் கடைப்பிடிக்கின்றனர்.
மதுரை கீரிப்பட்டியைச் சேர்ந்த தலித் பெண் வசந்தமாளிகை ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவத்துக்காகச் சேர்க்கப்பட்டு இருந்தபோது, அங்கு இருந்த ஊழியர் கொண்டைஊசியால் பனிக்குடத்தைக் குத்தி சேதப்படுத்தி இருக்கிறார். கருப்பை முற்றிலும் சிதைந்த நிலையில் அகற்றப்பட்டது. சிறுநீரகக் குழாயில் ஓட்டை விழுந்து அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை!
 29 கிராமங்களில் பள்ளிகளில் தலித் மாணவர்களிடம் பாகுபாடு காட்டப்படுவதாக ஆய்வு தெரிவிக்கிறது. கோவையில் உள்ள ஒரு பள்ளி ஆசிரியர், தலித் மாணவர்களை மைனஸ் என்றும் மற்ற மாணவர்களை ப்ளஸ் என்றும்தான் அழைப்பாராம். சில ஆண்டுகளுக்கு முன்பு வரை தேனி அருகில் உள்ள எண்டப்புளி கிராமத்தில் தலித் சிறுவர்கள் பின் வரிசை இருக்கைகளில்தான் அமரவைக்கப்படுவார்களாம்.
 பேருந்துப் பயணம் மற்றும் பேருந்து நிறுத்தங்களிலும் சாதிப் பாகுபாடு உண்டு. பேருந்து நிறுத்தங்களில் உள்ள இருக்கைகளில் தலித்துகள் அமரக் கூடாது என்கிற கொடுமையும் உண்டு. ஆதிக்கச் சாதி சிறுவர்களை தலித் முதியவர்கள் மரியாதையோடு அழைப்பதும், தலித் முதியவர்களைக்கூட ஆதிக்கச் சாதிச் சிறுவர்கள் மரியாதை இல்லாமல் அழைப்பதும் இன்றும் பெரும்பாலான கிராமங்களில் உள்ள நடைமுறை!
 அஞ்சலகங்களில் தலித்துகள் நுழையக் கூடாது. தபால்காரர் தலித் குடியிருப்புக்குள் வர மாட்டார், தலித் குழந்தைகளுடன் ஆதிக்கச் சாதி குழந்தைகள் விளையாடக் கூடாது, பள்ளிக்கூடங்களில் தலித் குழந்தைகள் துப்புரவுப் பணியில் ஈடுபடுத்தப்படுவது என்று ஆரம்பப் பள்ளிக்கூடங்கள் முதல் அரசு அலுவலகங்கள் வரை தீண்டாமை அங்கீகரிக்கப்பட்ட கொடுமைதான் நிலவுகிறது.
 தலித் பஞ்சாயத்துத் தலைவர்களுக்கு மற்ற சாதி ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள் ஒத்துழைப்பு கொடுக்க மறுப்பது, பல இடங்களில் தலித் பஞ்சாயத்துத் தலைவர்களுக்கு நாற்காலியில் அமர அனுமதி மறுப்பு போன்ற தீண்டாமைகளும் உள்ளன.
”இவை வெறுமனே 213 கிராமங்களில் மட்டுமே ஆய்வு செய்த முடிவுகள். இன்னும் ஆய்வுக்கு உட்படாத கிராமங்களும் மாவட்டங்களும் தமிழகத்தில் உள்ளன. தமிழகத்தில் தீண்டாமைக்கு உட்படாத கிராமங்களே கிடையாது என்பதை உறுதியாகச் சொல்ல முடியும். ஆனால், அரசிடமோ இதுகுறித்த முறையான புள்ளிவிவரங் களும் கிடையாது. சொல்லப்போனால், உண்மையை மறைக்கும் பொய் விவரங்களைத்தான் அரசு வெளியிடும். 2009-ல் தமிழகத்தில் 384 கிராமங்களில் மட்டுமே தீண்டாமை நிலவுவதாகச் சொன்ன தமிழக அரசு, 2010-ல் 174 கிராமங்களில்தான் தீண்டாமை நிலவுகிறது என்கிறது. இந்த தீண்டாமையை விசாரிப்பதற்காக பி.சி.ஆர்(1955), எஸ்.சி, எஸ்.டி. சட்டம் (1989) ஆகியவை வழி செய்கின்றன. ஆனால், இந்தச் சட்டங்களின் அடிப்படையில் பெரும்பாலும் நடவடிக்கைகள் எடுக்கப்படுவது இல்லை. 2010-ல் தீண்டாமை வன்கொடுமை தொடர்பாக வெறுமனே தமிழகம் முழுவதும் 1,050 வழக்குகள் மட்டுமே பதிவு செய்யப்பட்டு உள்ளன” என்று வேதனை தெரிவிக்கிறார் ‘எவிடென்ஸ்’ கதிர்.
தீண்டாமையை ஒழிப்பதற்கு என்று திருச்சியில் தீண்டாமை ஒழிப்பு அலுவலகம் இயங்குகிறது. ஆனால், அதனால் எந்தப் பயனும் இல்லை என்று கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15 அன்று தீண்டாமை ஒழிப்பு அலுவலகத்தை இழுத்து மூடும் போராட்டத்தை நடத்தியது பெரியார் திராவிடர் கழகம். தமிழகம் முழுவதும் உள்ள கிராமங்களில் இரட்டைக் குவளை முறையைக் கணக்கெடுத்து, இரட்டைக் குவளை உடைப்புப் போராட்டங்களையும் நடத்திய பெரியார் தி.க. சமீபத்தில் போராட்டம் நடத்திய இடம் கோவை மாவட்டம் அன்னூர் ஒன்றியம்.
காலம் மாறினால் தீண்டாமை மாறும் என்பது நமது நம்பிக்கையாக இருந்தாலும் உண்மையில், காலம் மாற மாற… சாதியும் தீண்டாமையும் அதற்கேற்பத் தன் வடிவங் களை மாற்றிக்கொள்வதே யதார்த்தமாக இருக்கிறது. கோவை மாவட்டம் அன்னூர் ஒன்றியத்தில் உள்ள நல்லிசெட்டிபாளையம், அச்சம்பாளையம், அல்லிக்காரன் பாளை யம், செங்கப்பள்ளி, குருக்கிளையாம் பாளையம் கிராமங்களில் தலித் மக்கள் பொதுக் குழாய்களில் தண்ணீர் பிடிக்கக் கூடாது என்கிற ‘மரபான’ தீண்டாமையோடு, அவர்கள் பொது இடங்களில் செல்போன் பேசக் கூடாது, பைக் ஓட்டக் கூடாது போன்ற ‘நவீன’ தீண்டாமைகளும் தொடர் கின்றன.
1,000 பேரோடு பொதுக் குழாய்களில் தண்ணீர் பிடிக்கும் போராட்டத்தை நடத்திய பெரியார் தி.க. தலைவர் கொளத்தூர் மணி, ”இத்தகைய தீண்டாமைகளைக் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய அன்னூர் காவல் ஆய்வாளர்,  சமூகநீதி மற்றும் மனித உரிமைப் பிரிவு உதவி ஆய்வாளர் இருவரும் அரசுக்கு அனுப்பிய அறிக்கையில் ‘அன்னூர் உள்வட்டத் தில் இரட்டைக் குவளை மற்றும் முடி திருத்த நிலையங்களில் தீண்டாமை இல்லை’ என்றும், இது தொடர்பாக ‘தனிப்பட்ட நபர்கள் மீது எந்தவிதப் புகார்களும் வரவில்லை’ என்றும், ‘அன்னூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராமங்களில் அடிக்கடி தாழ்த்தப்பட்ட நபர்கள் உரிமைப் பிரச்னை தொடர்பாக, தணிக்கை செய்யப்பட்டு வருவதாக’வும் எழுதியுள்ளனர். ஏப்ரல் 19-ம் தேதி, உயர் நீதிமன்றம் தீண்டாமை தொடர்பான வழக்கு ஒன்றில் அளித்த தீர்ப்பில் ‘எந்தப் பகுதியில் தீண்டாமை இருக்கிறதோ, அந்த மாவட்ட எஸ்.பி-யையும் கலெக்டரையும் சஸ்பெண்ட் செய்ய வேண்டும்’ என்று தெளிவா கக் கூறியுள்ளது. ஆனால், இதுவரை அப்படியான எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. சட்டங்களின் மூலமாகவே மட்டுமே தீண்டாமையை ஒழித்துவிட முடியாது என்றாலும், கடுமையான சட்டங்களும் இத்தகைய சாதிப் பாகுபாட்டை ஒழிக்க ஒரு வழிதான்!” என்கிறார் கொளத்தூர் மணி.
தலித் மக்களின் பிரச்னைகளுக்காகக் குரல் கொடுக்க வேண்டிய தலித் கட்சிகள், அந்தப் பிரச்னைகளைக் கைவிட்டு தேர்தல் அரசியல், தமிழ்த் தேசியம் எனத் திசை திரும்பும் அவலம் ஒருபுறம், மற்ற ஓட்டுக் கட்சிகளோ ஆதிக்கச் சாதியின் வாக்கு வங்கிக்காக தலித் மக்களின் பிரச்னைகளைப் பேச மறுக்கும் துயரம் மறு புறம். இவற்றுக்கு இடையில்தான் தலித் மக்கள் தங்கள் மீது திணிக்கப்பட்டு இருக்கும் சாதிய இழிவோடு வாழ வேண்டி இருக்கிறது.
இத்தகைய தீண்டாமைகளைக் கணக்கில் எடுத்துக்கொள்ளாமலேயே ‘2020-ல் இந்தியா வல்லரசு’, இளைஞர்களே கனவு காணுங்கள், மனித முகம்கொண்ட உலகமயமாக்கம், தகவல் தொழில்நுட்ப யுகம், இலவசத் திட்டங்கள் என்கிற குரல்களைக் கேட்கும்போது,
‘ஒங்க தலைவன் பொறந்தநாளு போஸ்டர் ஒட்டவும் – ஒங்க
ஊர்வலத்தில தர்ம அடியை வாங்கிக் கட்டவும் -எங்க
முதுகு நீங்க ஏறும் ஏணியாகவும் – நாங்க
இருந்தபடியே இருக்கணுமா
காலம் பூராவும்?
சதையும் எலும்பும் நீங்க வச்ச தீயில் வேகுதே – உங்க
சர்க்காரும் கோர்ட்டும் அதில எண்ணையை ஊத்துதே
எதை எதையோ சலுகையினு அறிவிக்கிறீங்க – நாங்க
எரியும்போது எவன் மசுரைப் பிடுங்கப் போனீங்க?’

என்கிற இன்குலாப்பின் ‘மனுசங்கடா’ பாடல் வரிகள்தான் நினைவுக்கு வருகின்றன!
                                                (ஆனந்த விகடன் – 03.08.11)

என்னிடம் இருப்பது ஆண்குறி…!


எனக்கு பசித்த போது…சமைத்து போட வேண்டும்…!
குளிப்பதற்கு சுடுநீர்…வைத்து கொடுக்க வேண்டும்…!
அழுக்கான உடையை…துவைத்துப்போட வேண்டும்…!
ஏனெனில் என்னிடம் இருப்பது ஆண்குறி…!
என் ஆண்மைக்கு வாரிசாக…பிள்ளை பெற்றுப் போட வேண்டும்…!
நான் அடித்தால் அடிவாங்கிக் கொண்டு…அடங்கிப் போக வேண்டும்…!
என் பெற்றோருக்கும்…ஏவல் செய்ய வேண்டும்…!
எங்களுக்கு அடிமையாய் இருக்க வேண்டும்…ஏனெனில் என்னிடம் இருப்பது ஆண்குறி…!
என் குறி விரைத்துக் கொண்டால்…உன்னிடமும் வரும்…தேவைப்பட்டால் மற்றவரிடமும் செல்லும்…என் குறிக்கு கற்பு கிடையாது…!
ஏனெனில் என்னிடம் இருப்பது ஆண்குறி…!
மொத்தத்தில்…எனக்கென்ற தனித்துவம் இருக்கின்றது…!
வலிமை இருக்கிறது…!
அடக்கி ஆளும் தலைமை இருக்கின்றது..!
எனக்குள் எல்லாம் இருக்கிறது…!
உன்னைவிட நானே உயர்ந்தவன்…!
ஏனெனில் என்னிடம் இருப்பது ஆண்குறி…!

தமிழச்சி

எது வரலாறு?


“மனிதகுல வரலாற்றில் நிகழும் நிகழ்ச்சிகள் எல்லாம் உண்மைகளை மட்டுமே எடுத்துரைத்து தொகுக்கப்பட்ட வரலாறுகள் என்பது, எப்போதுமே உண்மையாய் இருப்பதில்லை. வரலாற்றை யார் யார் எழுதுகிறார்கள் என்பதைப் பொறுத்து உண்மைகள் மாறுபடுகின்றன.” – {ஹங்கேரிய சிந்தனையாளர் மான்ஹீம்}

வரலாறு என்கிறோம், நம் முன்னோர்களின் வாழ்க்கை முறைகள், போராட்டங்கள், நிகழ்வுகள் யாரோ எப்போதோ எழுதிய சரித்திரக் குறிப்புகளை வைத்துக்கொண்டு கணக்கீடு செய்கிறோம். அதை உண்மை என்று நம்புகின்றோம். அப்படி எதற்காக நம்பவேண்டும்? எதனால் நம்புகிறோம்? இந்த வரலாறு எப்படி வந்தது? யாரால் எழுதப்படுகிறது? நடக்கும் நிகழ்வுகளை நடுநிலையில் இருந்து அக்காலத்திற்கேற்ற சமூக ஆய்வாளர்களால் எழுதப்படுகிறதா? நிறைய வரலாறுகள் அப்படி எழுதப்படவும் இல்லை. மொழிகள் எழுத்துக்கள் வழக்கில் இல்லாத மிலேச்சர்களாக மனிதர்கள் இருந்தபோது வரலாறுகள் எழுதப்படவில்லையே என்று குறைப்பட்டுக் கொள்வது நம் முட்டாள்தனமே. சில நிகழ்வுகள் ஊகங்கள் அடிப்படையிலேயே சிந்திக்க வைத்திருக்கிறது வரலாற்று ஆராய்ச்சியாளர்களை. அடுத்த காலகட்டமாக குடியிருப்பு தலைவனுக்கு கீழே அடிபணிந்து வாழ்ந்த சமூக சூழல்கள் மொழி வழக்கத்தில் இருந்த போது கூட வரலாறுகள் எழுதப்படவில்லை.

முதல் முறையாக வரலாறு மனிதர்களை பற்றி ஆய்வு செய்ய முற்பட்டபோது வரலாறுகள் தோன்றியது. அதை யூகமாகவே வைத்திருக்கிறது வரலாறு. அதிலிருந்தே நம் வரலாறுகள் ஆரம்பமாகிறது. இருப்பினும் சொதப்பல் வரலாறுகளை முன்ணிலைப்படுத்தியே நமது சிந்தனைகளில் மதிப்பீடுகளை செய்துக் கொண்டிருக்கிறோம். Convex, Concave Mirrors என்பார்கள். நான்கு சுவர்களுக்குள் பதிக்கப்பட்டுள்ள பிரம்மாண்டமான அரங்கில் மனித வாழ்க்கை நிகழ்ந்து வருகிறது. நிகழ்ச்சிகளின் பிம்பங்கள் ஒவ்வொரு நொடியில் ஒவ்வொரு கோணத்தில் திரிபுகள் நடக்கின்றன. அவரவர் திரிபுகளுக்கேற்ப எதிரொளிக்கின்றன. நிகழ்ச்சியின் நிழல்களாக அவை பார்க்கப்படுகின்றன. இக்கோணத்தில் சிந்தித்துப்பாருங்கள். எவ்வளவு சுவாரசியமாக இருக்கிறது நமக்கு?

துரோகங்கள், சந்தோஷங்கள், கவலைகள், வார்த்தைகள், வலிகள்…. வெற்றுவெளியில் மௌனமாய் அங்கீகரித்துக்கொண்டு காட்சிகளாய் பார்க்க ஆரம்பித்துவிட்டால் எப்படி இருக்கும் நமக்கு? ஆனால், சமூதாயச் சிந்தனைகள் எல்லாமே தனிமனிதர்களின் சிந்தனைகள்தான். தனி மனிதன் என்று வரும்போது அவரவர் சமூதாயத்தில் செய்யும் பங்களிப்புக்கேற்ப சொந்த உணர்ச்சிகளுக்கேற்ப ஒரு குறிப்பிட்ட கோண நிலையிலிருந்து Convex, Concave Mirrors போல, ஒரு கோணத்தில் இருந்தே சமூதாய விமர்சனம் செய்ய முற்படுகிறான். எனவே மனிதனிடமிருந்து பாராபட்சமற்ற உண்மையான கருத்து நமக்கு கிடைத்துவிட முடியாது என்பார் ஹங்கேரிய சிந்தனையாளர் மான்ஹீம்.

ஒவ்வொரு மனிதனின் நம்பிக்கைக்குள்ளும் கண்ணுக்குத் தெரியாமல் கருத்துக்கு சொந்தக்காரனின் அபிப்பிராயங்கள் பொதிந்துள்ளன. அவன் வரலாற்று ஆராய்ச்சியாளனானாலும் சரி. “கருத்துக்கு உடையவனுடைய நிழல் சிறிதும் பாதிக்காத உண்மைக் கூற்றுக்கள் இருக்க முடியும். அப்படி வரலாறுகள் இருக்கவே செய்கின்றன” என்கிறது மனித சுதந்திர சித்தாந்தம்.

ம்கூம்.., சான்சே இல்லை; அப்படி எதுவும் இருக்கவே முடியாது என்று அடித்து சொல்லிவிட்டார் மான்ஹீம். இங்கே இன்னொரு நிலைப்பாட்டினை பார்க்க வேண்டும். சமூதாயத்தில் கோட்பாடுகள் என்று பார்க்கும் போது பழங்காலத்தில் அரசனின் கோட்பாடுகள், சமயகுருக்களின் கோட்பாடுகள், நிலப்பிரபுக்களான செல்வந்தர்களின் கோட்பாடுகள் என மூன்று தரப்பிற்குட்பட்ட நிலைகளில் சமூதாயம் இயங்கி இருக்கிறது. குடிமக்கள் உழைப்பாளிகளின் கோட்பாடுகள் என்ன? என்பது எந்த வரலாற்றிலும் முன்ணிலைப்படுத்தப்படவில்லை. அவர்கள் அறிவற்றவர்களாகவும், படிப்பற்றவர்களாகவும், எதுவுமற்ற தகுதியில் இருப்பவர்களாகவும் கருதப்பட்டு அவர்களுடைய நல்லது கெட்டதை தகுதி வாய்ந்த தாங்களே தீர்மாணிக்கும் உரிமை உண்டு என்று சமூகத்தில் மேல்நிலையில் இருப்பவர்களால் கருதப்பட்டது. கருதப்பட்டது என்பதை விட அவ்வாறு சமரசம் செய்து அநீதி இழைக்கப்பட்டிருக்கிறது என்பது பொருத்தமாக இருக்கும்.

இவர்களின் ஆதிக்கத்தில் தான் வரலாறுகள் எழுதப்படுகின்றன. பழகாலத்தில் இம்முறையில் இருந்து மீள நினைத்த பாட்டாளி வர்க்கத்தினருக்கு முற்போக்குக் கோட்பாடுகள் சிந்திக்க வைத்திருக்கின்றன. மாற்றுக் கருத்துக்கள் மக்களிடையே நூற்றுக்கணக்கில் ஏற்பட்ட போது எழுதப்பட்ட வரலாறுகள் கூட மேல்மட்டத்தினருடன் சமரசம் செய்ய முற்பட்டிருக்கிறது. அல்லது கண்காணிப்பிற்குள்ளாகி இருக்கிறது. “உலகத்திலுள்ள அநீதிகளுக்கும், அநியாயங்களுக்கும், துன்பங்களுக்கும் ஒரு முக்கியமான காரணம் அதிகாரங்கள் ஒரு சில புள்ளிகளின் கையில் குவிந்து கிடப்பது தான். அதிகாரங்கள் பரவலாக்கப்படும்போது அநீதிகள் நிகழும் வாய்ப்பும் குறைவு. இது சமூதாயத்தின் மேம்பாட்டுத் திட்டங்களை உருவாக்கும் போதும் பொருந்தும். வரலாறுகள் எழுதப்படும் போதும் பொருந்தும்.” இதேயே மான்ஹீம் சொல்கிறார் :

“சமூதாயக் குழுக்கள் பிற குழுக்களின் கோட்பாடுகளை பரிவோடு கவனித்து அவர்கள் கோணத்திலிருந்து அணுகினால், விவேகப்பூர்வமான கருத்துக்கு வரலாம். ஒரளவு முயன்றால் சமூதாயப் பிரிவுகளை அந்தந்த காலகட்டத்திற்கு ஏற்ற தேவைகளை அனுசரித்து இணைக்க முடியும். அவ்வாறு பல்வேறு கோணங்களை ஒருங்கிணைப்பதற்கு தனியாக ஒரு அறிவார்ந்த வர்க்கம் தேவை. பலதுறை நிபுணர்கள், சிந்தனையாளர்கள் அடங்கிய அந்த வர்க்கத்தினர் மக்களுக்கு அவரவர் கோட்பாடுகளிலுள்ள நிறைகுறைகளை எடுத்து ஆய்வு செய்யப்பட்டு வரலாறுகள் எழுதப்பட வேண்டும் என்பார். இன்றைய சமூக ஆய்வாளர்கள் இந்த கோட்பாட்டை தான் தற்போது கடைப்பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். பார்ப்போம் இன்றைய வரலாறுகள் நாளைய மனிதன் அறிந்து கொள்ள என்ன முறையில் வெளிப்படுகிறது என்று.

தமிழச்சி

14/03/2009

படுத்துக் கொண்டே ஜெயித்துவிட்டார் பத்மநாபாசுவாமி…


அம்பானியையும் பில் கேட்சையும் திருப்பதி ஏழுமலையானையும் படுத்துக் கொண்டே ஜெயித்துவிட்டார் பத்மநாபாசுவாமி. இந்தியா வல்லரசு ஆகிவிட்டது……. ஆன்மீக வல்லரசு!

உண்மையில் இது ஒரு பொற்காலம்தான். சாயிபாபா உயிரோடு இருந்தபோது கக்கிய தங்க லிங்கங்களைக் காட்டிலும் பன்மடங்கு அதிகமான தங்கத்தை பாபா இறந்தபின் அவருடைய தனியறையான யஜுர்வேத மந்திரம் கக்கிக் கொண்டே இருக்கிறது. திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவில் நிலவறையிலிருந்து இதுவரை எடுக்கப்பட்ட தங்கம், வைரங்களின் மதிப்பு ஒரு இலட்சம் கோடி ரூபாய் என்கிறார்கள். இல்லை, 5 இலட்சம் கோடி என்கிறார்கள். இன்னும் இரண்டு நிலவறைகள் திறக்கப்படக் காத்திருக்கின்றன.

இந்தியாவின் முதற்பெரும் கோடீசுவரனான முகேஷ் அம்பானியைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, அந்த இடத்தை ரத்தன் டாடா பிடித்து விட்டார் என்று சமீபத்தில்தான் செய்தி வெளிவந்தது. ஆன்மீக உலகிலும் அதிரடி மாற்றம். இந்தியாவிலேயே மிகப்பெரும் கோடீசுவரர் என்ற இடத்தை நெடுங்காலமாகக் கைப்பற்றி வைத்திருந்த திருப்பதி ஏழுமலையானை வீழ்த்தி அந்த இடத்தைப் பிடித்து விட்டார் பத்மமநாபசாமி. ஏழுமலையானின் சொத்து மதிப்பு 40,000 கோடிதானாம். பத்மநாபசாமியின் இன்றைய நிலவறைச் சொத்து மதிப்பு நிலவரமே ஒரு இலட்சம் கோடியைத் தாண்டி விட்டது. திருமாலைத் தோற்கடித்தவரும் திருமாலே என்பதனால் வைணவர்கள் ஆறுதல் கொள்ளலாம்.

ஃபோர்ப்ஸ் பத்திரிகை, உலகப் பணக்கார மனிதர்களின் பட்டியலோடு உலகப் பணக்காரக் கடவுளர்களின் பட்டியலையும் வெளியிடுமானால் ஆன்மீக உலகின் அசைக்க முடியாத வல்லரசு இந்தியாதான் என்ற உண்மையை உலகம் புரிந்து கொள்ளும். நிற்க. மீண்டும் நாம் பத்மநாபசாமி கோவிலுக்கே வருவோம்.

சீரங்கத்து அரங்கநாதனைப் போலவே, பாம்புப் படுக்கையின் மீதில் மீளா உறக்கத்தில் ஆழ்ந்திருக்கும் பத்மநாபசாமியின் கோவிலுக்குக் கீழே, கல் அறைகள் என்று அழைக்கப்படும் ஆறு நிலவறைகள் கண்டுபிடிக்கப் பட்டிருக்கின்றன. காற்றோட்டமில்லாத இந்தப் பொந்துகளின் உள்ளே பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் பொக்கிஷங்களை வெளியே எடுத்து, அவற்றைப் பட்டியலிட வேண்டும் என்று உச்சநீதி மன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து கடந்த சில நாட்களாக இந்தப் புதையல் வேட்டை நடந்து வருகின்றது.

சுமார் ஒன்றரை அடி உயரமுள்ள மகாவிஷ்ணுவின் தங்கச்சிலை, தங்கத்தினால் செய்யப்பட்டு வைரக் கற்கள் பதிக்கப்பட்ட இரண்டு தேங்காய் மூடிகள், பத்தரை கிலோ எடையுள்ள 18 அடி நீள மார்புச் சங்கிலி, 36 கிலோ எடையுள்ள தங்கத் திரை, தங்க அங்கி, 500 கிலோ தங்கப் பாளங்கள், தங்கத்தில் வில் அம்பு, வைரம் பதிக்கப்பட்ட தங்கத் தட்டுகள், பல நூறு கிலோ எடையுள்ள தங்க மணிகள், நகைகள், கிழக்கிந்தியக் கம்பெனியின் தங்கக் காசுகள், நெப்போலியனின் தங்கக் காசுகள், ஐரோப்பாவின் புகழ்பெற்ற ஆன்ட்வெர்ப் நகரின் வைரங்கள் ..

தங்கம், வைரம் என்ற முறையில் இவற்றின் சந்தை மதிப்பு ஒரு இலட்சம் கோடி ரூபாய் வருவதாகவும், புராதனக் கலைப்பொருட்கள் என்ற வகையில் மதிப்பிட்டால், இவற்றின் மதிப்பு பத்து இலட்சம் கோடி ரூபாயாகவும் இருக்கலாம் என்றும் கூறுகின்றன பத்திரிகைகள். நிலவறைக்குள் தங்கம் இருக்கும் என்பது எல்லோரும் எதிர்பார்த்ததுதான். ஆனால் அதன் அளவுதான் யாரும் எதிர்பாராதது. இன்னும் இரண்டு நிலவறைகள் திறக்கப்பட வேண்டும். அவற்றைத் திறப்பதற்கு முன் பாதுகாப்பைப் பலப்படுத்த வேண்டும் என்கிறது போலீசு.

கோவிலைச் சுற்றிலும் நெருக்கமாக வீடுகள் இருப்பதுடன், பூமிக்கு அடியில் இரண்டரை அடி நீள அகலத்தில் பழங்காலத்து பாதாள சாக்கடை ஒன்று இருப்பதால், அந்த பாதாள சாக்கடை வழியாக யாரேனும் நிலவறைகளுக்குள் புகுந்து தங்கச் சுரங்கத்தைக் கொள்ளையடிக்க வாய்ப்பிருப்பதாக அஞ்சுகிறது போலீசு. எனவே, பத்மநாப சாமி கோவிலுக்கு அருகில் குடியிருக்க நேர்ந்த துர்ப்பாக்கியசாலிகள் அனைவரும் போலீசின் கண்காணிப்புக்கு உரியவர்கள் ஆகி விட்டார்கள்.

ஒரு இலட்சம் கோடிக்கும் மேல் மதிப்புள்ள இந்தத் தங்கப் புதையல் எப்படி வந்தது? மன்னர்களின் ஆடை ஆபரணங்கள், அரண்மனைகள், அந்தப்புரங்கள், அவர்களது சொத்துகள் ஆகிய அனைத்தும் மக்களின் ரத்தத்தை வரியாகப் பிழிந்து எடுக்கப்பட்டவைதான் என்பதற்கு விளக்கங்கள் தேவையில்லை. பார்ப்பனக் கொடுங்கோன்மையின் வரலாற்று உதாரணமாக இருந்த கேரளத்தில், விவசாயிகள் எவ்வளவு இரக்கமற்ற முறையில் சுரண்டப்பட்டனர் என்ற உண்மையைக் கடந்த நூற்றாண்டின் மாப்ளா விவசாயிகள் போராட்டம் வெளிக்கொணர்ந்தது. இன்று பத்மநாபசாமி கோவிலின் தங்கப்புதையலும், வைர நகைகளும் அந்தச் சுரண்டலின் ஆபாசமான நிரூபணமாக மின்னுகின்றன.

ஸ்விஸ் வங்கிகள், பாதுகாப்புப் பெட்டகங்கள் போன்றவை இல்லாத அந்தக் காலத்தில் கோவில்கள்தான் மன்னர்கள் தமது செல்வத்தைப் பதுக்கி வைப்பதற்கான பெட்டகங்களாக இருந்திருக்கின்றன. அது மட்டுமல்ல, நிலப்பிரபுத்துவ சாதிய சமூகத்தின் அதிகாரமும், அரசு அதிகாரமும் கோவில் வழியாகவே செலுத்தப்பட்ட காரணத்தினால், கோவில்கள் அறிவிக்கப்படாத அரசு கஜானாக்களாகவே இருந்திருக்கின்றன. ஆகையினால்தான் இராசராச சோழன் முதல் கஜினி முகமது வரையிலான மன்னர்கள் அனைவரும் தாங்கள் ஆக்கிரமிக்கும் நாட்டில் உள்ள கோவில்களைக் குறிவைத்துக் கொள்ளையிட்டிருக்கிறார்கள். தங்கத்தைக் கோவிலுக்குப் பதிலாகச் சுடுகாட்டில் புதைத்து வைப்பது மரபாக இருந்திருந்தால், கஜினி முகமதுவும் சோமநாதபுரத்தின் கோவிலுக்குப் பதிலாக அந்த ஊரின் சுடுகாட்டைத்தான் சூறையாடியிருப்பான்.

திருவிதாங்கூர் சமஸ்தானத்திடம் இந்த அளவுக்குத் தங்கம் சேர்ந்ததற்குச் சில குறிப்பான காரணங்களும் உள்ளன. அன்று ஐரோப்பாவுடன் கடல் வணிகத்தில் ஈடுபட்டு வந்த செம்பகச்சேரி, கோட்டயம், கொச்சி ஆகிய நாடுகள் திருவிதாங்கூரைக் காட்டிலும் பன்மடங்கு செல்வ வளம் மிக்கவையாக இருந்தன. 18 ஆம் நூற்றாண்டில் திருவிதாங்கூர் மன்னனாக இருந்த மார்த்தாண்ட வர்மா, இந்த நாடுகளின் மீது படையெடுத்து அந்நாடுகளின் செல்வத்தைக் கொள்ளையிட்டிருக்கிறான். இவையன்றி மன்னன் விதிக்கும் அபராதங்கள் அனைத்தும் கோவிலின் பெயரில் தங்கமாக வசூலிக்கப்பட்டதால் அவையும், வணிகர்களும் செல்வந்தர்களும் கோவிலுக்குச் செலுத்திய காணிக்கைகளும் தங்கமாகச் சேர்ந்திருக்கின்றன.

18 ஆம் நூற்றாண்டில் தமிழகத்தில் கட்டபொம்மன், மருது முதலானவர்களும், மைசூரில் திப்புவும் ஆங்கிலேயனை எதிர்த்து நின்றபோது, கேரளத்தில் திருவிதாங்கூர் சமஸ்தானமும், தமிழகத்தில் ஆற்காட்டு நவாபும் கும்பினியின் கைக்கூலிகளாக இருந்தனர். கும்பினியின் எடுபிடியாக இருந்த திருவிதாங்கூர் அரசுக்கு எதிராக திப்பு படையெடுத்த போது, கேரளத்தின் வடபகுதியில் இருந்த குறுநில மன்னர்கள் பலரும் தமது பொக்கிஷங்களைத் திருவிதாங்கூர் மன்னனிடம் கொடுத்துப் பதுக்கி வைத்திருக்கின்றனர். இதற்கு ஆவணச் சான்றுகள் உள்ளன என்று கூறும் கேரளத்தைச் சேர்ந்த வரலாற்றாசிரியர் கோபாலகிருஷ்ணன், இந்த நிலவறைகள் எல்லாம் அப்போதுதான் தோண்டப்பட்டிருக்க வேண்டும் என்றும் கூறுகிறார். அந்நியப் படையெடுப்புக்கு அஞ்சியது மட்டுமல்ல, அரச குடும்பங்களுக்குள் வழக்கமாக நடக்கும் அரண்மனைச் சதிகளும், உள்குத்துகளும் கூட இப்படி தங்கத்தைப் புதைத்து வைக்கக் காரணமாக இருந்திருக்கலாம்.

அவ்வாறின்றி, ஆன்மீக அடிப்பொடிகள் சித்தரிப்பதைப் போல இவையெல்லாம் கடவுளுக்கு வந்த காணிக்கைகள் அல்ல. ஒரு வாதத்துக்கு அப்படி வைத்துக் கொண்டாலும் அதற்குக் கணக்கும் இல்லை, யார் கொடுத்த காணிக்கை என்பதற்கான விவரமும் இல்லை. கோவிலில் மணி அடிப்பவனுக்கும், சமையற்காரனுக்கும், விளக்கு போடுபவனுக்கும் ஆண்டுக்கு எவ்வளவு கலம் நெல் அளிக்க வேண்டும் என்பதைக் கல்வெட்டில் செதுக்கி வைக்கும் அளவுக்கு ‘யோக்கியர்களான’ மன்னர் பரம்பரையினர், பல இலட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள ‘காணிக்கைகளை’ புதைத்து வைத்திருப்பது பற்றி ஒரு துண்டுச் சீட்டில் கூட எழுதி வைக்காததற்கு வேறு என்ன காரணம்?

இந்தப் புதையல் அனைத்தையும் மக்கள் நலனுக்கும், வறுமை ஒழிப்புத் திட்டங்களுக்கும் பயன்படுத்த வேண்டும் என்று ஓய்வுபெற்ற நீதிபதி வி.ஆர். கிருஷ்ணய்யர், கேரள பகுத்தறிவாளர் சங்கத்தை சேர்ந்த காலநாதன், வரலாற்றாய்வாளர் செரியன் போன்றோர் கூறியிருக்கின்றனர். இதைக் கேட்டவுடனே ஆத்திரம் கொண்ட ஆர்.எஸ்.எஸ் காலிகள் நள்ளிரவில் காலநாதன் வீட்டைக் கல்லெறிந்து தாக்கியுள்ளனர்.

“தற்போது எடுக்கப்பட்டுள்ள நகைகள் எல்லாம் மன்னர் குடும்பத்துக்கே சொந்தம்” என்பது காஞ்சிபுரத்து யோக்கியர் ஜெயேந்திரனின் கருத்து. “அவை தொல்லியல் துறைக்குச் சொந்தம்” என்பது கே.என். பணிக்கர் போன்றோரின் கருத்து. “மாநில அரசுக்குச் சொந்தம்” என்பது வேறு சிலர் கருத்து. “அனைத்தும் பகவான் பத்மநாப ஸ்வாமிக்கே சொந்தம்” என்பது மாநில முதல்வர் உம்மன் சாண்டியின் கருத்து.

“பகவான் பத்மநாபஸ்வாமியும், அவருடைய கோவிலும், அதன் சொத்துக்களும் மன்னர் குடும்பத்துக்கே சொந்தம்” என்பது தற்போதைய திருவிதாங்கூர் மகாராஜா உத்திராடம் திருநாள் மார்த்தாண்ட வர்மாவின் கருத்து. அது வெறும் கருத்து அல்ல. இந்தக் கோவிலும், அதன் சொத்துக்களும் மக்களுக்குச் சொந்தமா அல்லது மன்னர் குடும்பத்துக்குச் சொந்தமா என்பது உச்சநீதி மன்றத்தில் தற்போது நிலுவையில் இருக்கும் வழக்கு. இந்த வழக்கின் அங்கமாகத்தான் தற்போதைய புதையல் வேட்டை நடந்து கொண்டிருக்கிறது என்பதால் மேற்கூறிய கேள்விக்கான விடையைப் புரிந்துகொள்வதற்கு இவ்வழக்கு பற்றித் தெரிந்து கொள்வதும் அவசியம்.

1947 இல் திருவிதாங்கூர் சமஸ்தானத்தை இந்தியாவுடன் இணைப்பதற்கு மன்னருடன் போடப்பட்ட ஒப்பந்தத்தில், கேரளத்தின் மற்ற கோவில்களெல்லாம் அறநிலையத்துறையின் கீழ் கொண்டு வரப்பட்டாலும், பத்மநாபசாமி கோயில் மட்டும் தனது நேரடிக் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்பதை உத்திரவாதம் செய்து கொண்டார் திருவிதாங்கூர் மன்னர். பத்மநாபசுவாமியின் மீது மட்டும் மன்னர் கொண்டிருந்த அளவுகடந்த பக்திக்குக் காரணம் என்ன என்பது அப்போது புரியவில்லையெனினும் இப்போது அனைவருக்கும் புரிந்திருக்கும்.

‘இந்துக் கோவில், இந்து மன்னர், இந்துப் புதையல்’ என்று சங்க பரிவாரத்தின் அமைப்புகள் தற்போது கூச்சல் எழுப்புகின்றனர். . கிறித்தவர்கள், முஸ்லிம்களிடத்திலிருந்தும் திருவிதாங்கூர் மன்னர் பிடுங்கிய வரிதான் தங்கப் பொக்கிஷமாக மின்னிக் கொண்டிருக்கிறது. எனினும், இந்தப் பொக்கிஷத்தை என்ன செய்வது என்பது பற்றி கிறித்தவர்களோ முஸ்லிம்களோ கருத்துத் தெரிவிக்கக் கூடாது என்று மிரட்டுகின்றனர் இந்து வெறியர்கள். அவர்களது அபிமான திருவிதாங்கூர் மன்னரும், திவான் சர்.சி.பி. ராமசாமி ஐயரும் அகண்ட பாரதத்திலிருந்து திருவிதாங்கூரைத் துண்டாடவும், அதன் பின் பாகிஸ்தானுடன் கூட்டணி சேரவும் முயன்றார்கள் என்ற வரலாற்று உண்மை அரை டவுசர் அம்பிகள் பல பேருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

1947 இல் மேற்படி இந்து மன்னரும், அவருடைய திவான் சர்.சி.பி. ராமசாமி ஐயரும் திருவிதாங்கூரை (கேரளத்தை) தனிநாடாக அறிவித்து பிரிந்து போவதற்கே முயன்றனர். அணு ஆயுதத் தயாரிப்புக்குப் பயன்படும் மோனோசைட் எனும் தாது திருவிதாங்கூர் கடற்கரையில் நிறைந்திருந்ததால் திருவிதாங்கூரைத் தனிநாடாக்கி விட்டால், அதனைப் பிரிட்டன் மட்டும் பயன்படுத்திக் கொள்ள வசதியாக இருக்கும் என்று பிரிட்டிஷ் அமைச்சர்களும், சி.பி. ராமசாமி ஐயரும் சேர்ந்து இரகசியத் திட்டம் தீட்டினர். பாகிஸ்தானும் திருவிதாங்கூரும் தனியே நட்புறவு ஒப்பந்தம் செய்து கொள்ளலாம் என்று ஜூன், 1947 இல் ஜின்னாவுக்குக் கடிதம் எழுதினார் சி.பி. ராமசாமி ஐயர். ஜூலை 1947 இல் தனிநாடாகச் செல்லப்போவதாக மவுண்ட்பாட்டனிடம் ராமசாமி ஐயர் அறிவிக்கவும் செய்தார். ஆனால் கம்யூனிஸ்டுகள் தலைமையிலான புன்னப்புரா வயலார் விவசாயிகள் எழுச்சியும், சமஸ்தானம் முழுவதும் மன்னராட்சிக்கு எதிராக நடைபெற்ற மக்கள் போராட்டங்களும் மன்னருடைய தனிநாட்டுக் கனவில் மண் அள்ளிப் போட்டன. (ஆதாரம், தி இந்து, 25.5.2008)

இதுதான் ‘இந்துப் பொக்கிஷத்தை’ச் சுருட்டிக்கொண்டு போவதற்கு ‘இந்து மன்னன்’ செய்த சதியின் கதை. சமஸ்தான மன்னர்களுக்குப் பல்வேறு சலுகைகளை வழங்கி இந்திய யூனியனுன் இணைத்த இரும்பு மனிதர் சர்தார் படேல், திருவிதாங்கூரை இந்தியாவுடன் இணைக்கும் ஒப்பந்தத்தில், பத்மநாபசாமி கோவில் திருவாங்கூர் மன்னர் சித்திரைத் திருநாள் பலராம வர்மாவின் நேரடி நிர்வாகத்தின் கீழ் இருக்கும் என்பதை ஏற்றுக் கொண்டிருந்தார்.

1991 இல் பலராம வர்மா இறந்தபின் அவரது தம்பியான உத்திராடம் திருநாள் மார்த்தாண்ட வர்மா, அடுத்த வாரிசு என்ற முறையில் கோவிலின் மீது உரிமை கோரியதுடன், கோயிலில் உள்ள பொக்கிஷங்கள் அனைத்தும் அரச குடும்பத்தின் தனிச்சொத்துக்கள் என்றும் கூறினார். இதனை எதிர்த்து கோவிலின் சொத்துக்களையும், நிர்வாகத்தையும் அரசு மேற்கொள்ள வேண்டும் என்று கோரி சுந்தரராஜன் என்ற வழக்குரைஞர் கேரள உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தார்.

இது தொடர்பாக நடைபெற்ற வழக்கில் (உத்திராடம் திருநாள் மார்த்தாண்ட வர்மா -எதிர்- யூனியன் ஆஃப் இந்தியா) 31.1.2011 அன்று கேரள உயர்நீதி மன்ற பெஞ்சு (நீதிபதிகள்: ராமச்சந்திரன் நாயர், சுரேந்திர மோகன்) தீர்ப்பளித்தது. அந்தத் தீர்ப்பின் சாரம் கீழ்வருமாறு:

“சித்திரைத் திருநாள் பலராம வர்மா 1991 இல் மரணமடைந்த பின் அவர் வகித்து வந்த கோவிலின் அறங்காவலர் பொறுப்பு, மாநில அரசுக்குத்தான் வரும். அரசியல் சட்டத்தின் 366(22) பிரிவின் படி இந்தியாவுக்குள் யாரும் எந்த விதத்திலும் மன்னர் என்ற தகுதியைக் கோர முடியாது. எனவே அரச வாரிசு என்ற முறையில் மார்த்தாண்ட வர்மா கோயிலின் மீது உரிமை கோர முடியாது.

பத்மநாபசாமி கோவில் என்பது மன்னர் குடும்பத்தின் தனிச்சொத்து அல்ல. அவ்வாறு தனிச்சொத்தாக இருந்திருப்பின் திருவிதாங்கூர்-இந்திய யூனியன் இணைப்பு ஒப்பந்தத்தில் இது குறித்த ஒரு ஷரத்தினைச் சேர்க்க வேண்டிய அவசியமே நேர்ந்திருக்காது.
கோவிலின் சொத்துக்கள், பொக்கிஷங்கள் குறித்து மறைந்த பலராம வர்மா தயாரித்த பட்டியலைச் சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த போதிலும் மார்த்தாண்ட வர்மா அவற்றைச் சமர்ப்பிக்கவில்லை. அவர் கொடுத்துள்ள விவரங்கள் முறையற்றவையாகவும், நம்பகத்தன்மையற்றவையாகவும் உள்ளன.

தற்போது மார்த்தாண்ட வர்மா என்ற தனிநபர் பத்மநாபசாமி கோவிலை நிர்வகித்து வருவதைச் சட்டப்படி சரியானது என்று மாநில அரசு கருதுகிறதா என்று இந்த நீதிமன்றம் எழுப்பிய கேள்விக்கு மாநில அரசு பதிலே சொல்லவில்லை. கோவில் நல்லபடியாக நிர்வகிக்கப் படுவதாகவும், அதில் தலையிட வேண்டிய அவசியம் அரசுக்கு இல்லை என்றும் மாநில அரசு பதிலளித்திருக்கிறது. கேரளத்தில் தனியார்களால் நிர்வகிக்கப்படும் கோவில்கள் குறித்த அரசின் நிலை பொதுமக்களின் நலனைப் பிரதிபலிப்பதாக இல்லை.

ஏராளமான தனியார் கோவில்கள் செல்வாக்குப் பெற்று வருகின்றன. அவர்களது சொத்துக்கள் எல்லாம் மக்களும், பக்தர்களும் செலுத்திய காணிக்கைகளே. மத நிறுவனங்கள் பொதுமக்களிடமிருந்து இவ்வாறு பணம் திரட்டும்போது, அவை மக்களுக்குக் கணக்கு கொடுத்தாக வேண்டும் என்பதை அரசு உத்திரவாதப்படுத்த வேண்டும். கடவுளின் பெயரால் மக்களின் பணத்தைக் கொள்ளையடிக்கும் நடவடிக்கைகளைத் தடுக்க வேண்டியது மிகவும் அவசரக் கடமையாகி விட்டது என்று கருதுகிறோம். கடவுள் அல்லது நம்பிக்கையின் பெயரால் திரட்டப்படும் பணத்தைத் தனிநபர்கள் அல்லது அறங்காவலர் குழுக்களின் தனிப்பட்ட நலனுக்குத் திருப்பி விடுவதை அனுமதிப்பது என்பது, மதம், நம்பிக்கை ஆகியவற்றை வைத்து வியாபாரம் செய்வதை அனுமதிப்பதாகும். இதனை அரசு அனுமதிக்கிறதா என்பதே கேள்வி. இவ்விசயத்தில் மாநில அரசின் அணுகுமுறை பக்தர்களின் நலனையோ, மக்களின் நலனையோ பிரதிபலிப்பதாக இல்லை.

எனவே பத்மநாபசாமி கோவிலின் சொத்துக்களையும், அதன் நிர்வாகத்தையும் மாநில அரசு மேற்கொள்ள வேண்டும். அதனை நிர்வகிப்பதற்குரிய அறங்காவலர் குழு அல்லது சட்டப்பூர்வமான நிர்வாகத்தை நியமிக்க வேண்டும். இது 3 மாதங்களுக்குள் நிறைவேற்றப்பட வேண்டும்.

அவ்வாறு மாநில அரசால் நியமிக்கப்படுகின்ற கோவில் நிர்வாகியின் மேற்பார்வையில் கோவிலில் உள்ள சுரங்க அறைகள் திறக்கப்பட்டு, அதில் உள்ள பொக்கிஷங்கள் பட்டியலிடப்பட வேண்டும். இந்தப் பணியை நிறைவேற்றுவதற்குப் பொருத்தமான, நேர்மையான அதிகாரிகள் நியமிக்கப்பட வேண்டும். அதன் பின்னர் கோவில் வளாகத்திலேயே ஒரு அருங்காட்சியகம் அமைக்கப்பட்டு, அங்கே அவையனைத்தும் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட வேண்டும்.”
மேற்கூறிய தீர்ப்பில் கேரள உயர்நீதி மன்றம் மாநில அரசு என்று குறிப்பிட்டு விமரிசிப்பது மார்க்சிஸ்டு கட்சி அரசைத்தான். மே.வங்கத்தில் தரகு முதலாளி டாடாவுக்கு ஆதரவாக புத்ததேவ் பட்டாச்சார்யா. கேரளத்தில் திருவிதாங்கூர் மன்னனுக்கு ஆதரவாக அச்சுதானந்தன்! கோவிலும், அதன் சொத்துக்களும் மன்னரிடமே இருக்கட்டும் என்று கூறிய மார்க்சிஸ்டு கட்சி அரசு, அதனை மறுத்து உயர்நீதி மன்றம் தீர்ப்பு வழங்கிய பின்னரும் அந்தத் தீர்ப்பை அமல்படுத்தவில்லை என்பதுதான் மிகவும் முக்கியமானது. மூன்று மாதங்களுக்குள் கோவிலை மேற்கொள்ள வேண்டும் என்று ஜனவரி 31, 2011 இல் உயர்நீதி மன்றம் உத்தரவிட்டிருந்த போதிலும் அச்சுதானந்தன் அரசு ஒரு துரும்பைக் கூட அசைக்கவில்லை.

விளைவு, மார்த்தாண்ட வர்மா உச்சநீதி மன்றத்தில் மனுத் தாக்கல் செய்து, மேற்கூறிய உயர்நீதி மன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடையும் வாங்கி விட்டார். கோவிலை மாநில அரசு மேற்கொள்வதற்கு இடைக்காலத் தடை பெற்றதன் மூலம், கோவிலின் நிர்வாகத்தை மார்த்தாண்ட வர்மா தன்னுடைய கைகளில் வைத்திருக்கிறார். சுரங்க அறையிலிருந்து பொக்கிஷங்களை எடுத்துப் பட்டியலிடுவதற்கு மட்டும் உச்சநீதி மன்றம் ஒரு குழுவை நியமித்திருக்கின்றது.

பொக்கிஷங்கள் மக்களுக்குத்தான் சொந்தம் என்பதை நாம் அரசியல் ரீதியாகக் கூறுகிறோம். சட்டப்படி அது அரசுக்குத்தான் சொந்தம் என்று தனது தீர்ப்பில் விளக்கியிருக்கிறது கேரள உயர்நீதி மன்றம்.

ஆனால் பொக்கிஷங்களும், கோவிலும் தனக்குச் சொந்தம் என்பது மார்த்தாண்ட வர்மாவின் கருத்து. சங்கராச்சாரியின் கருத்தும் அதுதான். “பொக்கிஷம் கோவிலுக்குச் சொந்தம். அதில் அரசு தலையிடக் கூடாது” என்பது ஆர்.எஸ்.எஸ் கும்பலின் கருத்து. “பொக்கிஷம் கோவிலுக்குச் சொந்தம். கோவில் நிர்வாகம் மன்னனுக்குச் சொந்தம். அதில் அரசு தலையிடத் தேவையில்லை” என்பது மார்க்சிஸ்டுகளின் கருத்து. “பொக்கிஷம் பத்மநாபசுவாமிக்கு சொந்தம்” என்பது காங்கிரசு முதல்வர் உம்மன் சாண்டியின் கருத்து. இவர்கள் எல்லோரது கருத்தும் சாராம்சத்தில் ஒரே கருத்துதான்.

யார் கொடுத்தார்கள், எவ்வளவு கொடுத்தார்கள், எதற்காகக் கொடுத்தார்கள் என்று எந்தவித விவரத்தையும் காட்டாமல், ஒரு இலட்சம் கோடி ரூபாய்க்கும் மேற்பட்ட செல்வத்தை வைத்துக் கொண்டு, கேட்டால் பகவானுக்கு வந்த காணிக்கை என்கிறார்கள். காணிக்கைக்குக் கணக்கு எழுதி வைக்கக் கூடாது என்று பகவான் சொன்னாரா, அல்லது பக்தன் சொன்னானா? கணக்கில் வராத பணத்தைத்தானே கருப்புப் பணம் என்று அழைக்கிறார்கள்?

திருவிதாங்கூரின் பாதாள அறையிலிருந்து மட்டுமல்ல, புட்டபர்த்தியிலுள்ள பாபாவின் தனியறையான யஜுர்வேத மந்திரத்திலிருந்தும் தங்கமும் வைரமும், கட்டு கட்டாகப் பணமும், காசோலைகளும் வருகின்றன. தனியறையில் படுத்து ஆன்மீக ஆராய்ச்சியில் ஈடுபடுவதற்குப் பதிலாக காணிக்கைகளை ஆராயக் காரணம் என்ன? பெண்டாட்டி, பிள்ளை இல்லாத பாபா யாருக்காக காணிக்கைப் பணத்தை தனியறையில் ஒதுக்கி வைத்தார்? வந்த காணிக்கைகளை அறங்காவலர் குழுவிடம் கொடுத்து ரசீது போடாமல், கோடிக்கணக்கான ரூபாயை ஏன் தன்னுடைய தனியறையில் பதுக்கி வைத்துக் கொண்டார் என்ற கேள்விகளை அரசாங்கம் எழுப்பவில்லை. பத்திரிகைகளும் எழுப்பவில்லை. பக்தர்களுக்கும் அது உரைக்கவில்லை.

அலைக்கற்றை ஊழலில் ஈட்டிய கணக்கில் வராத காசை சோதனை போட்டுப் பிடிக்கும் வருமான வரித்துறையோ, சி.பி.ஐ யோ பாபாவின் அறையைச் சோதனை போடவில்லை. ஒருவேளை கலைஞர் டிவிக்கு பதிலாக ‘கலைஞர் கோவில்’ என்றொரு ஆன்மீகக் கம்பெனியைத் தொடங்கி, அக்கோவிலின் உண்டியலில் 200 கோடி ரூபாயை காணிக்கையாக வரவு வைத்திருந்தால், கணக்கே கொடுக்காமல் பணத்தையும் காப்பாற்றி, கனிமொழியையும் கூட காப்பாற்றியிருக்கலாமோ?

வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்கள் குவித்து வைத்திருக்கும் கருப்புப் பணத்தைக் கைப்பற்றி மக்களுக்குச் சொந்தமாக்குவதற்காக சிறப்புப் புலனாய்வுக் குழு ஒன்றை அமைத்திருக்கிறது உச்சநீதி மன்றம். கருப்புப் பணத்தைப் பதுக்குவதற்கு வெளிநாட்டுக்கு ஓடுவதும், கே மேன் ஐலாண்ட், மொரிஷியஸ் போன்ற தீவுகளைத் தேடுவதும் மேற்கத்திய சிந்தனை முறையில் உதித்த வழிமுறைகள். பாரம்பரிய மிக்க நமது பாரத மரபில் இதற்கான பல வழிமுறைகள் ஏற்கெனவே உருவாக்கப் பட்டிருக்கின்றன. அவற்றில் தொன்மையானது திருவிதாங்கூர் நிலவறை. நவீனமானது பாபாவின் யஜூர்வேத மந்திரம். இவை எந்தச் சிறப்புப் புலனாய்வுக் குழுவின் பிடிக்கும் சிக்காதவை.

ஏனென்றால் இவை ஆன்மீக உரிமைகள் என்ற இரும்புப் பெட்டகத்தினால் சட்டரீதியாகப் பாதுகாக்கப்படும் பௌதீகத் திருட்டுச் சொத்துகள். தற்போது தோண்டியெடுக்கப்பட்டுள்ளவை அனைத்தும் தொல்லியல் மதிப்பு மிக்க செல்வங்கள் அல்ல. அவற்றில் ஒன்றிரண்டைத் தவிர மற்றவை அனைத்தும் தங்கத்தின் வடிவிலான பணம். அவ்வளவே. அவை இந்த நாட்டின் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு மட்டுமே உரிமையான சொத்து. அவர்களுடைய முன்னோர்களிடமிருந்து பிடுங்கப்பட்ட செல்வம்; சுரண்டப்பட்ட உழைப்பு.

திருவிதாங்கூர் அரசாட்சி கீழ் விவசாயிகள் மீதும், ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்த மக்கள் மீதும் நம்பூதிரிகளும், நாயர்களும் இழைத்த கொடுமைகளையும், அவ்வரசாட்சியின் கீழ் மக்களுடைய அவலமான வாழ்நிலையையும், ஆங்கிலேயனுடன் கூட்டுச் சேர்ந்து கொண்டு நம் நாட்டு மக்களுக்கு அந்த மன்னர் பரம்பரை இழைத்த துரோகத்தையும் காட்சிப்படுத்தி, இரத்தம் தோய்ந்த அந்த வரலாற்றின் பின்புலத்தில், கண்டெடுக்கப்பட்ட இந்த ஒரு இலட்சம் கோடிப் புதையலைப் பார்வைக்கு வைக்க வேண்டும்.

அப்போதுதான் இந்தப் புதையல் எங்கிருந்து எடுக்கப்பட்டது என்ற விவரத்தைக் காட்டிலும், யாரிடமிருந்து எடுக்கப்பட்டது என்ற வரலாற்று உண்மையின் முக்கியத்துவம் நிலைநிறுத்தப்படும்.

சமச்சீர் – கல்வி வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு


கல்வியாளர் ஜே. கிருஷ்ணமூர்த்தியுடன் நேர்காணல்

ஜே. கிருஷ்ணமூர்த்தி இந்திய அளவிலான கல்வி ஆளுமைகளுள் குறிப்பிடத்தக்கவர். 1953-ல் புதுவையில் பிறந்தவர். புதுவை பெத்தித் செமினார் பள்ளியில் 10ம் வகுப்புவரையும், தாகூர் கல்லூரியில் புதுமுக வகுப்பு மற்றும் பட்டப்படிப்பும், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பி.எட் படிப்பும் முடித்தவர். 1976ல் பெத்துசெட்டிபேட்டையில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் ஆசிரியர் பணியில் இணைந்தார். 2003 வரை பட்டதாரி ஆசிரியர் பணி. 2003 நவம்பரில் பூரணாங்குப்பம் நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பொறுப்பு. 2006-ல் துவங்கி இன்றுவரை ஆலங்குப்பம் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்.

புதுச்சேரி நகரத்தினுள் வேலைசெய்ய அழைப்பு வந்தும், அதை நிராகரித்து ஆரோவில் பகுதியில் உள்ள ஆலங்குப்பம் கிராமத்தின் பள்ளியோடு தன்னைக் கரைத்துக் கொண்டு அங்குள்ள மாணவர்களின், வெற்றியில் தனது வாழ்வின் அர்த்தத்தை தேடிக் கொண்டிருப்பவர். அந்தப் பள்ளியில் உள்ள எந்த ஒரு மாணவரும் இவரை எந்த நேரத்திலும் அணுகி தன்னுடைய குடும்பப் பிரச்சனையை விவாதிக்க முடியும் என்கிற அளவுக்கான ஜனநாயகத்தை தனது பள்ளி வளாகத்தில் உருவாக்கி வைத்துள்ளவர்.

அந்தப் பள்ளியின் இரவு நேரக் காப்பாளர் ‘மலையாளத்தாரை’ நமக்கு அறிமுகம் செய்யும் போது மிகப்பெருமையுடன் ‘‘இவர் எங்க பள்ளியில் மிக முக்கிய அங்கம், பள்ளியின் குடும்ப உறுப்பினர், இங்கு இரவு நேர காப்பாளராக செயல்படுகிறார்’’ என அவருக்குச் சமமான நாற்காலியில் அமரவைத்து அறிமுகம் செய்யும் ஜே.கே வை நீங்கள் எப்படிப் புரிந்து கொள்வீர்கள்.

சகமனிதனுடனான அவரது அன்புமிக்க அணுகுமுறை குறித்து கேள்வி எழுப்பும் போதுதான் அவரது ஆசிரியர் பணியின் மற்றொரு பரிமாணம் தெரியும். ‘1978 முதல் 1985 வரையிலான ஆசிரியர் சங்கப் பணிதான் என்னை ஆசிரியர்கள் இந்த சமூகத்தில் எத்தகைய மாற்றங்களை உருவாக்க முடியும் என அறியவைத்த ஆண்டுகள்’’ என்கிறார்.

1986ல் போபால் கொடூரம் நடந்த சில மாதங்கள் கழித்து ‘‘யூனியன் கார்பைடு பொருட்களைப் புறக்கணிப்பீர்கள்’’ என்ற துண்டுப்பிரசுரம் புதுச்சேரியின் அனைத்து மக்களிடமும் சென்றடைந்தது. கீழே புதுச்சேரி அறிவியல் இயக்கம் என்ற வாசகத்துடன். அப்போதுதான் புதுவை அறிவியல் இயக்கத்தை ஜே. கிருஷ்ணமூர்த்தி, டாக்டர். தி. சுந்தர்ராமன். மருத்துவ மாணவர் ஜார்ஜ், பொறியாளர் மதன கோபால், டாக்டர் ராமானுஜம், டாக்டர் ராமதாஸ், தனபால் ஆகியோருடன் மேலும் சிலர் இணைந்து துவக்கினர். 1986 முதல் ‘‘அறிவியல் மக்களுக்கே’’ என்ற முத்திரை வாசகத்துடன் இயங்கும் புதுவை அறிவியல் இயக்கத்தின் ஊழியனாகத் தன்னை இணைத்துக்கொண்டு பணியாற்றுகிறார். 1994 முதல் 1996 வரை தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில பொதுச்செயலாளராகப் பணியாற்றினார். துளிர் பத்திரிகையை உருவாக்கிய முக்கிய நபர்களில் இவரும் ஒருவர். துளிர் என்ற அறிவியல் பத்திரிகை முதல் இதழ் வெளியானது புதுச்சேரியிலிருந்துதான்.

அறிவியல் இயக்கம் மட்டுமல்ல 1989ல் புதுவை அறிவொளி இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டு 1996 வரை அதில் பெருமிதப்படத்தக்க பங்களிப்பை செலுத்தியவர். அறிவொளி இயக்கத்தின் மாநிலத் திட்ட ஒருங்கிணைப்பாளராக, தேசிய எழுத்தறிவு ஆணையத்தின் ஆலோசகராக, BGVSன் தமிழகத்தின் பயிற்சி ஒருங்கிணைப்பாளராக என இவரது உழைப்பு அபாரமானது. இவரது அறிவொளி இயக்க அனுபவம் தனியே பதியப்பட வேண்டிய அவசியம் நிறைந்தவை. அவருடன் நடத்திய உரையாடலிலிருந்து…

கல்வியாண்டுத் துவக்கத்தில், சமச்சீர் கல்வி
அறிமுகமாகும் என எல்லோரும் எதிர்பார்த்த வேளையில் இப்படி ஒரு சிக்கல், ஏற்பட்டது குறித்து?
சமச்சீர் கல்வி என்பது ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு என்பதை முதலில் பதிவு செய்ய விரும்புகிறேன். நான்குவிதமான பாடத்திட்டங்களை ஒரே முறையில் மாற்றியதும் வரலாற்று சாதனைதான். இந்த சமச்சீர் கல்வியில் உள்ள குறைகளைக் களைய வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆனால் அது சமச்சீர் கல்வி அமலாக்கத்தை நிறுத்திவிட்டுச் செய்யவேண்டும் என்ற அவசியத்துடன் தொடர்புடையது அல்ல. திட்டத்தை அமலாக்கிக் கொண்டே குறைகளைக் களையலாம். அதுதான் மாணவர்களின் எதிர்காலம் குறித்த அக்கறை உள்ள செயலாக இருக்கும். தற்போது நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது.

நான்கு பாடத்திட்டங்களை ஒரே பாடத்திட்டமாக்கியது வரலாற்று சாதனை என்கிறீர்களே.. அப்படியென்றால்?
நிச்சயமாக. இதில் சந்தேகம் இல்லை. தமிழக பாடத்திட்டம், மெட்ரிகுலேஷன் பாடத்திட்டம், ஓரியண்டல், ஆங்கிலோ இந்தியன் பாடத்திட்டம் என்ற நான்கு முறைகள் மாற்றப்பட்டுள்ளது அனைத்து மாணவர்களுக்கும் நல்லது. இந்த நான்கு பிரிவுகளின் தேவை என்ன? தனியார் கல்வி நிறுவனங்கள் செழித்து வளரவும், பாடநூல் அச்சிடும் பல்வேறு வணிக புத்தக நிறுவனங்கள் கொள்ளை லாபம் அடிக்கவும்தான் பயன்பட்டது. மக்களிடம் உருவாக்கப்பட்ட ஆங்கில மோகத்திற்கு தீனிபோட இந்த மெட்ரிக் பள்ளிகள் உதவின. இதற்கு தரம் என்ற பெயரில் விளம்பரம் வேறு செய்யப்படுகிறது.

அப்படியானால் தரம் என்ற வாதம் எதைச் சார்ந்துள்ளது., தனியார் பள்ளியினர் சமச்சீர் கல்வி வந்தால் தரம் பாதிக்கப்படும் என்கிறார்களே?
தரம் என்ற அளவுகோளை யார் தீர்மானிப்பது. ஒரு உதாரணம் சொல்கிறேன். மூன்று மாதங்களுக்கு முன்பு தனியார் மற்றும் அரசுக் கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மத்தியில் ஒரு சர்வே எடுப்பதற்காக ஒரு தேர்வு நடத்தப்பட்டது. அதாவது அவர்கள் நடத்தும் பாடத்திலிருந்து கேள்விகள் தயாரிக்கப்பட்டு இந்தத் தேர்வு நடந்தது. இந்தத் தேர்வு முடிவில் 60-70 சதவிகிதம் தனியார் கல்லூரி ஆசிரியர்கள் மிகவும் மோசமாகத் தேர்வை எழுதியிருந்தனர். ஆனால் அதே அளவு அரசுக் கல்லூரி ஆசிரியர்கள் சிறப்பான முறையில் தேர்வை எழுதியிருந்தனர். இதிலிருந்து நீங்கள் எந்த முடிவுக்கு வருவீர்கள்? இன்று நாட்டின் மிக உயர்ந்த பொறுப்பில் உள்ளவர்களில் 90 சதம் பேர் அரசுப் பள்ளிகளிலும், தாய்மொழியிலும் படித்தவர்கள் தான். ஆக தரம் என்பது எவ்வளவு அதிகமான அழுத்தமான பாடங்களை நடத்துவது என்பதில் இல்லை. எவ்வளவு தெளிவாக மாணவர்கள் கற்றுக் கொள்கிறார்கள் என்பதுதான். தரம் என்ற சொல்லைப் பயன்படுத்தி தங்கள் லாபவேட்டையைத் தொடரவே தனியார் கல்வி நிலையங்கள் திட்டமிடுகின்றன.

சமச்சீர் கல்வி பாடத்திட்டங்கள் குறித்து..?
இயல்பாகவே மாணவர்களை ஈர்க்கும் தன்மையுடன் வண்ணமயமாக அச்சிடப்பட்டு நிறைய படங்களுடன் புத்தகம் வெளிவந்துள்ளது இன்னும் சிறப்பாக உள்ளது. செயல்முறையில் கற்றுக்கொள்ளும் வாய்ப்பு ஏராளமாக உள்ளது. இது போன்ற ஏற்பாடுகள் தான் மாணவர்களை ஆர்வத்துடன் படிக்கத் தூண்டும். இதில் குறிப்பிட வேண்டிய ஒரு முக்கியச் செய்தி, ஒரு நல்லமாற்றம் என்னவெனில் வகுப்பறைக்குள் அதிக நடவடிக்கைகளும் வீட்டுப்பாடச் சுமை குறைந்தும் இருப்பதுதான்.
இந்த வகையிலான புத்தகங்கள் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களைச் சேர்ந்து இயக்கும் தன்மை கொண்டது. ஆசிரியர்-மாணவர்களின் உறவுப் பாலமாக புத்தகங்கள் அமைந்துள்ளன. முன்பு ஆசிரியர் பாடம் நடத்திக் கொண்டே இருப்பார். மாணவர்கள் வெறும் பார்வையாளர்களாக இருப்பர். இப்போது பார்வையாளர்களான மாணவர்களை பங்கேற்பாளர்களாக மாற்றிட புதிய சமச்சீர் கல்வி பாடத்திட்டங்கள் ஒரு முயற்சியைத் துவக்கி உள்ளன. மாணவர்கள் படிப்பு எனும் தளத்தில் தாங்களாக பங்கேற்க சில வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கணிதத்தில் செயல்முறை வடிவியலும், புள்ளி விபர சேகரிப்பு சம்பந்தப்பட்ட வரைபடங்களும் மிகவும் எளிமையாக இருக்கின்றன. பாடங்களின் எண்ணிக்கைகளைக் குறைத்து தரத்தை உயர்த்தியுள்ளார்கள்.

பொதுவாக தமிழகத்திலும், புதுவையிலும் கல்வி நிலை எப்படி உள்ளதாகக் கருதுகிறீர்கள்?
NCERT, ASER ரிப்போர்ட் கணக்குப்படி தமிழகம் தரமான கல்வி வழங்குவதில் முதலிடத்தில் உள்ளது. ஆனால் புதுச்சேரி கடைசியிலிருந்து இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளது. எழுத்துக்களைக் கூட இன்னும் அடையாளம் காட்டத் தெரியாத 30 சதமான மாணவர்கள் புதுச்சேரியில் உள்ளனர். தேசிய அளவில் 23 சதம் என்பதையும் விஞ்சியது இது. அனைத்துப் பள்ளிகளிலும் எடுத்த சர்வே இது. ஒரு வேளை அரசுப் பள்ளிகள் மட்டும் எனில் இன்னும் கூட குறையும் என நினைக்கிறேன். 35 வருட ஆசிரியர் பணியின் காரணமாய் ஆசிரியர் சமூகத்தில் உள்ள எனக்கு இது மனக்குனிவை ஏற்படுத்துகிறது.

வளர்ச்சிக் குறியீட்டில் (EDI) புதுச்சேரிதானே முதலிடம் வகிக்கிறது?
ஆமாம் EDI யில் புதுச்சேரி மாநிலம்தான் முதலிடம். அதாவது ஒரு கிலோமீட்டருக்கு ஒரு துவக்கப்பள்ளி, மூன்று கிலோ மீட்டருக்கு ஒரு நடுநிலைப்பள்ளி, ஐந்து கிலோ மீட்டருக்கு ஒரு மேல்நிலைப்பள்ளி போன்றவையும், கழிப்பிடம், குடிநீர், ஆய்வகம், நூலகம் போன்ற அடிப்படை வசதிகளில் தன்னிறைவும் தகுதியான பயிற்சி பெற்ற ஆசிரியர்களும், 1:25 என்ற ஆசிரியர், மாணவர் விகிதமும் இருக்கிறது. இது பாராட்டத்தக்கதுதான். இருப்பினும் மாணவர்களின் அடைவுத் திறனை அதிகரிக்கவில்லை என்ற உண்மையும் பின் தொடர்வது வேதனையானது. இந்த இரண்டும் கடுமையான முரண்பாட்டை முன்வைக்கின்றன.

இந்த முரண்பாட்டை எப்படிப் புரிந்து கொள்வது?
இரண்டு விஷயங்களில் நாம் கருத்தை செலுத்தலாம். ஒன்று ஆசிரியர்கள் தங்கள் பயிற்சி காலத்தில் பெறுகின்ற பயிற்சி மட்டுமல்லாமல் ஆசிரியரான பிறகும் அவர்களுக்கு பயிற்சி தரப்படுகிறது. ஆனால் வகுப்பறையில் இந்த பயிற்சி பயன்படவில்லை என்பதுதான் பிரச்சனை. இது ஏன் என்பதுதான் ஆசிரியர் சமூகப் பிரதிநிதியாக எனக்குள் நான் எழுப்புகின்ற கேள்வி. எனவே கல்வியாளர்கள், அரசு, சமூக அக்கறை உள்ள சங்கங்கள் இந்த ஆசிரியர்களின் குறைந்தபட்சத் திறனை வளர்க்கும் ஆசிரியர்களாக மாற்றுவதில் கவனம் செலுத்த வேண்டும்.
ஆசிரியர்கள் கடுமையாக உழைக்கிறார்கள் என்பதில் எனக்கு நம்பிக்கை உள்ளது. பிரச்சனை என்னவெனில் கடுமையாக உழைப்பவர்கள் மட்டும் போதாது. மாணவர்களின் பிரச்சனைகளை முகம் கொண்டு பார்ப்பவர்களாகவும் அவர்கள் இருக்க வேண்டும் என்பதுதான். ஒரே கிராமத்தில் ஒரே விதமான கூலித் தொழிலாளிகளின் பிள்ளைகளில் ஒருவன் தனியார் பள்ளியிலும், ஒருவன் அரசுப் பள்ளியிலும் படிக்கின்ற போது அரசுப் பள்ளியில் படிக்கின்ற மாணவனின் அடைவுத் திறன் குறைவாக இருந்தால் அதற்கு யார் பொறுப்பு என்பது முக்கியமான கேள்வி இல்லையா?
இரண்டாவதாக நமது வகுப்பறைகளை இன்னும் ஜனநாயகப்படுத்த வேண்டும். அதாவது மாணவர்களின் பங்கேற்பை அனைத்து மட்டங்களிலும் உறுதிப்படுத்த வேண்டும். ஆசிரியர் மாணவர் இணைந்த பங்களிப்பை உருவாக்க வேண்டும். அதாவது சமன் செய்யப்பட்ட இயக்கம் வகுப்பறைக்குள் வேண்டும். பாடம் நடத்துவது ஆசிரியர் வேலையாகவும், கற்பது மாணவர்கள் கடமையாகவும் பிரிந்து நிற்கிறது. கற்பதும், கற்பிப்பதும் இருசாராருக்கும் பொதுவானதாய் மாற வேண்டும். இது பொதுவாக இல்லாததால் ஒருபக்க இயக்கம் மட்டுமே உள்ளது.

அப்படியானால் இந்த இருபக்க இயக்கம் தனியார் பள்ளிகளில் இருக்கிறதா?
இல்லை. அப்படி எளிதாகப் புரிந்து கொள்ள வேண்டாம். நாம் அரசுப் பள்ளிகளின் பிரச்சனைகளைத் திறந்த மனதுடன் விவாதிக்கின்றோம். எனவேதான் தனியார் பள்ளிகள் திறமை என்ற வாதத்தால் இதனை திசைதிருப்பி மக்களை அழைக்கிறது. தனியார் பள்ளிகளில் இருப்பதும் ஒருபக்க இயக்கம்தான். அது மதிப்பெண் சார்ந்த ஒரு பக்க இயக்கமாகும். அதாவது அங்கு தரமான கல்வி என்பது தேர்ச்சி சார்ந்த இயக்கமாக கட்டணமாக்கப்படுகிறது. அவர்களுக்கு அதுதான் முக்கியம். அங்கு இன்றைய நாட்டின் தேவை சார்ந்த சந்ததியை உருவாக்குவதில் அக்கறை இல்லை. சந்தைக்குத் தேவையான சந்ததியை உருவாக்குவது. அவர்களின் நோக்கமாக உள்ளது. அதுவும் 1990 க்குப்பின் பன்னாட்டுச் சந்தையின் தேவையைக் கொண்டே சந்ததியை உருவாக்குகிறார்கள்.
ஆக கடுமையாக உழைக்கும் ஆசிரியர்கள் மாணவர்களின் முகம் கொண்டு அவர்களைப் புரிந்து கொள்பவர்களாக இருப்பதுடன், வகுப்பறைகள் ஜனநாயகத் தன்மையுடன் இருபக்க இயக்கம் உள்ளதாகவும் இருக்கும் இரு விஷயங்களும் முக்கியமானவை.

சந்தை சார்ந்த மாணவ சந்ததி உற்பத்தி குறித்து இன்னும் பேசலாமே?
நிச்சயமாக. அடிப்படை ஆராய்ச்சிகள் கேள்விக் குறியாக மாறி இருக்கின்றன. இயற்கை ஆதாரங்கள் பாதுகாக்கப்படுவதும், அதை வளர்த்தெடுப்பதும் விவாதத்திற்கு வரவில்லை. 80 சதவிகித மக்கள் வறுமையில் உழல்கின்றனர். தொலைந்துபோன தங்கள் வாழ்க்கையை உழைப்பால் அவர்கள் தேடித்திரிகின்றனர். இப்படியான ஒரு சூழலில் மக்கள் குறித்தும், சமயச்சார்பு, இறையாண்மை போன்ற நடவடிக்கைகளில் மாணவ சமூகம் இயல்பாக கவனம் செலுத்தும் சந்ததியாக வெளிவராதது ஏன்? வகுப்பறைதான் ஒரு நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கிறது எனில் அந்த இடத்தில் மேற்கண்ட விவாதங்கள் நடக்கிறதா? வகுப்பறை ஜனநாயகம் என்பது ஆசிரியரும் மாணவரும் சமமாக இணைந்து கற்றலில் பங்கேற்பது. ஆனால் நடப்பது என்ன? அதிகாரம் ஙீ அடங்குதல் என்ற ஒரு பக்க இயக்கம்தானே. இது சமூகத்தில் ஒரு அங்கமாக வரும் மாணவனை அதிகாரம் செலுத்தும்; அல்லது அடங்கிப்போகும் ஒருவனைத்தானே உருவாக்கும்.
ஆக சமூகத்திற்கான மாணவர்களை சந்தைக்கான மாணவர்களாக மாற்றுவது சரியான வளர்ச்சியா? அதுவும் குறிப்பாக மதிப்பெண்களே அவர்கள் எதிர்காலத்தை தீர்மானிக்கும் என்றால் அவர்களின் சமூக அக்கறை எப்படி இருக்கும்.

பாடத்திட்டம் இதற்கு ஒரு முக்கியப் பங்கு வகிக்கிறதுதானே?
நிச்சயமாக. சிறந்த எதிர்கால சமுதாயத்திற்கான பாடத்திட்டம் என்பதிலிருந்து அன்றைய ஆட்சியாளர் களின் தேவையை உள்ளடக்கிய பாடத்திட்டங்களாக மாற்றப்படுவது வேதனைக்குரியது. கல்வியாளர்களும் இந்த மாற்றத்திற்கு ஏற்ப தங்களை தகவமைத்துக் கொள்கிறார்கள். இருப்பினும் பாடத்திட்டம் அதிகபட்சம் நமது நாட்டின் அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு உட்படுத்தப்பட்ட பிரதான அம்சங்களை இன்னும் இழந்துவிடவில்லை.
பாடத்திட்டம் எப்படி இருப்பினும் அதை அடிப்படையாக வைத்து வகுப்பறையை எப்படி நடத்துகிறோம் என்பது முக்கியம். ஆசிரியர்கள் நினைத்தால் இந்தப் பாடத்திட்டத்தை வைத்தும் மாற்றத்தை உருவாக்க முடியும்.
நமது நாட்டின் இருபெரும் தலைவர்களான ஜோதிபாசுவும் இந்திராகாந்தியும் வெளிநாட்டில் ஒரே பல்கலைக்கழகத்தில்தான் படித்தார்கள். அங்கு வரும் இந்திய மாணவர்களுக்கு ஆங்கில டியூஷன் நடத்தினார்கள். அவர்களின் சிந்தனைப் போக்கு இரு துருவங்களாகப் பிரிந்து நின்றது. இதில் அவர்களின் வகுப்பறைக்குப் பங்கு இல்லை என சொல்ல முடியுமா?

பாடத்திட்டத்தை தீர்மானிக்கும் கல்விக் கொள்கை குறித்த உங்கள் விமர்சனம் என்ன?
நாற்பது ஆண்டுகளுக்கு முன் அதாவது 1970களில் சோவியத் யூனியனில் ஒரு பரிசோதனை நடத்தப்பட்டது. அதாவது அப்போதெல்லாம் அங்கு ஐந்து வயது நிறைவடைந்தால்தான் பள்ளியில் சேர்க்க முடியும். ஆனால் அதே சமயம் அமெரிக்கா போன்ற நாடுகளில் மூன்று வயது நிறைவடைந்தால் மழலையர் பள்ளிகளில் சேர்க்கலாம். இரண்டு வருடம் முன்பே குழந்தைகள் கல்வி நிலையத்திற்கு வரும் முறையை நாமும் ஏன் செய்யக்கூடாது என்று எண்ணிய சோவியத் அரசு, அதற்காக பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர் அடங்கிய குழுக்களை உருவாக்கியது. ஒன்றியத்திற்கு ஒரு பள்ளி என்ற அடிப்படையில் மாதிரிப் பள்ளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டது. அவ்வப்போது பெற்றோர்களுடன் கலந்துரையாடல், குழந்தைகளின் விருப்பங்களைக் கேட்டறிதல் என நடந்தது.
இறுதியாக பெற்றோர்களின் உதவியுடன் ஒரு அறிக்கை தயாரிக்கப்பட்டது. 1. வகுப்பறை செயல்பாடுகள் குறைந்த அளவு இருக்க வேண்டும்.
2. விளையாட்டுக்கான நேரம் கூடுதலாக்கப்பட வேண்டும். 3. ஓய்வுக்கான சூழல் இருக்க வேண்டும். 4. எழுத்துப் பயிற்சி மிகக் குறைந்த அளவே வேண்டும் என ஆய்வறிக்கை தயாரிக்கப்பட்டது. இது நாடு முழுவதும் சுற்றுக்கு விடப்பட்டது. பெற்றோர்களிடம் விவாதம் நடத்தப்பட்டது. இரண்டுவருடம் முன்பே கல்விக்கூட ஒழுங்குமுறைக்கு குழந்தைகள் பழகுவது மகிழ்ச்சி என்றாலும் ‘‘எங்கள் குழந்தையின் விளையாட்டுப் பருவம் இரண்டு வருடம் திருடப்பட்டு விடுமோ என அஞ்சுகிறோம்ÕÕ என பெரும்பாலான பெற்றோர்கள் கருத்துச் சொன்னார்கள். இந்த எண்ணம் குழந்தைகளுக்கு ஏற்படாத வண்ணம் அமலாக்க வேண்டும் என்றனர். அதற்கு பின்னரே சோவியத் அரசு இந்த முறையை ஏற்றுக் கொண்டது.
எனவே பெற்றோர் மாணவர் பங்கேற்புடன் கல்வித் திட்டம் அமலாவதுதான் ஒரு சிறந்த சமூக அமைப்பின் அடிநாதமாய் இருக்க முடியும். இங்கு அப்படி இருக்கிறதா? ஆசிரியர்கள், கல்வியாளர்கள் இவர்களுக்குத் துணையாக பெற்றோர்களும் மாணவர்களும் இணைந்து கல்விக்கொள்கையைத் தீர்மானிக்கும் சமூகமே கல்வியில் சிறந்த சமூகமாக இருக்க முடியும். கல்வித் திட்டம் மாறும்போது ஒரு வருடம் பரிசோதனையின் அடிப்படையில்தான் அது தீர்மானிக்கப்பட வேண்டும்.
அதே போல் சமூக, அறிவியல், புவியியல் உள்ளிட்ட மாற்றங்கள் அன்றைய நவீன மாற்றங் களுடன் போதிக்கப்படும் வகையில் கல்விக் கொள்கை இருப்பது அவசியமானது. மேற்கண்ட அடிப்படையில் அதாவது பெற்றோர், மாணவர், ஆசிரியர், கல்வியாளர்கள், அரசு ஆகியோர் இணைந்து கல்விக் கொள்கைகளை உருவாக்க இன்னும் நீண்ட தூரம் பயணம் செல்ல வேண்டி இருக்கிறது.
இதற்கு மாற்றாக எதை முன்வைக்க விரும்புகிறீர்கள்?
பாவ்லோ பிரையர் கருத்துக்களைத்தான் நானும் முன்மொழிய வேண்டியுள்ளது. அவர் சொன்னார் ‘‘கல்வி என்பது நடுநிலையாக இருக்க முடியாது. அது வர்க்கம் சார்ந்துதான் இருக்க முடியும். இருக்கும். கல்விப் பரிமாற்றத்தில் நீங்கள் எந்தப்பக்கம்?
எல்லாவற்றையும் இழந்து தொலைந்துபோன வாழ்க்கையைத் தங்கள் உழைப்பால் தேடித்திரியும் மக்கள் பக்கமா அல்லது பலர் வாழ்க்கையைத் தொலைக்க காரணமான சுரண்டுபவர்கள் பக்கமா?” எனவே கல்வி என்பது வர்க்கம் சார்ந்துதான் இருக்க முடியும் என்பதில் நானும் உறுதியாக இருக்கிறேன். கல்வியே அப்படி எனில் பாடத்திட்டமும் அப்படித்தான் இருக்கும். உங்களுக்கு ஏற்றுக்கொள்ளச் சிரமமாக இருந்தாலும் உண்மை இதுதான்.
ஆள்பவர்களின் நலன் சார்ந்தே கல்வி காலகாலமாக இருந்துள்ளது. உயர்கல்விக்குப் போகப்போக இந்த உண்மை உங்களுக்கு தெளிவாகப் புரியும். அங்கு யாரை நிர்வகிக்க அல்லது எதை கற்பிக்க அல்லது எந்த சந்தைக்காக மாணவர்கள் உற்பத்தி செய்யப்படுகின்றனர். கல்வி தங்கள் வாழ்க்கையை மாற்றிக் கொள்ளும் ஒரு கருவியாக இருக்க வேண்டும். இந்த வெளிச்சத்தில் பார்த்தால் இன்றைய நிலை புரியும்.
ஏழைகள் அதாவது உழைப்பாளி மக்கள் வாழ்க்கையில் மாற்றம் வரவேண்டுமானால் அதற்கு தேவையான கல்விச்சூழலும், கல்வி முறையும், நாளைய சமூகத்தை உருவாக்கும் ஜனநாயகப்படுத்தப் பட்ட வகுப்பறைகளும் தேவை. இதுவே சிறந்த அரசியலாக இருக்க முடியும்.

——- ஜூலை 2011 புதிய புத்தகம் பேசுது இதழுக்காக எஸ்.ஜி.ரமேஷ்பாபு எடுத்த பேட்டி

சமச்சீர் கல்வி – யார் குற்றவாளி?


சமச்சீர் கல்வி முடக்கப்பட்டிருக்கிறது. அனைவருக்கும் சமமான கல்விமுறை என்பதை ஜெயலலிதா அரசு ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனாலும் அனைவருக்கும் பொதுவான அரசு என காட்டிக்கொள்ள வேண்டிய நிர்பந்தம் இருப்பதால் ‘பாடத்திட்டம் சரியில்லை, குறைகள் இருக்கின்றன, மேம்படுத்துகிறோம்’ என சமச்சீர் கல்வி குறித்து பலவிதமான சால்சாப்புகளை ஜெயலலிதா சொல்கிறார். ஆனால் தனியார் கல்வி நிறுவன முதலாளிகளுக்கு இத்தகைய நிர்பந்தம் இல்லை என்பதால், ‘அதெப்படிங்க எல்லாருக்கும் ஒரேவிதமான கல்விங்குறது சரியா இருக்க முடியும்? அப்புறம் தகுதி, திறமை என்னாகுறது?’ என்று வெளிப்படையாகப் பேசுகின்றனர். இராம.கோபாலன் மிக திமிர்த்தனமாக ‘சமச்சீர் கல்வி என்பது குலக்கல்வி திட்டத்தை கொண்டு வந்துவிடும்’ என்கிறார். நடப்பில் இருக்கும் கல்விமுறைதான் குலக்கல்வி திட்டத்தின் நவீன வடிவமாக இருக்கிறது என்பது இதன் முரண் யதார்த்தம். பா.ராகவன் போன்ற அறிவாளி அம்பிகளோ, சமச்சீர் கல்விக்கென தயாரிக்கப்பட்ட பாடப் புத்தகத்தில் இருக்கும் குறைகளைச் சுட்டிக்காட்டி இதை நிராகரிக்கிறார்கள்.

இதில் அச்சம் தரக்கூடிய அம்சம், ஓர் அரசு அனைவருக்கும் சமமான கல்வி என்பதை மறுக்கிறது. இதை பலரும் ஆதரிக்கின்றனர். கல்வியில் இருக்கும் வித்தியாசம் தொடர்ந்து பராமரிக்கப்படுவதை மத்திய தர வர்க்க மனநிலையும், பூணூல் பூச்சாண்டிகளும் விரும்புகின்றனர். அதை வெவ்வேறு வாதங்களின் மூலம் நியாயப்படுத்துகின்றனர்.

சமச்சீர் கல்வி நிறுத்தப்பட்டதை விமர்சிக்கும் ஊடகங்கள் பலவும், ஜெயலலிதாவை நோக்கி கோபமான ஒரு கேள்வியைதன்னும் முன்வைக்கவில்லை. மாறாக அ.தி.மு.க. தொண்டனைப் போல ‘அம்மா, நாங்கள் உங்களிடம் இருந்து இதையெல்லாம் எதிர்பார்க்கவில்லை. நீங்கள் சமச்சீர் கல்வியை அமுல்படுத்துவதை பரிசீலிக்க வேண்டும்’ என்று அமுங்கிய குரலில் பேசுகின்றன. (குரல் ஓங்கினால் குரல்வலையிலேயே குத்துவிழும் என்பது அவர்களுக்குத் தெரியும்). அதேநேரம், சமச்சீர் கல்வியை அமுல்படுத்திய கருணாநிதியை ஒரு வார்த்தை கூட பாராட்டாமல் இருப்பது போகட்டும்… மாறாக, ‘அவர் தப்பு, தப்பா புத்தகத்தை அச்சடிச்சதுனாலதான் இந்தம்மா வந்து சமச்சீர் கல்வியை நிறுத்திடுச்சு. இல்லேன்னா சர்ச்பார்க் கான்வெண்டுல கூட சமச்சீர் கல்வி வந்துடும்’ என்பது போல இதற்கான பழியையும் தூக்கி கருணாநிதி மீது சுமத்துவதில் கவனமாக இருக்கின்றனர்.

சமச்சீர் கல்வி ஒன்றும் சர்வரோக நிவாரணி அல்ல. சமமான கல்வியை முன்மொழியும் இந்த திட்டத்திலும் கூட கட்டண விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை. ஆனாலும் ‘சமம்’ என்பதை இவர்களால் பொறுத்துக்கொள்ளவே முடியவில்லை. இந்த இடத்தில் எனக்கொரு விஷயம் நினைவுக்கு வருகிறது. ’நல்லி குப்புசாமி செட்டி’ எனப் பெயரிலேயே செட்டியார் என வருகிறது. ஆனால் அவர் கூட்டங்களில் பேசும்போது கவனித்தால் வலிந்து பார்ப்பன பாஷையைப் பேசுவார். வேறு சில பார்ப்பனர் அல்லாத முதலாளிகள் கூட இப்படி பார்ப்பன பாஷையில் பேச முயற்சிப்பதைப் பார்த்திருக்கிறேன். இதன் உளவியல் என்னவெனில், தனக்குக் கீழ் பணிபுரிபவனின் பேச்சுமொழியும், தனது பேச்சுமொழியும் ஒரேவிதமாக இருப்பதை இத்தகைய முதலாளிகளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதனால் இயல்பாகவே அவர்களின் மனம் மேம்பட்ட பேச்சுமொழியாக பொதுவெளியில் பதிவாகியிருக்கும் பார்ப்பன பாஷையைத் தேர்ந்துகொள்கிறது.

பேசும் மொழியில் சமமாக இருப்பதை விரும்பாத இந்த மனநிலைதான் கல்வி சமமாக இருக்கக்கூடாது என்பதிலும் கவனம் செலுத்துகிறது. கருணாநிதி கொண்டு வந்தார் என்பதற்காக மட்டுமே ஜெயலலிதா இந்தத் திட்டத்தை நிறுத்தவில்லை. மாறாக அவரது அடிமனதில் படிந்திருக்கும் இந்துத்துவ அஜண்டாவில் இருந்தே இத்தகைய செயல்கள் பிறக்கின்றன. அதனால் எல்லா பழியையும் தூக்கி கருணாநிதி மீது சுமத்திவிட்டு சவுகர்யமாக நகர்ந்துகொள்வது சரியல்ல.

வாஞ்சிநாதன்; தேசப்பற்றால் மூடப்பட்ட ஜாதிவெறியன்


வீரன் வாஞ்சிநாதன் வெள்ளைக்கார ஆஷ் துரையை சுட்டுக் கொன்று நூற்றாண்டு ஆகிறது. அந்த மாவீரன் வாஞ்சிநாதனை பற்றி?
-சுந்தரவடிவேலன். திருப்பூர்

வாஞ்சிநாதன் திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர் ராபர்ட் வில்லியம் ஆஷை சுட்டுக்கொல்வதற்கு முன்பு வரை எந்தவகையான சுதந்திர போராட்டங்களிலும் கலந்து கொண்டதில்லை.

இத்தனைக்கும் திருநெல்வேலி மாவட்டத்தில் வெள்ளை ஏகாதிபத்தியத்திற்கு எதிராக வ.உ.சியும், சுப்பிரமணிய சிவாவும் மூட்டிய தீ திகு திகுவென்று எரிந்து கொண்டிருந்தபோது, அதில் ஒரு சுள்ளியை கூட எடுத்து போட்டவர் இல்லை வாஞ்சி.

ஆஷ் மீது வாஞ்சிநாதன் கொண்ட வெறுப்பு சுதந்திர தாகத்தால் ஏற்பட்டதல்ல. வருணாசிரம மோகத்தால் ஏற்பட்டது.

பார்ப்பன ஜாதி உயர்வுக்கும். அதை பாதுக்காக்கிற சனாதன தர்மத்திற்கும் எதிரானவர்களாக ஆங்கிலேயர்களை தவறாக புரிந்துகொண்டதால் ஏற்பட்ட கொலையும் தற்கொலையும் அது.

வெள்ளைக்காரர்கள், தாழ்த்தப்பட்ட மக்களிடம் தீண்டாமையை கடைபிடிக்காமல் ராணுவம், சமையல் (மாட்டுக்கறியும் சமைப்பது) போன்ற தங்கள் வேலைகளுக்கு பயன்படுத்திக் கொண்டதால், அதன் மூலம் தாழ்த்தப்பட்ட மக்களுக்குக் கிடைத்த முக்கியத்துவம்தான், வாஞ்சிநாதன் போன்ற சனதனவாதிகளின் காழ்ப்புணர்ச்சிக்கும், கோபத்திற்கும் காரணம்.

இதை நிரூபிப்பதுபோல், ஆஷை 17-6-1911 அன்று சுட்டுக் கொன்ற வாஞ்சிநாதன் எழுதி வைத்திருந்த கடிதம், வாஞ்சியின் சனாதனத்திற்கு சாட்சியாக இருக்கிறது.
அதில்,

“ஆங்கில சத்துருக்கள் நமது தேசத்தைப் பிடுங்கிக் கொண்டு அழியாத ஸனாதன தர்மத்தைக் காலில் மிதித்துத் துவம்சம் செய்து வருகிறார்கள். ஒவ்வொரு இந்தியனும் தற்காலத்தில் தேசச் சத்துருவாகிய ஆங்கி லேயர்களைத் துரத்தி, தர்மத்தையும், சுதந்திரத்தையும் நிலை நாட்ட முயற்சி செய்து வருகிறான்.

எங்கள் ராமன், கிருஷ்ணன், குருகோவிந்தர், அர்ஜுனன் முதலிய வர்கள் இருந்து தர்மம் செழிக்க அரசாட்சி செய்து வந்த தேசத்தில், கேவலம் கோ(பசு) மாமிசம் தின்னக்கூடிய ஒரு மிலேச்சனாகிய ஜார்ஜ் பஞ்சமனுக்கு முடி சூட்ட உத்தேசம் செய்து கொண்டு பெரு முயற்சி நடந்து வருகிறது.

அவன் (ஜார்ஜ்) எங்கள் தேசத்தில் காலை வைத்த உடனேயே அவனைக் கொல்லும் பொருட்டு, 3000 மதராசிகள் பிரதிக்னை செய்து கொண்டிருக்கிறோம். அதைத் தெரிவிக்கும் பொருட்டு அவர்களில் கடையேனாகிய நான் இன்று இச் செய்கை செய்தேன். இதுதான் இந்துஸ்தானத்தில் ஒவ்வொரு வரும் செய்ய வேண் டிய கடமை.

இப்படிக்கு
ஆர். வாஞ்சி அய்யர்”

‘கோ (பசு) மாமிசம் தின்னக்கூடிய ஒரு மிலேச்சனாகிய ஜார்ஜ் பஞ்சமனுக்கு’ என்ற இந்த வரி, வாஞ்சிநாதனை சுதந்திர போராட்ட வீரனாக அல்ல, ஜாதி வெறியனாகத்தான் காட்டுகிறது.

வெள்ளைக்காரனை திட்டுவதற்குக்கூட, தாழ்த்தப்பட்டவரை (பஞ்சமன்) இழிவான குறியிடாக பயன்படுத்துகிற, புத்திக்குப் பேர்தான், விடுதலை உணர்வா? தாழ்த்தப்பட்டவர்கள் இந்தியர்கள் இல்லையா?

காந்தியை கோட்சே என்ன காரணத்திற்காக கொன்றானோ, அதுபோன்ற ஒரு காரணத்திற்காகத்தான் ஆஷை வாஞ்சிநாதன் கொன்றான்