அணு ஒப்பந்தம் வேறு நாடுகளுடன் போடப்படவில்லையா? ஏன் இந்தியாவுடன் போடுவதை மட்டும் எதிர்க்கிறார்கள்?


அணு ஒப்பந்தம் குறித்து பொதுவாகவே ஆதரவான கருத்து நிலவுகிறது. அது குறித்து சரியான விவாதம் தமிழ்சூழலில் நடந்தேறாமலேயே போய்விட்டது. ஒவ்வொருவரும் தமது அரசியல் நிலைப்பாடுகளுக்கேற்ப இந்த பிரச்சினையை அனுகுவது என்பதும், உண்மையிலேயே இதை புரிந்து கொள்ள முயற்சி செய்யும் ஜனநாயக சக்திகளுக்கோ பக்க சார்பான தகவல்களே இலகுவாக கிடைக்கப் பெறுகிறது என்ற நிலையும் நிலவுகிறது. இந்த நிலையை கலையும் சிறு முயற்சியாக இரண்டு பாகங்களாக அணு ஒப்பந்தம் குறித்த விசயங்கள் இங்கு பேசப்படவுள்ளன. முதல் பாகம் இது அணு ஒப்பந்தம் சம்பந்தப்பட்டது என்ற பொது கருத்து நிலையிலிருந்தே அலசுகிறது. இரண்டாவது பாகம் இந்த ஒப்பந்தத்தின் உண்மையான பொருள், நோக்கம் அணுவை கடந்தது என்பதை அலசுகிறது.

__________________________________________________________

அணு ஒப்பந்தம் குறித்து நிலவும் கருத்துக்கள்:

#1) இந்தியாவின் மின்சாரத் தேவைக்காகவே இது போடப்படுகிறது
#2) இந்தியாவின் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு இது தேவைப்படுகிறது
#3) இதை எதிர்ப்பவர்கள் இந்தியாவின் வளர்ச்சிக்கு எதிரிகள்
#4) இதை கம்யுனிஸ்டுகள் எதிர்ப்பதன் காரணம் அமெரிக்க எதிர்ப்பு அரசியல்
#5) அணு ஒப்பந்தம் வேறு நாடுகளுடன் போடப்படவில்லையா? ஏன் இந்தியாவுடன் போடுவதை மட்டும் எதிர்க்கிறார்கள்?
#6) அமெரிக்கா ஏற்கனவே நாட்டை பாதி அடிமையாகிவிட்டது. தலைக்கு மேல் வெள்ளம் போகும் போது ஜாண் போனால் என்ன முழம் போனால் என்ன?
#7) அபாயகரமான கதிரியக்கம் என்பது பெட்ரோல் உற்பத்தி முதல் பல்வேறு விசயங்களில் வெளிப்படும் ஒன்றுதான். அணுவைப் பொறுத்தவரை இது ஊதிப் பெருக்க வைக்கப்பட்ட வதந்தி.

இன்னும் சில கருத்துக்கள் விடுபட்டிருக்கலாம். அணு ஒப்பந்தம் குறித்து பெரும்பாலனவர்களுக்கு தெரியவில்லை என்பது வெள்ளிடை மலை. பெரும்பாலான கட்டுரைகள் யானையை விவரிக்க முயன்ற ஐந்து கண்பார்வையில்லாதவர்களின் கதையை நினைவூட்டுகின்றனர். 123 என்றால் என்ன? 123 ஒப்பந்தம் கையெழுத்து ஆகிவிட்டதா இல்லையா?, IAEA என்றால் என்ன? ஹைட் சட்டத் திருத்தம் என்றால் என்ன? எப்படி இந்த ஒப்பந்தம் இந்தியாவை அடிமைப்படுத்தும் என்கிறார்கள்? இப்படி பல கேள்விகள்.

இது தவிர்த்து, இந்த ஒப்பந்தம் அமெரிக்காவிடமிருந்து அணு உலைகளையும், அதற்கு தேவையான யுரேனியத்தையும் பெறுவதற்கே போடப்படுகிறது, CPM இந்தியாவின் இறையாண்மைக்காக தியாகம் செய்துள்ளது என்பது போன்ற பல்வேறு மூட நம்பிக்கைகள் வேறு பரவலாக உலாவுகின்றன. இவை குறித்து ஓரளவு புரிந்து கொள்ளக் கூடிய வகையில் ஆக விளக்கமாக, எளிமையாக எடுத்துரைப்பதே இந்த கட்டுரை.

முதலில் அணு என்றால் என்ன, அணு சக்தி என்றால் என்ன என்பதை புரிந்து கொள்ளலாம்:

ஒரு பொருளை உடைத்துக் கொண்டே சென்றால் ஒரு கட்டத்திற்க்கு மேல் உடைக்கும் போது அது இனிமேலும் அந்த குறிப்பிட்ட பொருள் என்பதற்க்கான பண்புகளை இழக்கும். அந்த கடைசி அளவிலான பொருளே அந்த குறிப்பிட்ட தனிமத்தின் அணு என்று புரிந்து கொள்ளலாம் #1. அணுவை உடைக்கும் போதோ அல்லது இணைக்கும் போது சக்தி உருவாகிறது. இதனை ஆங்கிலத்தில் Nuclear Fission, Nuclear Fusion என்று குறிப்பிடுகிறார்கள். இதில் உடைப்பதன் மூலம் சக்தி உருவாக்கும்(fission) தொழில் நுட்பமே பரவலாக பயன்பாட்டில் உள்ளது. இணைவின் மூலமான தொழில்நுட்பம் வெகு சில நாடுகளிடமே உள்ளது (ஹைட்ரஜன் குண்டுகள்).

அணு உடைப்பின் மூலம் அதிக சக்தி பெறுவதற்க்கு அந்த குறிப்பிட்ட அணுவின் எடை அதிகமாக இருத்தல் வேண்டும். ஏனெனில் எடை அதிகம் கொண்ட அணுவின் பிணைப்பு விசை(Binding energy) அதிகமாக இருக்கும். எனவே இந்த அணு உடைக்கப்படும் போது இந்த பிணைப்பு விசை சக்தியாக வெளியிடப்படுகிறது #2. அந்த வகையில் அதிகமான அணு எடை கொண்ட தனிமங்களே அணு உடைப்பிற்கு பயன்படுத்தப் படுகின்றன. இது போல அணு எடை அதிகமான தனிமங்களை கதிரியக்க தனிமங்கள் என்கிறோம். இவை யுரேனியம், தோரியம், புளுட்டோனியம் இன்னபிற. இவற்றில் யுரேனியமே எடை அதிகமுள்ளது. எனவே யுரெனியத்திலிருந்துதான் அணு சக்தி பெரும்பாலும் பெறப்படுகிறது.

ஒரு தனிமம் அணு உடைப்பிற்கு தகுதியானதா என்பதை முடிவு செய்வதில் அந்த தனிமத்தின் அணு உடைப்பு ஐசோடோப்பு பண்பு (Fissile Isotope) முக்கிய பங்கு ஆற்றுகிறது. எடுத்துக்காட்டுக்கு யுரேனியம் அணு பரவலாக u238 என்ற வடிவில்தான் கிடைக்கிறது. ஆனால் U235 என்கிற வடிவம்தான் அணு உடைப்பு ஐசோடோப்பு பண்பு கொண்டதாக இருக்கிறது. இந்த பண்பு கொண்ட அணுதான் நீடித்த அணு உடைப்பு சங்கிலி விளைவை ஏற்படுத்தும்(Sustained Chain reaction). இது நடந்தால்தான் யுரேனியம் அணுக்கள் அடுத்தடுத்து வெடித்து சக்தி அபரிமிதமாக கிடைக்கும் #3. இதில் 235, 238 என்பவை அணு எடையைக் குறிக்கின்றன.

ஐசோடோப் என்றால் என்ன?#4. ஐசோடோப்பு குறித்து பேசும் முன்பு அணு எண், அணு எடை குறித்து தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு அணுவின் அணு எண்தான் அது எந்த தனிமம் என்பதை குறிக்கிறது. அணு எண் என்பது ஒரு அணுவில் உள்ள நேர்மின் துகள்களை குறிக்கிறது(எதிர் நேர் மின் துகள்கள் அணுவில் சமமாகவே இருக்கும்)#5. அணுவின் மையப்பகுதியான நியுக்ளியசில் புரோட்டானும்(நேர்மின்), நிய்ட்ரானும் இருக்கும், இது தவிர்த்து எல்க்ட்ரான்(எதிர்மின்) நியுக்ளியசுக்கு வெளியே சுற்றி வரும். அணு எடை என்பது நியூக்ளியசில் உள்ள நேர்மின் துகள்(புரோட்டான்), நியுட்ரானின் எண்ணிக்கையாகும் #6. ஐசோடோப் என்பது வெவ்வேறு அணு எடை கொண்ட ஆனால் ஒரே அணு எண்ணை உடைய அணுக்கள். அதாவது ஒரே தனிமத்தின் வெவ்வேறு அணு எடை கொண்ட அணுக்களே ஐசோடோப்புகள். U235 என்ற அணு எடை கொண்ட யுரேனியம் ஐசோடோப்பின் நீயுக்ளியசில் அணுச் சமன்பாடு குலைக்கப்பட்டுள்ளதால் இதனை உடைப்பது எளிது, இதிலிருந்து உருவாகும் சக்தி சுற்றியுள்ள பிற U235 அணுக்களை உடைப்பதன் மூலம் நீடித்த சங்கிலி விளைவை உருவாக்குகிறது. அணு, அணு சக்தி குறித்த அடிப்படை விஞ்ஞானம் இதுதான். அணு சக்தியின் நன்மை தீமை குறித்து இப்போது பார்க்கலாம்.

அணு சக்தியின் நன்மை, தீமை:

அணு வெடிப்பின் மூலம் சக்தி இரு வழிகளில் வெளிப்படுகிறது. ஒன்று கைனடிக் சக்தி(சுழற்சி விசை என்ற மொழிபெயர்ப்பு சரியா?) இன்னொன்று கதிரியக்கமாக வெளிப்படுகிறது. இந்த கதிரியக்கம் தன்னைச் சுற்றியுள்ள பொருட்களின் அணுக்களையும் பாதித்து கதிரியக்க தன்மைவாய்ந்ததாக மாற்றி விடுகிறது. இப்படி உருவாகுபவை அணு உலைகளில் பயன்படுத்தும் கையுறை முதலான பொருட்களில் இருந்து அனைத்தும் அடங்கும். அணு உடைப்பிற்கு பிற்பாடு மிச்சமிருக்கும் கதிரியக்க பாதிப்புக்குள்ளாகும் வாய்ப்புள்ள இந்த அனைத்துவிதமான பொருட்களையும் அணுக் கழிவுகள் என்று குறிப்பிடுகிறார்கள். விலை குறைவாக, வீரியமான முறையில் சக்தி கிடைக்கிறது, கார்பன் மாசுபாடு மிகக் குறைவு என்பது அணுவின் நன்மை எனில், அதனால் உருவாகும் இந்த கழிவுகள் மிக அபாயகாரமானதாக இருக்கின்றன#7.

பொதுவாக அணு உலைகள் தவிர்த்து பிற தொழிற்சாலை உற்பத்திகளில் குறிப்பாக, எண்ணெய் உற்பத்தி நிலையங்களில் மிக அதிகளவில் கதிரியக்க கழிவுகள் உருவாகின்றன. இவை மனிதனுக்கு அபாயகராமானவைதான் என்றாலும் இவை குறை சக்தி கதிரியக்க கழிவுகள்(LLW/ILW). அதாவது பிற தொழிற்சாலை கழிவுகள் போன்றதே இது. இப்படி சொல்வதன் அர்த்தம் இந்த கழிவுகள் குறித்து நாம் குறைத்து மதிப்பிடுவது என்பது அல்ல. இன்று மனித குலத்தை அழிவின் விளிம்பில் நிறுத்தியுள்ள உலக வெப்பமடைதலுக்கு பின்னால் உள்ள அராஜக ஏகாதிபத்திய உற்பத்தி முறையை இந்த பிரச்சினைக்கும் காரணம். இவை நமது கடும் கண்டனத்திற்க்கும் எதிர்ப்பிற்கும் உள்ளாகும் விசயமாகவே உள்ளது. ஆயினும் ஒரு குற்றத்தை காரணம் காட்டி அதை விட பல மடங்கு பெரிய தவறை நியாயப்படுத்த முயலும் கயமைத்தனத்தை அம்பலப்படுத்தும் போது பெரிய தவறு உண்மையில் பெரிய தவறு என்பதையும் சேர்த்தே சொல்ல வேண்டியுள்ளது. ஏனேனில் HLW எனப்படும் அதி உயர் கதிரியக்க கழிவுகளில் அணு கழிவு மட்டும்தான் வருகிறது. இப்படி ஒரு வருடத்திற்க்கு உருவாகும் HLW கழிவுகள் 12,000 மெட்ரிக் டன். அதாவது நூறு இரண்டு அடுக்கு பேரூந்து நிறைய கழிவுகள் உருவாகின்றன.

அணு வெடிப்பின் மூலம் கதிரியக்க தன்மை வாய்ந்தவையாக வெளிவரும் அணுக்களின் கதிரியக்க வாழ்நாள் வேவ்வேறாக உள்ளது ஒரு எடுத்துக்காட்டுக்கு ஐயோடின் உப்பின் கதிரியக்கம் 8 நாட்களில் வடிந்துவிடுகிறது. ஆனால் யுரெனியம் வெடிப்பில் பயன்படுத்தப்படும் புளோட்டனியம்-239 கழிவு வாழ்நாள் பல நூறு-ஆயிரம் வருடங்கள் நீடித்திருக்கும் தன்மை வாய்ந்தது. இன்ன பிற கழிவுகளின் வாழ்நாள் பல நூறு மில்லியன் ஆண்டுகளுக்கும் மேல் நீடித்திருக்கும். இதுதான் அணுக் கழிவுகளை மிக அபாயகரமானதாக மாற்றுகிறது. ஆக, மனித சமுதாயத்தின் தொடர்பிலிருந்து, புவியின் உயிர் சூழலின் தொடர்பிலிருந்து இந்த அணுக் கழிவுகள் சுத்தமாக தனிமைப்படுத்தப்பட்டு பல நூறு-ஆயிரம்-மில்லியன் வருடங்கள் பாதுகாக்கப்பட வேண்டியிருக்கிறது. இப்படி பாதுகாப்பதற்க்கான தொழில் நுட்பம் எதுவும் இல்லை.

இது போன்ற கழிவுகளை ஒழித்துக்கட்டும் தொழில்நுட்பம் இன்றி அவற்றை மூட்டைக் கட்டி சேர்த்து வைக்கும் வேலையையே தற்போது செய்து வருகிறார்கள். அமெரிக்காவில் யுகா(Yucca) மலையை இப்படி அணு குப்பைக் கூடையாக மாற்ற முடிவு செய்துள்ளனர். இது கடும் எதிர்ப்புகளை கடந்து வந்து கொண்டிருக்கிறது. இப்படி சேமித்து வைக்கப்படுவதற்க்கும் இடங்கள் இன்றி தற்போது தவித்து வருகிறார்கள். இது அணுக் கழிவுகள் என்ற அபாயம் குறித்தானது.

இது ஒருபக்கம் என்றால் இந்த அணு உலைகளில் விபத்து ஏற்பட்டால் என்ன நடக்கும் என்பது மிக அபாயகரமானதாக இருக்கிறது.

அணு எந்தளவுக்கு சக்தி கொண்டது எனில் நிலக்கரி, டிஎண்டி போன்றவற்றிலிருந்து பெருவதைவிட குறைந்தது 10மில்லியன் மடங்கு அதிகமான உபயோகிக்ககூடிய சக்தி அணுவிலிருந்து கிடைக்கிறது #8. ஹிரோசிமாவில் போடப்பட்ட அணு குண்டில் இருந்த யூரேனியம்-235 அணுவின் அளவு 60கிலோ இதில் 828 கிராம்தான் வெடித்தது, இதிலும் 6கிராம்தான் சக்தியாக உருமாறியது #9. இதிலிருந்து வெளிப்பட்ட சக்தியின் அளவு 13கிலோடன் டிஎண்டி வெடித்ததற்க்கு இணையாக இருந்தது. இதுவே ஒரு முழு நகரத்தை உடனடியாக அழித்தது எனில் இதன் சக்தியை புரிந்து கொள்ளலாம். இந்த தோல்விகரமான குண்டு வெடித்ததில் உடனடியாக 1.6 கிலோமீட்டர் சுற்றளவு அழிந்து விட்டது. இதனால் ஏற்பட்ட தீ 11.2 சதுர கிலோமிட்டர் பரப்பளவிற்கு பரவியது. ஹிரோசிமாவின் 90% நகரம் முற்றிலும் அழிந்தது #10. நாகசாகியில் வெடித்த குண்டு உருவாக்கிய காளான் புகையோ 18 கிலோமீட்டர் உயரம் இருந்தது.

நாகசாகியில் இடப்பட்ட புளூட்டோனியம்-239 குண்டு 6.4 கிலோதான். இதிலிருந்து வந்த சக்தி 21 கிலோடன் டிஎண்டிக்கு இணையாக இருந்தது. உருவான வெப்பம் 3900 டிகிரி செல்சியஸ், காற்றின் வேகம் 1005கிமீ/மணி. உடனடி அழிவு 1.6 கிமீ சுற்றளவிலும், இதனால் ஏற்பட்ட தீ 3 கிமீ சுற்றளவுக்கு பரவியது. இந்த இரண்டு குண்டு வெடிப்பிலும் உடனடியாக இறந்தவர்கள் லட்சங்களில். கதிரியக்கத்தால் பாதிக்கப்பட்டு அடுத்த சில மாதங்களில் இதே அளவில் இறந்தார்கள். இது தவிர்த்து இதன் கதிரியக்க விளைவுகள் இன்று வரை கூட தொடர்கின்றன.

அணு விபத்துக்கள் என்றால் அவ்வப்போது சிறிய அளவில் இன்று வரை நடந்து கொண்டுதான் இருக்கின்றன. பெரும்பாலும் உண்மை நிலவரங்களை யாரும் வெளியிடுவதில்லை. அணு விபத்துக்களில் முக்கியமானவை எனில் ரஸ்யாவில் நிகழ்ந்த செர்னோபிள்ளும், அமெரிக்காவில் நிகழ்ந்த மூன்று மைல் தீவு விபத்தும் உள்ளன. இதில் செர்னோபிள் விபத்தில் 56 பேர் சொச்சம் இதுவரை இறந்துள்ளனர். கதிரியக்க பின் விளைவுகள் குறித்து முரன்பாடான தகவல்கள் உலாவுகின்றன. மூன்று மைல் தீவு விபத்தில் யாரையுமே கதிரியக்கம் பாதிக்கவில்லை என்று சொல்கிறார்கள். ஆயினும் இந்த உலை மூடப்பட்டது. குறிப்பாக செர்னோபிள் விபத்தில் கதிரியக்க சாம்பல்களும், தூசுகளும் 1000மைல்களுக்கு அப்பால் ஐரோப்பிய நாடுகளில் காற்றில் பரவி கதிரியக்க பாதிப்பை ஏற்படுத்தும் அளவு இருந்தது. செர்னோபிள்லிருந்து சில கிமீ தள்ளியிருந்த பிரிபியாட் நகரமே மொத்தமாக காலி செய்யப்பட்டது. வெறும் கட்டங்களுடன் பேய் நகரமாக அது நிற்கிறது. செர்னோபிளில் வெடித்த அணு உலையை மறைக்கும் வகையில் ஒரு பெரிய சுவர் ஒன்று கட்டப்பட்டது. பிறகு அந்த வெடித்த அணு உலையில் அபாயகரமான கழிவுகள் இருப்பதை முன்னிட்டு தற்போது 105மீ உயரம், 200 மீ நீளத்தில், 257மீ அகலத்தில் ஒரு பெரிய வளைவு உலோக மூடி ஒன்றை தயாரித்து 2011ல் இந்த அணு உலையை மூடப் போகிறார்கள். இந்த இரண்டு விபத்துக்களும் அணு உலை குறித்த சர்வதேச கண்ணோட்டத்தை மாற்றியமைப்பதில் பெரும் பங்கு ஆற்றின. குறிப்பாக மேற்கு நாடுகள் புதிதாக அணு உலைகள் திறப்பதையே இத்துடன் நிறுத்திக் கொண்டன. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் அனைத்துமே தம்மிடம் ஏற்கனவே உள்ள அணு உலைகளின் வீரியத்தை அதிகப்படுத்தி தமது மின்சாரத் தேவையைப் பூர்த்தி செய்து கொண்டனர் #11, #12.

அணுவின் நன்மை தீமைகள் குறித்து இங்கு பார்ப்பதன் முக்கியத்துவம் ஒன்று உள்ளது. விஞ்ஞானிகள் மனித குலத்தின் ஒட்டு மொத்த நன்மைக்காகவே அரிய பல கண்டுபிடிப்புகளை செய்கிறார்கள். ஆயினும் மனிதர்களிடையே இருக்கின்ற முரன்பாடுகளும், முதலாளித்துவ லாப வெறியும் அந்த கண்டுபிடிப்புகளை மனித குலத்திற்கே எதிராக பயன்படுத்தச் செய்து விடுகிறது. எய்ட்ஸை சோதனைச் சாலையில் உருவாக்கி தனது சொந்த நாட்டு மக்கள் மீதே பரிசோதித்த அமெரிக்க முதல் இன்று பரிசோதனைச் சாலை எலிகளாக அப்பாவி இந்தியா ஏழைகளை அரசு மருத்துவமனைகளில்(AIIMS Children killed in Medical trial) கொன்று குவிப்பது வரை இவர்களின் லாப வெறியும் போட்டி பொறாமையும் மனிதர்களை மதித்ததே இல்லை என்பதுதான் உண்மை. இங்கு கேள்வி நாம் ஒரு சமூகமாக அணு சக்தியை பயன்படுத்தும் பொறுப்பு உடையவர்களாக இருக்கிறோமா என்பதுதான்.

இந்த விபத்துக்கள் எல்லாமே மிக முன்னேறிய நாடுகளில் ஏற்பட்ட விபத்துக்கள். எடுத்துக்காட்டுக்கு செர்னோபிள் விபத்தில் வெளியேறிய மக்களுக்காக பல கோடிகளில் புதிய குடியிருப்புகளும், பள்ளிக் கூடங்களும், மருத்துவமனைகளும் இன்ன பிற நகர்ப்புற அத்தியாவசிய உள்கட்டுமானங்களும் புதிதாக கட்டியமைக்கப்பட்டன. உள்ளூரில் கிடைக்கும் மரத்தை எரித்தால் கதிரியக்கம் வரும் என்று நம்பியதால் இந்த இடங்களுக்கான எரிபொருள் தேவைக்காக 8,980 கிமீ நீளத்திற்க்கு புதிதாக எரிவாயு குழாய்கள் பதிக்கப்பட்டன. உள்ளிருந்தே சிதைக்கப்பட்டுக் கொண்டிருந்த சோசலிச கட்டுமானத்தைக் கொண்டு அன்றைய ரஸ்ய ஏகாதிபத்தியம் இவற்றை சமாளித்தது. இதே போன்ற விபத்து இந்தியாவில் ஏற்பட்டால் என்ன ஆகும்? இந்தியாவில் அணு உலைகள் மக்கள் வாழும் இடங்களின் அருகிலேதான் வைக்கப்பட்டுள்ளன- கல்பாக்கம் அணு உலை முதற் கொண்டு. இந்தியா தனது மக்களை எந்தளவிற்கு மதிக்கிறது என்பதற்க்கு ஆதாரங்கள் தேவையில்லை. அணு விபத்து அல்ல மாறாக ஒரு சாதரண ராசயண விபத்து இந்தியாவில் போபாலில் நிகழ்ந்தது. யூனியன் கார்பைடு என்ற அமெரிக்க உளவு கம்பேனி நடத்திய சோதனையின் விளைவாக ஆயிரக்கணக்கில்(அரசு சொல்வது – 3000 பேர், ஓரளவு நம்பத்தகுந்த விவரம் – 8000 பேர், ஒட்டு மொத்தமாக இது வரை கிட்டத்தட்ட 20,000 பேர் வரை) போபால் மக்கள் இறந்து போயினர். இன்று வரை இந்த அமெரிக்க கம்பேனியின் பொறுப்பாளர் எவனையும் கைது செய்யவோ தண்டனை கொடுக்கவோ இல்லை இந்த அரசு. இது வரை அந்த தொழிற்சாலை கழிவுகள் அகற்றப்படவில்லை. வாழும் வெடி குண்டாக அந்த தொழிற்சாலைக் கழிவுகள் நீர், நிலம், காற்றை நஞ்சாக்கி பல்வேறு உடல் கேடுகளை உருவாக்கி வருகிறது. இன்றுவரை பாதிக்கப்பட்டவர்களுக்கு சரியான நிவாரணம் தரப்படவில்லை. விசயம் இப்படி இருக்க யூனியன் கார்பைடு மீது உள்ள வழக்கை விலக்கிக் கொள்ள தயார் என்று முழங்குகிறார் மன்மோகன் சிங். இதுதான் இந்திய அரசு தனது மக்களை மதிக்கும் விதம். சென்னை அருகில் உள்ள கல்பாக்கம் அணு உலை உலகின் மிக அபாயகரமான உலைகளில் ஒன்றாக பட்டியலிடப்பட்டுள்ளது, அடிப்படை குளிர்விக்கும் வசதிகள் உள்ளிட்ட பாதுகாப்பு வசதிகள் இல்லாத அணு உலை அது என்பது இங்கு கவனிக்கத்தக்கது #13.

அணு சக்தி என்பது மிக மிக அற்புதமானதொரு/அபாயகரமானதொரு சக்தி அதனை பயன்படுத்துவது என்பதற்க்கு குறைந்த பட்ச ஜனநாயக பண்பு கொண்ட சமூகத்தாலேயே முடியும் இல்லையேல் அது அபாயகரமானது. அணு சக்தி தயாரிப்பு தொழில் நுட்பம் குறித்து இப்போது பார்க்கலாம்.

அணு சக்தி உற்பத்தி தொழில் நுட்பம்: (Sensitive Nuclear Technology – SNT)

அணு சக்தி தொழில் நுட்பத்தில் மூன்று தொழில் நுட்பங்கள் மிக முக்கியமானதாக சொல்லப்படுகின்றன(SNT).
அவை முறையே #14,
#1) யுரேனியம் செறிவூட்டுதல் – Uranium Enrichment,
#2) மறு பயன்பாட்டுக்கான தயாரிப்பு – Nuclear Fuel Reprocessing,
#3) கன நீர் தாயாரிப்பு – Heavy water manufacturing.

இந்த மூன்று தொழில் நுட்பங்களை தெரிந்த கொண்டுள்ள நாடு அணுவிலிருந்து சக்தி எடுப்பதைப் பொறுத்தவரை சுயச் சார்பான நாடாகும் தகுதி படைத்தது. இந்த மூன்று தொழில் நுட்பம் தெரிந்த நாடு சொந்தமாக அணு குண்டுகளையும் தயாரிக்கலாம். எனவேதான் இந்த தொழில் நுட்பங்கள் பிற நாடுகளுக்கு பரவுவது ஏகாதிபத்தியங்களுக்கு பிடிப்பதில்லை. இப்பொழுது இந்த மூன்று தொழில் நுட்பங்கள் குறித்து சுருக்கமாக பார்க்கலாம்.

யுரேனியம் செறிவூட்டுதல் எனப்படுவது இயற்கையில் U238 என்ற அணு எடை கொண்ட ஐசோடோப்புகள் அதிகம் இருக்குமாறு கிடைக்கும் கச்சா யுரேனியத்தை U235 என்ற அணு எடை கொண்ட யுரெனியம் ஐசோடோப்பு அதிகம் கொண்டதாக மாற்றுவதே யுரேனியம் செறிவூட்டுதல் எனப்படுகிறது. இதுதான் எரிப்பதற்க்கு ஏற்ற அணு எரிபொருள் வடிவம் ஆகும் #15.

மறு பயன்பாட்டுக்கான தாயாரிப்பு (N Fuel Reprocessing) எனப்படுவது ஒரு முறை பயன்படுத்தப்பட்ட செறிவூட்டப்பட்ட யுரேனியம் எரி பொருள் கலவையிலிருந்து புளூட்டோனியம், கச்சா யுரேனியம்(U238) போன்றவற்றை பிரித்தெடுப்பது ஆகும். இதனுடன் யுரெனியம் செறிவூட்டுதலில் கிடைக்கும் தரம் குறைந்த யுரேனிய எரிபொருளை(Depleted Uranium) கலந்து, இது மீண்டும் இன்னொரு முறை எரிபொருளாக பயன்படுத்தப்படுகிறது. இது குறை செறிவு யுரேனிய எரிபொருளுக்கு இணையான சக்தியை கொடுக்கும் தன்மை கொண்டது. உலகிலுள்ள பெரும்பாலான அணு சக்தி உலைகள் குறை செறிவு யுரேனியத்தில் இயங்கும் வகையிலும் வடிவமைக்கப்பட்டவையே (குறிப்பாக ரஸ்ய வகைகள்). இந்த மறுபயன்பாட்டு எரிபொருள் கலவையை ஆக்சைடு எரிபொருள் கலவை என்கிறார்கள்(Mixed Oxide Fuel) #16, #17. இந்த தொழில் நுட்பத்தின் மூலமும் அணு ஆயுதம் தயாரிக்கலாம்.

கன நீர் தாயாரிப்பு குறித்து. சாதாரண நீர் என்பது H2O. கன நீர் என்பது D2O. இதில் D என்பது ஹைட்ரஜன் ஐசோடோப்பு. அணு உலையில் எரிக்கப்படும் அணுவிலிருந்து கிடைக்கும் வெப்பத்தால் கனநீர் ஆவியாக்கப்பட்டு அந்த அழுத்தமான ஆவி டர்பைனில் மோதவிடப்பட்டு அது ஒரு ஜெனெரேட்டரை இயக்கி மின்சாரம் தாயார் செய்யப்படுகிறது. கன நீர் தயாரிப்பு தொழில் நுட்பத்தின் மூலம் யுரெனியம் செறிவூட்டுதல் தொழில் நுட்பம் இன்றியே (புளுட்டோனியம்)அணு ஆயுதம் தயாரிக்க முடியும். #18.

மேற்சொன்ன மூன்றில் ஏதேனும் ஒரு தொழில் நுட்பம் இருந்தாலே அதன் மூலம் அணு ஆயுதத்திற்க்கு தேவையான புளூட்டோனியமோ அல்லது செறிவூட்டப்பட்ட யுரேனியமோ எரிபொருளாக தயாரிக்க முடியும் என்பதால் இவற்றை மிக முக்கிய தொழில் நுட்பங்களாக வகைப்படுத்தியுள்ளனர் ஏகாதிபத்தியங்கள்.

இந்த மூன்று தொழில் நுட்பங்களுமே இந்தியாவில் பயன்பாட்டில் உள்ளன. நாம் யாரிடமும் யுரேனியம் சம்பந்தப்பட்ட இந்த தொழில் நுட்பங்களுக்காக கையேந்தி நிற்க வேண்டிய அவசியமில்லை என்பதுதான் உண்மை.

ஒரு உண்மை கடந்த 30 வருடங்களாக புதிய அணு உலைகளை மேற்கு நாடுகள் நிறுவாததால் அந்த அரதப் பழசான விற்காத தொழில்நுட்பங்களை, உலைகளை 3 லட்சம் கோடிக்கு நம் தலையில் கட்டுகிறார்கள் அமெரிக்க யுரெனிய உலை முதலாளிகள். இன்னொரு உண்மை இந்த தொழில் நுட்பங்களும் நம்மிடம் ஏற்கனவே இருக்கின்றன. இன்னொரு உண்மை இதே போல இந்தியா விஞ்ஞான வளர்ச்சியடைந்து சுயசார்பு அடைவது என்பதை, அமெரிக்கா எப்போதுமே திட்டமிட்டு முடக்கி வந்துள்ளது அல்லது இணைந்து வேலை செய்யலாம் என்று தொழில் நுட்பங்களை திருடி வந்துள்ளது. வெகு சுலபமான உதாரணங்கள் ராணுவ தளவாடங்கள், ராக்கெட், இலகு ரக விமான தயாரிப்புகளில் எப்பொழுதெல்லாம் இந்தியா அடுத்தக்கட்ட தொழில் நுட்ப வளர்ச்சியடைகிறதோ அப்பொழுது அந்த தொழில்நுட்பத்தை பயன்பாட்டுக்கு வரவிடாமல் தடுத்து தன்னிடம் உள்ள இணையான-பழைய தொழில் நுட்பத்தை தலையில் கட்டும். ஈராக்கிற்கு ஒரு ஸ்கட் என்றால் இஸ்ரேலுக்கு ஒரு பேட்ரியாட். பேட்ரியாட்தான் சக்தி வாய்ந்தது என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அமெரிக்காவுடனான நமது இதுவரையான வணிக உறவுகளில் நம்மை அவர்கள் ஏமாற்றியதுதான் வரலாறாக உள்ளது. தராப்பூர் அணு மின் நிலையம், பசுமைப் புரட்சி, கோதுமையில் பார்த்தீனியச் செடி, செயற்கைகோள் மூலம் பார்த்து வளங்கள் இல்லை என்று பொய் சொன்னது, முதல் சமீபத்திய ராணுவ தளவாட வியாபாரங்கள் வரை. அணு ஒப்பந்தத்தை எதிர்ப்பது பற்றிய நமது இந்த கருத்து ஒரு அம்சம் மட்டுமே. இதுவும்கூட மையமான நமது எதிர்ப்பிற்க்கு காரணம் அல்ல.

இது தவிர்த்து அணு சக்தி தாயாரிப்பில் தோரியத்தை எரிபொருளாக பயன்படுத்தும் தொழில் நுட்பம் வேறு உள்ளது #19. தோரியத்தை எரிபொருளாக பயன்படுத்தும் போது அது U233 என்ற யுரேனியம் ஐசோடோப்பாக மாறி பின்பு எரிகிறது. U233 என்பதும் U235யை போலவே அணு உடைப்பு பண்பு கொண்ட ஐசோடோப்பு ஆகும் (Fissile Isotope). எனவே யுரேனியத்தை பயன்படுத்தும் முன்பு அதனை U235 ஆக மாற்றுவது போல தோரியத்தை பயன்படுத்தும் போது செய்ய வேண்டியது இல்லை. அதாவது யுரேனியம் செறிவூட்டல் என்று தனியாக எதுவும் செய்யத் தேவையில்லை. மேலும் தோரியத்திலிருந்து உருவாகும் அணு கழிவு குறைவு.

இந்த தொழில்நுட்பத்திலும் இந்தியா சுயச்சார்பானதாகவே உள்ளது. தோரியத்தை அடிப்படை எரிபொருளாக பயன்படுத்தும் ஆராய்ச்சியில் மூன்று கட்டத் திட்டம் ஒன்றை இந்தியா கடைபிடித்தது.

முதலில் கன நீர் தயாரிப்பு தொழில்நுட்பத்தை கண்டுபிடிப்பதன் மூலமும், Reprocessing மூலமும் பூளூட்டோனியம் தயாரிப்பது, உயர் அழுத்த கன நீர் உலைகளை தொழில்நுட்பத்தில் சுயச்சார்படைவது.

இரண்டாவது கட்டமாக இந்த புளூட்டோனியத்தை, தோரியத்துடன் சேர்த்து யூரேனியம் U233ஆக மாற்றி அணு உலையில் எரிப்பது.

மூன்றாவதாக இந்த வகை அணு உலையிலிருந்து தோரியத்தை நேரடியாக U233 ஆக மாற்றி பிறகு அதனை எரிபொருளாக பயன்படுத்துவது #20.

இது தவிர்த்து இதே தோரியம் தொழில் நுட்பத்தில் இயங்கும் அணு உலைகளை இந்தியாவிற்க்கு விற்பதற்க்கும் அமெரிக்காவில் உள்ள சில கம்பேனிகள் தயாராக உள்ளன. ஆனால் அந்த கோரிக்கைகள் அமெரிக்க இந்திய அரசுகளால் ஊக்கப்படுத்தப்படவில்லை. அந்த தொழில் நுட்பம் கிடைத்தால் இந்தியா வெளிநாடுகளை நம்பியிராமல் தனது சொந்த தோரியம் இருப்பைக் கொண்டே அணு சக்தி தயாரிக்கலாம் (”Thorium to give India an edge” எக்னாமிக் டைம்ஸ் – 4 Jan, 2007). ஆனால் அவ்வாறு நடந்தேறாமல் யுரேனியம் என்ற துருப்புச் சீட்டின் மூலம் மட்டுமே இந்த ஒப்பந்தம் நடந்தேற வேண்டும் என்பதில் அமெரிக்காவும், இந்திய அரசும் உறுதியாக நிற்கின்றன. ஏனேனில் இந்த ஒப்பந்தத்தின் நோக்கம் அணு சக்தி கிடையாது. இது பின்னர் விரவாக பார்க்கப்படும்.

உண்மையில் அமெரிக்க கம்பேனியின் தோரியம் தொழில் நுட்பமும் நமக்கு தேவையில்லை. நாமே இந்த துறையில் போதிய தொழில்நுட்ப வளர்ச்சி பெற்றுள்ளோம்.

செப்டம்பர் 1970லேயே டிராம்பேயில் உள்ள பாபா அணு சக்தி மையம் தோரியத்திலிருந்து U233 யுரேனியம் ஐசோடோப்பை வெற்றிகரமாக பிரித்தெடுத்தது #21.

1995-ல் காக்ரபுர்-ல் இரண்டு அணு உலைகளில் குறை செறிவு யுரேனியத்திற்கு பதிலாக உலகிலேயே முதல் முறையாக இந்தியாவில் தோரியம் வெற்றிகரமாக உபயோகிக்கப்பட்டது.

குறிப்பாக ஆகஸ்டு 2005ல் மும்பை பாபா அணு ஆய்வு மையம் தோரியத்தை புளூட்டோனியத்துடன் வினையூட்டி U233 எரிபொருள் உருவாக்கி அணு சக்தி தயாரிக்கும 600MW திறன் கொண்ட இரண்டாம் கட்ட அணு உலையை வடிவமைத்து அறிவித்தனர் #22. உலகிலேயே மிக பாதுகாப்பான அணு உலையாக இதனை பெருமையுடன் அறிவித்தனர். ஏனேனில் யுரேனியம் செறிவூட்டல் தேவையில்லை. இரண்டு வருடத்திற்க்கு எரிபொருள் தேவையின்றி, எந்த தலையீட்டுக்கான அவசியமுமின்று சுலபமாக சக்தியை உருவாக்கும் இந்த அணு உலை. அணு உடைப்பு சுமுகமாக நடந்தேறுவதால் அணு உலையில் எரிபொருளை தாங்கி நிற்கும் Core எனப்படும் பகுதியின் வாழ்நாள் இரண்டு வருடங்களாக அதிகரிக்கிறது. எனவே அணுக் கழிவுகளை கையாள்வதும் யுரேனியம் அணு உலைகள் போன்று அடிக்கடி இல்லாமல் இலகுவானதாக உள்ளது. இதிலிருந்து அணுக் கழிவுகளும் குறைவாக வருகிறது. வடிவமைப்பில் இருந்த இந்த அணு உலை 2008ல் கல்பாக்கத்தில் நிறுவப்பட்டு கடைசி கட்ட வேலைகள் நடந்து வருகின்றன. இது தோரியம் அணு உலையை நோக்கிய இரண்டாவது கட்டம்.

தோரியம் தொழில் நுட்பத்தின் கடைசி கட்டமாகிய மூன்றாவது கட்டம் வரை இந்தியா வெற்றி கண்டுள்ளது(AHWR). AHWR வகையில் 75% தோரியம் எரிபொருளாக இருக்கும். இது தவிர்த்து மூன்றாவது கட்டத்தில் முற்றிலும் தோரியத்தை மட்டுமே பயன்படுத்தும் ADS (Accelerator Driven Systems) உலைகளை கண்டுபிடிக்கும் முயற்சியிலும் சோதனை அளவில் வெற்றி பெற்றுள்ளது. கல்பாக்கத்தில் காமினி(KAMINI)-கல்பாக்கம் மினி என்ற பெயரில் 30KW உலை நிறுவப்பட்டு இயங்கி வருகிறது.300MWல் புதிய தோரிய அணு உலை நிறுவும் வேலைகள் நடந்து வருகின்றன #23.

இரண்டாவது கட்டத்தில் உள்ள ஒரு பிரச்சினை தோரியத்துடன் சேர்ந்து புளூட்டோனியத்தை பயன்படுத்த வேண்டியுள்ளது. புளூட்டோனியம் நமக்கு இரண்டு வகைகளில் கிடைக்கிறது. ஒன்று வெளிநாடுகளிடமிருந்து வாங்குவது. மற்றொன்று Reprocessing மூலமும், கன நீர் தயாரிப்பு தொழில்நுட்பத்தின் மூலமும் புளுட்டோனியம் தயாரிப்பது. இதில் முதல் வகையை நாம் நம்ப இயலாது. மேல்நிலை வல்லரசுகள் நமது சுயசார்பை ஒழித்துக்கட்ட வசதியாக புளூட்டோனியம் கிடைப்பதை தடுக்கவே செய்வார்கள். ஆனால் நம்மிடம் ஏற்கனவே உள்ள Reprocessing தொழில்நுட்பத்தின் மூலமும், கன நீர் தொழில் நுட்பத்தின் மூலமும் நமக்கு தேவையான புளூட்டோனியத்தை நாமே தயாரித்துக் கொள்ளலாம் (இதுவும் கூட மூன்றாவது கட்டமாகிய ADS முழுமையாக வியாபார பயன்பாட்டுக்கு வரும் வரைதான். அதற்க்கு பிறகு இந்த பிரச்சினைகளும் கிடையாது).

இதன் அர்த்தம் SNT எனப்படும் அணு தொழில்நுட்பங்களில் இந்த இரண்டு தொழில்நுட்பங்கள் இந்தியா தனது அணு விஞ்ஞானத்தை அடுத்தக்கட்டத்திற்க்கு சுதந்திரமாக வளர்த்தெடுப்பதற்க்கு இன்றியமையாததாக உள்ளது என்பதே ஆகும். தற்போதைய 123 ஒப்பந்தம் இந்த இரண்டு தொழில்நுட்பங்களையும் பயன்படுத்துவதற்க்கும், வளர்த்தெடுப்பதற்க்கும் ஆப்பு அடிப்பதாக இருப்பதாலேயே விஞ்ஞானிகள் இதனை எதிர்க்கிறார்கள் #24. இப்பொழுது இந்தியாவில் அணு தொழில் நுட்பம் வளர்ந்த பாதையையும், இந்தியாவின் மின்சாரத் தேவை குறித்தும், இந்தியாவில் உள்ள யுரேனியம், தோரியம் எரிபொருள்களின் எதிர்காலம் குறித்தும் பார்க்கலாம்.

இந்தியாவில் அணு தொழில் நுட்பத்தின் வளர்ச்சிப் பாதை, எரிசக்தி தேவை, எரிபொருள் இன்னபிற:

22 ஜனவரி 1965-ல் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி புளூட்டோனியம் ரிபுரோசசிங் ஆலையை டிராம்பேவில் திறந்து வைத்தார். அமெரிக்காவின் கருத்தில் அப்போதைய இந்தியா ஒரு வருடத்திற்க்கு 100 அணு குண்டுகள் தாயாரிக்க தேவையான புளூட்டோனியம் ரிபுரோசஸ் செய்யத் தேவையானவற்றை கொண்டிருந்தது.

செப்டம்பர் 1970லேயே டிராம்பேயில் உள்ள பாபா அணு சக்தி மையம் தோரியத்திலிருந்து U233 யுரேனியம் ஐசோடோப்பை வெற்றிகரமாக பிரித்தெடுத்தது #25.

22 May 1972-ல் பூர்ணிமா-I ஆய்வு உலை பாபா அணு சக்தி மையத்தில் நிர்மாணிக்கப்பட்டது. முற்றிலும் பாபா அணு சக்தி மையத்தின் இந்திய விஞ்ஞானிகளாலேயே தயாரிக்கப்பட்டு நிர்மாணிக்கப்பட்டது. 21 கிலோ புளூட்டோனியத்தில் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டது இந்த உலை #26.

இந்த காலகட்டத்தில் அணு ஆயுதம் குறித்த இந்தியாவின் கருத்து அமைதிக்காக அணு ஆயுதம் பரிசோதனை செய்வது என்ற நிலையை அடைந்தது. அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், மேற்கு ஜெர்மனி, ஜப்பான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளிடமிருந்து அணு உதவிகளை பெற்று வந்தது. ஆயினும் வெளிப்படையாகவே அணு வெடிப்பு சோதனைக்கு தயாராகி வருவதை அறிவித்தே வந்துள்ளது இந்தியா. பாராளுமன்றத்திலும் இவை குறித்து அடிக்கடி மயிர் பிளக்க விவாதிக்கப்பட்டது.

1974-ல் IAEAன் நிர்வாகக் குழுவில் இந்தியா உறுப்பினராக தொடர்ந்து 18வது வருடமாக சேர்த்துக் கொள்ளப்பட்டது. காரணம் அணு சக்தி தொழில் நுட்பம் உள்ள உலகின் 9 நாடுகளில் ஒன்றாக அன்று இந்தியா இருந்தது.

18 மே 1974-ல் இந்தியா பொக்ரானில் அணு குண்டு வெடிப்பு சோதனை செய்கிறது. அணு இணைப்பு(Fusion) தொழில் நுட்பத்திற்க்கான ஆய்வுகளையும் இந்திய விஞ்ஞானிகள் தொடங்கினர்.

இதற்க்கு பிறகும் கூட ஜூன் 1974ல் தராப்பூர் அணு மின் நிலையத்திற்க்கு யுரேனியம் அனுப்புகிறது அமெரிக்கா. இந்தியாவின் அணு குண்டு சோதனை எந்த ஒப்பந்தத்தையும்(1963 ஒப்பந்தம்) மீறிவிடவில்லை என்று அமெரிக்க கூறியது #27.

ஆனாலும் கூட செப்டம்பர் 1974ல் இந்திய அணு சக்தி கமிசனிடம் பேச்சுவார்த்தை நடத்தியது அமெரிக்கா. இது அடுத்தக்கட்ட யுரேனியம் அனுப்புவதற்க்கு புதிய உறுதிமொழிகளையும், பாதுகாப்பு உடன்படிக்கைகளையும் கோருவதாக இருந்தது.

25 ஆகஸ்டு 1975-லோ இன்னும் ஒரு படி மேலே போய் அமெரிக்க உளவு பிரிவினர் பின் வரும் அறிக்கை அளித்தனர் அதாவது, இஸ்ரேலுக்கு எதிராக எகிப்து அணு குண்டு தயாரிக்க இந்தியாவின் உதவியை வேண்டி இருப்பதாக அறிக்கை அளித்தனர்.

தீடிரென்று ஜனவரி 31 1976-ல் தாராப்பூர் அணு உலையில் கதிரியக்க கசிவு அபாயம் இருப்பதாக சொல்லும் GE(General Electricals என்ற ரத்தவெறி கம்பேனி)யின் குற்றச்சாட்டை அமெரிக்க செனட் கமிட்டி ஆய்வு செய்ய இருப்பதாக அமெரிக்க செனட்டர் ஜான் க்லன் கூறினார். அமெரிக்க அணு கட்டுப்பாட்டு வாரியத்தை சேர்ந்த டாக்டர் ஸ்டீவன் ஹனயுர் தராப்பூர் அணு உலை பெரிய அபாயாத்தை எதிர்நோக்கி இருப்பதாக கூறினார். இத்தனைக்கும் இந்த அணு உலையில் புதிய எரிபொருள் நிரப்புவதும் அதனை ஒட்டி பராமரிப்பு பணிகள் முழுவதும் சில வாரங்களுக்கு முன்புதான் செய்து முடிக்கப்பட்டிருந்தன. இந்த புதிய எரிபொருள் கூட அணு குண்டு வெடிப்பிற்கு பிறகு அமெரிக்கா இந்தியாவிற்கு அனுப்பியதுதான். விசயம் அணு வெடிப்பு அல்ல மாறாக எகிப்து உடனான இந்திய அணு வர்த்தக ஒப்பந்தம் செய்து கொண்டதே பிரச்சினை.

இதற்கிடையில் இந்தியாவின் உறுதிமொழியை ஒட்டி கனடா மீண்டும் உதவிகள் செய்ய ஒத்துக் கொண்டது(பிறகு உடனடியாக பின்வாங்கியும் விட்டது). ஒப்பந்தத்தை இந்தியா மீறிய போதும் கூட வலியுறுத்தி கேட்ட போது கனடா ஒத்துக் கொண்டது. ஆனால் போட்டுக் கொண்ட 1963 ஒப்பந்தத்திற்க்கு சம்பந்தமில்லாமல் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை தனக்கு விரோதமாக இருப்பதாலேயே இந்தியாவுக்கு குடைச்சல் கொடுத்தது அமெரிக்கா. ஏப்ரல் 1974-ல் NSG வழிகாட்டுதல்களுக்கு கட்டுப்படுவதாக எழுதிக் கொடுக்கச் சொல்லி இந்தியாவிற்க்கு புதிய நிபந்தனைகளை விதித்து மிரட்டுகிறது அமெரிக்கா. குறிப்பாக உயர் அணு தொழில்நுட்பங்களை இந்தியா ஏற்றுமதி செய்வதை கட்டுப்படுத்துவதுதான் அமெரிக்காவின் இந்த நெருக்குதலுக்கு காரணம். கடைசியில் 1963 ஒப்பந்தத்தை தூக்கி குப்பையில் போட்டு மூடியது அமெரிக்கா. காரணம் அணு குண்டு வெடிப்பு என்று அமெரிக்காவும் சொல்லவில்லை. உண்மையும் அதுவல்ல. தராப்பூர் ஆலை தனக்கான எரிபொருள் தேவைக்கு மாற்று வழிகளை வேண்டி நின்றது.

உலகில் வேறு எங்குமே இல்லாத புதிய தொழில் நுட்பத்தில் ரிபுரோசசிங் செய்யும் ஒரு ஆலையை 1974-ல் ஹைதராபாத்தில் நிறுவப்பட்டது. இதனிடையா இந்தியா ஈரான், எகிப்து, லிபியா போன்ற நாடுகளுக்கு அணு சக்தி தொழில்நுட்ப உதவிகளை செய்வதற்க்கான வேலைகளில் இறங்கியது.

இந்தியாவிற்கு அணு எரிபொருள் தொடர்ந்து வேண்டுமென்றால் முழு அணு பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டுமென்றும், ரிபுரோசசிங் தொழில்நுட்பத்தை தலைமுழுக வேண்டுமென்றும் அமெரிக்கா நிர்பந்தித்தது. இந்த அடிப்படையில் அணு எரிபொருளை அனுப்பியும் வைத்தது. ரிபுசோசசிங் தொழில் நுட்பத்தையும், கன நீர் தயாரிப்பு தொழில் நுட்பத்தையும் விட்டொழித்தால் எல்லா காலத்திற்க்கும் இந்தியா மேல் நிலை வல்லரசுகளிடம் அடிமைப்பட்டுக் கிடக்க வேண்டியதுதான். ஏனேனில் நமது அணு எரிபொருள் சுயச்சார்பை உறுதிப் படுத்தும் துருப்புச் சீட்டு இந்த இரண்டு தொழில் நுட்பங்கள்தான் என்பதை நாம் மேலே ஏற்கனவே விளக்கியிருந்தோம்.

ஆயினும் இந்த காலகட்டம் முழுவதும் தராப்பூர் அணு உலைக்கு தேவையான யுரேனியத்தை அமெரிக்க அனுப்பியே வந்தது(தாமதமாகவேனும்). காரணம் வேறொன்றுமில்லை, இந்தியாவிடமே இருக்கும் யுரேனியம் 1980-ல் கண்டுபிடிக்கப்பட்டதும். அதனை செறிவூட்டுவதற்க்கான தொழில்நுட்பத்தை கண்டுபிடிக்கும் முயற்சிகளை இந்திய விஞ்ஞானிகள் 1980களில் உடனடியாகவே தொடங்கிவிட்டதுமே காரணம். அமெரிக்கா 1980 மத்தியில் யுரெனியம் அனுப்புவதற்க்கு முரண்டு பிடித்த வேளையில் இந்தியா தான் சொந்தமாக தாயரித்த யுரேனியத்தின்(உத்தரபிரதேசத்திலிருந்து) மூலமே அணு உலைகளை நடத்தும் வேலைகள் தொடங்கிவிட்டது. 1981-ல் ரீகன் அரசு தராப்பூர் அணு உலைக்கு யுரேனியம் அனுப்புவதை நிறுத்திக் கொள்வதற்க்கு அடிப்படையாக இருந்த 1963 ஒப்பந்தத்தை முறித்துக் கொண்டது. தராப்பூர் அணு உலைக்கு தேவையான உதிரி பாகங்கள் வழங்குவதற்க்கு GE கம்பேனிக்கு அமெரிக்க அரசு அனுமதியளிக்க மறுத்துவிட்டது. ஒப்பந்தப்படி அனுப்ப வேண்டிய 19 டன் யுரேனியத்தை கடைசி வரை அனுப்பாமலும் ஏமாற்றியது.

இதனிடையே இந்திய விஞ்ஞானிகள் ரிபுரோசசிங் தொழில் நுட்பம், கன நீர் தொழில் நுட்பம், யுரேனியம் செறிவூட்டுதல் தொழில் நுட்பங்களையும், அவற்றை நடைமுறையில் பயன்படுத்துவதற்க்கான பல்வேறு அணுக் கூடங்களையும் நாடு முழுவதும் கட்டியிருந்தனர். யுரேனியம் வளங்களும், தோரிய வளமும் இந்தியாவில் கிடைக்கும் இடங்களும் பெரும்பாலும் கண்டுபிடிக்கப்பட்டிருந்தன. பிற நாடுகளுடன் அணு தொழில்நுட்ப வியாபாரம் செய்யும் அளவு இந்தியா வளர்ந்திருந்தது. இந்த காலகட்டத்தில் 1963 ஒப்பந்தத்தின் படி இந்தியாவுக்கு அமெரிக்க அனுப்பியிருந்த 250டன் எரிபொருள் பயன்படுத்தப்பட்டு அது மீண்டும் ரிபுரோசசிங்குக்கு செய்து புளூட்டோனியம் எடுப்பதற்க்கு தயாராக இருந்தது. தாராப்பூர் அணு உலைக்கு தேவையான எரிபொருளை அமெரிக்கா அனுப்பாததை இந்திய விஞ்ஞானிகள் சமாளித்துவிட்டனர். ஆனால் யுரெனியம் அணு உலைகளில் அடிக்கடி தேய்ந்து போகும் உதிரி பாகங்களை அமெரிக்கா அனுப்பாமால் கழுத்தறுத்தைத்தான் இந்திய விஞ்ஞானிகளால் சமாளிக்க இயலவில்லை.

1983ல் இந்தியாவிலேயே வடிவமைக்கப்பட்டு, தயாரிக்கப்பட்ட கல்பாக்கம் அணு மின் நிலையத்தின் முதல் உலையை நாட்டுக்கு அர்ப்பணித்தார் இந்திரா காந்தி. இது 235MW திறன் கொண்ட அணு உலை இது.

இதோ 2008 ஜூன் 25ல் வந்த செய்தி என்ன சொல்கிறது என்றால் இந்தியாவிலேயே தாயாரான பாதுகாப்பு குழாய் (Safety Vessel) கல்பாக்கம் அணு உலையில் நிறுவியுள்ளனர். இந்த குழாயை தயாரித்ததன் மூலம் அதி வேக பெருக்கி அணு உலைகள்(Fast Breeder) தொழில் நுட்பத்தில் முன்னேறிய தொழில்நுட்பம் கொண்ட வெகு சொற்பமான நாடுகளின் வரிசையில் நாமும் இருக்கிறோம் இப்போது #28.

இந்த செய்தியிலேயே உள்ள வேறு சில விசயங்கள், முற்றிலும் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட 500MW மின் திறன் கொண்ட அதி வேக பெருக்கி அணு உலை கல்பாக்கத்தில் நிறுவப்பட்டு கடைசி கட்ட வேலைகள் நடந்து வருகின்றன. 2005-ல் மும்பையில் பெருமையுடன் அறிவிக்கப்பட்ட தோரியம் இரண்டாம் கட்ட அணு உலைதான் இது. இது போல இன்னும் பல அணு உலைகளை நிறுவும் வேலையில் இந்திய அணு சக்தி கழகம்(NPCIL) உள்ளது. மேலும் உலகிலுள்ள முன்னேறிய தொழில் நுட்பங்களில் ஒன்றாக இந்தியாவிடம் உள்ள அணு சக்தி தொழில்நுட்பம் உள்ளது. மேலே குறிப்பிடப்பட்டுள்ள அதி வேக பெருக்கி அணு உலைகள்(FBR) ஏற்னகவே குறிப்பிடப்பட்ட தோரியம் தொழில்நுட்பத்தின் இரண்டாவது கட்டத்தை உபயோகப்படுத்துகின்றன. மூன்றாவது கட்டத்திற்கான ஆய்வுகள் நடந்து வருகின்றன. நம்மிடம் தோரியம், செறிவூட்டப்பட்ட யுரேனியம், ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட எரிபொருளிலிருந்து தயாரிக்கப்படும் ஆக்ஸைடு கலவை எரிபொருள் இவையணைத்தையும் உபயோகித்து மின்சாரம் தயாரிக்கும் அணு உலைகள் பயன்பாட்டில் உள்ளன.

இந்தியா சர்வதேச அணு உதவி கிடைக்காமல் தனிமைப்படுத்தப்பட்டதால் சொந்தமாகாவே அணு சக்தி உற்பத்தி செய்தது. இதனால் உலகிலேயே வீரியம் குறைவான அணு உலைகளைக் கொண்ட நாடாக இந்தியா 1990களில் இருந்தது. ஆயினும் இந்த தொழில்நுட்ப தடங்களை கடந்து 2002ல் 85% வீரியம் கொண்டவையாக தனது அணு உலைகளை மாற்றிக் காட்டியது. இந்த அணு உலைகளின் வீரியம் இன்னும் அதிகப்படுத்தப்படும். பொதுவாகவே இது போலத்தான் உலகம் முழுவதும் செய்யப்படுகிறது. அணு உலைகளின் எண்ணிக்கையை கூட்டமாலேயே அவற்றின் வீரியத்தை கூட்டியே தமது அணு மின் உற்பத்தை அளவை மேற்கு நாடுகள் கடந்த 30 வருடங்களாக அதிகரித்து வந்துள்ளனர் என்பது இங்கு கவனிக்கத்தக்கது.

தாராப்பூரில் உள்ள 3வது, 4வது உலைகள் இந்திய அணு சக்தி கழகத்தால்(NPCIL) இந்தியவிலேயே தயாரிக்கப்பட்டு நிறுவப்பட்டது. இது தவிர்த்து Kaigaவில் உள்ள அணு உலைகள், ராவாபாட்டாவில் உள்ள சில உலைகள் இவையும் NPCILஆல் தயாரிக்கப்பட்டு நிறுவப்பட்டன. இவையெல்லாம் தற்போது இயங்கிக் கொண்டுள்ளவை.

மேலே கால வரிசைப்படி கொடுத்துள்ள விவரங்கள் நமக்கு காட்டுவது அணு விஞ்ஞானத்தைப் பொறுத்தவரை நாம் சுயச்சார்பானவர்களாக மாறியதுடன், அதனை ஏற்றுமதி செய்யும் அளவு தொழில்நுட்பம் தெரிந்த நாடாக நாம் மாறிய அடுத்த நிமிசத்திலிருந்து அமெரிக்கா நமக்கு தொந்தரவு கொடுக்கத் தொடங்கிவிட்டது என்பதுதான். அன்றிலிருந்து இந்தியாவை சர்வதேச ஒப்பந்தங்களிலும், NPTயிலும் கையெழுத்திடச் சொல்லி தொடர்ந்து நிர்ப்பந்தித்து வந்துள்ளது அமெரிக்கா. 1963-ல் போடப்பட்ட ஒப்பந்தத்தை ஒருதலை பட்சமாக தூக்கி குப்பையில் கடாசிவிட்டு தனது அனைத்துவிதமான தந்திரங்களையும் பயன்படுத்தி வந்துள்ளது அமெரிக்கா. யுரேனிய அணு உலைகளில் அணு உடைப்பு தோரியத்தில் நடப்பது போல சுமூகமாக நடப்பதில்லை எனவே யுரெனிய அணு உலைகளின் உதிரிபாகங்கள் அடிக்கடி மாற்றப் பட வேண்டியுள்ளது. இவர்களை நம்பி நாம் இங்கு கட்டிய தராப்பூர் யுரேனியம் அணு உலைக்கு தேவையான உதிரி பாகங்களை தராமல் முடக்கியது அமெரிக்கா. இதனால் அந்த அணு உலை பல காலத்திற்க்கு தனது பாதி வீரியத்திலேயே இயங்கியது. தற்போது இருப்பில் உள்ள யுரேனியமும் முடிந்துவிட்டதால் இயங்காமல் முடக்கி வைக்கப்பட்டுள்ளது. தற்போது உள்நாட்டு யுரெனியத்தின் மூலம் இயங்கி வருகின்றன.

உலகிலேயே முன்னேறிய அணு சக்தி தொழில் நுட்பம் கொண்ட நாடாக இந்தியா இருந்தும்(குறிப்பாக தோரியம் தொழில்நுட்பம்) இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்க்கு, இந்த அணு ஒப்பந்தத்தை வேறு வழியே இல்லை என்று நியாயப்படுத்துவதற்க்கு பயன்படும் முக்கியமான வாதம் இந்தியாவின் யுரெனியம் இருப்பு போதாமான அளவு இல்லை என்கிற வாதம். தொழில் நுட்பம் சிறப்பாக இருந்தாலும் மூல வளம் இல்லையே என்ற இந்த வாதம் குறித்து இந்த பகுதி பதில் சொல்லும். இந்தியாவில் உள்ள யுரேனியத்தின் அளவு எவ்வளவு? மேலே நாம் சுட்டிக்காட்டியுள்ள உலைகள் எல்லாமே தனது மொத்த திறனில் பாதியளவே ஓடுகின்றன. காரணம் யுரெனியம் தட்டுப்பாடு.

இதுவரை பயன்படுத்த தகுதியானது என்று உறுதிப்படுத்தப்பட்ட யுரேனியத்தின் அளவு 61,000 டன்னிலிருந்து 90,000 டன்வரை இருக்கிறது #29 பக்கம் 23. தோரியம் 2,15,000 டன்னிலிருந்து 3,60,000 டன் வரை இருக்கிறது #30. தோரியம் உலகிலேயே நம்மிடம்தான் அதிகம் உள்ளது என்றும், நாம் ஆஸ்திரேலியாவுக்கு அடுத்த நிலையிலிருக்கிறோம் என்றும், நாம் உலகில் நான்காவது பெரிய தோரியம் வளம் உள்ள நாடு என்றும் பல்வேறு புள்ளிவிவரங்கள் சொல்லுகின்றன. ஆனால் இவையணைத்தும் பிற நாடுகளின் தோரியம் அளவில் ஏற்படும் முரன்பட்ட தகவலினாலேயே வேறுபடுகின்றன. இந்தியாவின் தோரியம் இருப்பைப் பொறுத்தவரை இவர்கள் அனைவரும் ஒரே அளவையே சொல்கிறார்கள்.

“The potential of Nuclear resources is about 93% of the total potential based on the proven reserves of all the energy resources in the country” – இப்படி சொல்கிறது NPCILன் 2006-07க்கான ஆண்டு அறிக்கை. இதே ஆண்டறிக்கை 2006ல் இயக்கத்தில் இருந்த அணு உலைகளின் உண்மையான திறனாக 58478MW என்று குறிப்பிட்டுள்ளது #31 பக்கம் 56. இதன் அர்த்தம் இந்தளவுக்கு அதிகபட்சம் அவை அணு சக்தி உருவாக்கும் திறனுள்ளவை. அதாவது இதுவரை நிர்மாணிக்கப்பட்ட அணு உலைகளின் உற்பத்தி திறனை அதிகரித்துக் கொண்டு சென்றாலே போதும், புதிதாக நிர்மானிக்கப்படும் அணு உலைகளை தோரியம் அடிப்படையிலானதாக கூட நாம் செய்து கொள்ளலாம்.

தற்போது 4120MWதான் அணு சக்தியிலிருந்து பெறப்படுகிறது. இது மொத்த உற்பத்தியில் 3% கொஞ்சம் கூட வரும். மேலும் 2660MWத்திற்க்கான அணு உலைகளை கட்டிக் கொண்டிருக்கிறார்கள். இது தவிர்த்து 6800MW உற்பத்தி செய்யும் அளவு அணு உலைகளை கட்டுவதற்க்கான வேலைகள் நடந்து வருகின்றன #32. இவையணைத்திற்க்கும், அதாவது 10,000MW உற்பத்தி செய்ய 50 வருடத்திற்க்கு தேவையான யுரேனியத்தை இந்தியாவிலிருந்தே எடுத்துக் கொள்ளலாம். எந்தவொரு வெளிநாட்டையும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கத் தேவையில்லை என்று 2005ல் இந்திய அணு சக்தி கழகத்தின் தலைவர் S.K. ஜெயின் கூறுகிறார் (‘We can meet India’s electricity demands’ – Frontline Mar 12-25, 2005 ). 2020-ல் அமெரிக்க அணு ஒப்பந்தத்தின் மூலம் நாம் உற்பத்தி செய்யவுள்ள அணு சக்தி 6%தான். இதே அளவை அவர்களின் உதவியின்றியே அடைய முடியும் என்று சொல்கிறார்கள் விஞ்ஞானிகள்.

பிசினஸ் இந்தியாவில் மார்ச் 2006ல் ஒரு விரிவான கட்டுரை வந்திருந்தது “What can’t we Produce? – Business India, March 12, 2006 பக்கம் 40” #33. இதில் அணு சக்தி கமிசனின் தலைவர் அனில் ககோதரிடம் இந்திய அமெரிக்க அணு ஒத்துழைப்பின் பயன் குறித்து கேட்ட போது பின்வருமாறு கூறுகிறார்: “இந்தியா தனது மூன்று கட்ட அணு திட்டத்தில் முதல் கட்டத்தில் 10,000 MW அணு சக்தியை இந்தியாவிலேயே உள்ள யுரேனியத்தைக் கொண்டு உற்பத்தி செய்யும் திட்டத்தில் எந்த மாற்றமும் இல்லை. இதை விட பத்து மடங்கு உற்பத்தி செய்யப்படவுள்ள அடுத்தடுத்த கட்டங்களுக்கோ உபரியாக யுரேனியம் எதுவும் தேவையில்லை. இந்த ஒப்பந்தத்தை பொறுத்தவரை மலிவு விலை யுரேனியம் அதிகப்படியான பயன்பாட்டுக்கு கிடைக்கும் வாய்ப்பு மட்டுமே இந்தியா பார்க்கக் கூடியதாக இருக்கிறது.” இந்த காலகட்டத்தில் அணு ஒப்பந்தம் உயிராதாரமானது என்பதை இவர்கள் எங்குமே வலியுறுத்தவில்லை. மாறாக நமது சொந்த திறனில் சாதிக்க முடியும் என்பதை பல்வேறு கட்டங்களில் இவர்கள் வலியுறுத்தி வந்துள்ளனர்.

இந்திய-அமெரிக்க அணு ஒப்பந்தம் இந்தியாவிற்கு யுரேனியம் கிடைப்பதற்க்கும், பரஸ்பரம் ஏற்றுமதி இறக்குமதிக்கு உதவும் ஒரு ஓப்பந்தமாக இருப்பதையே இவர்கள் வலியுறுத்துகிறார்கள். மாறாக அது அப்படியில்லை என்பதுடன் அதன் உண்மையான நோக்கம் பிரதானமாக யுரேனியமோ, அணுவோ சம்பந்தப்பட்டதாகவோ இல்லை.

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு அதிகப்படியான மின்சாரம் எதிர்காலத்தில் தேவைப்படுகிறது என்கிறார்கள். இது யாருக்கான பொருளாதாரம் என்ற கேள்வியை இப்போதைக்கு தவிர்த்துக் கொண்டு பார்த்தால் கூட இந்தியாவின் எரிபொருள் தேவையை நிவர்த்தி செய்வதற்க்கு அணு சக்தி தவிர்த்து இந்தியாவின் நீர் மின்சக்தியும், காற்று மின்சக்தியும், சூரிய சக்தியும், இயற்கை வாயுவும் பெரிய அளவில் பயன்படுத்தப்பாடாமலேயே உள்ளது. இவற்றிலிருந்து மிக அதிகப்படியாகவே மின்சாரம் எடுக்க முடியும் என்று பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கட்டுரையின் விரிவு அஞ்சி அவற்றை இங்கு கொடுக்காமல் தவிர்க்கிறேன்.

இங்கு நாம் இது வரை பார்த்த விசயங்களை முடிவாக பட்டியலிட்டுக் கொள்வோம்.

#1) புதிய அணு உற்பத்திக் கூடங்கள் எதையும் கடந்த 30 வருடங்களில் மேற்கு நாடுகள் கட்டவில்லை விற்க்காத பழைய சரக்கை நம் தலையில் கட்டுகிறார்கள்.
#2) உலகிலேயே அதிகமான யுரேனியம் உள்ள நாடுகளில் ஒன்றான ஆஸ்திரேலியாவில் மின்சாரம் தயாரிக்க ஒரு அணு உலைகூட கிடையாது.
#3) யுரேனியம் அடிப்படையிலான அதி அழுத்த கன நீர் உலைகள் ஏற்கனவே இருப்பவையே போதும், அதற்கு அடுத்தகட்ட தொழில்நுட்பங்களை விரிவாக நாம் நிறுவ வேண்டிய நிலையில் தற்போது உள்ளோம் எனும் போது அமெரிக்காவிடமிருந்து பழைய தொழில் நுட்பத்தை வாங்குவது நமது சுயசார்பை ஒழிக்கும் தந்திரம். அதாவது நம்மிடம் ஏற்கனவே இருக்கும் காலவதியான விசயத்தையே நாம் திரும்ப வாங்குகிறோம் என்பதுதான். அதுவும் 3லட்சம் கோடிக்கு எனும் போது யார் முட்டாள் என்பதை புரிந்து கொள்ளலாம். நமக்கு இனிமேலும் தேவையில்லாத தொழில்நுட்பத்தை வாங்குவதன் மூலம் நமது அணு சக்தி தேவையை அடுத்தக்கட்டத்திற்கு வளர்க்காமல் முடக்குகிறோம், மேலும் நாம் அவர்களை நம்பியிருக்குமாறு செய்துவிடுகிறோம்.
#4) அணு சம்பந்தப்பட்ட தொழில் நுட்பம் அணைத்தும் நம்மிடமே உள்ளது. கனநீர் உற்பத்தியிலும், அணு தொழில்நுட்பத்திலும் நாம் ஏற்றுமதி செய்யும் நாடு. இந்த தொழில்நுட்பங்களை நாம் இன்னும் வீரியமாக வளர்த்தெடுக்க இந்த 3 லட்சம் கோடியை பயன்படுத்தலாம்.
#5) எதிர்கால, நிகழ்கால மின்சாரத் தேவைகளை அமெரிக்க ஒப்பந்த்தை நம்பியிராமலேயே இந்திய அணு சக்தி திட்டங்கள் மூலமே சாதிக்க முடியும். இது தவிர்த்து பிற மூல வளங்களை முழுமையாக பயன்படுத்தும் திட்டங்களை நாம் ஆழமாக பரிசீலிக்க வேண்டும்.
#6) யுரேனியம், தோரியம், புளுட்டோனியம் போன்ற அடிப்படை அணு எரிபொருட்களுக்கு நாம் பிறரை நம்பியிருக்க வேண்டிய நிலையில் இல்லை. நம்மிடம் இருப்பதை வைத்தே சமாளிக்க இயலும். ஒருவேளை நமது எதிர்காலத்திற்கு ஆபத்தில்லாத வகையில் யுரெனியம் கிடைத்தால் கொஞ்சம் வசதி அவ்வளவுதான்.
#7) நிலக்கரி, இயற்கை வாயு உள்ளிட்டவற்றிலிருந்து மின்சாரம் தயாரிக்க வசதியாக இவற்றை அதிகமாக இறக்குமதி செய்யும் முயற்சிகளில் இந்தியா இறங்க வேண்டும். நிலக்கரி, இயற்கை எரிவாயு போன்றவை மேற்கு நாடுகள் மட்டுமே பயன்படுத்துவதற்க்கான மூல வளங்கள் அல்ல. நாமும் பயன்படுத்தலாம்.
#8) ஏற்கனவே அமெரிக்க இந்தியாவை தனக்கு கீழ்படிய வைக்க 1963 அணு ஒப்பந்தத்தை வைத்து ப்ளாக்மெயில் செய்து மிரட்டியுள்ளது. இந்தியா அடிபணிய மறுத்த பொழுது தாராப்பூர் அணு உலையை கை கழுவி நமக்கு நஸ்டம் ஏற்படுத்தியுள்ளது. இன்னிலையில் 3 லட்சம் கோடி முதலீடு செய்து பிறகு நமது காலை வாரிவிட்டால் நமக்கு எந்த உத்திரவாதமும் இல்லை. மேலும் இதனை ஒட்டி போடப்படுகிற சர்வதேச ஒப்பந்தகளிலிருந்து நாம் எந்த காலத்திலும் விலக முடியாது. ஏனேனில் பிற சர்வதேச ஒப்பந்தங்களை 123 ஒப்பந்தம் கட்டுப்படுத்தாது.

இது வரை பார்த்துள்ள விசயங்கள் எல்லாமே இந்த ஒப்பந்தம் அணு சக்தி, தொழில்நுட்பம், யுரெனியம் சம்பந்தப்பட்டது என்பதை கருத்திக் கொண்டு ஆய்வு செய்தது. இதன் முடிவுகள் அணு ஒப்பந்தம் ஒரு மொள்ளமாறித்தனமான ஒப்பந்தம் என்பதைத்தான் தெளிவாகச் சொல்கின்றன. ஆனால் இன்னொரு பெரிய உண்மை இந்த ஒப்பந்தம் இந்தியாவை அமெரிக்காவின் அல்லக்கை தேசங்களில் ஒன்றாக மாற்றி அமெரிக்காவின் உலகாளாவிய ரவுடித்தனங்களுக்கு அடியாள் வேலை செய்ய இந்தியாவைச் சேர்த்துக் கொள்வதையே பிரதான நோக்கமாக கொண்டுள்ளது என்ற அம்சம். இது குறித்து அடுத்து பார்க்க இருக்கிறோம்.

அசுரன்

அயோத்தி : ராமருக்கா பாபருக்கா?


எளிமையாகச் சொல்வதானால், இது நிலத்துக்கான சண்டை. வட இந்தியாவில், ஒரு மூலையில் அமைந்திருக்கும் ஒரு துண்டு நிலம் யாருக்குச் சொந்தம்? ராமருக்கா பாபருக்கா? சபரிமலை, திருப்பதி தொடங்கி, தெருமுனை விநாயகர் கோயில் வரை, எங்கே தோண்டினாலும் சர்ச்சைகள் வெடிக்கும். இந்தக் கோயில் இருந்த இடத்தில் முன்னதாக என்ன இருந்தது? எதை இடித்து அல்லது எதை அழித்து, அல்லது எதை மறைத்து இங்கே ஒன்று புதிதாக கட்டமைக்கப்பட்டிருக்கிறது? இந்து மதக் கோயில்களுக்கு மட்டுமல்ல, பல இஸ்லாமிய, கிறிஸ்தவ வழிபாட்டு இடங்களின் பின்னாலும் இத்தகைய குழப்பங்கள் ஒளிந்துகொண்டிருக்கின்றன.

மசூதி. அதை இடித்து கோயில். அதை இடித்து தேவாலயம். அதை மாற்றி மீண்டும் ஒரு கோயில். இப்படி மாற்றியும், திருத்தியும், அழித்தும், மறைத்தும்தான் கடவுள்களுக்கான இருப்பிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. ஒவ்வொருமுறை மாற்றும்போதும், திருத்தும்போதும், அழிக்கும்போதும், இடிக்கும்போதும், தலைகள் உருண்டு விழுகின்றன. ரத்தம் சிந்தப்படுகிறது.

பாபர் மசூதி அமைந்திருந்த இடம், எங்களுக்குத்தான் சொந்தம் என்கிறது வக்ஃப் சன்னி மத்தியக் குழு. ராமர் பிறந்தது இங்கேதான், இது எங்கள் புண்ணிய பூமி என்கிறார்கள் பிஜேபி வகையரா இந்துத்துவவாதிகளால் இயக்கப்படும் இந்துக்கள். 1992 டிசம்பர் மாதம் ஈட்டியுடன் மசூதி மீது ஏறி நின்று இடித்த அதே இந்து தீவிரவாதிகள், தீர்ப்பு எப்படி வந்தாலும் அமைதியாக இருங்கள் என்று இன்று உபதேசம் செய்துகொண்டிருக்கிறார்கள்.

எந்த நிலையிலும் மசூதி தாக்கப்படாது என்று இந்திய அரசு அன்று உச்ச நீதிமன்றத்துக்கு கொடுத்த வாக்குறுதி காற்றில் பறக்கப்பட்டுவிட்டது. வரவிருக்கும் தீர்ப்பைச் சட்டப்படி மட்டுமே சந்திக்கவேண்டும், வன்முறை வேண்டாம் என்று அதே இந்திய அரசு இன்று அனைவருக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளது.

பாபர் படையெடுத்து வந்து இந்து கோயிலை இடித்தார் என்பதற்கு எப்படிப்பட்ட ஆதாரங்கள் இருக்கின்றன என்பது தெரியவில்லை. ஆனால், கரசேவகர்களை வழிநடத்திச் சென்று அத்வானி அண்ட் கோ மசூதியை இடித்ததற்கு கண்முன் சாட்சியங்கள் இருக்கின்றன. என்றாலும், அத்வானி செய்ததைக் காட்டிலும் பாபர் மிகப் பெரிய தீங்கு இழைத்துவிட்டார் என்பதாகப் பிரசாரங்கள் பரப்பப்பட்டு வருகின்றன. மசூதி இடிக்கப்பட்டதை இனிப்பு வழங்கி அத்வானி கொண்டாடியிருக்கிறார். ‘இங்கே கோயில்தான் கட்டப்படவேண்டும்!’ என்று மறுதினம் ஆணவமாகப் பேட்டியும் அளித்திருக்கிறார்.

உண்மையில், அத்வானி இஸ்லாமியர்களுக்கு மட்டுமல்ல, இந்துக்களுக்குமேகூட துரோகமே இழைத்திருக்கிறார் என்பதை இந்த தெஹல்கா பேட்டி வெளிப்படுத்துகிறது.

காமன்வெல்த் விளையாட்டுகள் நடைபெறப்போகும் சமயத்தில், அயோத்தி தீர்ப்பு வெளிவருவது பலருக்குச் சங்கடத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஏதாவது பிரச்னை வந்தால், வன்முறை வெடித்தால், உலகத்தின் பார்வையில் இந்தியாவின் பிம்பம் சிதறிவிடும் என்பது அவர்கள் கவலை. அசுத்தமான கழிப்பிட வசதிகள் குறித்த புகைப்படங்கள் பிரிட்டனில் வெளிவந்தபோது, பலர் இங்கே கூனிக்குறுகிப்போனார்கள். இந்திய அரசியல்வாதிகளால் இன்னும் நாம் என்னென்ன அவமானங்களைச் சந்திக்கப்போகிறோமோ என்று தி ஹிந்து எடிட்டோரியல் தன் கவலையைப் பகிர்ந்துகொண்டது. தீர்ப்பு எப்படி வந்தாலும், இந்தியர்கள் அமைதி காத்து நம் பிம்பத்தை உலக அரங்கில் உயர்த்திப் பிடிக்கவேண்டும் என்று பலர் கடிதம் எழுதினார்கள். இது இந்தியாவின் தன்மானம் சம்பந்தப்பட்ட பிரச்னை என்பதால்.

உத்தரப் பிரதேசம் (அயோத்தி) ராமரின் பிறப்பிடம் என்பதற்கு ஆதாரங்கள் எதுவும் இல்லை. ஆனால், வறுமையின் பிறப்பிடம் என்பதற்கு பலமான ஆதாரங்கள் உள்ளன. தங்குவதற்கு இடமின்றி மக்கள் அங்கே அவதிப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். நாற்பது சதவீதம் பேர் வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழ்வதாக அரசாங்க குறிப்பு சொல்கிறது. உண்மை எண்ணிக்கை, அதற்கும் மேலே. ஆனால், இதற்கும் இந்தியாவின் தன்மானத்துக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை.

உத்தரப் பிரதேசத்திலும் இந்தியாவின் பிற மாநிலங்களிலும் வாழும் லட்சக்கணக்கான மக்கள் பொது வழிச் சாலைகளையும் ரயில் தண்டவாளங்களையும் தங்கள் கழிப்பிடமாகப் பயன்படுத்தி வருகிறார்கள். சாலையோரங்களில் குளித்து, சாலையோரங்களில் பொங்கி, உண்டு, வாழ்ந்து, இறக்கிறார்கள். அதற்கு நாம் ஒன்றும் செய்வதற்கில்லை.

குஜராத் கலவரம் இந்தியாவின் அவமானமல்ல. அயோத்தி கலவரம் இந்தியாவின் அவமானமல்ல. குஜராத் கலவரத்துக்கும் மசூதி இடிப்புக்குக் காரணமானவர்கள் தண்டிக்கப்படாமல் இருப்பது இந்தியாவுக்கு அவமானத்தை ஏற்படுத்தவில்லை.

எது அவமானம்? காமன்வெல்த் விளையாட்டு ஏதாவதொரு காரணத்தால் தடைபட்டு விட்டால் அது அவமானம். அயல்நாட்டு வீரர்கள் டெல்லியைக் கண்டு முகம் சுளித்தால் அது அவமானம். அயோத்தி தீர்ப்பு வாசிக்கப்பட்டு அதன் மூலம் கலவரம் ஏற்பட்டு, அதன் மூலம் இந்தியாவின் புகழ் மங்கினால் அது அவமானம்.

தீர்ப்பையொட்டி பல்வேறு கட்சிகளில் இருந்தும் வரும் அமைதி அறிவிப்புகளுக்குப் பின்னாலுள்ள அரசியல் இதுதான். வன்முறை மீது மட்டுமே நம்பிக்கை வைத்துள்ளவர்கள், நீதி குறித்தும் அமைதி குறித்தும் கவலைப்படுவது விசித்திரமானது.

சங்க இலக்கியம் : தமிழர்களைப் பேசாத தமிழ் இலக்கியம் …


சங்க இலக்கியம் என்று வகைப்படுத்தப்படும் எட்டுத்தொகை மற்றும் பத்துப்பாட்டு ஆகிய பதினெட்டு நூல்களும், தமிழ் இலக்கியம் என்பதில் ஐயமில்லை. அவை தமிழ் மொழியில் எழுதப்பட்டுள்ளன. ஆனால் அவை ‘தமிழர் இலக்கியமா’ என்பது பற்றி விசாரிக்க வேண்டும் என்று தோன்றுகிறது. தொல்காப்பியப் பாயிரம் வரையறை செய்துள்ள வடவேங்கடம் தென்குமரி ஆகிய எல்லைகளுக்குள் இருந்ததான அக்காலத்துத் தமிழக மக்களாகிய தமிழர்கள் அனைவரையும் தழுவிய வாழ்க்கையை, வாழ்முறையை, வாழ்க்கைப் போராட்டங்களை, இன்ப துன்பங்களை, இலட்சியங்களை, அடைந்த முன்னேற்றங்கள் அல்லது தோல்விகளைச் சங்க இலக்கியங்கள் பதிவு செய்துள்ளனவா என்பது நம் முன்புள்ள ஒரு முக்கியக் கேள்வி. ஏனெனில், தமிழ் இலக்கியம் என்கிற முத்திரையைச் சுமந்துள்ள அப்பதினெட்டு நூல்களும் உள்ள படியே தமிழர் அனைவருக்கும் விசுவாசமாக இருந்துள்ளதா என்பதே நம்முன் வைக்கும் கேள்வியாகும்.

சங்கம் என்கிற அமைப்பின் தோற்ற காலமும், சங்க காலத்தின் மேல் சுமத்தப்பட்ட புனைவுகளும், சங்க காலம் என்பதன் கருத்தியல்களும் ஆராயப்பட வேண்டிய ஒன்று என்பதில் மறுப்பு இருக்க முடியாது. ஏனெனில் அச் சங்ககாலம் என்பதன் மேல் உருவாக்கப்பட்டிருக்கும் பரவசமும், உணர்ச்சிக் கொந்தளிப்புகளும் எப்போதும் ஆய்வுகளை வழிமறிக்கவே செய்து வந்திருக்கின்றன. தொல்காப்பியம் பத்து லட்சம் வருஷங்களுக்கு முன்பே எழுதப்பட்டுவிட்டது என்று புனைகிற அறிஞர்களை நம்மவர்கள் சந்தேகப்படவே மாட்டார்கள் என்பது உறுதி. நமக்குப் பரவசங்கள் இல்லை. தமிழை நாம் நேசிக்கிறோம். தமிழும் நம்மை நேசிக்கிறது. தமிழ் ஒரு செம்மொழி என்பதையோ, அது சமச்சீர் மொழி என்பதையோ வேறு யாரும் அங்கீகரிக்க வேண்டிய அவசியம் இல்லை. அது அப்படித்தான் பல காலமாக இருந்தது. இருக்கிறது. அதுகுறித்த பதற்றம் நமக்கு ஏற் படக் காரணம் இல்லை. இதைச் சில கோடி செலவு செய்து நமக்கு நாமே நிரூபித்துக் கொள்ள வேண்டிய தாழ்வு மனத்திலும் நாம் இல்லை. வேண்டியது, திறந்த மனதுடன் உண்மைகளைத் தேடி அடைவது ஒன்றே.

இனிவரும் பக்கங்களில் சங்க இலக்கியம் என்பது குறித்தும், சங்கம் குறித்தும், பாடியவர்கள், பாடப்பட்டோர் குறித்தும், சங்கத்துச் சமூகம் பற்றியும், சமூகப்படி நிலைகள் பற்றியும், உருவான ஏற்றத்தாழ்வு பற்றியும், கைக்கிளை பெருந்திணைகள் மேல் சுமத்தப்பட்டிருக்கும் புறக்கணிப்புகளின் காரணம் குறித்தும், தமிழர்களின் ஆதி சமயம் பற்றியும், வைதீகப் பிரவேசம் மாற்றியமைத்த அரசியல் குறித்தும், சமண பவுத்தப் படைப்புகளின் கட்டமைப்புகள் பற்றியும், நிலவுடைமையாளர்கள் ஆக்ரமிப்பு கிழார்கள் என்ற பெயரில் தமிழ்ச்சூழலில் ஏற்பட்ட விளைவுகள் பற்றியும், பரவசத் தீர்ப்புகளை முன்னிறுத்தாத உண்மை ஆய்வாளர்கள் கருத்து வழியாக நாம் காணப் போகிறோம். சங்க இலக்கியப் பாட்டுக்கள் எழுதப்பட்ட காலத்துக்கும் தொகுக்கப்பட்ட காலத்துக்கும் இடைப்பட்ட காலத்து அரசியலும், அந்த அரசியலுக்குக் காரணமான அக மற்றும் புறச் சக்திகள் பற்றியும் நாம் பேசலாம்.

தமிழ் வளர்ச்சிக் கட்டங்களில் திடுமென சங்க இலக்கியங்கள் ஆதி முதலில் தோன்றிவிடவில்லை. ஒரு மொழியின் வளர்ச்சிப் போக்கில் இன்ன பொருளுக்கு இன்ன சொற்கள் என்கிற கண்டுபிடிப்புகள் நிகழ்ந்து அவை ஒரு நிலைப்படவே பல நுறு ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கும். குழு வாழ்க்கை வாழ்ந்த தமிழர்கள் பல்வேறு நிலப்பகுதியிலும் பரவி வாழ்ந்திருக்கிறார்கள். மலைப்பகுதிகளில், மலை சார்ந்த காட்டுப் பகுதிகளில், சமதளப் பகுதிகளில், ஆறுகளின் அருகாமைப் பிரதேசங்களில், கடற்கரை ஓரங்களில் என்று அவர்கள் வாழ்க்கை அமைந்திருக்கிறது. சில ஆயிரம் ஆண்டுகளில், அவர்களின் குழு வாழ்க்கை அவர்களைக் காப்பாற்றும் புறச் சக்திகளாகக் கடவுள்களைக் கண்டிருக்கும். கடவுள்களை வழிபடும் சடங்குகள், சடங்குகள் சார்ந்த ஒலிக்குறிப்புகள் அவர்களுக்குத் தேவைப்பட்டிருக்கும். ஒலிக்குறிப்புகள் எப்போதும் நீளச் சொற்களாக இருக்க முடியாது. ஒற்றை ஒலி. இந்த ஒற்றை ஒலியே ஒற்றை எழுத்துச் சொல்லாகப் பிறகு வளர்ச்சியுற்றிருக்கிறது. தமிழில் நிலவும் ஓர் எழுத்து ஒரு மொழி என்கிற இலக்கணம் இதைத்தான் காட்டுகிறது. உதாரணத்துக்கு, ஆ. இதன் பொருள் அவர்களுக்கு நெருக்கமாக இருந்த பசு. மா என்றொரு இன்னும் ஒரு எழுத்து. இது முதலில் மாமரத்துக்கு ஆகி, பிறகு மொழி செம்மைப்பட்டபிறகு பெரிய என்ற பொருள் தரப்பட்டிருக்கிறது. கோ என்பது குழுத் தலைவனை, பிறகு அரசனை, பிறகு அவன் குழு இருந்த வீட்டுக்கு கோ+இல் = கோயில் அல்லது கோவில் ஆகி, அரசனும், கடவுளும் சமப்பட்டபோது கடவுளின் வீட்டுக்கும் (கோவில்) ஆகி வந்திருக்கிறது. தொல்காப்பியம் எல்லாச் சொல்லும் பொருள் குறித்தது என்கிறது. பொருள் குறியாத, அவை பொருளைக் குறித்தாலும் மன உணர்ச்சிகளைக் (அச்சம், கோபம்) குறித்தாலும் ஒரு ‘பொருளை’க் குறிக்கிறது என்பதை இலக்கணக்காரர்கள் ஏற்றுக் கொண்டார்கள். பொருள் குறியாத, பொருள் அற்ற சொற்களை உருவாக்கிக் கொள்ள ஆதி மனிதர்களுக்கு அவசியம் ஏற்படவில்லை. குழு வாழ்க்கை காலத்தில் ஒரு நாளில் ஒரு ஆணோ பெண்ணோ புழங்க ஏழெட்டு வார்த்தைகள் போதுமானவைகளாக இருந்தன. இந்தக் கணக்கே அதிகம்தான். குழுத் தலைவிகளின் செயலும், சைகையுமே குழுவை இயக்கப் போதும்தானே. தமிழ் மொழியின் – பெரும்பாலும் பழம்பெரு மொழிகளின் – ஆதாரச் சொற்கள் ஒற்றை எழுத்துக்கள், அதிகம் போனால் இரண்டு மூன்று எழுத்துக்கள் கொண்டதாகவே இருக்கின்றன. தீ, நீர், மழை, பனி, குளிர் போன்றவை அவை.

வாழ்க்கை அனுபவம் பெருகப் பெருக வார்த்தைகளின் கிடங்குகள் அடர்த்தி பெறுகின்றன. அனுபவத்தை வெளிப்படுத்தும் உணர்வெழுச்சி, கலை இலக்கியங்களின் மூலாதாரம் செயல்படத் தொடங்குகிறது. தன் வசிப்பிடத்தில், குகைகளில், பாறைகளில் செடிகளின் சாறு முதலானவை கொண்டு ஓவியமும் அதன் கீழ் எழுத்துக்களும் பொறிக்கத் தொடங்குகிறார்கள் ஆதித் தமிழர்கள். வேட்டை அனுபவம் மீண்டும் குழுக்களுக்கு முன் நிகழ்த்திக் காட்டப்படுகிறது. நாடகம் பிறக்கிறது. தன்னைச் சுற்றியுள்ள ஓசைகளின் எதிரொலியாகவோ போலச் செய்தோ மொழிகளை (சொற்களை) உருவாக்கிய பிறகு, சொற்களால் ஆன சொற்பிரயோகம் பிறக்கிறது. மிகக் குறைந்த சொற்களைக் கொண்ட குழுக்கூட்டம், ஆதிப்பாடல்களை, பாடல்கள் என்று நாம் அழைக்கிற ஆதி இலக்கியத்தைத் தங்கள் சடங்குகளோடும், சடங்குகள் அற்றும் தமக்குள் பரிமாறிக் கொள்கின்றன. பின்னால் சமூகமாக அமைந்த கிராம வாழ்க்கையிலும் இப்பழக்கம் தொடர்கிறது. கலையும் இலக்கியமும் இயல்பாகவே தோன்றித் தலை முறைதோறும் செழிக்கிறது. நாட்டுப்பாடல்களில் இதன் ஒரு முகத்தைக் காணலாம்.

ஆறு நல்ல ஆறு /அழகான காவேரி/ஆத்தோரம்
அரண்மனைக்கு/அதிகாரி உன் மாமன் – என்று

தாலாட்டைக் கேட்டு வளர்ந்த குழந்தை வளர்ந்து திருமணமாகி மதுரைப்பக்கம் வருகிறாள். அவள் தன் குழந்தையை இப்படித் தாலாட்டுகிறாள். வையைத் தண்ணிக்கு/ வாயூறும்/ சர்க்கரைக்கு/மாந்தோப்பு அரண்மனைக்கு/ மகராசன் உன் மாமன் என்று பாடுகிறாள். தஞ்சைப்பாட்டும், முன்னரே இங்கிருந்த மதுரைப்பாட்டும் பிணைந்து புதுப்பாட்டு உருவாகிறது. இதுவே மொழிவளர்ச்சி. பாட்டு வளர்ச்சி. பாட்டுக்குப் படிப்பு, ஆறாவது விரல். அவனுக்கு மோனை தெரியாது. எதுகை புரியாது. ஆனால், வவுக்கு ம-பிரதியாக, சமமாக வரலாம் என்று இலக்கணக்காரர்கள் பின்னால் இலக்கணம் எழுதிக் கொள்கிறார். இலக்கியம் எள். இலக் கணம் எண்ணெய். தொல்காப்பியருக்கும் பவணந்திக்கும் வாத்தியாரிச்சி, அந்த தஞ்சையில் பிறந்து மதுரையில் வாழ்க்கைப்பட்ட அந்தப் பெண்மணிதான். மனிதர்க்கு இதயம் இடப்பக்கம். கற்பனை வலப்பக்கம்.

தமிழின் முதல் தலைமுறை இலக்கியம் இதுதான். சங்க இலக்கியத்துக்கு மூத்த முதல் தலைமுறை இலக்கியம் இதுதான். இங்கிருந்து தான் செம்மொழி பிறக்கிறது. தமிழின் அடுத்த தலைமுறை இலக்கியத்தைத் தாங்கி வளர்த்தவர்கள் பாணர்கள். பாணன், பாணினி என்றும் நிகழ்த்துக் கலையின்போது விறலிகள் என்றும் கூத்தர் என்றும் அறியப்பட்ட இலக்கியமும் இசையும் நிகழ்த்துக் கலையும் தங்கள் வாழ்வாதாரங்களாகக் கொண்ட கலைஞர்களே ஆவர்.

பண் இசைத்துப் பாடுவதால், பண்ணுக்கு ஏற்ற பாடல்களை எழுதுவதால் அவர்கள் பாணர்கள் எனப்பட்டார்கள். இவர்கள் பாட்டு அறிந்தவர்கள், கற்பனையும் கவித்துவமும் கொண்டவர்கள் என்றாலும், இவர்கள் அனைவருக்கும் எழுத வரும் என்பது சந்தேகிக்கப்பட வேண்டிய விஷயமாகவே இருக்கிறது. சமீப காலம் வரையிலும், பல கூத்து, நாடகக் கலைஞர்களுக்கு, நிகழ்த்துக் கலைஞர்களுக்கு எழுதப் படிக்க வராது. அது அவர்களுக்குப் பிரச்சினையாக இல்லை. கேள்வி அறிவு போதும்.’ ‘கற்றிலன் ஆயினும் கேட்க’ என்கிற வள்ளுவரின் வரி இதைத் தெளிவுறுத்தும்.

பாணர்கள் பற்றிச் சங்க இலக்கியம் பரக்கப் பேசுகிறது. பல ஆற்றுப்படை நூல்கள் அவர்கள் பற்றியது. என்றாலும் தொ.பரமசிவம் சொல்கிறபடி பாணர் எழுதியதாக ஒரு சங்க இலக்கியப் பாடலும் இப்போது இல்லை (அல்லது தொகுக்கப்படவில்லை). அவர்கள் பாடியதாக இருக்கக்கூடும் என்று நம்பப்படுகிற பாடல்கள் சிலவற்றை அடையாளப்படுத்துகிறார் தொ.பரமசிவம். அதைப் பிறகு காண்போம். அதற்கும் முன்னர் பாணர்கள் சமூகச் சிறப்புடன் வாழ்ந்தமையும், பிறகு வீழ்ச்சியுற்றதையும், அதன் காரணத்தையும் பார்க்கலாம்.

மன்னர்களோடு அல்லது அதிகார மையத்தோடு நெருக்கம் கொண்டாடி இருக்கிறார்கள் பாணர்கள். மன்னர்கள், பாணர்களை இசைத் தொழிலாளிகளாகவும், சுற்றமாகவும், நட்பாகவும் ஏற்றுக் கொண்டாடி இருக்கிறார்கள். சோழன் கரிகாலன் பெருவளத்தான், பாணனுக்குப் பொன்னால் ஆகிய தாமரைப் பூவைப் பரிசாக அளித்திருக்கிறான் என்று பொருநர் ஆற்றுப்படை சொல்கிறது. விறலியர்களுக்கு பொன்நகைகளையும் அவன் கொடுத்து இருக்கிறான். பொன்னால் ஆகிய தாமரைப்பூவை பாணனது கரிய அடர்ந்த தலைமுடியில் சூட்டுவித்து பொன்னால் ஆகிய முத்துமாலையை விறலியர் ஆடவும் நன்னன் கொடுத்ததாக மலை படுகடாம் என்கிற ஆற்றுப்படை நூல் கூறுகிறது. திண்டிவனத்துக்குப் பக்கத்தில் இருக்கும் கிடங்கில் எனும் ஊரில் இருந்து ஆண்ட நல்லியக் கோடர் பாணர் மீது மிகுந்த நேசம் கொண்டவர். பாணர்கள், விறலிகள் அவனைக் காணச் சென்றால், அவன் முதலில் அவர்கள் அணிந்திருக்கும் அழுக்குத் துணிகளை, மூங்கிலின் உட்பட்டையைப் போல் வெள்ளையாகச் சுத்தமாக இருக்கும் துணிகளைக் கொடுத்து மாற்றுவான். ‘பாம்புக் கடி’ போல போதை ஏறும் கள்ளைக் கொடுத்துக் குடிக்கச் சொல்வான். பீமபாகம் போலச் சுவையான பல சுவைகளை உடைய உணவைப் பொன்தட்டில் வைத்துச் சாப்பிடுங்கள் என்று அன்புடன் சொல்வான். தன் பகைவர்களைவென்று அவர்கள் திரைப் பொருள்களாகச் செலுத்திய பொருளை ஏராளமாகத் தருவான். பல பரிசுகளையும் வாரி வழங்குவான். மிக வலிமையான தேரையும், காளை மாட்டையும் யானைகளையும் கொடுத்து அனுப்புவான் என்கிறது சிறுபாணாற்றுப்படை.

காஞ்சியை ஆண்ட திரையன் பாணர்களுக்கு பாலாவியைப் போல வெண்மையும், மென்மையும் கொண்ட ஆடைகளைத் தருவான். பிறகு இறைச்சிகள் பலவற்றோடு கூடிய அரிசிச்சாதம் தருவாள். தேனைத் தோற்கடிக்கும் உணவு வகைகளைத் தருவான். பொன்னால் ஆன நகைகளைப் பாணர்களுக்கும் பாடினிகளுக்கும் தருவான். மேலும், வெள்ளி போன்ற வெள்ளைக் குதிரைகள் பூட்டிய குதிரையுடன் சேர்ந்த தேர்களைத் தருவான் என்கிறது பெரும் பாணாற்றுப்படை.

ஒரு பாணன் சொல்கிறான், “அரசன் போட்ட கறிச் சோற்றைத் தின்று தின்று பல்லே குறைந்துவிட்டது.”

இப்படிப்பட்ட வரவேற்புகளும், மரியாதைகளும் கொண்ட பாணர்கள் இரண்டு மூன்று நூற்றாண்டுகளில் வீழ்ச்சி பெற்றுவிட்டார்கள்.

பாணர்களின் அடைமொழியே பசி என்றாகிவிட்டது. பாணன் என்றால் எப்போதும் பசித்தே கிடப்பவன் என்று சங்க இலக்கியமே சொல்கிறது. இறைச்சியைமென்று மென்று பல்லே தேய்ந்த பாணனுக்குப் பசிக்குச் சோறில்லை. அவன் இசைக்கும் தமிழுக்கும் மரியாதை குறைந்துவிட்டது. நியாயமாக பாணர்கள் தங்கள் கலைகளை மக்களிடம் கொண்டு சென்று இருக்கலாம். அதிகார வர்க்கத்தைச் சொறிந்து கொடுக்க அவர்கள் தமிழைப் பயன்படுத்தாமல், மக்கள் கலைஞராக மரியாதை பெற்றிருக்கலாம். ஏனோ அது நிகழவில்லை.

தோயன் மாறன் என்கிற நிலவுடமையாளராகிய கிழாரை, மாடவள் மதுரைக் குமரனார், ‘அவன் பாணர் பசிப் பகைஞன்’ என்று பாராட்டுகிறார், புறநானூறு 180 ஆம் பாட்டில் பாணர்களின் பசியை பூஜிப்பவர், பசிப்பிணி மருத்துவன் என்று பாராட்டப் பெறுகிறான். குறுநில மன்னரைத் தேடிச் சென்ற பாணன் ஏமாந்தான். ஆக, அவனைத் தன் ஏழைக் குடிசையில் தங்கச் சொல்லி ஒரு சம்சாரி அழைக்கும் பாடல் (புறம் 319) முக்கியமானது. பாணர் பசி வாழ்க்கையை மக்கள் அறிவார்கள் என்கிறது இப்பாடல். மக்கள் அவர்களுக்குச் சோறு போடவும் முன் வந்திருக்கிறார்கள். ‘என் வீட்டில் சுட்ட முயல்கறி இருக்கும். அதை உனக்குத் தருகிறேன்’ என்கிறார் அவர்.

மன்னர்களோடு உறவு பூண்டு, பரிசில் வாழ்க்கை வாழ்ந்த பாணர் சமூகம், இறந்தார் சடங்கு நடக்கும்போது பிணத்தின் பக்கம் நின்று பாடத் தொடங்குகிறது. வசதி படைத்த தலைமக்களின் காதலிகளுக்குத் தூது போகிறது. பாணிச்சிகளும் இதே போன்ற தொழிலைச் செய்யும்படி ஆகிறது.

இதுபற்றிச் சில பாடல்களோடு விசாரணை செய்வோம். இந்தப் பாணச் சமூகத்தின் கல்லறைகள் மேல்தான் புலமைச் சமூகம் சங்க இலக்கியமாகக் கட்டமைக்கப்படுகிறது. பாணர்களின் பாடல்களை மிக விழிப்பாகத் தவிர்த்து விட்டது.

நாட்டுப்புறக் கிராமச் சமூகமாக வளர்ச்சியடைந்த அல்லது மாற்றம் அடைந்த குழுச் சமூகம், பின்னர் பாணச் சமூகம், அதன்பிறகு மூன்றாம் தலைமுறையாக வளர்ந்த புலமைச் சமூகம் சங்க இலக்கியத்தைக் கையில் எடுத்துக் கொள்கிறது. சிவத்தம்பி, தொ.பரமசிவம் முதலான பல அறிஞர்களின் கருத்து வழி இதன் காரணத்தைத் தொடர்ந்து பேசுவோம். இந்தச் சமூகம் சார்ந்த, சமூக மாற்றம் நிகழ்ந்த நிகழ்ச்சிப் போக்குகளை அறியாமல், சங்க இலக்கியங்களில் உள்ளடக்கத்தின் அசல் முகத்தைக் காணமுடியாது.

கசியும் இந்துத்துவம் …


இந்திய தேசத்தின் நிழல் கருமையாய் இருப்பதை காவியாய் மாற்ற நூற்றாண்டுகளாக இந்துத்துவ சக்திகள் முயன்றுகொண்டே இருக்கின்றனர். இந்தியாவை இந்துக் களின் நாடாக மாற்ற அவர்கள் செய்யும் கலவரங்களும், படுகொலைகளும் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. அவர்கள் செய்யும் நேரடிக் கலவரங்கள் உடனடியாக மதச்சார்பற்ற சக்திகளால் கண்டிக்கப்படுகிறது. எதிர் வினையாற்றப்படுகிறது. ஆனால் இந்திய ஆளும் அதிகார வர்க்கத்தில் அவர்கள் ஊடுருவி சட்டப்பூர்வமாய், நீதியின் பெயரால், அதிகாரத்தின் பெயரால், அறத்தின் பெயரால் செய்யும் கொலைகளும் தவறுகளும் வெளியில் தெரிவ தில்லை. இது காவி அதிகாரிகள் மீதான விசாரணைக் காலம். அதிகார அடுக்குகளில் மறைந்து நின்று பல்லிளிக் கும் இந்துத்துவம் குஜராத் துவங்கி கோவை வரை நடத்திய அராஜகத்தின் அம்பல காலம் இது.

“குற்ற எண்ணிக்கையின் அடிப்படையில் ஒப்பிடும் போது இந்தியாவில் செயல்படும் குற்றவாளிக் கும்பல் களில் எதுவும் நிறுவனப்படுத்தப்பட்ட குற்றவாளிக் கும்பலாகிய இந்திய போலிசின் அருகே கூட நெருங்க இயலாது. ரொம்பவும் பொறுப் புணர்வுடன் இதை நான் சொல்கிறேன்” இது அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி ஏ.என்.முல்லா அவர்கள் உத்தரப் பிரதேசத்திலுள்ள ஷாகாபாத் காவல்துறையினர் குறித்த தீர்ப்பில் 1961 ஆம் ஆண்டு குறிப்பிட்ட வாசகங்களாகும். இந்தத் தீர்ப்பை பார்த்து அதிர்ந்த உத்தரப்பிரதேச அரசு காவல்துறையில் நல்லவர்களும் இருக்கிறார்கள் அவர்கள் பொருட்டாவது இந்த தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று மேல்முறையீடு செய்தது. இந்த முறை யீட்டை தள்ளுபடி செய்த நீதியரசர் முல்லா கூறினார் “ஒரு கூடை நாறிய மீன்களில் நல்லமீனை தேடும் முட் டாள் நானல்ல” என்றார்*. பாவம் இன்றைய காவல் துறையின் வளர்ச்சியை அறியாதவர். நீதியரசர் இன்று தீர்ப்பளித்திருந்தால் “நல்ல மீன்களே இல்லாத நாறிய கூடையில் நல்ல மீனை தேடச் சொல்லாதே” என்று கோபப்பட்டிருப்பார்.

இந்தியாவில் மனித உரிமை மீறல்கள் சம்பந்தமான புகார்களில் 60 சதம் காவல்துறையின் மனித உரிமை மீறல்கள்தான் பதிவாகிறது. பதிவானவைகள்தான் 60 சதம் பதிவாகாமல் இன்னும் எத்தனையோ? காவல் நிலையக் கொலைகள், கடுமையான சித்திரவதைகள், பாலியல் கொடூரங்கள், மூன்றாம்தர சித்திரவதைகள், என்கவுண்டர் கொலைகள் என பட்டியல் நீண்டுகொண்டே இருக்கிறது. அதைவிட மிகப்பெரிய அவலம் குஜராத்தில் தங்களது பதவி உயர்வுக்காக இஸ்லாமிய மக்களை போலி என் கவுண்டரில் படுகொலை செய்வது அதிகரித்துக்கொண்டே இருப்பது.

யாருக்காக? எதற்காக?

கடந்த 2010 ஜூலை மாதம் 22 ஆம் தேதி சி.பி.ஐ அதிகாரிகளால் ஒரு முன்னாள் அமைச்சர் வீட்டின் கதவில் விசாரணை சம்மன் ஒட்டப்பட்டது. அந்த அமைச்சரின் வீட்டுக் கதவில் அது ஒட்டப்பட்ட காரணம் அதை அவர் வாங்காததுதான். அந்த அமைச்சர் அமித் ஷா. குஜராத்தின் நரேந்திர மோடி அரசின் உள்துறை இணை அமைச்சராக இருந்தவர். மத்திய புலனாய்வுத் துறையால் கைது செய் யப்பட்ட இவர் சபர்மதி சிறையில் அடைக்கப்பட்டு 3 நாள் விசாரனை செய்யப்பட்டார். இவர்மீது மத்திய புலனாய்வுத் துறை விசாரணை செய்யும் காரணத்தை அறிய 2005 நவம்பர் 26 தேதியில் நடந்த சம்பவத்தை முதலில் தெரிந்துகொள்ள வேண்டும். அன்றைய தினம் சொராபுதின் ஷேக் மற்றும் அவர் மனைவி கௌசர் பீ ஆகியோர் அன் றையதினம் ஆந்திரப் பிரதேச அரசு வாகனத்தில் மகா ராஷ்ட்ராவில் குஜராத் காவல்துறையால் விசாரணை என்ற பெயரில் கடத்தப்படுகின்றனர். இருவரும் பிணங்களாக அடையாளம் காணப்பட்டனர். அவர்கள் இஸ்லாமிய தீவிரவாதிகள் என முத்திரை குத்தப்பட்டனர்.

அந்த என்கவுண்டர் கொலையை பார்த்த ஒரே சட்சி துள்சி பிரஜாபதி அவரும் மார்ச் 2006 ஆம் ஆண்டு என்கவுண்டரில் காவல்துறையால் படுகொலை செய்யப்படுகிறார். சொராபுதின் ஷேக் மரணத்திற்கு நீதி கேட்டு, சொராபுதின் ஷேக் தீவிரவாதி அல்ல என சொல்லி அவரது அண்ணன் ரபாபுதின் உச்சநீதிமன்றத்தின் கதவுகளை தட்டுகிறார். உச்சநீதி மன்றம் மத்திய புலனாய்வுத் துறையை இவ் வழக்கை விசாரணை செய்யச்சொல்லி பணிக்கிறது. மத்திய புலனாய்வுத்துறை இந்த என்கவுண்டர் கொலைகள் திட்டமிட்ட கொலை என்றும் இதில் அந்த மாநில முன்னாள் உள்துறை துணை அமைச்சர் சம்பந்தபட்டிருக்கிறார் என அவரை கைது செய்தது. மற்றொரு சம்பவம்.

2004 ஜூன் 15 இஸ்ரத் ஜஹன், ஜாவீத் ஷேக், சீஷன் ஜோஹர், அம்ஜத் அலி ரானா ஆகிய நண்பர்கள் அகமதாபாத் அருகில் உள்ள நரோடாவில் காரில் பயணம் செய்யும் போது குஜராத் காவல்துறையால் என் கவுண்டரில் படுகொலை செய்யப்பட்டனர். அவர்களுக்கு லஷ்கர்இதொய்பா என்ற தீவிரவாத இயக்கத்துடன் தொடர்பு இருப்பதாக காவல்துறை திரைக்கதை எழுதியது.

ஆனால் இதுவும் போலி என்கவுண்டர் கொலைகள் என மத்திய புலனாய்வு அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இதற்கு கொல்லப்பட்ட இளம் பெண் இஸ்ரத்தின் தாயார் ஷமீமா நீதிமன்றத்தின் கதவை தட்டியதுதான் காரண மாகும். இப்படி குஜராத்தில் கடந்த சில ஆண்டுகளில் 34 என்கவுண்டர் கொலைகள் நடந்துள்ளது. இவைகள் ஒவ் வொன்றையும் விசாரித்தால்தான் இன்னும் உண்மைகள் வெளிவரும். இந்தப் படுகொலைகள் நடந்திட காரணம், ஆட்சியில் உள்ள இந்துத்துவ மதவெறியர்கள் மத்தியில் தங்களது பராக்கிரமங்களைக் காட்டி பதவி உயர்வு பெறத் துடிக்கும் அதிகார வர்க்கத்தின் பதவி வெறியாகும். மற் றொன்று இஸ்லாமிய தீவிரவாதம் என்ற பூதத்தை காட்டி இந்துத்துவ வெறியை முடிந்த அளவு மக்கள் மனங்களில் விதைப்பது. இந்த மதவெறிதான் ஆர்.எஸ்.எஸ் காணும் அகண்டபாரதம் என்பதை உருவாக்கும் என நினைக் கின்றனர். பாட்னா, அஜ்மீர், கான்பூர், மலேகாவ், தானே, கோவா, நாந்தட், ஹைதராபாத் அகிய இடங்களில் இந்து மதவெறியர்கள் வைத்த வெடிகுண்டுகள் குறித்த விசா ரணை ஒவ்வொன்றாக வெளிவந்துகொண்டிருக்கும் சூழலில் அவர்கள் அம்பலப்பட்டு நிற்கும் நிலை உருவாகி உள்ளது. இஸ்லாமிய தீவிரவாதம் என்ற பூதம் குஜராத்தில் மட்டுமல்ல தமிழகத்திலும் பயன்படுத்தப்பட்டு அப்பாவி இஸ்லாமிய இளைஞர்கள் பழிவாங்கப்பட்டதும் நடந்தது.

குஜராத் வடிவம் மாறி கோவையில்…

2006 ஜூலை மாதம் கோவையில் வெடி குண்டுகளுடன் தீவிரவாதிகள் கைது, தொடர் குண்டு வெடிப்பு நடத்தி தமிழகத்தில் நாசவேலைக்கு சதி, கோவையை அடுத்து சேலத்துக்கும் ஆபத்து, போலிஸ் அலுவலகங்களை தகர்க்க சதி என்று பத்திரிகைகள் கொட்டை எழுத்துகளில் செய்திகளை வெளியிட்டன.1998 பிப்ரவரி 14ஆம் தேதி நடந்த கொடூர குண்டு வெடிப்பு சம்பவத்தின் ரணங்கள் இன்னும் மக்கள் மனங்களில் இருந்ததால் மக்கள் அதிர்ந்து போனார்கள். மேலும் நமது ஊடகங்கள் தங்கள் வசதிக்கும் கற்பனைக்கும் தகுந்தவாறு செய்திகளை முந்தித்தந்தனர். இந்து தலைவர்களை தீர்த்துக்கட்ட சதி, கோவையில் கைதான தீவிரவாதிக்கு கேரள குண்டு வெடிப்பில் தொடர்பு, மும்பை தீவிரவாதிகளுடன் தொடர்பு, என்று அடுத்த நாளும் தொடர்ந்தது. ஒசாமா பின்லேடன் கோவை வந்து தீவிரவாதிகளுக்கு திட்டம் தீட்டி தந்தார் என்று மட்டும்தான் எழுதவில்லை. நீண்ட தாடி, தலப்பாக்கட்டுடன் யாரும் கண்ணில் தட்டுப்படாத காரணத்தால் இதை எழுதவில்லை போலும்.

தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டதால் சதி அனைத்தும் முறியடிக்கப்பட்டது என்று ஊடகங்கள் கூறி முடித்தன. என்ன நடந்தது? 2006 ஜூலை 22 அன்று நள்ளிரவில் ஹாரூன் பாஷா, மாலிக் பாஷா, அதீக்குர் ரஹ்மான் (எ) போலேசங்கர், ரவி (எ) திப்புசுல்தான், சம்சுதீன் உள்ளிட்ட ஐந்து பேரை கோவை போலிசார் கைது செய்தனர். பைப் குண்டுகள், மேப்புகள் கைப்பற்றப்பட்டன. சதியை திறமை யாக முறியடித்த உளவுத்துறை உதவி ஆணையர் ரத்தின சபாபதி, போத்தனூர் பி13 இன்ஸ்பெக்டர் பால்ராஜ் ஆகியோருக்கு கமிஷனர் கரண் சின்கா பாராட்டு.

அப்போது தமிழகத்தின் அனைத்து செய்திகளும் பின்னுக்குப் போய் மீடியாக்களில் இந்த வெடிகுண்டு குறித்த விவாதங்களே ஆக்கிரமித்திருந்தது. ஆனால் காவல்துறையினர் தயாரித்த கதையில் ஆங்காங்கு ஓட்டை இருந்ததால், காவல்துறையின் நடவடிக்கையில் சந்தேகம் கொண்ட பத்திரிகைகள் மறுபக்கத்தை தேட ஆரம்பித்தன. சில தகவல்களைத் திரட்டின. ஆனாலும் சதியின் முழுபரிமாணத்தையும் அவர்களால் காணமுடியவில்லை. அதே நேரத்தில் கைதான ஹாருன் பாஷா குறித்து இருந்த நன்மதிப்பு முறையான நீதிவேண்டும் என கோவை முஸ்லிம் ஐக்கிய ஜமா அத் உள்ளிட்ட பல இஸ்லாமிய அமைப்புகள் களம் இறங்கிவிட்டது.

கமிஷனர் உள்ளிட்ட உயரதிகாரிகளிடமும் முறை யிட்டன. அதிகார வர்க்கத்திற்கு மனு போட்டனர். எதிர்ப்புக் குரல் வலுக்கவே, முதலில் உதவிகமிஷனர் நிஜாமுதீன் தலைமையில் விசாரணை நடந்தது. சில சந்தேகங்களை எழுப்பியதோடு விடை காணாமலே அவரும் விடைபெற் றார். வழக்கு சிபிசிஐடியின் வசம் போனது. அதன் சிறப்புப் புலனாய்வுக்குழு தலைவராக ஆர்.பாலன் களமிறங்கினார். ஏறத்தாழ 15 மாதகாலம் கடுமையான விசாரணையை மேற்கொண்டார். நிதானமாக உண்மைகளை உறுதி செய்துகொண்டார். அவர் எடுத்திருக்கும் வழக்கு மிகவும் நுட்பம் வாய்ந்தது மட்டுமல்ல, தேசபாதுகாப்போடு சம்பந்தபட்டது. எனவே அறிவியல் பூர்வமான தரவுகளையும் சேமித்துக்கொண்டார். அவரது விசாரணையின் துவக் கத்திலேயே தமிழக காவல்துறையின் கேவலமான வன்மம் மிகுந்த அணுகுமுறை தெரிந்தது. இருப்பினும் நீண்ட விசாரணைக்குப் பின் தன்னுடைய இறுதி அறிக்கையில், கீழ்வருமாறு எழுதி முடித்தார் “பி13 போத்தனூர் காவல் நிலையத்தில் குற்ற எண் 1067/2006 இல் இந்திய தண் டனை சட்டப்பிரிவு 120 (பி) 2/இ வெடிபொருட்கள் சட்டம் 1908, பிரிவு5இன் கீழ் பதிவு செய்யப்பட்ட முதல் தகவலறிக்கை மற்றும் வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்ட தாகச் சொல்லப்பட்டு, அதற்காக தயாரிக்கப்பட்ட கைப் பற்றல் மகஜர்கள் அனைத்தும் ஜோடிக்கப்பட்டவை, பொய் யானவை என்று என்னுடைய விசாரணையில் தெரிய வந்தது. மேலும் என்னால் பதிவு செய்யப்பட்ட சாட்சி யங்களும், வாக்குமூலங்களும் மேற் கூறப்பட்ட தகவல் களை அறுதியிட்டு உறுதிப்படுத்துகின்றன. எனவே, இது பொய் வழக்கு என்று கூறி இவ்வழக்கை நான் முடிக்கிறேன்.’’

அவர் நீதிமன்றத்திற்கு சமர்ப்பித்த அறிக்கையில் மேலும் கூறுகிறார் “காவல்துறை அதிகாரிகளைத் தவிர, மற்ற சாட்சிகளிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கிடைத்த அனைத்து சாட்சியங்களும், மேற்படி வழக்கும் முற்றிலும் பொய்யாக புனையப்பட்ட வழக்கு என்பதையும், மேலும் இந்த வழக்கில் கூறப்பட்டதைப் போல வெடிகுண்டுகள் ஏதும் கைப்பற்றப்படவில்லை என்பதையும் உறுதிப்படுத்தும் விதமாக உண்மைகள் வெளிவந்துள்ளது” என்று கூறு கிறார். அதாவது காவல் துறையினர் தீவிரவாதிகள் என்று கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து வெடிகுண்டு கைப் பற்றப்படவில்லை. அப்படியாயின் ஏது அந்த வெடி குண்டு? யார் செய்தது? யார் போலிஸ் வசம் கொடுத்தது? வெடிகுண்டு செய்பவர்களோடு காவல்துறைக்கு உறவா? அல்லது அவர்களே வெடிகுண்டுகளை செய்தார்களா? தமிழக அரசாங்கம் விசாரித்ததா? விசாரிக்க வேண் டாமா? உண்மை வெளிவந்துவிட்டதால் வெடிகுண்டே இல்லை என்று கூறுவார்களா? அப்படியெனில் வெடி குண்டு வழக்கு ஏன் புனையப்பட்டது?

அடுத்து காவல்துறையினர் எப்படி திருட்டுத்தனமாக நடந்துக்கொண்டனர் என்பதற்கு அசைக்க முடியாத அத்தாட்சியை தருகிறார். குற்றம்சாட்டபட்டு கைது செய் யப்பட்ட 5 நபர்களின் வீட்டுக்கும் ஆய்வாளர் பால்ராஜ் என்பவர் தன்னுடன் ஒரு உதவி ஆய்வாளர், எட்டு தலைமைக் காவலர்கள், ஒரு காவலர், ஒரு கிராம நிர்வாக அலுவலர், ஒரு வருவாய் அலுவலருடன் சென்று கைது செய்ததாக முதல் தகவல் அறிக்கையில் குறிப் பிட்டுள்ளார். ஆனால் அவை அனைத்தும் பொய்யானவை யாகும். எப்படி கண்டுபிடிக்கப்பட்டது தெரியுமா. இவர்கள் அனைவரும் சென்று கைது செய்யப்பட்டதாக கூறும் நேரத்தில் காவல்நிலையங்களில் நடக்கும் வருகைப் பதிவு நிகழ்வில் (ரோல் கால்) போத்தனூர் மற்றும் குனியமுத்தூர் காவல் நிலையங்களில் கலந்துகொண்டதாக காவல் நிலைய பொது நாட்குறிப்பில் பதியப்பட்டுள்ளது. ஆக இவர்கள் கைது செய்யச்சென்றது பொய்யாக இருக்க வேண்டும். அல்லது காவல் நிலையத்தில் பொய்யாக எழுதி இருக்க வேண்டும். இரண்டும் உண்மையாக இருக்க முடியாது. இது அப்பட்டமான விதிமீறல். அதே போல கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வருவாய் அலுவலருடன் சென்றதாகச் சொன்னதும் பொய்யானதுதான். இதை விசாரணையில் அவர்களே ஒப்புக்கொள்கின்றனர். இன்னும் நிறைய விபரங்கள் காவல்துறையை அம்பலப்படுத்துகிறது அந்த அறிக்கை.

யார் குற்றவாளிகள்…

பொய்வழக்கு புனையப்பட்டு சிறைக்குள் அடைக்கப்பட்ட அந்த இளைஞர்களின் வாழ்க்கையில் அந்த நேரத்தில் அடைந்த துன்பத்தை வார்த்தைகளால் வடிக்க முடியாது. ஒரு மாதகால சிறைவாசம், விசாரணையில் பட்ட மன உலைச்சல். அந்த ஐந்து குடும்பங்களும் அடைந்த வேதனை. சமூகத்தில் பட்ட அவமானங்கள். குண்டு மீண்டும் வெடிக்குமோ என்ற பீதி. அதனால் அதிர்ந்து போன அப்பாவி மக்கள். இதற்கெல்லாம் என்ன நடவடிக்கை? இந்த காயத்திற்கு மருந்திடுவது யார்? சி.பி. சி.ஐ.டி அறிக்கை அளித்து இரண்டு மூன்று ஆண்டுகளாகியும் பொய்யான குற்றச்சாட்டு புனைந்து பீதியை உண்டாக்கிய போலீஸ் அதிகாரிகள் மீது எந்த நடவடிக்கையும் இல்லை. எந்த தண்டனையுமின்றி வெடிகுண்டு தயாரிப்பாளர் ரத்தினசபாபதி அதே கோவையில் மது விலக்கு பிரிவு கூடுதல் கண்காணிப்பாளராக தொடர்கிறார்.

இந்த சம்பவம் நடந்தது கலைஞர் ஆட்சியில்தான். காவல் துறையின் மீது குற்றம்சாட்டப்பட்டதும் அவர் ஆட்சியில் தான். சிறுபான்மையினர் நலன் காப்பதாக தம்பட்டம் அடித்துக்கொள்ளும் கலைஞர் இதுவரை மவுனம் சாதிப் பது எதனால். மைனாரிட்டி திமுக என அதிமுக தலைவி பேசியதை பார்த்து கொதித்தெழுந்து கோவையில் பேசிய முதல்வர் “ஆமாம் நாங்கள் மைனாரிட்டிதான் அதாவது மைனாரிட்டியை ஆதரிக்கும் மைனாரிட்டிகளின் ஆட்சி” என்று வார்த்தை ஜாலங்களை வீசுகிறார். வார்த்தைகளை அடுக்கி விளையாடும் எளிதான காரியமல்ல இது. குஜராத்தைப் போல அதிகாரத்தின் அடுக்குகளில் மறைந்து தனது கோரமுகத்தை இந்துத்துவா நிறுவுவதை எதிர்த்து சமர் புரிய வேண்டிய தருணம் இது. பெரியாரின் சுண்டு விரலை பிடித்து வந்ததாக தம்பட்டம் அடிப்பவர் என்ன செய்ய போகிறார்?

(ஆதாரம்: கோவை போலீஸ் நடத்திய வெடிகுண்டு நாடகம். இலக்கிய சோலை 25, பேரக்ஸ் சாலை, பெரியமேடு, சென்னை600003)

மயிர் பிளக்கும் ஆய்வுகள் விளக்கங்கள் …


”பாபர் மசூதியின் மொத்த வளாகமும் இந்துக்களுக்கு உரியது. அதுதான் இராமன் பிறந்த இடம், அது இராமனுக்கு சொந்தமானது. பாபரின் உத்தரவின் பேரில் கோயிலை இடித்துத்தான் மசூதி கட்டப்பட்டது. இது இசுலாமியக் கோட்பாடுகளுக்கு எதிரானது என்பதால், அந்தக் கட்டிடத்தை மசூதி என்றே கருத இயலாது. அதன்மீது முஸ்லிம்களுக்கு (சன்னி வக்ப் போர்டுக்கு) எந்த உரிமையும் இல்லை” என்பது நீதிபதி சர்மா அளித்துள்ள தீர்ப்பின் சாரம்.

”இராமன் பிறந்த இடம் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் அங்கே இந்துக்கள் வெகு நீண்ட காலமாக வழிபட்டு வருகிறார்கள். எனவே மசூதிக் கட்டிடத்தின் மையப்பகுதி இந்துக்களுக்கு சொந்தமானது. இஸ்லாமியக் கோட்பாடுகளின் படி அது ஒரு மசூதி அல்ல என்ற போதிலும் சர்ச்சைக்குரிய கட்டிடத்தின் உள் தாழ்வாரம் இரண்டு பகுதியினராலும் வரலாற்று ரீதியாகவே வழிபாட்டுக்கு பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. எனவே, தற்போது ராமன் சிலை வைக்கப்பட்டுள்ள மையப்பகுதி இந்துக்களுக்கு தரப்படவேண்டும். தாழ்வாரம் உள்ளிட்ட மொத்த இடம் மூன்றாகப் பிரிக்கப்பட்டு ராமஜன்மபூமி நியாஸ், சன்னி வக்ப் போர்டு, நிர்மோகி அகாரா ஆகியோர் மூவருக்கும் தரப்படவேண்டும்.” இது நீதிபதி அகர்வால் அளித்துள்ள தீர்ப்பின் சாரம்.

”சர்ச்சைக்குரிய இடம் பாபரால் அல்லது பாபரின் ஆணையின் பேரில் கட்டப்பட்ட மசூதி. ஏற்கெனவே இடிபாடுகளாக இருந்த ஒரு இடத்தின் மீது அது கட்டப்பட்டிருக்கிறதே அன்றி, கோயிலை இடித்து கட்டப்படவில்லை. அங்கே மசூதி கட்டப்படுவதற்கு நெடுநாள் முன்னதாகவே அந்தப் பரந்த பகுதியின் ஏதோ ஒரு சிறிய இடத்தில்தான் இராமன் பிறந்திருக்கிறார் என்ற நம்பிக்கை இந்துக்களிடம் நிலவியது. குறிப்பாக இந்த இடம் சுட்டிக்காட்டும்படியான கருத்து இந்துக்களிடம் நிலவவில்லை. ஆனால் மசூதி கட்டப்பட்ட சில காலத்துக்குப் பின்னர், இந்த இடத்தில் தான் ராமன் பிறந்தார் என்று இந்துக்கள் அதனை அடையாளப்படுத்த தொடங்கினர். 1855 இல் ராம் சபுத்ரா, சீதா ரசோய் என்ற கட்டுமானங்கள் அங்கே உருவாக்கப்படுவதற்கு முன்னரே மசூதியின் சுற்றுச்சுவர் அருகே இந்துக்கள் வழிபாடு செய்து வந்தனர். மொத்தத்தில் இரு தரப்பினருமே சர்ச்சைக்குரிய இந்த வளாகத்தில் வழிபாடு செய்து வந்திருக்கின்றனர்.

ஆனால் குறிப்பிட்ட மொத்த இடத்தின் மீதான தங்களது தனிப்பட்ட உரிமை (TITLE ) குறித்த எந்த ஆவணத்தையும் இரு தரப்பினராலும் தர இயலவில்லை. பகுதி அளவிலான உரிமையை நிலைநாட்டும் ஆவணங்களும் இருதரப்பினரிடமும் இல்லை. இது இரு தரப்பினருடைய அனுபவ பாத்தியதையாகவே இருந்து வந்துள்ளது. 1949 இல் அங்கே ராமன் சிலை வைக்கப்பட்டிருக்கிறது.

மேற்சொன்ன நிலைமைகளைக் கணக்கில் கொண்டு மையமண்டபத்திற்கு கீழே உள்ள பகுதி இந்துக்களுக்கு தரப்படுகிறது. மொத்த வளாகமும் மூன்றாகப் பிரிக்கப்பட்டு மூன்று பேருக்கும் வழங்கப்படவேண்டும்.” இது நீதிபதி கான் அளித்துள்ள தீர்ப்பின் சாரம்.

தீர்ப்பின் முழு விவரத்தையும் படித்து, அது குறித்து மயிர் பிளக்கும் ஆய்வுகள் விளக்கங்கள் இனி வழங்கப்படும். சன்னி வக்ப் போர்டு இதனை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்லப்போவதாக அறிவித்திருக்கிறது. இதில் வென்றவர் யார் தோற்றவர் யார் என்றெல்லாம் பார்க்கக் கூடாது என்று ஆர்.எஸ்.எஸ் தலைவர் பகவத் கூறியிருக்கிறார். அந்த இடத்தில்தான் இராமன் பிறந்தான் என்ற தங்களது கூற்று நீதிமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்டு விட்டதாக பாஜக வினர் புளகாங்கிதம் அடைந்துள்ளனர்.

“இது ஒரு கட்டப் பஞ்சாயத்து தீர்ப்பு. 1992 இல் அங்கே ஒரு மசூதி இருந்ததா இல்லையா, அது இடிக்கப்பட்டதை உலகமே பார்த்ததா இல்லையா, அந்த இடத்தின் உரிமையாளர் யார்? இதுதான் இந்த உரிமை மூல வழக்கில் எழுப்பப் பட்டிருந்த (TITLE SUIT) கேள்வி. அதற்கு பதில் அளிக்காமல், தான் பதிலிருக்கத் தேவையில்லாத, தனக்கு விசயம் தெரியாத மதம், மற்றும் வரலாறு சார்ந்த கேள்விகளுக்குள் நீதிமன்றம் மூக்கை நுழைத்திருக்கிறது. ” என்று கருத்து தெரிவித்திருக்கிறார் பிரபல உச்சநீதிமன்ற வழக்குரைஞர் ராஜீவ் தவான்.

ராஜீவ் தவான் கூறியிருப்பதுதான் இந்த தீர்ப்பைப் பற்றி கூறத்தக்க மிக மென்மையான விமரிசனம். “இந்த நாட்டின் இரண்டாம்தர குடிமகன் என்பதை ஒப்புக்கொள். உன்னை உயிர்வாழ அனுமதிக்கிறேன்” என்று குஜராத் படுகொலை நாயகன் மோடி சொன்ன செய்தியைத்தான், “சுக்குமி-ளகுதி-ப்பிலி” என்று வேறு விதமாகப் பதம் பிரித்து சொல்லியிருக்கிறது அலகாபாத் உயர்நீதிமன்றம்.

பாபர் மசூதி இருந்த இடத்தில் இராமன் கோயில் இருந்ததா, அது பாபரால் இடிக்கப்பட்டதா என்ற கேள்விகளுக்கு பதிலளிக்கும் பொறுப்பை மத்திய அரசு, உச்சநீதி மன்றத்திடம் தள்ளிவிட்ட போது, “இவை எங்கள் ஆய்வு வரம்புக்கு அப்பாற்பட்டவை” என்று கூறி அதனை நிராகரித்தது உச்சநீதிமன்றம். உச்ச நீதிமன்றம் எதனை நிராகரித்ததோ அந்தக் கேள்விகளுக்குள் புகுந்து தீர்ப்பும் சொல்லியிருக்கிறது லக்னோ உயர்நீதிமன்றம். “அங்கே ராமன் பிறந்தான் என்பது இந்துக்களின் நம்பிக்கை” என்று ஒரு உரிமையியல் வழக்குக்கு தேவைப்படும் எவ்வித ஆதாரங்களுக்குள்ளும் போகாமல் இந்து நம்பிக்கையையே ஒரு தீர்ப்புக்கான அடிப்படையாகக் கூறியிருக்கிறார்கள் சர்மாவும் அகர்வாலும். ”நம்பிக்கையை நீதிமன்றம் ஒப்புக்கொள்ள வேண்டுமேயன்றி, அதனை ஆராயக்கூடாது. தீர்ப்பு வழங்கும் அதிகாரமும் நீதிமன்றத்துக்கு கிடையாது” என்பதுதான் ஆர்.எஸ்.எஸ் இன் வாதம். தற்போது தீர்ப்பு தங்களுக்கு சாதகமாக வந்திருப்பதால் அவர்கள் நீதிமன்றத்தைக் கொண்டாடுகிறார்கள்.

”கோயிலை இடித்துத்தான் பாபர் மசூதியைக் கட்டினார் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை, மசூதிக்கு கீழே இருப்பது கோயிலும் இல்லை. அயோத்தி முன்னர் பவுத்த மையமாக இருந்தது. அதனைப் பார்ப்பனியம் கொன்றொழித்தது. அயோத்தி மட்டுமல்ல, தென்னகத்தின் கோயில்கள் அனைத்தும் பவுத்த, சமண வழிபாட்டிடங்களை ஆக்கிரமித்தும், கொள்ளையடித்தும் பார்ப்பன மதத்தினரால் உருவாக்கப்பட்டவை.. ”என்பவையெல்லாம் ஏராளமான ஆதாரங்களுடன் எழுதப்பட்டிருக்கின்றன.

இத்தனைக்கும் பிறகுதான் இப்படி ஒரு தீர்ப்பு வந்திருக்கிறது. “எப்படியோ, ஒரு வழியாக நல்லிணக்கம் வந்தால் சரி” என்று அமைதி விரும்பிகளைப் போல பார்ப்பன பாசிசக் கும்பல் நைச்சியமாகப் பேசத்தொடங்கியிருக்கிறது.

ஒரு உரிமை மூல வழக்கில் (TITLE SUIT) 16 ஆம் நூற்றாண்டு வரை பின்னோக்கி சென்று ஆவண ஆராய்ச்சியில் ஈடுபடலாம் என்பதை ஆர்.எஸ்.எஸ் காரர்கள் ஒப்புக்கொள்வார்களேயானால், நல்லது. இதனையே ஒரு முன்மாதிரியாக எடுத்துக் கொள்வோம். வரலாற்றில் நேர் செய்ய வேண்டிய கணக்குகள் நிறைய இருக்கின்றன. அசைக்க முடியாத ஆதாரங்களும் இருக்கின்றன.

நாகை புத்தவிகாரையின் தங்க விக்கிரகத்தை திருடி உருக்கித்தான் திருவரங்கம் கோயிலின் திருப்பணியை செய்ததாகவும், கோயிலின் மதில் சுவரை எழுப்புவதற்கு வேலை செய்த சூத்திர, பஞ்சம மக்களை கூலி கொடுக்காமல் ஏமாற்றி கொள்ளிடத்தில் மூழ்கடித்துக் கொன்றதாகவும் அந்தக் கோயிலின் வரலாற்று ஆவணமாக வைணவர்களால் அங்கீகரிக்கப்படும் கோயிலொழுகு நூலில் எழுதி வைக்கப்பட்டிருக்கிறது.

சமீபத்தில் 1000 ஆண்டு விழா கண்ட பெரியகோயிலும் கூட இலங்கையையும் கேரளத்தையும் கொள்ளையடித்த காசில் கட்டப்பட்டது. விவசாயிகளின் ரத்தத்தில் பராமரிக்கப்பட்டது. இவற்றுக்கும் அந்தக் கோயிலிலேயே கல்வெட்டு ஆதாரங்கள் இருக்கின்றன.

அல்லது சிதம்பரம் கோயிலை எடுத்துக் கொள்வோம், சைவ மெய்யன்பர்கள் போற்றிப் புகழும் பெரிய புராணத்தில் நந்தனை எரித்ததற்கு ஆதாரம் இல்லையா, அல்லது நடராசப் பெருமானின் சந்நிதிக்கு எதிரில் நந்தனாரின் சிலை இருந்தது என்று கூறும் உ.வே.சாமிநாதய்யரின் பதிவு இல்லையா?

எல்லா ஆதாரங்களும் தயாராக இருக்கின்றன. ஆனால் மேற்படி கோயில்களையோ, கோயில் பிரகாரங்களையோ அப்படியே வைத்துக்கொண்டு நீதி கேட்டால் நமது நீதிமன்றங்கள் நீதி வழங்கமாட்டார்கள். அவற்றை இடித்துத் தரைமட்டமாக்கி, “சர்ச்சைக்குரிய இடம்” என்று பெயர் சூட்ட வேண்டும். சில ஆயிரம் உயிர்களைக் கொன்று போடவேண்டும். அந்தப் பிணங்களின் மீதேறி ஆட்சிக்கட்டிலில் அமரவேண்டும்.

அப்புறம், பெரியபுராணம், கோயிலொழுகு, திவ்வியப்பிரபந்தம், கல்வெட்டு ஆதாரம் .. போன்றவற்றை வைத்து வாதம் செய்தால் நீதிமன்றம் நம்முடைய வழக்கை ஒரு உரிமை மூல (TITLE SUIT) வழக்காக எடுத்துக் கொண்டு ‘நீதி’ வழங்கும். ஆலகாபாத் நீதிமன்றத் தீர்ப்பிலிருந்து நாம் புரிந்து கொள்ளக்கூடிய நீதி இதுதான்.

பின்குறிப்பு – 1:

அப்படியானால் 1992 இல் உலகமே பார்த்திருக்க பாபர் மசூதியை இடித்துத் தள்ளினார்களே கரசேவகர்கள், அதுக்காக லிபரான் கமிசனெல்லாம் போட்டு முட்டைக்கு மயிர் பிடுங்கி அறிக்கை சமர்ப்பித்தார்களே அந்த வழக்குகளையெல்லாம் என்ன செய்வார்கள்? மசூதி இடிப்பை குற்றம் என்று இனிமேலும் கூறிக்கொண்டிருப்பது நியாயமாகுமா? 2010 ஆம் ஆண்டு செப்டம்பர் 30 ஆம் தேதியன்று லக்னோ உயர்நீதிமன்றம் வழங்கவிருக்கும் தீர்ப்பை, தம்முடைய தீர்க்கதரிசனத்தால் உணர்ந்து கொண்டு, அந்த தீர்ப்பை 1992, டிசம்பர் 6 ஆம் தேதியன்று முன்தேதியிட்டு அமல்படுத்தியிருக்கிறார்கள் கரசேவகர்கள். அன்று கடப்பாரை ஏந்திய ஒரு நாலு பேரின் கையிலாவது சுத்தியலைக் கொடுத்து உச்சநீதிமன்ற நீதிபதி ஆக்குவதுதான் நீதி தேவதைக்கு இந்தியா செலுத்தும் மரியாதையாக இருக்கும். இல்லையா?

பின்குறிப்பு – 2:

பாபர் காலத்து டைட்டில் சூட்டையே விசாரித்து அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பு சொல்லியிருக்கிறதே, தங்களுடைய நிலத்தை ராஜா ஹரிசிங் உடன் ஒரு கட்டப்பஞ்சாயத்து செய்து பறித்துக் கொண்ட இந்திய அரசுக்கு எதிராக காஷ்மீர் மக்கள் ஒரு டைட்டில் சூட் போட்டால், அயோத்தி வழக்கைப் போலவே அதனையும் விசாரித்து நேர் சீராக ஒரு தீர்ப்பை அந்த மக்களுக்கு இந்திய நீதிமன்றம் வழங்குமா?