இனவெறியின் வீழ்ச்சி எப்போது?


மௌரிடேனியாவில் 80.000 கருப்பர்கள் பெர்பெர் இனத்தவரின் அடிமை சொத்தாக இருக்கிறார்கள் என்று அமெரிக்க ஐக்கிய நாடுகளின் அரசு 1994-இல் எடுத்த கணக்கெடுப்பில் கூறி இருந்தது. அதிர்ச்சியான தகவல் தான். அதுவும் எண்ணிக்கை இன்னும் அதிகமாகவும் இருந்திருக்கலாம்.

மேலோட்டமான வரலாறுகளில் அடிமைகள் குறித்து வாசித்திருப்போம். அதெல்லாம் அந்த கால வரலாறு. இப்பதான் மனிதன் நல்லா தெளிவாக இருக்கிறானே என்று பேசிக் கொண்டிருந்த நமக்கெல்லாம் திடுக்கிடும் செய்தி.

பத்தொன்பது, இருபதாம் நூற்றாண்டுகளில் தனி மனிதர்களின் உரிமைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு மனிதர்களை மனிதர் இழிபடுத்துவது என்பது படுகேவலமானது என்று உலக வல்லரசு நாள் ஒன்றிணைந்து ஒழித்துக் கட்டியது.

பழைய கால வழக்கப்படி கறுப்பு இனத்தவர்களை வலை வீசி பிடிக்கும் வழக்கம் இப்போது இல்லை. கை கால்களில் சங்கிலி போட்டு சந்தையில் ஏலம் விட்டு விற்கும் வழக்கம் இல்லை. இருப்பினும் வேறு வேறு முறைகளில் அடிமை முறை தொடர்கிறது மானிட இனத்தில்…

கிரேக்கர்கள், ரோமானியர்கள், எகிப்து, அரபு நாடுகளில் அடிமை முறைகள் பல்வேறு முறையில் உபயோகிக்கப்பட்டனர். வரலாறுகளில் அடிமைகள் எப்படி வாழ்ந்தனர் என்பதை படித்தால் நெஞ்சி வெடித்துவிடும் குரூரங்கள் இருக்கும்.

நமக்கு மிக சமீபத்திய நூற்றாண்டான இருபதாம் நூற்றாண்டு வரலாற்றை படித்தால்கூட அதிர்ச்சிதான்.

அமெரிக்க ஐக்கிய நாடுகளில் இருந்த கருப்பு மனிதர்கள் அடிமைமுறைக்கு எதிரான போராட்டத்தை தொடங்கிய போது உள்நாட்டு போரை உருவாக்கும் அளவிற்கு எழுச்சி கொண்டது.

என்ன செய்வது என்று முழித்துக் கொண்டிருந்த அமெரிக்கா ஐரோப்பாவுடன் தீவிர ஆலோசனை நடத்தி விட்டு அடிமைகள் மீது திணித்த அடக்கு முறையை சற்று தளர்த்தியது.

மௌரிடேனியாவில் கருப்பர்கள் அடிமையாக இருப்பதாக செய்தி வந்தது அல்லவா? அந்த கருப்பு மனிதர்களை வேலைகளுக்கும், காம இச்சைகளுக்கும் பயன்படுத்துவதாக செய்தியில் கூறப்பட்டிருந்தது.

அந்தச் செய்திதான் ´டிரம்´ என்னும் நீக்ரோ இளைஞனை ஞாபகப்படுத்தியது.

´டிரம்´ பற்றிய அறிமுகத்தை உங்களுக்கு சொல்வதென்றால்….

திடகாத்தமான, வலுள்ள, வீரமுள்ள கருப்பு இளைஞன் என்று சொன்னால் சாதாரண கருப்பு இளைஞர்களின் தோற்றமும் அப்படித்தானே என்று நீங்கள் நினைத்துவிடக் கூடும்.

´டிரம்´ அப்படி இல்லை…

அமெரிக்காவில் அந்த காலத்தில் ஒரு வழக்கம் இருந்தது. அடிமைகளில் தரமான அடிமையை ஏகப்பட்ட விலைக்கு வாங்கி அந்த தரமான அடிமையை வைத்து ´தரமான நீக்ரோ´க்களை உற்பத்தி செய்து விற்பனை செய்யும் பழக்கம்.

பணத்திற்காக இல்லை.

பொழுது போக்கிற்காகவும், தங்களிடம் தரமான அடிமைகள் இருக்கிறார்கள் என்பதை வெள்ளை முதலாளிகள் ஆணவத்துடனும் அகம்பாவத்துடனும் காட்டுவதற்கு….

அப்படிப்பட்ட தரமான நீக்ரோ தான் டிரம்!

வெள்ளை முதலாளியிடம் அடிமையாக இருந்த டிரம்மை பார்த்து முதலாளியின் வைப்பாட்டிக்கு ஒருமுறை சபலம் வந்துவிடவே டிரம்மிடம் தன் ஆசையை வெளிப்படுத்துகிறாள். டிரம் மறுத்தும் வற்புறுத்தி தன் ஆசையை தீர்த்துக் கொள்கிறாள். இதை பார்த்துவிட்ட முதலாளிக்கு கடும் அதிர்ச்சி.

“போயும்.. போயும்… ஒரு கருப்பனுடன் செக்ஸ் செய்துவிட்டாளே” என்ற வெறுப்பு. ஆசை நாயகியை வீட்டில் இருந்து துரத்திவிடுகிறான் முதலாளி.

டிரம்மை வேறு நீக்ரோ அடிமைகளை வைத்து அடித்தே சாகடிக்கிறான்.

விரட்டப்பட்ட பெண் வேறு ஊரில் நைட் க்ளப் நடத்தும் தொழில் ஆரம்பிக்கிறாள். சில மாதங்களில் தான் கர்ப்பமாக இருப்பது அவளுக்கு தெரிகிறது. பல ஆண்களுடன் தொடர்பு இருந்ததால் யாருடைய குழந்தை என்ற குழப்பம்.

குழந்தை பிறந்த போதுதான் அதிர்ந்தாள் தாய்.

கறுப்பு குழந்தை.

ஒரே ஒருமுறை நீக்ரோவுடன் இருந்ததற்காக பிறந்த கறுப்பு குழந்தையா என் குழந்தை என்று வெறுத்தாள்.

தாய் பாசம் என்பார்களே அதெல்லாம் நிறவெறிக்கு முன் நிற்காது போலும்…

குழந்தைக்கு பெயர் ´டிரம்சன்´

மற்றவர்களிடம் குழந்தை தன்னிடம் வேலை பார்த்த நீக்ரோவின் மகன். தனக்கு அடிமை தேவைப்பட்டதற்காக குழந்தையை விலைக்கு வாங்கினேன் என்று சமாளித்தாள்.

டிரம்சனை ஒழுங்காக கவனிக்கவில்லை தாய். வேறொரு பெண் குழந்தையை பராமரிக்கும் பொறுப்பை கவனித்துக் கொண்டாள்.

டிரம்சன் பெரியவனாகியதும் வெள்ளை தாயின் நைட் கிளப்பில் வேலை செய்கிறான். எஜமானி தான் தன் அம்மா என்பது குழந்தைக்கு தெரியாது.

தாயிக்கோ குழந்தையை பார்க்கும் போதெல்லாம் குமட்டிக் கொண்டு வந்தது. அவனுடைய நிறம் அவளை அறுவெறுப்பு அடைய வைக்கிறது.
டிரம்சன் மீது வெறுப்பாக இருக்கிறாள்.

“எப்படி டிரம் உடன் செக்ஸ் செய்தேனோ” என்று தனக்குள் அறுவெறுப்புடன் நினைத்துக் கொள்கிறாள். டிரம்சனை வேலை நேரங்களில் கேவலமான முறையில் திட்டுவாள். நாயைப் போல் நடத்தினாள். கடுமையான வேலைகளை கொடுக்கிறாள்.

குழந்தையை பொறுத்தவரை அவளின் செயல்பாடுகளைக் கண்டு சராசரி வெள்ளை இனத்துப் பெண்ணின் இனவெறி உணர்வாக நினைக்க வைக்கிறது.

தன்னுடைய முதிய வயதில் மரணப்படுக்கையில் இருக்கும் போது டிரம்சனை அழைத்து உண்மையை சொல்கிறாள் தாய். ஒருமுறை, ஒரே ஒருமுறை மட்டும் ´அம்மா´ என்று சொல்லும் அனுமதியை வழங்குகிறேன் என்றாளாம்.

நடந்த கதை.

கேட்க கேட்க ஆச்சரியமாக இருக்கிறது.

தாய்கும் குழந்தையும் உள்ள பாசம் என்பதைக் கூட நிறவெறி மாற்றிவிடுமா என்ன?

நிறவெறி உணர்வுகளை சட்டத்தினால் மாற்றிவிட முடியாது. அடிமை முறைகளையும் ஒழித்துகட்ட முடியாது. ஆளப்படுபவர்களும் ஆள்பவர்களும் இருக்கும் வரை. இதையும் தாண்டி முடியும் என்றால் ´மனித நேயம்´ தேவை.

அது கிடைக்குமா இன்றைய காலத்தில்?

மாறுங்கள் இல்லை மாற்றப்படுவீர்கள் புரோகிதர்களே…


புரோகிதர்களுக்கு மட்டும் எழுதிக்கொள்வது…..

காலம் காலமாக திருமணத்திற்க்கு புரோகிதர்களை வைத்து திருமணம் செய்வது நமது தமிழ் கலாச்சாரத்தில் ஊறிப்போய் இருக்கிறது.திருமணம் மட்டுமின்றி ஏனைய சடங்குகள் அனைத்திற்க்கும் புரோகிதர்களை வைத்து மந்திரம் ஓதி சடங்குகள் செய்து கொள்வது வழக்கமாகிவிட்டது…

எத்தனை பேர் அந்த மந்திரங்களை அர்த்தம் புரிந்து சொல்லியிருக்கிறோம் என்று தெரியவில்லை.ஒருவேளை அந்த மந்திரங்கள் புரிந்தவர்கள் சமஸ்கிருதம் அறிந்தவர்களாக இருக்கலாம்…ஆனால் சமஸ்கிருதமே என்னவென்று தெரியாத பாமர மக்கள் வீட்டு சடங்குகளிலும் இன்னும் இந்த சமஸ்கிருத மந்திரங்கள் சொல்வது ஏன்?

தமிழ் நாட்டில் தமிழர்கள் ஆளும் தமிழர்கள் வாழும் ஊரில் இன்னமும் சமஸ்கிருதத்திலயே மந்திரங்கள் ஓதப்படுவது ஏன் ஓய்?

இது மாற்றாததற்க்கு காரணம் இன்னும் தானே உசத்தியென்றும் தாங்கள் சொல்வதைத்தான் மற்றவர்கள் கேட்கவேண்டும் என்ற ஆணவமா? இல்லை மரபாக வந்ததை மாற்ற இயலாது என்று சாக்கு போக்கா? என்ன என்னவோ கண்டுபிடிச்சாச்சு இந்த விஞ்ஞான உலகத்தில் இந்த சமஸ்கிருதத்திற்க்கு தமிழ் அர்த்தம் கண்டு பிடிக்காமலா இருந்திருப்பார்கள்?

கண்டுபிடிச்சுருக்கான்யா தமிழன் நான் படிச்சதை சொல்றேன் கேளுங்க…

சோமஹ ப்ரதமோ விவிதே கந்தர்வோ
விவித உத்ரஹ த்ரியோ அக்னிஸ்டே பதி
துரியஸ்தே மனுஷ்ய ஜாஹ

இந்த மந்திரத்தை திருமணம் நடத்திவைக்கிற புரோகிதர் மணப்பெண்ணை நோக்கி சொல்றார்.இதுக்கு அர்த்தம் சொன்னா இந்த மந்திரங்கள் சொல்லி திருமணம் முடிந்த மணப்பெண்களுக்கு வருத்தமாய்த்தான் இருக்கும் சொல்லித்தான் ஆகவேண்டியிருக்கிறது இந்த மணப்பெண் முதலில் சந்திரன் எனும் சோமனுக்கு மனைவியாய் இருந்தாள் இரண்டாவதாக கந்தர்வனுக்கு மனைவியாய் இருந்தாள் மூன்றாவதாக அக்னிக்கு மனைவியாய் இருந்தாள் நான்காவதாக இந்த பக்கத்தில் உட்கார்ந்திருக்கும் மணமகனுக்கு மனைவியாகப்போகிறாய்…

கேட்டீங்களாப்பா என்னதான் அவங்க எல்லாரும் கடவுள்களாக இருந்தாலும் மூன்றுபேருக்கு மனைவியாய் இருந்த ஒருவளை எப்படி ஒரு தன்மானம் உடைய மணமகன் திருமணம் முடிப்பது ? பிறந்ததிலருந்து பொத்தி பொத்தி பாதுகாத்து வளர்த்து எந்த களங்கமும் இல்லாத தன்னோட பொண்ணை ஒருத்தனுக்கு திருமணம் நடத்திவைக்கும் பெற்றோர்களுக்கு இதன் அர்த்தம் தெரிந்தால் கொதித்து போய்விடமாட்டார்களா ஓய்? இதைவிட இவ்வளவு வருடங்கழித்து எந்த ஆடவரின் இச்சைக்கும் அடிபணியாத முதல் முதலாக ஒரு ஆடவனுக்கு மனைவியாகப்போகிறவளுக்கு இதன் அர்த்தம் தெரிந்தால் அவ்வளவுதான் எரிந்து கொண்டிருக்கும் அதே அக்னியில் அந்த புரோகிதனை பொசுக்கிவிடமாட்டாளா?

இதுக்கு பதிலாக

இன்னார் மகளாய் பிறந்த இன்ன பெயருடைய நீ இன்னாருக்கு பிறந்த இன்ன பெயருடைய ஒருத்தருக்கு மனைவியாகப்போகிறாய் என்று கூறினால் போதாதா ஓய்?

நோக்கு எப்டி தெரியுன்றவாளுக்கு சொல்றேன் கேளுங்க…

விளக்க?உரை பெயர் : விவாஹ மந்த்ராத்த போதினி

எழுதியவர் : கீழாத்தூர் ஸ்ரீநிவாச ஆச்சாரியார் (பெயருக்கு பின்னால் சாதி பெயர் போடுறவங்களுக்கு முதலில் கருட புராண தண்டணை கொடுக்கணும் ஓய்)

பக்கம் : 22….

இதைவிட கொடுமை

தாய் தகப்பனுக்கு திவசம் கொடுக்கப்படும்பொழுது சொல்லப்படும் மந்திரம்…

தகப்பனுக்குதிவசம் கொடுக்கும்பொழுது சொல்ற மந்திரம்

யன்மே மாதா பிரலுலோப சரதி அனனு விருதா
தன்மே ரேதஹ பிதா விருங்க்தா ஆபுரண் யோப
பத்யதாம் ரங்கராஜ சர்மணே ஸ்வாஹா
ரங்கராஜ சர்மணே அஸ்மது பித்ரே இதம் நமம
கிருஸ்ண கிருஸ்ண கிருஸ்ண…

இதுக்கு அர்த்தம்

என்னோட அம்மா பத்தினியா இல்லாமல் வேறொருத்தருக்கு என்னை பெற்றிருந்தால் இந்த திவசத்திற்க்கு உரிமை கோரி உண்மையான என்னுடைய தகப்பன் வருவார் அப்படியில்லையென்றால் என்னுடைய அம்மாவின் கணவர் இந்த திவசத்தை பெற்றுக்கொள்ளட்டும்.. என்ன கரும மந்திரம்டா இது அப்பன் பேர் தெரியாதவன்னு அசிங்கப்படுத்துற மாதிரியில்ல இருக்கு…

இதுக்கு பதிலா அப்பா நான் இதுவரைக்கும் உன்னை இகழ்ந்து பேசியிருந்தாலோ இல்லை உனக்கு அவமானம் தரக்கூடிய வகையில் நடந்திருந்தாலோ அதற்க்காக என்னை மன்னித்து இந்த திவசத்தை ஏற்றுக்கொள்வாயாகன்னு சொன்னா போதுமே ஓய்…

அம்மாவுக்கு கொடுக்கிற திவசத்தில் சொல்ற மந்திரம் இது

என்மே மாதா ப்ரவது லோபசரதி
அன்னவ் வ்ரதோ தன்மே ரேதஹ
பிதா வ்ருந்த்ததாம் ஆபுரண்யஹா
அவபத்ய நாம….

என்னுடைய அம்மா என்னை யாருக்கு பெற்றாளோ தெரியவில்லை ஒரு நம்பிக்கையில் தான் அவளை என்னுடைய தகப்பனின் மனைவியாக கருதுகிறேன் அந்த அம்மாவிற்க்கு இந்த திவசம் போய் சேரட்டும் மானங்கெட்ட மந்திரம்டா இது சொல்றதுக்கே வாய் கூசுது…

இதுக்கு பதிலா அம்மா என்னை பத்து மாசம் சுமந்து பெற்றதற்க்கு ஈடு இணையாக நான் எதுவும் செய்யவில்லை அதற்க்காக என்னை மன்னித்து இந்த திவசத்தை ஏற்றுக்கொள்வாயாக இப்படி சொன்னால் போதாதா ஓய்…

நானும் இந்துமதத்தை சேர்ந்தவன்தான் இல்லையென்று சொல்லவில்லை அதற்க்காக இப்படி அபத்தமான மந்திரங்களை சொல்ல தன்மானம் இடங்கொடுக்கவில்லை முற்றிலும் சமஸ்கிருத மந்திரம் ஓதுவதை தவிருங்கள் ஓய்..இல்லை இந்த மந்திரங்களுக்கு வேறு அர்த்தங்கள் வைத்திருப்பீர்களானால் அதையே தமிழ் படுத்தி கூறுவதில் என்ன நஷ்டம் வந்துவிடப்ப்போகிறது உங்களுக்கு? இன்னும் எத்தனை நாளைக்குத்தான் இந்த சமஸ்கிருதத்தையே பிடிச்சு தொங்கிண்டு இருப்பேள் ஓய் ஒழுக்கமாக மரியாதையாக கோவிலில் தமிழில் அர்ச்சனை செய்வதை போலவே சடங்குகள் சம்பிரதாயத்திற்க்கும் தமிழில் மந்திரம் ஓதவும்… இல்லையேல் தமிழ் நாட்டை விட்டே ஒதுக்கி வைக்கப்படும் நிலைக்கு ஆளாகும் நிலை வெகு தூரம் இல்லை…நீங்கள் இல்லாமலே திருமணங்கள் நடக்கும் சூழ்நிலைகள் உருவாகலாம் ஓய்….உங்களுக்கு சமஸ்கிருதம் தெரியும் என்பதற்க்காக மற்றவர்கள் மீதும் அதை திணிக்காதீர்கள்…

மாறுங்கள் இல்லை மாற்றப்படுவீர்கள் புரோகிதர்களே…
நன்றி-ப்ரியமுடன்வசந்த்.

ஆணுக்கும் ஆணுக்கும் பிறந்த தமிழ்ப் புத்தாண்டு…


நாரதன் என்ற ஆணுக்கும், கிருஷ்ணன் என்ற ஆணுக்கும் பிறந்த அறுபது
குழந்தைகள்தாம் தமிழ்ப் புத்தாண்டுகள் என்ற அருவருப்பான ஆபாசக் கதையை
அடிப்படையாகக் கொண்ட சித்திரை முதல் நாளாகக் கொண்ட அந்தக் குழப்பத்துக்கு
இடமான கணக்கு முறையைத் தூக்கி எறிந்து, தமிழர் பண்பாட்டு மறுமலர்ச்சியை
மய்யப்படுத்தி, தை முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு என்று மானமிகு
கலைஞர் அவர்களின் தலைமையிலான தி.மு.க. அரசு தமிழ்நாடு சட்டப் பேரவையில்
ஒரு மனதாக சட்டத்தை நிறைவேற்றிக் கொடுத்திருக்கிறது.

இந்த நிலையில் பிரபவ என்று தொடங்கும் அந்தப் பார்ப்பன ஆண்டு முறை என்பது
காலாவதியாகிப் போய்விட்ட ஒன்றாகும்.

ஆனால் பார்ப்பனர்கள் விடாப்பிடியாகவும், பார்ப்பனர்களுக்குத் துணை போகும்
சில தொங்கு சதைகளும் பழைய பத்தாம்பசலித்தனமான ஆண்டு முறையை நிலைநாட்டும்
வகையில் நடந்து கொள்வது சட்டவிரோதம் மட்டுமல்ல, தமிழர்களின் தன்மான
உணர்வுக்கும், மறுமலர்ச்சிக்கும் தடை போடும் அற்பத்தனமுமாகும்.

தமிழால் வயிறு வளர்த்துக் கொண்டு, அந்தத் தமிழையும், தமிழர்களையும்
கொச்சைப்படுத்தும் வகையில், பழைய சேற்றுக் குட்டையில் தமிழர்களை விழச்
செய்யும் வகையில் தமிழ் நாளேடுகள் சில விக்ருதி ஆண்டு ராசி பலன்கள் என்ற
பெயரில் இணைப்புகளை (supliments) வெளியிடுவது அசல் வெட்கக்கேடாகும். இந்த
ஏடுகளின் இத்தகைய போக்குகள் கண்டிக்கத்தக்கதும்,
வெட்கப்படத்தக்கதுமாகும்.

இதில் ஒரு வேடிக்கையும், விபரீதமும் என்னவென்றால், இந்த ஆண்டுப்
பிறப்பில் ஏதோ விஞ்ஞான உண்மைகள் இருப்பது போலவும், வான அறிவியல் கொஞ்சி
விளையாடுவது போலவும், வானியல் புறந்தள்ளிய குப்பைகளை முட்டாள்தனமாக
கூசாது எழுதித் தொலைக்கின்றன.

12 ராசிகளிலும் சூரியன் தங்கியிருக்கும் காலம்தான் ஒரு மாதம். சித்திரை
ஒன்றாந்தேதி சூரியன் பூமிக்கு அருகில் இருக்கும். தற்போது விரோதி ஆண்டு
முடிந்து விக்ருதி ஆண்டு பிறக்கிறது. இந்த ஆண்டில் சனி பகவான் மற்றும்
ராகு, கேது ஆகியோர் பெயர்ச்சி அடையவில்லை. சனிபகவான் ஆண்டு முழுவதும்
கன்னி ராசியிலும், ராகு தனுசிலும், கேது மிதுனத்திலும் இருக்கிறார்கள்
என்றெல்லாம் தம் போக்கில் எழுதுகிறார்களே, அவர்களை நோக்கி அறிவியல்
வானியல் விடுக்கும் வினா இதுதான்:

கோள்களில் ராகு, கேது என்று இருக்கின்றனவா? எந்த வானியல் அறிவு இதனை
ஏற்றுக் கொண்டிருக்கிறது?

ராகு என்ற பாம்பும், கேது என்ற பாம்பும் சந்திரனை விழுங்குகின்றன
என்றெல்லாம் மனிதர்களுக்குத் தவறான முட்டாள்தனமானவற்றைச் சொல்லிக்
கொடுக்கலாமா? மோசடிக் குற்றத்தில் இவர்களைக் குற்றக்கூண்டில்
நிறுத்தவேண்டாமா?

சூரியன் என்பது நட்சத்திரம் என்ற அடிப்படை அறிவுகூட இல்லாமல் அதனைக்
கோளாகச் சித்திரிப்பவர்களுக்கு எந்த அளவுக்கு வானியல் அறிவு இருக்கிறது?

மக்களிடத்தில் பக்தி இருக்கிறது; பக்தியின் பெயரால், மதத்தின் பெயரால்,
புராணங்களின் பெயரால் கூறப்படுபவற்றைக் கண்மூடித்தனமாக ஏற்றுக்
கொள்வார்கள் என்ற ஒரு காரணத்தால் எந்தக் குப்பையையும் கொட்டி
பத்திரிகைகளாக்கி, பாமர மக்களின் பணத்தைப் பறிக்கும் வழிப்பறி அல்லாமல்
இது வேறு என்னவாம்?

விஞ்ஞான மனப்பான்மையை மக்களிடம் வளர்க்கவேண்டும். இது ஓர் அடிப்படைக்
கடமை என்று இந்திய அரசமைப்புச் சட்டம் கூறுகிறது. அதற்கு எதிராக மக்களை
மூடக் குழியில் தள்ளும் இந்த ஊடகங்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை
எடுப்பது தவறல்ல!

குற்றங்களில் மாபெரும் குற்றம் மக்களின் அறிவைத் திசை திருப்புவதாகும்.

தந்தை பெரியார் அவர்கள் அறிமுகப்படுத்திய தமிழ் எழுத்துச்
சீர்திருத்தத்தை அரசு ஏற்றுக் கொண்டு, சட்டமியற்றியதற்குப் பிறகு, பழைய
முறையில் எழுதினால் அது எப்படி தவறோ, குற்றமோ, அதேபோன்றதுதான் மக்களால்
தேர்ந்து எடுக்கப்பட்ட பிரதிநிதிகளைக் கொண்ட சட்டமன்றம் ஒருமித்த குரலில்
ஒரு சட்டத்தை நிறைவேற்றி செயல்படுத்தவேண்டும் என்று ஆணை பிறப்பித்த பின்,
அதற்கு நேர் எதிரான ஒன்றைக் கடைபிடிக்கச் சொல்வது குற்றம்தான்.

தமிழ் உணர்வாளர்களும், பகுத்தறிவாளர்களும் இத்திசையில் மக்களைக்
குழப்பும் சக்திகளை அம்பலப்படுத்தவேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம்.

மூடத்தனத்தை வளர்க்காதே, மக்களின் முற்போக்குச் சிந்தனையை மழுங்கடிக்காதே
என்ற முழக்கம் எங்கும் ஒலிக்கட்டும்! ஒலிக்கட்டும்!!

“அடிமை நாடும், போலி சுதந்திரமும்”


1947 – இல் நாம் பெற்றது சுதந்திரமல்ல; அது போலி சுதந்திரம். வெள்ளையன் இந்த நாட்டிலிருந்து விரட்டியடிக்கப்படவில்லை; தனது விசுவாசமான கையாட்களிடம் அவன் அதிகாரத்தைக் கைமாற்றிக் கொடுத்தான். பிரிட்டிஷ் அரசுக்கு எதிரான மும்பை கடற்படை வீரர்களின் எழுச்சியும் தெலிங்கானா விவசாயிகளின் ஆயுதப் போராட்டமும் நாடெங்கும் பற்றிப் படர்ந்த ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டங்களும், அன்று காங்கிரசு – முஸ்லிம் லீக் தலைமைகளை ஒதுக்கித் தள்ளிவிட்டு புரட்சிப் பாதையில் முன்னேறிக் கொண்டிருந்தன.

ஒரு மக்கள் பேரெழுச்சியால் தூக்கியெறியப்படுவோம் என்று அஞ்சி, இந்தியாவைத் திரைமறைவிலிருந்து ஆட்டி வைக்கும் திட்டத்துடன், தனது கையாட்களான காங்கிரசிடமும் முஸ்லீம் லீகிடமும் அரசு அதிகாரத்தை ஒப்படைத்தது பிரிட்டிஷ் அரசு. இந்தப் போலி சுதந்திரத்திற்கு வயது 60.

இன்று, வாயளவில் சுதந்திரம் என்று பீற்றிக் கொள்வதற்குக் கூட வழியில்லாமல், வெளிப்படையாகவே நம் நாட்டின் மீது ஆதிக்கம் செலுத்துகின்றன ஏகாதிபத்திய வல்லரசுகள். தற்போது நம்மீது திணிக்கப்படும் தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்ற கொள்கையின் உண்மையான பொருள் மறுகாலனியாதிக்கம் என்பதுதான். நமது நாட்டின் அரசியல் பொருளாதாரக் கொள்கைகள், மக்களின் தேவையையோ நாட்டு நலனையோ கணக்கில் கொண்டு வகுக்கப்படுவதில்லை. மாறாக, உலக வங்கி, உலக வர்த்தகக் கழகம், சர்வதேச நாணய நிதியம், பன்னாட்டு நிறுவனங்கள் ஆகிய ஏகாதிபத்திய நிறுவனங்களின் ஆணையைத்தான் எல்லா அரசாங்கங்களும் பணிவுடன் அமல்படுத்தி வருகின்றன.

இந்தக் கொள்கைகளால் இந்தியத் தரகு முதலாளிகளின் லாபம் விண்ணை முட்டுமளவு உயர்கிறது. உழைக்கும் மக்களின் வாழ்க்கையோ மரணக் குழிக்குள் சரிகிறது. இது தெரிந்தும் “இந்தியா ஒளிர்கிறது” என்று குதூகலிக்கிறார்கள் ஏகாதிபத்திய அடிமைகள். உலகையே தன் மேலாதிக்கத்தின் கீழ் கொண்டு வருவதற்காகப் போர்வெறி பிடித்து அலையும் அமேரிக்க வல்லரசின் எடுபிடியாகவும் ஆசியப் பகுதிக்கான அடியாளாகவும் இந்தியா மாற்றப்பட்டு விட்டது. இந்த அடிமைகளோ, “இந்தியா வல்லரசாவதற்க்கு இதுதான் சிறந்த வழி” என்று குதூகலிக்கிறார்கள்.

இவர்கள் சுதந்திர உணர்வற்ற பிழைப்புவாதிகள், நாட்டுப்பற்றும் சுயமரியாதை உணர்வுமற்ற புழுக்கள் – ஆனால் படித்த புழுக்கள், “ஆக்ஸ்போர்டு, கேம்பிரிட்ஜ், ஹார்வர்டு, ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம் எனப் படித்துப் பட்டம் வாங்கி பன்னாட்டு நிறுவனங்களின் அதிகாரிகளாகி லட்ச லட்சமாக சம்பாதிக்கலாம்; குடும்பத்தோடு அமேரிக்காவில் குடியேறலாம்; பன்னாட்டு முதலாளிகளுடன் சேர்ந்து கூட்டாக இந்தியாவைக் கொள்ளையிடலாம்” என்றெல்லாம் கனவு காணும் இத்தகைய அற்பர்கள்தான் மறுகாலனியாக்க அடிமைத்தனத்தை முன்னேற்றம் என்று கூறி நம்மை ஏமாற்றுகிறார்கள்.

அன்று பகத்சிங் முதலான போராளிகள் நாட்டு விடுதலைக்காக தூக்கு மேடையில் நின்று கொண்டிருந்த போது இத்தகைய மானமற்ற புழுக்கள் பிரிட்டிஷ் அரசின் பதவி நாற்காலிகளில் அமர்ந்திருந்தார்கள். கலெக்டராக, ஜட்ஜாக, போலீசு அதிகாரியாக, அமைச்சராக, துரைமார்களுக்கு தொண்டூழியம் செய்யும் விசுவாசமான அரசு ஊழியர்களாக இருந்து கொண்டு வெள்ளைக்காரனின் நிர்வாகத்திறனை மெச்சி, அவன் ஆட்சி நீடிக்க வேண்டுமெனப் பிரார்த்தனையும் செய்து கொண்டிருந்தார்கள்.

அன்றைக்கும் இன்றைக்கும் வேறென்ன வேறுபாடு? அதிகார நாற்காலியில் அந்நியன் நேரடியாக அமர்ந்திருந்தால்தான் காலனியாதிக்கமா? கல்லாவில் அமர்ந்திருந்தால்தான் கடைமுதலாளியா?

“பிரிட்டனின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் அனைத்துக்கும் துணை நிற்க வேண்டுமென்றும், தன்னை மீறி வேறு அரசுகளுடன் உறவு வைத்துக் கொள்ளக் கூடாதென்றும் வெல்லெஸ்லியின் துணைப்படைக் கொள்கை அன்று இந்திய மன்னர்களை நிர்பந்தித்தது. இன்றைய அமேரிக்க – இந்திய இராணுவ ஒப்பந்தம், அமெரிக்காவின் ஆக்கரமிப்புப் போர்களுக்கேல்லாம் இந்திய இராணுவம் அடியாள் வேலை செய்ய வேண்டுமெனக் கட்டாயப்படுத்துகிறது, இரானுடன் உறவைத் துண்டிக்குமாறு உத்தரவிடுகிறது, இந்திய அணு ஆயத உற்பத்திக்குத் தடை விதிக்கிறது.

அன்று டல்ஹவுஸியின் வாரிசிலிக் கொள்கை, வாரிசு இல்லாத மன்னர்களின் நாட்டை இணைத்துக் கொள்வதாகக் தொடங்கி, பின்னர் எல்லா சமஸ்தானங்களையும் ஆக்கிரமித்துக் கொள்வதில் முடிந்தது. இன்றோ, ‘நட்டமாகும் பொதுத்துறை நிறுவனங்கள் தனியார்மயம்’ எனத் தொடங்கிய தனியார்மயக் கொள்கை, லாபமீட்டும் பொதுத்துறைகளையும் பன்னாட்டுக் கம்பெனிகளின் பசிக்கு விருந்தாக்க வேண்டும் என்று வளர்ந்திருக்கிறது.

அன்று ஜமீன்தாரி, ரயத்வாரி, மகல்வாரி முறைகள் மூலம் விவசாயிகளைப் பிழிந்து கஜனாவை நிரப்பியது பிரிட்டிஷ் அரசு. இன்று அரசுக் கொள்முதல் ரத்து, மானிய வெட்டு, தானியக் கொள்முதலில் அன்னியக் கம்பெனிகள், அதிலும் ஊகவணிகம், விவசாயிகளின் பாரம்பரிய விதைகளையே அன்னியன் உடைமையாக்குவது போன்ற சதிகள் மூலம் விவசாயியைக் கடனாளியாக்கி விவசாயத்தை விட்டே துரத்துகிறது அரசு.

அன்று கந்து வட்டிக்குக் கடன் பட்ட தமிழ்நாட்டின் விவசாயிகளை ஏமாற்றிக் கப்பலேற்றி, இலங்கையின் தேயிலைத் தோட்டங்களிலும், மலேசியாவின் ரப்பர் தோட்டங்களிலும் அவர்களைக் கொத்தடிமைகளாக்கிக் கொண்டது பிரிட்டிஷ் அரசு. இன்றோ கடன்பட்ட விவசாயிகளின் பிள்ளைகள், ‘கொத்தடிமையாவோம்’ என்று தெரிந்தே மலேசியாவுக்கு ஓடுகிறார்கள். பஹரைனில் தீக்கிரையாகி சவப்பெட்டியில் வீடு திரும்புகிறார்கள்.

எதுவும் பழங்கதையல்ல. கடந்த காலத்தின் காலனியாதிக்கக் கொடுமைகளைப் பூதக் கண்ணாடியால் பெருக்கிக் காட்டியதைப் போல இன்று நம் கண் முன்னே காட்சி தருகிறது மறுகாலனியாதிக்கம். இதற்கெதிராக நம்மைப் போராட தூண்டும் உந்துவிசையாக, இந்திய விடுதலைப் போராட்டத்தின் முன்னோடியாக, 200 ஆண்டுகளுக்கு முன்னரே வெள்ளையனுக்கு எதிராக வீரச்சமர் புரிந்திருக்கிறார்கள் தென்னகத்தின் வீரர்கள், தமிழகத்தின் வீரர்கள்!

விடுதலைப் போராட்ட வீர வரலாறு-ஒரு பார்வை:
1801 ஜூன் மாதம் திருச்சியிலிருந்து சின்ன மருது வெளியிட்ட பிரகடனம் வரலாற்றுச் சிறப்புமிக்கது. “இந்தியத் துணைக்கண்டத்திலிருந்தே வெள்ளையர்களை விரட்டியடிக்க சாதி மத பேதங்களுக்கு அப்பாற்பட்டு அனைவரும் ஒன்று திரளுமாறு” மக்களை அறை கூவி அழைக்கிறான் சின்ன மருது. இந்தியா ஒரு நாடு என்ற கருத்து அக்காலத்திய பேரரசர்களிடமே உருவாகியிராத போது துணைக் கண்டத்தின் விடுதலைக்கே குரல் கொடுத்த இந்த அறிக்கைதான் இந்தியாவின் முதல் விடுதலைப் போர்ப் பிரகடனம்.

1795-இல் வெள்ளையருக்கெதிராக திப்பு நடத்திய போரில் தொடங்கி, 1806-இல் வேலூர்க் கோட்டைச் சிறையில் சிப்பாய்கள் நடத்திய புரட்சி வரை நீடித்த இந்தப் போர்தான் இந்தியாவின் உண்மையான முதல் சுதந்திரப் போர். ஆனால் தென்னிந்திய வரலாற்றைப் புறக்கணிப்பது, இசுலாமியர்களை புறக்கணிப்பது என்ற இந்து தேசியக் கண்ணோட்டத்தின் காரணமாக, தமிழகம் மற்றும் தென்னிந்தியாவின் பெருமைமிக்க இந்த விடுதலைப் போராட்ட மரபு இந்திய வரலாற்றில் புறக்கணிக்கப்பட்டிருக்கிறது.

1799-இல் சீரங்கப்பட்டினம் கோட்டையின் வாசலில் ஒரு சாதரணப் போர்வீரனைப் போலப் போரிட்டு மடிந்தான் திப்பு சுல்தான். நிஜாமும், பேஷ்வாவும், ஆறுகாட்டு நவாபும் துரோகமிழைத்துவிட்ட நிலையில் தென்னிந்தியா முழுவதும் உள்ள விடுதலை வீரர்களுடன் கூட்டணி அமைத்தான். தீரன் சின்னமலை திப்புவுடன் நின்று வெள்ளையரை எதிர்த்துப் போரிட்டான். கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட பிறகு சிறையிலிருந்து தப்பிய ஊமைத்துரைக்கு சின்ன மருது பாதுகாப்பு கொடுத்தான். கும்பினியாட்சியை எதிர்த்து சின்ன மருது நடத்திய போருக்கு திப்பு ஆயுதமும் நிதி உதவியும் வழங்கினான்.

திப்பு சுல்தான் கேளிக்கைகளில் திளைத்திருந்த மன்னனுமல்ல, சின்ன மருது கிணற்றுத் தவளையை ஒத்த பாளையக்காரனுமல்ல; இருவரும் ஆங்கிலம், பிரெஞ்சு உள்ளிட்ட பல மொழி அறிந்தவர்கள். பிரெஞ்சுப் புரட்சியால் கவரப்பட்ட திப்பு தன்னை ‘குடிமகன் திப்பு’ என்றே அழைத்துக் கொண்டான். சின்ன மருதுவோ “ஏழை மக்கள் கண்ணீரில்லாத வாழ்க்கை வாழ கும்பினியாரை எதிர்த்துப் போரிட வேண்டும்” என்று கூறி விடுதலைப் போருக்கு மக்களையும் அறைகூவி அழைத்தான்.

சின்னமலை, பூலித்தேவன், சின்ன மருது, வேலு நாச்சியார், ஒண்டிப்பகடை, சுந்தரலிங்கம், கட்டபொம்மன், ஊமைத்துரை, வெள்ளையத்தேவன் போன்றோர் தனித்தனியாகப் போராடி மடிந்த வீரர்கள் அல்ல. அவர்கள் தமக்குள் கூட்டிணைவுகளை உருவாக்கியிருந்தனர். நெல்லைக் கூட்டிணைவுக்கு கட்டபொம்மனும், திண்டுக்கல் கூட்டிணைவுக்கு கோபால நாயக்கரும், கன்னட நாட்டில் துந்தாஜியும், கேரளத்தில் கேரளவர்மனும், கோவையில் கானிஜகானும் தலைமை தாங்கினர். அனைவரும் இணைந்து உருவாக்கியிருந்த ‘தீபகற்பக் கூட்டிணைவு’ தனது ஆட்சிக்கே பேராபத்து என்று கும்பினிக்காரன் ஆஞ்சினான்.

1800-1801-ஆம் ஆண்டுகளில் மிகத் தீவிரமாக நடைபெற்ற இந்தப் போரில் சுமார் 30,000 வீரர்கள் தென்னிந்தியா முழுவதும் கும்பினியாட்சியை நிலைகுலைய வைத்திருக்கின்றனர். சாதி மத வேறுபாடுகளைக் கடந்து கிளர்ந்தெழுந்த இந்தப் போராட்டம் 1806-ஆம் ஆண்டு வேலூர் புரட்சியில் முடிவடைந்தது. இந்த விடுதலை வீரர்கள் காலனியாதிக்கத்தை ஒழிப்பதுடன் தம் கடமை முடிந்ததாகக் கருதவில்லை. கண்ணீரில்லாத மகிழ்ச்சியான வாழ்வை மக்கள் பெற வேண்டும் எனக் கனவு கண்டான் சின்ன மருது. பிரெஞ்சு புரட்சியால் கவரப்பட்ட திப்புவோ நாட்டைத் தொழில்மயமாக்கவும், மக்களுக்கு நல்வாழ்வு வழங்கவும் கனவு கண்டான். ஒரு சோசலிச இந்தியாவைப் படைக்க விழைந்தான் பகத்சிங்.

தூரோக வரலாறும் – தேர்தல் அரசியலும்:

அன்று அவர்கள் தோற்கடிக்கப்பட்டார்கள்; இன்றோ அவர்களது கனவும் தோற்றுக் கொண்டிருக்கிறது. பகத்சிங்கின் மண்ணிலிருந்து ஒரு மண்புழுவாம் மன்மோகன் சிங்! மருதுவின் சிவகங்கை மண்ணிலிருந்து சிரழிவுவாதி சிதம்பரம்! வீரர்களின் மண்ணிலிருந்து தப்பிப் பிறந்துவிட்ட இந்த ஈனர்கள், கூசாமல் துரோகிகளின் மொழியில் பேசுகிறார்கள்.

சின்ன மருதுவைத் தூக்கிலிட்ட பின் சிவகங்கை அரியணையை கும்பினியாரிடமிருந்து பிச்சையாகப் பெற்ற கவுரி வல்லபத் தேவன், கர்னல் அக்னியூவின் காலில் விழுந்து வணங்கினான் என்கின்றன ஆவணங்கள். “200 ஆண்டுகள் எங்களுடன் வணிகம் செய்தீர்கள். மேலும் 200 ஆண்டுகள் வணிகம் செய்ய உங்களை அழைக்கிறோம்” என்று கூறி இன்றைய ஐரோப்பிய முதலாளிகளிடம் பல்லிளிக்கிறார் ப.சிதம்பரம்.

‘கடவுளே’ என்று கும்பினியாரை விளித்துக் கடிதம் எழுதிய துரோகி தொண்டைமான், சின்ன மருதுவை ‘நாய்’ என்று கடிந்து ஏசுகிறான். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துக்குச் சென்று உரையாற்றிய பிரதமர் மன்மோகன் சிங்கோ காலனியாட்சி செய்த நன்மைகளுக்காக பிரிட்டனுக்கு நன்றி கூறுகிறார். ஏகாதிபத்தியங்களுக்கு எதிராக போராடும் உண்மையான நாட்டுப்பற்றாளகளான நக்சல்பாரிகளை “இந்தியாவின் மிகப்பெரிய உள் நாட்டு அபாயம்” என்று கூறி ஒடுக்குவதற்கு திட்டம் தீட்டுகிறார்.

அன்று கட்டபொம்மனைப் பிடித்துக் கொடுத்தது தொண்டைமானின் கூலிப்படை. இன்று கோலாவுக்கு எதிராக போராடும் அனைவரையும் ஒடுக்க நெல்லை மண்ணிலேயே எதிரிக்கு ஏவல் செய்கிறது தமிழக போலீசு. அன்று வெள்ளையனை எதிர்த்த விடுதலை வீரர்களைத் தன்னுடைய படைகளைக் கொண்டே ஒடுக்கினான் ஆற்காட்டு நவாப்; இன்று, ஜப்பானிய ஹோண்டா நிர்வாகத்தின் அடக்குமுறையை எதிர்க்கும் தொழிலாளர்களை நரவேட்டையாடுகிறது அரியானா போலீசு.

மறுகாலனியாதிக்கத்தை முறியடிக்க உறுதியெடுப்போம்:
முந்தைய காலனியாதிக்கத்தைக் காட்டிலும் கொடியது இந்த மறுகாலனியாதிக்கம். இதனை முன்னேற்றம் என்று கூறி மக்களை மூளைச்சலவை செய்து கொண்டிருக்கிறது ஆளும் வர்க்கம். பதவிக்கும் பவிசுக்கும் ஆசைப்பட்டு அன்று ஆங்கிலேயருக்குச் சேவகம் செய்தவர்களை ‘ஈனப்பிறவிகள்’ என்றான் சின்ன மருது. இன்று நாடே அன்னியனுக்கு அடிமையாகி வருவதை அறிந்தும் அமைதி காப்பதும், அலட்சியம் காட்டுவதும் கூட ஈனச் செயல்தான்.

விடுதலைப் போரில் முதல் குரல் எழுப்பிய தமிழகத்திலிருந்து இன்றைய மறுகலனியாக்க எதிர்ப்புப் போரும் துவங்கட்டும்! விடுதலைப் போராளிகளின் தியாக வரலாறு நம்மை முன்னோக்கிச் செலுத்தும் உந்து விசையாகட்டும்!

யார் இந்த அன்னை தெரசா?


“”பதில் கிடைக்காத கேள்விகள் பல எனக்குள் வாழ்கின்றன தேவதூஷணமாகிவிடும் என்பதால் அவற்றை வெளியிட அஞ்சுகிறேன் ஒருவேளை கடவுள் இருந்தால் என்னை மன்னித்துக் கொள்ளுங்கள் என் சிந்னைகளை சொர்க்கத்தை நோக்கி எழுப்ப முயல்கிறேன் அங்கோ தண்டிக்கும் வெறுமை அந்தச் சிந்தனைகள் கூரிய கத்திகளாய்த் திரும்ப வந்து என் இதயத்தைக் கிழிக்கின்றன தேவன் என்னை நேசிப்பதாகச் சொல்கிறார்கள் இருப்பினும் எதார்த்தத்தில் இருளும் உணர்ச்சியின்மையும் வெறுமையும் என்னுள் நிறைந்து மேலோங்கியிருப்பதால் எதுவும் என் ஆன்மாவைத் தொடுவதில்லை பரிசுத்த ஆவியின் அழைப்பை ஏற்று குருட்டுத்தனமாக என்னை ஒப்புக்கொடுத்ததன் மூலம் தவறு செய்து விட்டேனோ?”

“”என்னுள் ஓங்கி நிறைந்திருக்கும் வெறுமை காரணமாக நான் பார்க்கிறேன், ஆனால் கவனிப்பதில்லை கேட்கிறேன், ஆனால் காது கொடுப்பதில்லை என் நாக்குதான் அசைகிறது, நான் பேசுவதில்லை.”

“”என்னை நானே எதற்காக வருத்திக் கொள்கிறேன்? தேவன் இல்லையெனும்போது ஆன்மாவும் இருக்க முடியாது ஆன்மா இல்லையென்றால் யேசுவே நீரும் உண்மையல்ல.”

துயரம் ததும்பும் இந்தச் சொற்கள் “அன்னை’ தெரசாவின் இதயத்திலிருந்து கசிந்தவை.

1949இல் கல்கத்தாவில் மிஷனரிஸ் ஆஃப் சாரிட்டி என்ற அமைப்பை அவர் தொடங்கியது முதல் 1997 இல் மரிக்கும் வரையில் இடையறாது அவரது இதயத்தை அரித்துக் கொண்டிருந்த “அவிசுவாசத்தை’ எழுத்து பூர்வமாகவே பதிவு செய்திருக்கிறார் தெரசா. மிஷனரீஸ் ஆஃப் சாரிட்டீஸின் மூத்த உறுப்பனரும், தெரசாவுக்கு “புனிதர்’ பட்டம் வழங்கவேண்டும் என்ற கோரிக்கையை முன்னெடுத்து வருபவருமான அருட்தந்தை ப்ரியன் கலோடிஜெக் வெளியிட்டுள்ள “அன்னை தெரசாவா என் ஒளியாய் இரு’ என்ற நூலில் தனது நம்பிக்கையின்மையை வெளியிடும் வண்ணம் தெரசா எழுதிய சுமார் 40 இரகசியக் கடிதங்கள் தொகுக்கப்பட்டிருக்கின்றன.

அதிக முக்கியத்துவமின்றி சில ஆங்கில நாளேடுகளில் மட்டும் தெரசா குறித்த இச்செய்தி வெளியாகியிருக்கிறது. தமிழ் ஊடகங்களில் இது பரவலாக வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இயேசுவுக்கு அடுத்தபடியாக ரோமன் கத்தோலிக்கத் திருச்சபையின் மதிக்கத்தக்க குறியீடாகவும், மத நம்பிக்கைகளுக்கு அப்பாற்பட்ட மனிதாபிமானத்தின் சின்னமாகவும், ஐஸ்வர்யா ராய் முதல் அமெரிக்க அதிபர் வரை அனைவரும் போற்றிப் பணியும் தெய்வமாகவும் வனைந்து உருவாக்கப்பட்ட தெரசா என்ற திருஉரு, திடீரென்று நொறுங்கிச் சரிவதை ஆளும் வர்க்கங்கள் விரும்பாததில் வியப்பில்லை.

இக்கடிதங்களை ரோமன் கத்தோலிக்கத் திருச்சபையே வெளியிட்டிருப்பதால் இதை விசுவாசிகள் யாரும் “நாத்திகர்களின் சதி’ என்று கூறி மறுக்க முடியாது. தனது மரணத்துக்குப் பிறகு இக்கடிதங்களை அழித்துவிட வேண்டுமென்று தெரசா கோரியிருந்ததையும் மீறி இவை வெளியிடப்படக் காரணம் என்னவென்று தெரியவில்லை. சிலுவையின் முன்புறத்தில் இயேசுவையும் பின்புறத்தில் உண்மையையும் அறைந்து வைத்திருக்கும் திருச்சபை, உண்மையின் பால் கொண்ட காதலால் இவற்றை வெளியிட்டிருக்காது என்பதை மட்டும் நாம் நிச்சயமாகக் கூறலாம்.

“”இக்கடிதங்களின் காரணமாகப் “புனிதர்’ பட்டம் பெறும் தகுதியை தெரசா இழக்க மாட்டார்” என்று கூறுகிறது வாடிகன். “”இயேசுவும் கூட சிலுவையில் மரிக்குமுன் தன்னைக் கைவிடப்பட்டவராகவே உணர்ந்தார்….. தெரசாவிடம் நாம் காணும் “விசுவாசம் நிரம்பிய மன உறுதி’ என்பது ஒரு காப்பியச் சிறப்பு மிக்க ஆன்மீக வீரம்” என்கிறார் இந்நூலாசிரியர் கலோடிஜெக்.

ஆன்மீகத் துயரம் என்று கத்தோலிக்க குருமார்களால் வருணிக்கப்படும் தெரசாவின் இந்த உளவியல் வேதனை குறித்து பொருள் முதல்வாதிகளாகிய நாம் மகிழவும் தேவையில்லை, வருந்தவும் தேவையில்லை. தெரசாவிற்குள் “தேவன்’ இறங்கியதெப்படி, வெளியேறியதெப்படி என்பதைப் புரிந்து கொள்வதுதான் நம் அக்கறை.

பின்தங்கிய நாடான அல்பேனியாவின் விவசாயக் குடும்பமொன்றில் பிறந்த தெரசா, பரிதாபத்துக்குரிய கன்னியா ஸ்திரீகளின் கூட்டத்தில் ஒருவராக இந்தியாவிற்கு வருகிறார். 1929 முதல் கல்கத்தாவில் பள்ளி ஆசிரியையாகப் பணியாற்றி வந்த தெரசா, 1946இல் ஓய்வுக்காக டார்ஜிலிங் சென்றபோதுதான் அவரில் அந்த “அற்புதம்’ நிகழ்ந்தது.

“”இயேசு என்முன் தோன்றினார். “நீ திறமைகள் ஏதுமற்ற பலவீனமான பாவி என்பதை நான் அறிவேன். அதனால்தான் என்னுடைய புகழைப் பரப்ப உன்னைப் பயன்படுத்த விரும்புகிறேன். நீ மறுப்பாயா?’ என்று கேட்டார். எனவே எனக்கு இந்த ஆசிரியைப் பணி வேண்டாம். நான் நிராதரவான ஆன்மாக்களுக்கு சேவை செய்ய விரும்புகிறேன்” என்று தனது திருச்சபை மேலிடத்திடம் கோரினார், தெரசா. “ஒரு உண்மையான விசுவாசி’ கைவசம் இருப்பதைக் கண்டுகொண்ட ஆர்ச் பிஷப், வாடிகனின் அனுமதியைத் தெரசாவுக்குப் பெற்றுத் தந்தார். 1948இல் கல்கத்தாவில் தொடங்கியது தெரசாவின் “மிஷனரீஸ் ஆஃப் சாரிட்டி.’

இரண்டே மாதங்களில் தெரசாவின் வெறுமையும் விசுவாசமின்மையும் தொடங்கி விட்டன. துன்பங்களற்ற வசதியான பள்ளி ஆசிரியை வாழ்க்கையை 16 ஆண்டு காலம் வாழ்ந்து விட்டு திடீரென தொழுநோயாளிகள் மற்றும் ஆதரவற்ற ஏழைகளின் “பொந்துக்குள்’ வீழ்ந்ததனால் ஏற்பட்ட அதிர்ச்சியும், இந்தச் சூழலை வலியத் தருவித்துக் கொண்டதனால் தன்மீதே தோன்றியிருக்கக் கூடிய வெறுப்பும் தெரசாவிடம் “விசுவாசமின்மை’ துவங்குவதற்குக் காரணமாக இருந்திருக்கலாம்.

“”பரிசுத்த ஆவியின் அழைப்பை ஏற்று குருட்டுத்தனமாக என்னை ஒப்புக்கொடுத்ததன் மூலம் தவறு செய்து விட்டேனோ?” என்று பின்னாளில் அவர் எழுதும் கடிதம் அந்த மனக்காயத்தின் ஆழத்தைக் காட்டுகிறது.

தமது விருப்பங்களை வெளிப்படையாகப் பகிர்ந்து கொள்ள இயலாமல் திருச்சபைச் சூழலில் நிரப்பப்பட்டிருக்கும் போலி ஒழுக்கப் புகைமூட்டம், தவறுகளை வெளிப்படையாகப் பரிசீலனைக்கு உட்படுத்துவதைத் தந்திரமாகத் தவிர்க்கும் பாவமன்னிப்பு முறை, அம்பலப்படாத தனது சுய ஆளுமையைப் பாதுகாத்துக் கொள்ளும் பதற்றம், நெஞ்சில் ஆழப்பதிய வைக்கப்பட்டிருக்கும் தேவதூஷணம் குறித்த அச்சம், ஊன்றி நிற்பதற்குத் தேவையான விசுவாசமோ, திரும்பச் செல்வதற்கான துணிவோ இல்லாததால் தோன்றக்கூடிய விரக்தி.. இத்தகைய சூழலில் சிக்கிக்கொண்ட ஒரு முதிர்கன்னி இதுதான் 1949இன் தெரசா.

தனது வெறுமை குறித்தும், நம்பிக்கையின்மை குறித்தும் தனக்கு உயர் தகுதியில் உள்ள அருட்தந்தைகளுக்கு தெரசா இடையறாமல் கடிதம் எழுதியிருக்கிறார் எனினும், பரிதாபத்துக்குரிய இந்தப் பெண்மணியை விடுவிக்க திருச்சபை முயலவில்லை. மாறாக, அவரைச் சிலுவையில் அறைவதற்கான ஆணியைத்தான் தயார் செய்தது. 1969இல் கத்தோலிக்க மத வெறியனான மால்கம் மக்கரிட்ஜ் என்ற பிரிட்டிஷ் செய்தியாளர் தெரசாவைப் பற்றிய செய்திப் படம் ஒன்றைத் தயாரித்தார். பி.பி.சி இதனை ஒளிபரப்பியது. இருட்டறையில் விளக்குகள் இல்லாமலேயே ஒரு காட்சி பதிவாகியிருப்பதாகவும், அது தெரசா நிகழ்த்திய அற்புதம் என்றும் கூவினார் மக்கரிட்ஜ். தனது விசுவாசமின்மை குறித்து கடிதங்கள் அனுப்பிக் கொண்டிருந்த தெரசாவும், “தானே அடிக்கடி பரிசுத்த ஆவியுடன் பேசுவதாக’ அந்தப்படத்தில் பேட்டியளித்தார்.

1960களின் பிற்பகுதியில் அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் எழுந்த வியத்நாம் போர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் ஏகாதிபத்தியவாதிகளைத் தனிமைப்படுத்தியிருந்தன. மூன்றாம் உலக ஏழைகளுக்கு உதவும் ஒரு கருணை முகத்தை அவர்கள் காட்டவேண்டியிருந்தது. இப்படி உருவாக்கப்பட்டதுதான் தெரசாவின் ஒளிவட்டம். நோபெல் சமாதானப் பரிசு உள்ளிட்ட பரிசுகளை அவர் மீது பொழிந்தது ஏகாதிபத்தியம். தாட்சர், டயானா, ரீகன், பல்வேறு நாடுகளின் பிரதமர்கள், அதிபர்கள்.. என்று தரிசனத்துக்கு வரும் பிரமுகர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது. மெலிந்து சுருங்கிய தோற்றமும், வெள்ளைக் கைத்தறி ஆடையும், ஆதரவற்றோர் சேவையும் தெரசாவை மதச்சார்பு கடந்த ஒரு புனிதத் திரு உருவாக ஏகாதிபத்தியங்கள் முன்நிறுத்துவதற்குப் பயன்பட்டன.

ஆனால் உலகமே கொண்டாடிய அவரது சேவையோ, விருதுகளோ, பணிந்து வணங்கிய பல நாட்டு அதிபர்களோ, இவையனைத்தும் வழங்கியிருக்கக் கூடிய மனநிறைவோ தன்னிடம் இல்லை என்கின்றன தெரசாவின் கடிதங்கள். தெரசாவின் இறைநம்பிக்கை ஏன் தகரவேண்டும்? விசுவாசமில்லாத நிலையிலும் அவர் காட்டிய மன உறுதியை வியக்கிறார் கலோடிஜெக். அவருடைய விசுவாசத்தைப் பறித்தது எது? விசுவாசம் தளர்ந்த பின்னரும் அவருடைய மன உறுதியைத் தாங்கி நின்றது எது?

மாபெரும் தத்துவஞானிகளும், விஞ்ஞானிகளும்கூட “கடவுள்’ தோற்றுவிக்கும் இத்தகைய மனத்துயருக்கு ஆட்படுவதுண்டு. அது அறிவுத்தேடல் தோற்றுவிக்கும் மனத்துயர். அத்தகைய அறிவுத்தேடலின் சாயல் கூட தெரசாவின் கடிதங்களில் இல்லை. அவர் அறிவின் சாயல் கூட எஞ்சியிராத வண்ணம் கத்தோலிக்கத் திருச்சபையின் உலைக்களத்தில் உருக்கி அடிக்கப்பட்ட அடிமை.

நீதியற்ற உலகின் நீதியாய், இரக்கமற்ற உலகின் இதயமாய் கடவுளைச் சரணடையும் மக்களின் மத உணர்வு கூட “”கடவுளே உனக்குக் கண்ணில்லையா” என்று குமுறி நம்பிக்கை இழக்கும். தெரசாவைச் சூழ்ந்திருந்த ஏழைகளும் நோயுற்றவர்களும் அநாதைகளும் வடித்த கண்ணீர் “தேவன் இருக்கிறானா’ என்ற கேள்வியை அவருக்குள் எழுப்பவில்லை.

“”ஏழ்மையைச் சகித்துக்கொள்வதும் கிறிஸ்துவின் துயரத்தோடு அதனைப் பகிர்ந்து கொள்வதும் மிகவும் அழகானது. ஏழை மக்களின் துயரம் இந்த உலகுக்கு பெரிதும் உதவுகிறது என்று நான் கருதுகிறேன்” என்று 1981இல் ஒரு பேட்டியில் குறிப்பட்டார் தெரசா. மிஷனரீஸ் ஆஃப் சாரிட்டி அமைப்பின் சகோதரி நிர்மலா இதை மேலும் தெளிவுபடுத்துகிறார், “”ஏழ்மை என்பது இருக்கத்தான் செய்யும். தங்களுடைய ஏழ்மையை சரியான கோணத்தில் ஏழைகள் புரிந்து கொள்ளவேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம்”. வலியால் துடித்துக் கொண்டிருந்த ஒரு புற்றுநோயாளியிடம் தெரசா பேசுவது படமாகப் பதிவாகியிருக்கிறது, “”சிலுவையில் இயேசு துன்புற்றதைப் போல நீ துன்புறுகிறாய். இயேசு உன்னை முத்தமிடுகிறார் என்று நினைக்கிறேன்” என்கிறார் தெரசா. ஆனால், தான் நோய்வாய்ப்படும்போது இயேசுவால் முத்தமிடப்படுவதை தெரசா விரும்பவில்லை. மன உறுத்தல் ஏதுமின்றி அமெரிக்காவில் மருத்துவம் பார்த்துக் கொண்டார்.

தெரசாவின் இல்லத்தில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுவதாக உலகெங்கும் ஒரு பொதுக்கருத்து உருவாக்கப்பட்டுள்ளது. இது ஒரு வடிகட்டிய பொய். அங்கே வலியால் துடிப்பவர்களுக்கு வலி நிவாரணி மருந்து கூடத் தரப்படுவதில்லை என்ற உண்மையை பல மருத்துவர்கள் அம்பலப்படுத்தியிருக்கின்றனர். கல்கத்தா இல்லத்தைக் காட்டி தெரசா உலகெங்கும் வசூலித்த பல நூறு கோடி ரூபாய்களில் ஒரு மருத்துவமனை கூட அங்கே கட்டப்படவில்லை. மாறாக, 100க்கும் மேற்பட்ட நாடுகளில் ஒயினும் கறியும் புழங்கும் 500 செமினரிகளை அமைத்திருக்கிறார் தெரசா.

இந்த இரக்கமின்மை அவரது தனிப்பட்ட குணாதிசயம் அல்ல. இதுவே ஒரு சித்தாந்தமாக, மதக் கோட்பாடாக அவர் சிந்தனையில் பதிந்திருக்கிறது. இத்தகைய சிந்தனையின் மீதான விசுவாசமின்மை எதையும் அவரது கடிதங்கள் எழுப்பவில்லை என்பதும் கவனத்துக்குரியது.

தெரசாவை அம்பலப்படுத்தும் “நரகத்தின் தேவதை’ என்ற செய்திப்படத்தைத் தயாரித்த கிறிஸ்டோபர் ஹிட்சென்ஸ் கூறுகிறார்: “”தெரசா ஒரு வெகுளி என்றோ புத்திசாலி என்றோ நான் நினைக்கவில்லை. சிக்கலான மனப்பாங்கும் அவருக்குக் கிடையாது. ஆனால் ஒரு வகையான சூழ்ச்சித் தன்மை அவரிடம் இருந்தது. அவர் கத்தோலிக்க வெறி பிடித்த ஒரு கடுங்கோட்பாட்டுவாதி, ஒரு மோசடிப் பேர்வழியும் கூட” என்கிறார். தெரசாவின் மீது மதிப்புக் கொண்டவர்கள் இதனைப் படித்ததும் ஆத்திரப் படலாம். ஆனால் இக்கூற்று ஆதாரமற்றதல்ல.

ஹெய்தி நாட்டின் சர்வாதிகாரியும், அமெரிக்கக் கைக்கூலியுமான டுவாலியரை “”அற்புதமானவர். ஏழைகள் என்னமாய் அவரை நேசிக்கிறார்கள்” என்று வியந்தார் தெரசா. போபால் விஷவாயுப் படுகொலையால் பாதிக்கப்பட்ட மக்களிடம் “”இது ஒரு விபத்தாக இருக்கலாம். மன்னித்து விடுங்கள்” என்று உபதேசித்தார். பங்குச் சந்தை மோசடி மூலம் அமெரிக்க சிறுமுதலீட்டாளர்களிடமிருந்து 250 மில்லியன் டாலர் பணத்தைச் சூறையாடிய கீட்டிங் என்பவனிடமிருந்து நன்கொடை வாங்கினார் தெரசா. “”பாவப்பட்ட மக்களிடம் திருடிய பணம் தன்னிடம் தரப்பட்டால் கிறிஸ்து என்ன செய்திருப்பாரோ அதைச் செய்யுங்கள். பணத்தை மக்களிடம் திருப்பிவிடுங்கள்” என்று அமெரிக்காவிலிருந்து தெரசாவுக்குக் கடிதம் எழுதினார் அரசு வக்கீல். தெரசா பதிலளிக்கவில்லை. மாறாக, “”கீட்டிங்கின் தண்டனையை ரத்து செய்யுங்கள்” என்று நீதிபதிக்குக் கடிதமெழுதினார் தெரசா. பெண்களுக்கு மணவிலக்கு உரிமை இல்லாத அயர்லாந்தில் அது தொடர்பான வாக்கெடுப்பு நடந்தபோது “”மணவிலக்குக்கு ஆதரவாக வாக்களிப்பவர்களுக்கு தேவனிடம் மன்னிப்பே கிடையாது” என்று பிரச்சாரம் செய்தார்; அடுத்த 2 மாதங்களில் டயானாவின் மணவிலக்கை ஆதரித்து கருத்து வெளியிட்டார்.

அரசியல் அறிவற்ற பரிதாபத்துக்குரிய ஒரு கன்னியாஸ்திரீயாக தோற்றம் தந்தாலும், திருச்சபையின் ஆதரவு பெற்ற கொடுங்கோலர்களின் பக்கம்தான் தெரசா எப்போதுமே நின்றார். போராடும் மக்களின் பக்கம் தவறிக்கூட அவர் நின்றதில்லை. அறமோ நேர்மையோ இல்லாத இந்த நடவடிக்கைகள் அவரது விசுவாசிகளையே துணுக்குறச் செய்தன. ஆனால் இவையெதுவும் தெரசாவிடம் மனப்போராட்டத்தைக் கூடத் தோற்றுவிக்கவில்லை.

தெரசாவின் இதயத்தில் தேவன் இல்லையேயொழிய, ஏகாதிபத்தியங்களின் கைக்கருவியான “திருச்சபை’ உறுதியாகவே அமர்ந்திருந்தது. எனவே, திருச்சபையின் ஊழல்கள், ஒழுக்கக் கேடுகள், அறம் வழுவிய செயல்கள் எதுவும் அவருடைய இந்த ஆன்மீக நெருக்கடிக்குக் காரணமாக அமையவில்லை. பிழைப்பதற்குரிய தொழிலாக தேவ ஊழியத்தைத் தெரிவு செய்து கொண்டிருக்கும் விசுவாசமற்ற பாதிரியார்களிடமிருந்து இந்த விசயத்தில் தெரசா எந்த வகையிலும் வேறுபட்டவராக இல்லை.

தனக்கே விசுவாசமில்லாத ஒன்றின்மீது மற்றவர்களை விசுவாசம் கொள்ளச் செய்யும் மோசடியில் தெரசாவும் ஈடுபட்டிருக்கிறார். தான் இறந்த பிறகும் தன்னிடம் நிலவிய விசுவாசமின்மையை வெளியிட வேண்டாமென்ற அவரது கோரிக்கை, அவரது சிந்தனையில் ஊறியிருந்த கூச்சமற்ற போலித்தனத்தையே காட்டுகிறது.

ஆதரவற்றவர்கள் மீது அன்பு காட்டுவதற்காக அவர் தொடங்கிய சேவையே அவரது இதயத்திலிருந்து அன்பை உறிஞ்சி எடுத்துவிட்டது. ஏழ்மையை உற்பத்தி செய்யும் சமூக அமைப்பை ஒழிக்கத் துடிப்பவர்களிடம் மட்டுமே ஏழைகள் மீதான அன்பு இடையறாமல் சுரக்க முடியும். ஏழ்மையின் துயரத்தில் கிறிஸ்துவைக் காண்பவர்களால் ஏழைகளை நேசிக்க முடியாது.

கிறிஸ்துவை நேசிக்கும் பொருட்டுத்தான் தெரசா ஏழைகளை நேசித்தார். எந்த அளவுக்கு ஏழ்மையும் துயரமும் அவருக்கு உணர்ச்சியற்றவையாக ஆகத்தொடங்கினவோ, அதே அளவுக்கு கிறிஸ்துவும் அவருக்கு உணர்ச்சியற்றவரானார். ஆனால், “”விசுவாசத்தை இழக்க இழக்க, மேலும் தீவிரமான விசுவாசியாகத் தன்னை அவர் காட்டிக்கொண்டார். தன்னைக் குணமாக்கிக் கொள்ள தெரசா செய்த இந்த முயற்சி, தனக்குத் தானே அவர் வெட்டிக் கொண்ட படுகுழியை மேலும் ஆழப்படுத்தியிருக்கும்” என்கிறார் ஹிட்சென்ஸ்.

தன்னில் கிறிஸ்து இறங்கியதாக கருதிக்கொண்ட அந்த மாயக்காட்சி (Hallucination) அனுபவம் இன்னொரு முறை நிகழுமென்று தெரசா எதிர்பார்த்திருக்கக் கூடும். ஆனால் 1946இல் இருந்தது போல “திறமைகள் ஏதுமற்ற பரிதாபத்துக்குரிய முதிர்கன்னியாய்’ தெரசா இல்லையே! நிர்வாகம், நன்கொடை, விருதுகள், விமானப்பயணங்கள், தொலைக்காட்சிக் காமெராக்கள், பிரமுகர்களுடனான சந்திப்புகள் என அவரது வாழ்க்கை விரிந்து விட்டது. பொய்மை, இரட்டை வேடம், நேர்மையின்மை, அநீதியை அரவணைத்தல் என எல்லாத் தீமைகளும் அவர் இயல்பில் சேர்ந்து விட்டன.

எனினும், தெரசாவுக்குள் மிச்சமிருந்த அந்த அல்பேனிய முட்டாள் பெண் அவ்வப்போது விழித்துக் கொண்டு ஏசுவைத் தேடியிருக்கிறாள். ஆனால், தேவனைக் கதறி அழைக்கத் தேவைப்படும் கையறு நிலை தெரசாவின் வாழ்க்கையிலிருந்து அகன்று விட்டது. எவ்வளவு முயன்றும் அந்த மாயக்காட்சியை இன்னொருமுறை அவரால் தன்னில் தருவிக்க முடியவில்லை.

எனக்கு ‘மதம்’பிடிக்காது!


எங்கள் வீட்டுக்கு அருகாமையில் இருக்கும் பேருந்து நிறுத்தத்தின் முகப்பில் பெரியாருடைய வாசகமொன்று எழுதப்பட்டிருக்கிறது. ‘பக்தி வந்தால் புத்தி போய்விடும்; புத்தி வந்தால் பக்தி போய்விடும்’ என்பதுவே அது. அவ்வாசகத்தைக் கண்ணுறும்போதெல்லாம் ஒரு குறுஞ்சிரிப்பு முகம் முழுக்கப் பரவும். ‘பெரியாரே! நீங்கள் மகாகுசும்புக்காரர்’ என்று செல்லமாக மனதுள் சொல்லிக்கொள்வேன். பெரியாரோடு நெருக்கமாவதற்கு உந்துதலாக அமைந்த ‘வீடு தேடும் படலத்திற்கு’நன்றி.

சிறுவயதிலிருந்தே ஒரு கெட்டபழக்கம். அதாவது யாராவது எதையாவது ரொம்பவுந்தான் தூக்கிப் பிடித்தால், ‘அதை’நான் மறுதலித்துவிடுவேன். அப்படி மறுக்கப்பட்டவையும் வெறுக்கப்பட்டவையும் நிறைய உண்டு. ஒரே விதிவிலக்காக அப்பாவும் அண்ணாவும் புத்தகங்களுக்குள்ளேயே தலையைப் புதைத்துக்கொண்டிருந்தபோதிலும், அவற்றில் எனக்கு ஒவ்வாமை ஏற்படவில்லை. அம்மா ஒரு சைவப்பழம். நமக்கெல்லாம் புத்தகங்கள்போல அவருக்கு சாமி. செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் விரதம் மற்றும் கோயில் நிச்சயமாக உண்டு. அந்நாட்களில் வீடு கழுவப்பட்டு, சாம்பிராணிப் புகை சுழன்றுகொண்டிருக்கும். அம்மா நடுங்கிய குரலில் தேவாரம் கதைத்துக்கொண்டு வேலைகளைச் செய்வார். அம்மா எங்களை அதிகம் சோதிக்கவிடாமல், அப்பா சுசீலாவையோ சௌந்தரராஜனையோ பாடவிட்டுவிடுவார். பக்திப்பாடல்கள் வீடெல்லாம் கரைபுரண்டு ஓடுகையில் சாமி மீது கொஞ்சூண்டு பக்தி வந்து மெல்லிய பரவசமாக உணர்வோம். ‘புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே..’என்ற பாட்டு எனக்கு மிகவும் பிடித்தது. செவ்வாய் தவிர, வெள்ளிக்கிழமை விரதம் பிடிப்பதற்கு ஒத்திகையாக வியாழக்கிழமையும் மச்சம் (புலாலுணவு) தவிர்க்கப்படும்.

நாய், பூனைகள் உட்பட வீட்டிலுள்ள அனைவரும் அந்நாட்களில் அம்மாவுடன் சேர்ந்து விரதம் இருந்தாக வேண்டிய நிர்ப்பந்தம். அப்பா மகா நக்கல்காரர். அதிலும் அம்மாவை நக்கலடிப்பதென்றால், ஒரு முழுப்போத்தல் சாராயத்தை அவரிடம் அப்படியே தூக்கிக்கொடுத்து ‘உங்களுக்கேதான்’என்று சொல்வதற்கிணையான ஆனந்தம். ‘ஒரு குடிமகனின் சரித்திரம்’என்ற எனது பதிவில் இடம்பெற்ற மணியம் மாமாவில் அப்பாவின் சாயலும் இருக்கும். அப்பா சொல்வார்:

“இன்று பொன்னியும் விரதம். ஆனா அது கொம்மாவைப்போல நல்ல சீலையாப் பாத்து உடுத்துக்கொண்டு கோயிலுக்குப் போகேலாது”என்று.பொன்னி என்பது எங்களது நாயின் பெயர். அதற்கு ஏழு வயதாகிறது. “கொம்மா சொர்க்கத்துக்குப் போகேக்குள்ள பொன்னி உட்பட நாங்கள் எல்லாரும் அவவின்ரை வாலைப் பிடிச்சுக்கொண்டு சொர்க்கத்துக்குப் போயிடலாம்.”என்பார்.

தற்கொலை செய்து இறந்துபோன எனது சகோதரியின் நினைவுநாளன்று அம்மா மோட்சார்ச்சனை (மோட்சம் என்றால் சொர்க்கமென அறியாதவர் அறிக) என்றொரு அர்ச்சனை செய்வார். அதற்கு சில நூறுகள் செலவாகும். அந்த நூறுகளைத் தன்னிடம் தராமல் ஐயரிடம் அம்மா கொடுப்பதில் அப்பாவுக்கு வருத்தமான வருத்தம். அவர் சொல்வார்:

“எவ்வளவு காசுக்கு மோட்சார்ச்சனை செய்யிறமோ அந்தக் காசுக்கு அளவா சொர்க்கத்துக்குப் பக்கத்திலை போகலாமாம்.”

அம்மாவின் கனவில் சாமிகளாக வருவர்.

“நல்ல கடுஞ் சிவப்பு நிறத்திலை சீலை கட்டிக்கொண்டு நெத்தியிலை பெரிய குங்குமப்பொட்டும் வைச்சுக்கொண்டு தலையை விரிச்சுப்போட்டு அவ வாசலிலை வந்து நிக்கிறா… சிரிப்பெண்டால் அப்பிடியொரு சிரிப்பு… வாங்கோ எண்டு கூப்பிடுறன். வாசலிலையே நிக்கிறா…”என்று அம்மா மெய்சிலிர்க்கும் பரவசத்தோடு கனவை மீள்ஞாபகித்துக்கொள்வார்.

இளம்வயதில் தன்னை மோகினிப்பேய்கள் துரத்தியதாக அப்பா பதிலுக்குக் கதைவிடுவார்.

கடவுளரும் பேய்களும் விருத்தெரியாத சின்னவயதில் சுவாரசியம் தந்தார்கள். இப்போதில்லை.

அம்மாவின் அதிதீவிரமான பக்தியும் அதைக்குறித்த அப்பாவின் பார்வையும் மதம் குறித்த எனது சிந்தனைகளை வடிவமைத்தன. (இதைக் கட்டமைத்தன என்று சொல்லவேண்டுமோ…) சடங்குகள் பெரும்பாலும் பாசாங்குகளாக இருக்கக் கண்டோம். தீபா தனது பதிவில் குறிப்பிட்டிருந்ததைப் போல திருவிழா நாட்களில் கோயில்பக்கம் மறந்தும் போவதில்லை. பளபள சேலைகளும் நகைகளும் அர்ச்சகர்களின் பாரபட்ச பந்தாக்களும்… அர்ச்சனைச் சீட்டுக் கட்டணத்தொகைக்கேற்ப காட்டப்படும் தரிசனங்களும் கழுத்தில் விழும் மாலைகளும்… ஏழைகளின் கடவுள் இல்லை அவர்! இதை நான் திருச்செந்தூரில் கண்ணால் பார்த்து வெதும்பியிருக்கிறேன். எங்களுக்கு முன்னால் ஏழ்மைக்கோலத்தில் பரட்டைத் தலையோடு ஒரு பெண் திருநீறுக்காக கையை நீட்டிக்கொண்டே இருந்தார். நிமிடங்கள் கழிந்தும் அர்ச்சகரின் கண்களில் அந்தப் பெண் தட்டுப்படவேயில்லை. எங்கள் கையில் இருந்த திருநீறை நீட்டியபோது வாங்கி நெற்றியில் வைத்துக்கொண்டு கல்லில் உறைந்திருந்த சாமியை ஒரு ‘பார்வை’பார்த்துவிட்டுப் போனார். கலங்கியிருந்த அந்தக் கண்கள் இன்னமும் நினைவிலிருக்கின்றன. ‘கல்லே… உனக்கும் கண்ணில்லையா?’என்ற சீற்றத்தை அதில் பார்த்தேன்.

கனடாவில் நான் இருந்தபோது கதவுதட்டும் மதவியாபாரிகளை என் கணவர் வாசலிலேயே நிறுத்தி அனுப்பிவிடுவார்.

“மதத்தினால் எத்தனை நாடுகளில் எவ்வளவு மனிதர்கள் கொல்லப்பட்டார்கள் என்பதை நீங்கள் அறியமாட்டீர்களா…? எங்களுக்கு மதம் அவசியமில்லை”என்று, அவர்களிடம் அவர் சொல்லவும் தவறியதில்லை.

சாதியும் மதமும் இல்லாமல் இப்பூவுலகில் நிச்சயமாக வாழ்ந்துவிடமுடியும் என்றே நினைக்கிறேன். ‘விரதம் பிடி… விரதம் பிடி’என்று சொல்லிக் களைத்த அம்மா இப்போது ‘வெள்ளி, செவ்வாயிலும் மச்சம் சாப்பிடுறியாமே…’என்று ஆதங்கத்தோடு தொலைபேசியில் கேட்குமளவுக்கு இறங்கிவந்திருக்கிறார். விரதம் என்பது உடலின் சீரண உறுப்புகளுக்கு ஓய்வு என்பதாகத்தானே இருக்கமுடியும்? அது தன்னை வருத்துவதாக மாறுவதை எப்படி ஏற்றுக்கொள்ளமுடியும்? அம்மாவின் பேச்சைக் கேட்டு விரதம் பிடித்த நாட்களில் எல்லாம் சாப்பாட்டு நினைவாகவே இருக்கும். ‘எப்போதடா இலையின் முன் அமர்வோம்…’என்ற நினைவன்றி வேறேதும் இருந்ததில்லை.

“எலும்பைக் கழிச்சுப் பாத்தால் பதினைஞ்சு கிலோவும் வராது. வாயால் இயங்குற ஆள்… விரதமெல்லாம் ஏன்… மனசு சுத்தமாயிருந்தால் போதும்”என்ற வார்த்தைகளை ஆஸ்பத்திரியில் வைத்து அப்பா சொன்னார். ‘கந்தசஷ்டி பிடிக்கிறேன் பேர்வழி’ என்று ஆறு நாட்களும் விரதமிருந்து மயங்கிவிழுந்துகிடந்த அம்மாவைப் பார்த்தபடி சொன்ன வார்த்தைகள் அவை.

ஆனாலும், சாமியை அப்படியொன்றும் அம்போவென்று விட்டுவிட என்னாலும் முடிந்ததில்லை. சாமி என்னை அம்போவென்று விட்டுவிடுமோ என்ற உள்ளார்ந்த பயம் காரணமாக இருக்கலாம். ஒவ்வொரு நாட்களும் காலையில் எழுந்ததும் அம்மன் முகம் பார்த்து ஒரு நொடி வணக்கம் போடுவதுடன் எனது வழிபாடு முடிந்தது. சாப்பிடப் போவதன் முன் சாமிக்கு அவசியம் நன்றி சொல்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறேன். ஏனெனில், பசி என்பது அதிபயங்கரமானது என நான் அனுபவபூர்வமாக அறிந்திருக்கிறேன். என்னிடம் ஒரு அம்மன் படம், ஒரு அன்னைவேளாங்கன்னி சொரூபம் (மூன்றங்குல உயரம்)இருக்கின்றன. நான் மதுரை போனால் இரண்டுபேரும் என்னோடு வருவார்கள். சேலம் போனால் சேலத்திற்கு வருவார்கள். கனடா, ஈழம் இங்கெல்லாம் இந்த இரண்டு தோழியரும் பயணச்சீட்டு எடுக்காமல் என்னோடே பயணிப்பார்கள். தாங்கமுடியாத தனிமையும் துயரமும் பொங்கியெழும் நேரங்களில் மனிதர்களிடம் அதைப் பகிர்ந்துகொள்வதில்லை. ஓரிரு நிமிடங்கள் இந்த இரண்டு பேரிடமும் சொல்லியழுதால் மனசு இலேசாகி அடுத்த வேலை பார்க்கப் போய்விடுவேன். துக்கம் கண்ணீராக வெளித்தள்ளப்படும்போது மனம் இலேசாவது எல்லோருக்கும் இயல்பே. எனக்கென்னவோ ஆண் சாமிகளைப் பிடிப்பதில்லை. அதற்கு பெண்ணியம் ஆணியம் மண்ணீயம் என்ற உள்ளர்த்தங்கள் ஒன்றும் கிடையாது.

திருவிழா தவிர்ந்த ஏனைய நாட்களில் கோயில்கள் அத்தனை அழகாயிருக்கும்! விபூதியும் பூக்களும் கற்பூரமும் கலந்தொரு வாசனை வீசும் பிரகாரத்தின் படிகளில் அமர்ந்து அரசிலைகள் அசைவதைப் பார்த்துக்கொண்டேயிருக்கப் பிடிக்கும். மனதுள் பெருவெளியொன்று விரிந்து விரிந்து செல்லும். உலகத்தின் கசடுகள் எல்லாவற்றையும் கடந்து எல்லாவற்றையும் எல்லோரையும் நேசிக்கவேண்டுமென்ற தாபம் பெருகிடும் நேரமது. அந்த அமைதிக்குப் பெயர் என்னவென்று அறிந்துகொள்ள முற்பட்டதில்லை. ஒருவேளை அந்த அமைதியின் பெயர்தான் கடவுளோ…?

மதத்தின் பெயரால் நடக்கும் பித்தலாட்டங்களை, படுகொலைகளை, சித்துவேலைகளை, மக்களின் அறியாமையைப் பயன்படுத்தி நடக்கும் கொள்ளைகளைப் பார்க்குந்தோறும் மதத்தைத் தூக்கியெறியத் தோன்றுகிறது. அதேசமயம், ஏதோவொரு சக்தி நமக்கு மேல் இருக்கிறது; அதுவே நம்மை இயக்குகிறது என்ற பயம் இல்லாமல்போவது ஆரோக்கியமானதல்ல; அப்படி ஒன்று இல்லையெனில் தறிகெட்டலைவோம் என்றும் தோன்றுகிறது. சரி-பிழை என்ற இருவேறுபட்ட மனோநிலைகளில் தத்தளிப்பது எல்லோருக்கும் நேரக்கூடியதே.

நாத்திகவாதி அன்றேல் ஆத்திகவாதி என்று நம்மை முத்திரை குத்திக்கொள்ள வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது? ‘நான் இன்னார்தான்’என்று பிரகடனப்படுத்தவேண்டிய தேவை இல்லை. இந்த வாழ்க்கை விடுவிக்கமுடியாத புதிர்களைக் கொண்டது. அதனாலேயே அது சுவாரசியமானதாகவும் இருக்கிறது.

பெரியாரைப் படிக்கவாரம்பித்திருக்கிறேன். அந்த மிகப்பெரிய ஆளுமையிடமிருந்து நான் நிறையத் தெரிந்துகொள்வேன். யார் கண்டது? எதிர்காலத்தில் நானொரு மிகச்சிறந்த கடவுள்மறுப்பாளியாக மாறவும்கூடும். ‘நாத்திகன்…நாத்திகன்…’என்கிறார்கள். கடவுளை மறுக்கும் பெண்களை எப்படி அழைப்பது?

திராவிடத்திற்கு எதிரான நாம் தமிழர்கள் …


‘நாம் தமிழர்’ என்ற பெயரில் ஓர் அரசியல் கட்சி 18.5.2010 அன்று மதுரையில் அறிவிக்கப்பட உள்ளது. அதற்கான பரப்புரைகளும், விளம்பரங்களும், அறிக்கைகளும் அவ்வியக்கத் தோழர்களால் முனைப்புடன் பரப்பப்படுகின்றன. அவர்களோடு சேர்ந்து விளம்பரப்படுத்த அல்ல நாம் இதை எழுதுவது! பின் எதற்கு?

விளம்பர அறிக்கை தாங்கி நிற்கும் சில செய்திகளைப் பற்றிய நமது கருத்துகளைத் தெரியப்படுத்த, தெளிவுபடுத்தத்தான் இதை எழுத நேர்ந்தது.

தோழர் சீமான் நமது பெரியார் திராவிடர் கழக மேடைகளில் பெரியாரின் கருத்துகளை சிறப்பாக, அழுத்தமாக பேசி வந்தவர்தான். ஈழ விடுதலையில் அவர் கொண்டுள்ள அக்கறையும், ஆர்வமும் போற்றத்தக்கதுதான். நமது இயக்கத்தோழர்களிடம் நல்லுறவும், இயக்க முன்னணியினரிடம் பெரு மதிப்பும் கொண்டவர்தான்.

ஆனாலும், தங்க ஊசி என்பதற்காக கண்ணைக் குத்தும்போதும் நாம் அமைதியாக இருந்துவிட முடியாது; இருந்துவிடக் கூடாது.

அதுவும் குறிப்பாக “அறிஞர்” குணாவின் பாதையில் ‘தமிழர் – தமிழரல்லாதவர்’; ‘திராவிடர் – திராவிடம்’ பற்றி அவர் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிற கருத்துக்களை நாம் உரிய வகையில் விளக்கவும், அப்பொய்மைகளை அம்பலப்படுத்தவுமான கடமை நமக்கு உண்டு; நமக்கு மட்டுமே உண்டு. எனவேதான் இதை நாம் எழுதலானோம்.

தமிழர்கள், திராவிடர்கள் பற்றிய விரிவான ஆராய்ச்சிகளை ‘நாம் தமிழர் இயக்கம்’ மேற்கொண்டிருக்கிறது. ‘நல்ல தமிழர்களை’ அவர்கள் தேடிக் கிளம்பியிருக்கிறார்கள்.

ஆனால், அவர்களின் தமிழர் அடையாள ஆராய்ச்சியின்படி ஈழ விடுதலைக்கும் விடுதலைப்புலிகளுக்கும் பேருதவி செய்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.இராமச்சந்திரனைக்கூட ஒப்புக் கொள்ள மாட்டார்கள். அவர் பிறப்பால் மலையாளி என்பதால் ‘திராவிடராகி’ விடுகிறார். நான்காவது ஈழப்போரின் இறுதிக் கட்டத்தில், ஈடில்லாத போராட்டங்களை நடத்திய கோவை இராமகிருட்டிணன், பேராசிரியர் சரசுவதி ஆகியோர்கூட, அவர்கள் கண்களுக்கு ‘நல்ல தமிழர்களாக’ புலப்படவில்லை.

ஆங்கிலேயர் கால்டுவெல் கண்டுபிடித்த சொல்லான திராவிடத்தை எப்படி ஏற்க முடியும் என்ற வாதங்களையெல்லாம் முன் வைக்கிறார்கள். ‘கால்டுவெல்’ என்ற ஆங்கிலேயரின் கண்டுபிடிப்புகளையெல்லாம் ஏற்கக் கூடாது என்று அவர்கள் ‘ஆராய்ச்சி’கள் கூறினாலும், சீமான் என்ற வடமொழிப்பெயரை சூட்டிக் கொண்டுள்ளதற்காக அவரை, நாம் தமிழன் இல்லை என்று சொல்லப் போவதில்லை. அவர்களின் ஆராய்ச்சியை சீமானுக்கு நாம் பொருத்திப் பார்க்கத் தயாராக இல்லை.

ஒன்றைத் தெளிவுபடுத்த விரும்புகிறோம். ‘திராவிட’ என்ற சொல்லை தங்களுடன் இணைத்துக் கொண்டதற்காகவே கலைஞர் கருணாநிதியையோ, விஜய்காந்தையோ, ஜெயலலிதாவையோ நாம் தூக்கி சுமப்பவர்கள் அல்ல.

கலைஞர்கூட ஒரு காலத்தில் அவர் சார்ந்த சமூகப் பார்வையோடு ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காக திராவிடர் இயக்கத்துக்கு வந்தவர்தான். இன்று அவரிடம் அந்த சமூகப் பார்வை எல்லாம் காணாமல் போய் பெரு முதலாளிகளின் வர்க்கப் பார்வைக்கு வந்துவிட்டார்.

ஜெயலலிதா எப்போதுமே தமிழினத்துக்கு எதிரிதான். இந்த சக்திகள் அரசியல் களத்திலிருந்து ஒதுக்கப்பட்டு, தமிழர்களுக்கான புதிய அரசியல் சக்தி ஏதேனும் தோன்றாதா என்று உண்மையாக ஏங்கும் தமிழர்கள் ஏராளம் உண்டு. விஜய்காந்த் போன்ற குழப்பவாதிகளைவிட சீமான் போன்றவர்கள் அரசியல் களத்துக்கு வரட்டுமே என்ற எண்ண ஓட்டமும் நமக்கு உண்டு.

ஆனால், புதிதாக புறப்பட இருக்கிற ‘நாம் தமிழர்’ தமிழர்களை ஆரிய எதிர்ப்பாளர்களாக அடையாளப்படுத்திய பெரியாரின் பார்வையைத் தூக்கி எறிந்துவிட்டு, திராவிடர் எதிர்ப்பாளராக அடையாளப் படுத்துவதில் முனைப்புக் காட்டத் தொடங்கிவிட்டது.

பெரியார் முன்னிறுத்திய ‘திராவிடர்’ என்பது தமிழர்களுக்கான – தமிழர்களை பார்ப்பனிய அடிமைப் பண்பாட்டிலிருந்து மீட்டெடுக்கும் குறிச்சொல் என்ற அடிப்படை உண்மையையே திசை திருப்பி, அது ஏதோ கேரளா, கர்நாடக, ஆந்திர மாநிலத்தில் வாழும் இனங்களிடம் தமிழர்களை அடிமைப்படுத்துவதாக ஒரு சித்திரத்தை தீட்டிக் காட்ட படாதபாடுபடுகிறார்கள். இதில் அளவில்லாத மகிழ்ச்சி ஆரியத்துக்குத் தான்.

‘அப்பாடா, நாம் தமிழர் வந்துவிட்டது; இனி நமக்கு ஆபத்தில்லை’ என்று அவாள் கூட்டம், மகிழ்ச்சியில் கூத்தாடக் கூடும். தமிழருக்கு அன்றும் இன்றும் என்றும் கேடானது ஆரியம். அதற்கு அரண் அமைத்துக் கொண்டிருப்பது இந்தியம்; உண்மையில் தமிழர்கள் மீதுசுமத்தப் பட்டுள்ள ஒட்டு மொத்த அடிமைத்தனங்களுக்கும் எதிரான பண்பாட்டுப் புரட்சியை முன்னெடுக்கும் வலிமையான போர்வாள் திராவிடர் – திராவிடம் என்ற லட்சியச் சொல்; ஆனால், ‘நாம் தமிழருக்கு’ அவைகள் கசக்கின்றன.

தமிழ்நாட்டைத் தவிர, பிற மொழிக்காரர்கள் வேறு எந்த மாநிலத்திலாவது முதல்வரானது உண்டா என்றெல்லாம் கேட்கிறார்கள். அடக்கத்துடன் நாம் நினைவூட்டுகிறோம். பக்கத்து நாடான கன்னட நாட்டில் தரம்சிங் என்ற மராட்டியர் முதலமைச்சராக இருந்திருக்கிறார்.

‘நாம் தமிழர்’ அமைப்புத் தோழர்கள் பலரின் சட்டைகளை அலங்கரித்துக் கொண்டிருக்கும் சேகுவேரா கூட அர்ஜென்டினாவில் பிறந்தவர் தான் . அவர் கியுபா விடுதலைக்குப் போராடினார். அத்துடன் நிற்கவில்லை.பொலிவியா விடுதலைக்கும் போராடச் சென்றார். ‘நாம் தமிழர்’ அமைப்பின் திராவிடர் எதிர்ப்புக் கோட்பாட்டைப் பொருத்திப் பார்க்கும்போது, சேகுவேராவும் கூட கியூபாவின் அன்னியர் தானே?

இனி அவர்கள் பார்வையில் ப. சிதம்பரம், சோழவந்தான் சுப்ரமணியசாமி, புதுவை நாராயணசாமி எல்லாம் திராவிடர் அல்லாத “நல்ல தமிழர்”களாகி விடக் கூடும்.

எங்கள் எதிர்ப்புக்கு கவிதை என்று பெயர் வை!


“என் கவிதைக்கு எதிர்ப்பு என்று பெயர் வை” என்ற படாடோபமான தலைப்பின கீழ், சீமாட்டி லீனாவையும் அவருடைய கவுஜையையும் காப்பாற்ற, கருத்துரிமைக் காவலர் அ.மார்க்ஸ் தலைமையில் ஏப்ரல் 15 ஆம் தேதி ஒரு கூட்டம் நடந்தது.

போலீசால் குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட (இந்து மக்கள் கட்சிக்காரன் கொடுத்த்து) ஒரு புகார், சில இணைய தளங்களில் லீனாவின் எழுத்துக்கு எதிராகப் பரவிவரும் கலாச்சார அடிப்படைவாதம் – இதுதான் தமிழகத்தில் படைப்பாளிகளைச் சூழ்ந்து வரும் பேராபத்தாம். இதற்காக ஒரு கண்டனக் கூட்டம்.

சீமாட்டி லீனாவின் மார்க்கெட்டிங் டெக்னிக்குகள் எழுத்தாளர் உலகில் ஏற்கெனவே பிரசித்தம் போலும்! பலரும் கழட்டிக் கொள்ளவே, விவகாரம் அ.மார்க்சின் மானப்பிரச்சினையாகி விட்டது. ஒண்ணரை கவிதை எழுதினவன், சரக்கடித்து விட்டு மூளையிலிருந்து கவிதை வெளியேறுவதற்காக காத்திருப்பவன், படைப்பாளிகளுடன் சரக்கைப் பகிர்ந்து கொண்டதனாலேயே படைப்பாளி ஆனவன்.. உள்ளிட்ட ஒரு லிஸ்டு தயாராகி விட்டது.

அதில் சில பேரைத் தொடர்பு கொண்டு “ஐயா இது நீங்க எழுதின கவிதைதானா” என்று கேட்டோம். அவர்களோ “எனக்குத் தெரியவே தெரியாது. இது மண்டபத்தில எவனோ செய்த சதி” என்று பதறினார்கள். இப்படி ‘அறிந்தும் அறியாமலும், தெரிந்தும் தெரியாமலும்’ பட்டியலில் சேர்க்கப்பட்டவர்கள், முக தாட்சண்யத்துக்கு அஞ்சி வந்து விட்டு, நாற்காலியில் உட்காரவும் முடியாமல், எழுந்திருக்கவும் முடியாமல் நெளிந்து கொண்டிருந்தவர்கள்.. என மொத்தம் 50 பேர் இருக்கும். மீதி 50 பேர் ம.க.இ.க தோழர்கள், ஆதரவாளர்கள்.

கம்யூனிசத்தையும், அதன் தலைவர்களையும், கம்யூனிஸ்டுகளையும் இழிவுபடுத்தி லீனா எழுதியிருந்த கவுஜைக்கு விளக்கம் கேட்டு ம.க.இ.க தோழர்களும், பெண்கள் விடுதலை முன்னணி தோழர்களும் அந்தக் கூட்டத்தில் கேள்வி எழுப்பினார்கள். பதில் கிடைக்கவில்லை. அல்லக்கைகளின் ஊளைச்சத்தமும், வசவுகளுமே பதிலாகக் கிடைத்தன. ஆவேசமாக அடிக்க வந்தார் சீமாட்டி லீனா.

இருந்த போதிலும் கூட்டத்தை தடுத்து நிறுத்துவதோ, கலகம் செய்வதோ அங்கு சென்ற தோழர்களின் நோக்கமாக இருக்கவில்லை. எழுப்ப வேண்டிய கேள்விகளை மட்டும் உரையாகவும், இறுதியில் முழக்கமாகவும் எழுப்பி விட்டு அமைதியாக அரங்கை விட்டு வெளியேறினார்கள் தோழர்கள்.

கூட்டத்தலைவர் அ.மார்க்சுக்கோ, அரங்கத்தின் நாற்காலிகள், ஜன்னல்களுக்கோ, மிக முக்கியமாக கவுஜாயினி லீனாவின் மேக்கப்புக்கோ எவ்வித சேதாரமும் ஏற்படவில்லை. “கலாச்சார போலீசிடமிருந்து” படைப்பாளிகளைப் பாதுகாப்பதற்காக வரவழைக்கப்பட்டிருந்த காக்கிச் சட்டைப் போலீசுக்கு ‘படைப்புச் சுதந்திரத்தை’ காப்பாற்றத் தடியடி நடத்தும் வேலையும் இல்லாமல் போயிற்று. இது கதைச்சுருக்கம்.

தோழர்கள் அரங்கை விட்டு வெளியேறிய பின்பு, “ம.க.இ.க காரர்கள் செய்ததிலேயே முட்டாள்தனமான காரியம் இதுதான்” என்று தோழர்களின் நடவடிக்கை பற்றிக் கருத்துரைத்தார் அ.மார்க்ஸ்.

அதென்னவோ உண்மைதான். “தோழர்களை அடிப்பதற்கு ஓங்கின லீனாவின் கையை அங்கேயே முறிக்காமல் வந்தது முட்டாள்தனம்” என்றுதான் அரங்கை விட்டு வெளியே வந்த பெண் தோழர்கள் குமுறினார்கள்.

என்ன செய்வது சீரங்கம் கருவறை நுழைவுப் போராட்டத்தில் கூட இப்படித்தான் நடந்தது. கருவறையில் நுழைந்த தோழர்கள் பட்டாச்சாரிகளையும் கைத்தடிகளையும் நாலு தட்டு தட்டி உருட்டி விட்டார்கள். எவனாவது செத்துத் தொலைஞ்சால் அப்புறம் கருவறைப் பிரச்சினை கல்லறைப் பிரச்சினை ஆகி, காரியம் கெட்டு விடும் என்பதால், “அடி வாங்கினாலும் பரவாயில்லை. திருப்பி அடிக்க வேண்டாம்” என்று தோழர்கள் நிறுத்திக் கொண்டார்கள். அப்புறம்தான் பாப்பான்கள் தம் “வீரத்தை” காட்டினார்கள்.

அங்கே பாப்பான்கள் காட்டிய வீரத்துக்கும் இங்கே படைப்பாளிகள் காட்டிய வீரத்துக்கும் பெரிய வித்தியாசம் கிடையாது. ரெண்டும் ஒண்ணுதான்.

இருந்த போதிலும், அரங்கத்தில் ஊளையிட்ட அல்லக்கைகளும் தோழர்கள் வெளியேறிய பின்னர் மேடையில் வீரவசனம் பேசியவர்களும் வேறுவிதமாக நினைத்துக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது. அவசரப் படாதீர்கள். அடுத்த கூட்டத்தில் சந்திக்காமலா போய்விடுவோம்?

இனி அ.மார்க்சிடம் வருவோம். “ம.க.இ.க வினர் முட்டாள்கள்” என்ற சான்றிதழை வழங்கியதற்காக அ.மார்க்சுக்குப் பெரிதும் நன்றி பாராட்டக் கடமைப் பட்டிருக்கிறோம்.

மாவோயிஸ்டுகள் தேசத்துரோகிகள் என்கிறார் ப.சிதம்பரம். இதைவிட கவுரவமான சான்றிதழை மாவோயிஸ்டுகளுக்கு யாரேனும் தர இயலுமா? ஒருவேளை சிதம்பரம் மாதிரியான நபர்கள் மாவோயிஸ்டுகளை “தேசபக்தர்கள்” என்று சொல்லியிருந்தால் எவ்வளவு மானக்கேடாக இருந்திருக்கும் – யோசித்துப் பாருங்கள்!

“மார்க்சியமே முட்டாள்தனமான சித்தாந்தம்” என்பதுதான் அறிஞர் அ.மார்க்சின் கருத்து. எனவே முட்டாள்கள்களாகிய நாங்கள் முட்டாள்தனமான காரியங்களில் ஈடுபடுவதில் வியப்பில்லைதானே!

இனி, முட்டாள்கள் அறிவாளிகளை எதிர்கொண்ட முறை பற்றியும் அறிவாளிகளின் நடத்தை பற்றியும் பார்ப்போம்.

கூட்டம் தொடங்குவதற்கு முன்னரே கூடியிருந்தவர்களிடம் துண்டறிக்கையை விநியோகித்திருந்தார்கள் தோழர்கள். இந்து மக்கள் கட்சியை எதிர்த்து நடத்தப்படுவதாக கூறப்படும் இந்தக் கூட்டம், உண்மையில் ம.க.இ.க வை எதிர்த்து நடத்தப்படுவதுதான் என்பதை அந்த துண்டறிக்கையில் கூறியிருந்தோம். அதன் அடிப்படையில் கூட்டத்தினருக்கும் பேச்சாளர்களுக்கும் சில கேள்விகளை எழுப்பியிருந்தோம்.

அ.மா பேசத் தொடங்கினார். “கருத்துரிமை, படைப்பு சுதந்திரம் இந்து மக்கள் கட்சி” என்று சுற்றி வந்தாரே தவிர இந்தக் கூட்டம் ம.க.இ.க வைக் குறி வைத்தே நடத்தப்படுகிறது என்பதை மழுப்பினார், மறைத்தார்.

இ.ம.கட்சி, ம.க.இ.க, வினவு தளம் ஆகியோரை இணைத்து லீனா ஏற்கெனவே எழுதியிருந்ததார். இதையே குமுதம் கட்டுரையிலும் குறிப்பிட்டிருந்தார். போலிக் கம்யூனிஸ்டு ச.தமிழ்ச்செல்வனும் தனது அறிக்கையில் பெயர் சொல்லாமல் ம.க.இ.கவை தாக்கியிருந்தார். கூட்டம் பற்றித் தொலைபேசியில் விசாரித்தவர்களிடம் வினவு தளத்தை எதிர்த்தும்தான் கூட்டம் நடத்தப்படுகிறது என்று விளக்கம் அளித்திருக்கிறார் அ.மார்க்ஸ். ஆனால் அந்த உண்மையை அவர் கூட்டத்தில் பேசவில்லை.

மார்க்ஸ் பேசி முடித்தவுடன் ஒரு தோழர் இந்தக் கேள்வியை எழுப்பினார். ஊளைச் சத்தம்தான் பதிலாக வந்த்து. “யாரைக் கண்டித்து கூட்டம் நடத்துகிறோம் என்று சொல்லக்கூடத் துணிவில்லாத கோழைகள் எதுக்குடா கூட்டம் நடத்துறீங்க?” என்று உரைப்பது மாதிரி இன்னொருவர் கேட்டார். பிறகு அல்லக்கைகள் தலைவர் நாற்காலியை சூழ்ந்து கொண்டார்கள்.

கூட்டம் தொடர்ந்தது. அடுத்து ராஜன் குறை பேசினார். உலகளவில் வளர்ந்து வரும் முதலீட்டியம்தான் இப்படிப்பட்ட தடை கோரும் போக்குக்கு காரணம் என்று ஒரு தத்துவத்தை உதிர்த்தார். சீமாட்டி லீனா இப்போது ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளி ஆகிவிட்டார். அவருடைய கவுஜையில் உதிர்ந்த மயிர் உலக முதலீட்டியத்தையே ஒரு ஆட்டு ஆட்டியிருக்கிறதென்றால் சும்மாவா?

அப்புறம் “திராவிட இயக்கம் புராணங்களை எதிர்த்தது. ஆனால் புராணப்படங்களுக்கு தடை கோரவில்லை. சும்மா வுட்டுட்டா அது தானா செத்து போயிடும்” என்றார். இப்போது அவரது கூற்றுப் படி சீமாட்டியின் ஏகாதிபத்திய எதிர்ப்புக் கவிதை புராணக்குப்பையாகி விட்டது. ஒரே நேரத்தில் ஒரே கவிதையை ஒரே வாசகன் எப்படி பன்முக வாசிப்புக்கு உள்ளாக்க முடியும் என்பதற்கு ராஜன் குறையின் உரை ஒரு எடுத்துக்காட்டு. இந்த தெளிவுரைக்குப் பிறகு மீண்டும் கேள்வி எழுப்பினார்கள் தோழர்கள்.

“இப்ப லீனாவின் கவிதைக்கு நாங்கள் தடை விதிக்க சொன்னோமா?” “நாங்க கேட்டிருக்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள்” என்றார்கள். “25 பேச்சாளர்கள் இருக்கிறார்கள். அப்புறம் 26 அவதாக உங்களுக்கு வாய்ப்பு தருகிறேன்” என்றார் அ.மார்க்ஸ். நாங்கள் எங்கள் கேள்வியை கேட்டு விடுகிறோம். அப்புறம் 25 பேரும் விளக்கம் சொல்லட்டும் என்றார்கள் தோழர்கள்.

மீண்டும் அல்லக்கைகளின் கூச்சல். குழப்பம். பிறகு வேறு வழியில்லாமல் தோழர் கணேசனைப் பேச அனுமதித்தார்கள். “கம்யூனிசத்தையும் கம்யூனிஸ்டுகளையும் இழிவு படுத்தி லீனா எழுதியிருக்கிறார். அவருக்கு சி.பி.ஐ, சி.பி.எம் முடன்தான் நெருக்கம் அதிகம். எனவே இவ்வாறு அவரை எழுதத் தூண்டிய அனுபவத்தை அவர் கூறினால் நல்லது” என்றார்.

உடனே சீறியெழுந்த சீமாட்டி லீனா, தோழர் கணேசனை அடிப்பதற்கு கையை ஓங்கிக் கொண்டு பாய்ந்தார். முன்வரிசையில் அமர்ந்திருந்த பெண் தோழர்கள் சீமாட்டிக்கு உரிய மொழியில் பதில் அளிக்க, கையில் செருப்பை எடுத்தனர். படைப்பாளிகள் என்ற பெயரில் அழைத்து வரப்பட்டிருந்த சில லும்பன்கள் வசவு மாரி பொழிந்தனர். லீனாவின் கணவர் ஜெரால்டு ஆத்திரமாக ஏதோ கத்திக் கொண்டிருந்தார். “உங்க மனைவி லீனா எது வேணா எழுதுவாங்க. அதுக்கு என்ன அர்த்தம்னு கேட்டா விளக்கம் சொல்லக்கூட மாட்டாங்களா?” என்று ஜெரால்டைக் கேட்டார் ஒரு தோழர். “ஏண்டா, தொழிலாளிய கை நீட்டி அடிப்பீங்க. கேட்டா படைப்பாளி உரிமையா? இங்கயே உரிச்சு தொங்க விட்றுவோம்” என்றார் இன்னொரு தோழர்.

கூட்டத்தை நடத்தவிடாமல் தடுப்பது நோக்கமல்ல என்பதால், ஒரு சிலரைத் தவிர மற்ற தோழர்கள் யாரும் இதில் தலையிடக் கூடாது என்று நிறுத்தப்பட்டிருந்தனர். அடிப்பதற்கு வந்த லீனாவின் கை தோழர் கணேசன் மீது பட்டிருந்தால், கணக்கு அங்கேயே முடிக்கப் பட்டிருக்கும். அவ்வாறு நடக்காமல் சில தோழர்களே தடுத்து விட்டதால், சீமாட்டியும் அல்லக்கைகளும் பிறகு வீர வசனம் பேசும் வாய்ப்பு பெற்றனர்.

அனுபவத்தை சொல் என்று கேட்டவுடனே அம்மையாருக்கு ஏன் ஆத்திரம் வருகிறது? அனுபவம்னா எந்த அனுபவம்னு அம்மா புரிஞ்சிகிட்டாங்க? அனுபவம்கிறது கெட்ட வார்த்தையா? நல்ல வார்த்தை கெட்ட வார்த்தையெல்லாம் கலக எழுத்துல உண்டா? அனுபவத்தை சொல் என்றுதானே கேட்டார். உலகின் அழகிய முதல் பெண்ணின் மூஞ்சியில் ஆசிட்டா ஊற்றினார். ஏன் துடிக்கவேண்டும்?

உண்டுன்னா உண்டுன்னு சொல்லு. இல்லைன்னா இல்லைன்னு சொல்லு. எதுக்கு தமிழ் சினிமா கற்புக்கரசி மாதிரி சாமி ஆடுறே?

பெரியார் தெரியுமா? அவர் நாகப்பட்டினத்துல மாநாடு போட்ட போது, காங்கிரசு காலிகள் ஊர் பூரா “நாகம்மை தேவிடியா” ன்னு சுவத்தில எழுதினானுங்க. தி.க தொண்டர்கள் ஆத்திரத்தில் கொதிச்ச போது பெரியார் அலட்சியமாகச் சொன்னாராம் “நாகம்மை பத்தினி என்று சொன்னால் மகிழ்ச்சி அடைபவனாக நான் இருந்தால் அல்லவா, அவள் தேவடியாள் என்று சொன்னால் கோவப் படுவதற்கு?” என்று.

பெரியாரால் அப்படி சொல்ல முடிந்த்தற்கு ஒரே காரணம் – அவர் ஒரிஜினல். அது உண்மையான உணர்வு. உண்மையான முகம். சீமாட்டி கொதிக்கிறதுக்கு காரணம் – இது பேசியல் பண்ணி, ஐ ப்ரோ வுக்கு கோடு இழுத்த அம்மன். பியூட்டி பார்லர் புர்ரச்சி.

நீ “யோனிமயிரு -உபரி மதிப்பு”ன்னு எழுதினா அது கருத்துரிமை. “அனுபவத்தை சொல்லு”ன்னு கேக்குறவனுக்கு மட்டும் கருத்துரிமை கிடையாதா? அந்த உரிமை படைப்பாளிக்கு மட்டும்தான் உண்டா? எந்த ‘பார்’ல படைப்பாளிக்கு அடையாள அட்டை கொடுக்கிறீங்க?

கம்யூனிஸ்டெல்லாம் பொறுக்கின்னு நீ எழுதினா அது கவித்துவ வெளிப்பாடு. கம்யூனிஸ்டுக்கும் ஜிகாதிக்கும் ஒரே கொள்கை ஆண்குறின்னு எழுதினா அது மார்க்சியம் குறித்த அரசியல் விமரிசனம். உன் அனுபவம் என்ன ன்னு கேட்டா அது தனிநபர் தாக்குதலா?

கம்யூனிசம்தான் சமூக விடுதலைக்குத் தீர்வு என்று ஏற்றுக் கொண்டு அந்தக் கொள்கைக்காகப் போராடுபவர்களுக்கு, சொந்த வாழ்க்கையில் அந்தக் கொள்கையைப் பற்றி ஒழுகுபவர்களுக்கு பொலிடிக்கல் வேறு பெர்சனல் வேறு கிடையாது. பொலிடிக்கல்தான் பெர்சனல்.

பெண் அடிமைத்தனத்துக்கான காரணத்தை ஆய்ந்து விடுதலைக்கு வழியும் சொன்ன தத்துவத்தின் மீதும், அதனை நிரூபித்துக் காட்டிய மனித குலத்தின் மாபெரும் புரட்சிகளின் மீதும், அதற்காகத் தம் உயிரையும் வாழ்க்கையையும் ஈந்த மாமனிதர்களின் மீதும் ஒரு சொறிநாய் ஒன்னுக்கு அடித்து விட்டுப் போனால் அதைப் படைப்புரிமை என்று அங்கீகரிக்க வேண்டுமா?

ஏகாதிபத்திய எச்சில் காசுக்காக என்.ஜி.ஓக்களிடம் கையேந்தி, பெண் விடுதலைப் போராளிகள் பாரதிராஜாவிடமும் சேரனிடமும் பல்லிளித்து, அவர்களுடைய பாராட்டுக்கு புல்லரித்து, கையில் புரோஃபைலை வைத்துக் கொண்டு தன்னைத் தானே மார்க்கெட்டிங் செய்து கொண்டு, இன்னும் பெண்ணினத்தின் சுயமரியாதைக்கு இழிவு சேர்க்கும் எல்லா விதமான காரியங்களையும் செய்து வயிறு வளர்க்கும் ஜந்துவிடம் “உன் அனுபவத்தை சொல்” என்று கேட்டாலே அதற்கு கோபம் பொத்துக் கொண்டு வருமாம். ஏனென்றால் படைப்பாளி ஜந்துக்களின் பெர்சனல் வாழ்க்கை ரொம்ப புனிதமானதாம்.

வியர்வை வழிய உழைத்து சம்பாதித்து, பல்லிளிக்காமல், எவனிடமும் ஃபண்டுக்கு கையேந்தி நிற்காமல், எவனுக்கும் முதுகு சொரியாமல், கணவனின் ஆணாதிக்கம் முதல் சமூகத்தின் ஆணாதிக்கம் வரை அனைத்துக்கும் எதிராகப் போராடி, போலீசு முதல் சிறை வரையில் அனைத்தையும் எதிர்கொண்டு வாழும் பெண்களுக்குக் கோபம் வந்தால் எப்படி இருக்கும் தெரியுமா?

அதைத் தெரிந்து கொள்ளும் வாய்ப்பை சீமாட்டிக்கு வழங்காமல், அந்தப் பெண்களின் கையிலிருந்து செருப்பை பிடுங்கி விட்டோம். பிறிதொரு முறை கட்டாயம் அந்த வாய்ப்பை வழங்குகிறோம். இப்போது விசயத்துக்கு வருவோம்.

தம் மீது தொடுக்கப்படும் தனிப்பட்ட தாக்குதல்களை அன்றாடம் எதிர்கொண்டுதான் கம்யூனிஸ்டுகள் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். குடும்பம், உறவுகள், நண்பர்கள், அதிகாரிகள் முதல் போலீசுக்காரன் வரை யாரிடம் படும் அடியையும் வசவையும் தனிப்பட்டதாக கம்யூனிஸ்டுகள் எடுத்துக் கொள்வதில்லை. சாமியாடுவதும் இல்லை. தங்களுடைய பொதுவாழ்க்கையின் மீதும், அதனை வழிநடத்தும் கொள்கையின் மீதும், சமூகத்தின் மீதும் தாக்குதல் தொடுக்கப்படும்போதுதான் அவர்கள் கோபம் கொள்கிறார்கள்.

அற்பர்களுக்கோ அவர்களை குண்டூசியால் லேசாக குத்தினால் போதும். உடனே “ஜெகத்தினை அழித்திடுவோம்” என்று வீறு கொண்டு கிளம்புகிறார்கள். இதுக்குப் பேரு படைப்பாளியின் உரிமையாம். தெரியாமத்தான் கேக்குறோம். படைப்பாளின்னா என்னா கோயில் மாடா? உழைக்காம ஊர் மேஞ்சிட்டு, தனது படைப்பாக சாணி போட்டுக் கொண்டே போனால், அதை கண்ணுல தொட்டு ஒத்திகிட்டு வாசகர்கள் பின்னாலயே வரணுமா?

“உன்னுடைய கவிதைக்கு நீயே விளக்கம் சொல்” என்றுதான் ம.க.இ.க தோழர்கள் கேட்டார்கள். படைப்பின் உக்கிரமான மனோநிலையில் வெளிப்பட்ட சாணிக்கு பொருள் விளக்கம் கூறுமாறு கோயில் மாட்டிடம் எப்படி கேட்க முடியாதோ, அதே போல படைப்பாளியிடமும் பிரதிக்கு விளக்கம் கேட்க முடியாது என்பது படைப்பாளிகளின் கொள்கை.

வினவு தளத்தில் சில மாதங்களுக்கு முன் லீனாவின் கவிதை பற்றிய விமரிசனம் வெளியான பின்பு ஒருநாள், நடு ராத்திரி 12 மணிக்கு முழு போதையில் வினவக்கு போன் செய்து “உனக்கு கவிதை தெரியுமா?” என்று கேட்டார் செல்மா பிரியதர்சன். அடுத்தது ஷோபா சக்தி. “சரி படைப்பாளிகளே, அட்ரஸை சொல்லுங்கள். நேரில் வருகிறோம்” என்றோம். உடனே அவர்களுடைய போதை தெளிந்து போனை வைத்து விட்டனர்.

நான் என்ன வேணும்னாலும் எழுதுவேன். எழுதினதுக்கு விளக்கமும் சொல்லமாட்டேன் என்பதுதான் லீனாவின் கொள்கை. அங்கே கண்டனக் கூட்டம் நடத்திய படைப்பாளிகளின் கொள்கையும் அதுதான். இப்படி பேசுபவன் படைப்பாளியா, பாசிஸ்டா? அப்படியானால் ஒரு வாசகன் அவன் புரிந்து கொண்ட முறையில் உன் கவிதைக்கு எதிர்வினை புரிவதை தவிர்க்க இயலாது. அது அவனுடைய உரிமை.

அப்படி எதிர்வினை ஆற்றக் கூடாதாம். எழுத்தை எழுத்தால்தான் சந்திக்க வேண்டுமாம். வினவு தளத்தில் அதைத்தான் செய்தோம். ஆனால் அது வக்கிரமாம், தனிநபர் தாக்குதலாம், கலாச்சார அடிப்படை வாதமாம், கலாச்சார போலீசு வேலையாம். இதை எதிர்த்து கேஸ் போடுவேனென்றும் லீனா மிரட்டினார். கேஸ் போடுறதுக்கு முன்னாடி இந்தக் கண்டனக் கூட்டம்.

சரி, என்ன தனிநபர் தாக்குதல் என்று சொல். பதிலளிக்கிறோம் என்று துண்டறிக்கையில் கேட்டோம். அதற்கும் பதில் கிடையாது. அப்போ என்னதான் செய்ய வேண்டும்? அம்மாவும் படைப்புலக ஆதீனங்களும் சொல்கிறபடியும் அவர்கள் மெச்சும்படியும் விமரிசனம் எழுத வேண்டுமா? பார்ப்பனியம் முழு அதிகாரத்தில் இருந்த காலத்தில் ஒரு பார்ப்பான் கூட இப்படிப் பேசியிருப்பானா தெரியவில்லையே!

கருத்தை கருத்தால் சந்திக்கணுமாம். தோழர் கணேசன் மேடையிலிருந்து அரிவாளையா காட்டினார்? “உன் அனுபவத்தை சொல்” என்று கருத்துதானே கூறினார். அம்மா எதுக்கு கையை ஒங்கினாங்க? அவுக கையத் தூக்கினாலும் படைப்பு. காலைத் தூக்கினாலும் படைப்பு. நாங்க வாயைத் தொறந்தால் கூட அது வன்முறையா?

செங்கடல் படப்பிடிப்பிலும் இதுதானே நடந்தது? தொழிலாளி தீபக்கை அடிக்க ஓங்கிய கை தானே இது? புட்டேஜைப் பத்தி எனக்குத் தெரியாது ன்னு தீபக் கருத்து சொன்னா, மறுநாள் உக்காந்து கவிதை எழுது. இல்லைன்னா போலீசுக்கு புகார் எழுது. பாசிஸ்டு இந்து மக்கள் கட்சிக்காரன் கூட புகார் தானே கொடுத்தான்.

சோபாசக்தியும் லீனாவும் செஞ்ச வேலை என்ன? டக்ளஸ் தேவானந்தாவின் காசு முதல் என்.ஜி.ஓ காசு வரை வகைவகையான எச்சில் காசுகளைத் தின்று வளர்ந்த கொழுப்புதானே, அவர்களை தீபக்கிற்கு எதிராக கை நீட்ட வைத்தது? அதே கை தானே ம.க.இ.க தோழருக்கு எதிராகவும் நீண்டது?

கம்யூனிஸ்டுக்கு எதிராக எழுதிய அந்தக் கையால், தலித் பெண்களுடைய யோனிகளைக் குதறும் தேவர் குறி, வன்னியர் குறி, கவுண்டர் குறிகளைப் பற்றி எழுது பார்ப்போம். கடைசி வரியில் “தேவன்மார் வாயில் மயிறைப் பிடுங்கிப் போட்டு” கட்டவிழ்ப்பு செய்து காட்டு பார்ப்போம்.

முன்வரிசையில் வந்து அமர்ந்த எங்கள் பெண் தோழர்களைக் கண்டவுடன் விளிம்புநிலைப் புரட்சித் தளபதிகளுக்கு எப்படி வியர்த்த்து என்பதைத்தான் பார்த்தோமே. படைப்பாளின்னா என்னா பெரிய வெங்காயமா? இவுக எழுதுவாகளாம். கேட்டா விளக்கம் சொல்ல மாட்டாங்களாம். அடேங்கப்பா, என்னா வீரம்டா!

இந்து மக்கள் கட்சிக்காரன் கொடுத்த புகாரையே எடுத்துக்குவோம். ஒருவேளை போலீசு கிரிமினல் வழக்கு போடுவதாக வைத்துக் கொள்வோம். படைப்பாளி அம்மா கோர்ட்டில என்ன சொல்வாக?

படைப்புக்கெல்லாம் படைப்பாளி விளக்கம் சொல்ல முடியாதுன்னு நீதிபதிய அடிக்க கை ஓங்குவாகளா? பெரிய வக்கீலாக வைச்சு, “அந்த வரிக்கு அப்பிடி அர்த்தமில்ல, இந்த வரிக்கு இப்படி அர்த்தம் இல்ல”ன்னு விளக்கம் சொல்லி வாதாடுவாக. இல்லன்னா உள்ளே போகணுமே. அந்த பயம்.

அதாவது யோக்கியமான முறையில் கேட்டால் திமிர்த்தனம் பண்ணுவது. அடி விழும் என்று தெரிந்தால் பம்முவது. இப்படி ஆளுகளுக்குப் பேரு படைப்பாளி இல்லை -மேட்டுக்குடி லும்பன். அந்த அரங்கத்தில் ஊளையிட்டுக் கொண்டிருந்ததெல்லாம் இத்தகைய லும்பன் கும்பல்தான்.

ஐந்திலக்க சம்பளத்துக்காக பத்திரிகை முதலாளியிடம் எழுத்துரிமை, கருத்துரிமை, சுயமரியாதை உள்ளிட்ட அனைத்தையும் அடமானம் வைத்த ஊடகத்துக் காரர்கள், பதவிக்காக அதிகாரத்திடம் தலை சொரியும் பேராசிரியர்கள், உள்ளிட்ட பலர் மேடையில் பொளந்து கட்டினார்கள்.

சினிமாவில் சிரிப்பாய் சிரித்த சீனுக்கெல்லாம் சிங்காரம் பண்ணுவதற்கு, முக்கி முனகி வார்த்தை முத்தெடுக்கும் கவிஞர்களில் சிலர், “மெட்டுக்குப் பாட்டா, பாட்டுக்கு மெட்டா” என்று ஆர்மோனியப் பெட்டிக்கு எதிராகப் போர்க்கொடி தூக்குவதில்லையா, அந்த மாதிரி காமெடி இது.

பணம், அதிகாரம், உதை இந்த மூன்றைத் தவிர வேறு எதற்கும், எப்பேர்ப்பட்ட உன்னதமான கொள்கைக்கும் இலட்சியத்துக்கும் இவர்களுடைய படைப்பிலக்கியம் பணியாதாம். நாமார்க்கும் குடியல்லோம், நமனை அஞ்சோம் -தான்.

இப்படிப்பட்ட அடக்கமுடியாத ஜல்லிக்கட்டு காளைகளை ம.க.இ.க வுக்கு எதிராக அணிவகுத்து நிற்க வைக்கும் தனது நோக்கத்துக்காக, லீனா மணிமேகலை அ.மார்க்சை பயன்படுத்திக் கொண்டாரா, அல்லது அ.மார்க்ஸ் லீனா மணிமேகலையைப் பயன்படுத்திக் கொண்டாரா என்பது நமக்குத் தெரியவில்லை. ஆனால் இந்த 54 நாயன்மார்ளைத் திரட்டுவதற்கே ரொம்பவும் கஷ்டப்பட்டு ராப்பகலாக உழைத்திருக்கிறார்கள் என்பது மட்டும் உண்மை.

ஹோல்சேலாக படைப்பாளிகள் கிடைக்குமிடம் போலி கம்யூனிஸ்டு கட்சிகள்தான் என்பதால், அங்கே தீவிர கவனம் செலுத்தியிருக்கிறார்கள். தீக்கதிரில் இந்தக் கூட்டத்துக்கு விளம்பரம் வெளிவந்தது. த,மு.எ.க.ச வின் கண்டன அறிக்கையும் வெளிவந்தது. தாமரையில் சீமாட்டியின் கவிதை வெளிவந்தது. ஆனால் தமிழ்ச்செல்வன், ஆதவன் தீட்சண்யா, தேவ பேரின்பன் போன்ற முக்கியப் புள்ளிகள் மட்டும் கூட்டத்துக்கு வரவில்லை. அலப்பறைக்குத் தேவைப்படும் அல்லக்கைகளை மட்டும் சப்ளை செய்திருந்தார்கள்.

அ.மார்க்ஸ் லீனா கூட்டணி வகுத்திருந்த இந்த ம.க.இ.க எதிர்ப்பு போர்த்தந்திரத் திட்டத்தின் முக்கியமான கூறுகள் இரண்டு.

முதலாவதாக, “ம.க.இ.க வை எதிர்ப்பதுதான் உண்மையான நோக்கம் என்பது பச்சையாக வெளியே தெரிந்தால் படைப்பாளிகள் தயங்கக் கூடும் என்பதால், காமோஃபிளேஜ் ஆக இந்து மக்கள் கட்சி என்ற டுபாக்கூர் கட்சியை முன்நிறுத்தி, கூட்டம் சேர்ப்பது.

இரண்டாவதாக ம.க.இ.க வை ஒழித்துக் கட்ட வேண்டிய பகைவர்களாக கருதும் மார்க்சிஸ்டுகளை இந்த “சுதந்திரப் போராட்டத்தின்” காலாட்படையாக வளைத்துப் போடுவது.

மார்க்சிஸ்டு கட்சி அ.மார்க்சுக்கு தாய்க்கழகம். லீனாவோ கம்யூனிஸ்டு பாரம்பரியம் என்பதால் ரெண்டுமே அவருக்கு குடும்பக் கட்சி. அப்புறம் என்ன?

அ.மார்க்ஸ், மார்க்சிஸ்டு கட்சியிலிருந்து கிளம்பி, மக்கள் யுத்தக் குழு, டாக்டர் ஐயா, பின் நவீனத்துவம், தலித் அரசியல், இஸ்லாம், மனித உரிமை… என்று வனமெல்லாம் சுத்தி வந்து கடைசியாக இனத்துல அடைஞ்சு விட்டாரா அல்லது மார்க்சிஸ்டுகள் அ-மார்க்சிஸ்டுகளாகி இவருடன் இணைந்து விட்டனரா என்பதை நம்மால் நிச்சயமாக சொல்ல முடியவில்லை. எனவே இந்தக் கூட்டணியின் ரசவாதம் இப்போதைக்கு தெரியவில்லை.

எப்படிப் பார்த்தாலும் இது பெரிய ராஜதந்திரம்தான். ம.க.இ.க தோழர்கள் அன்றைக்கு அரங்கை விட்டு வெளியேறும்போது, “ம.க.இ.க பாசிசம் ஒழிக” என்று கூச்சல் போட்டார்கள் சில அல்லக்கைகள். இந்தக் கண்கொள்ளாக் காட்சியின் வீடியோ பதிவை புத்ததேவுக்கு அனுப்பி வைத்தால், ஆபரேசன் கிரீன் ஹன்ட்டுக்கு ஆதரவாக கல்கத்தா படைப்பாளிகளைப் படை திரட்டுவதற்கு மார்க்சிஸ்டுகளுக்கு அது பெரிதும் உதவும்.

என்ன இருந்தாலும் சில காரியங்களை சில பேரால்தான் சாதிக்க முடியும் என்பதை நாம் ஒத்துக் கொண்டுதான் ஆகவேண்டும். ஜெயலலிதா மட்டும் இல்லையென்றால், அத்வானி, ஜஸ்வந்த் சிங், சு.சாமி, மணி சங்கர் ஐயர், டி.என்.சேஷன், சங்கராச்சாரி, இந்து ராம் முதலான பல கொம்பாதி கொம்பர்களின் உணைமையான முக விலாசத்தை உலகம் அறிந்திருக்க முடியுமா? அந்த வகையில் லீனா ஆற்றியிருக்கும் வரலாற்றுப் பாத்திரத்தை நாம் குறைத்து மதிப்பிட முடியாது.

கவிதை என்ற சொல்லால் அழைக்கப்படுவதற்கே தகுதியில்லாத ஒரு கழிவுக்கு “சுக்குமி – ளகுதி – ப்பிலி” என்று பதம் பிரித்து, படைப்பாளிகளை பொருள் விளக்கம் சொல்ல வைத்ததன் மூலம், தனது இரண்டாவது கவிதையில் ஒரு கம்யூனிஸ்டை எந்தெந்த இடங்களுக்கெல்லாம் அவர் அழைத்துச் சென்றாரோ, அதே இடங்களுக்கு படைப்பாளிகளையும் அழைத்துச் சென்று, அவர்களுடைய வாயில் தன்னுடைய சொற்களை ஒவ்வொன்றாய் பிடுங்கிப் போட்டு, அவற்றை மென்று கட்டவிழ்ப்பு செய்யும் வேலையையும் அவர்களிடமே ஒப்படைத்து விட்டார்.

படைப்பு சுதந்திரத்தின் காவலர்கள் பிரதியை அசை போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

கம்யூனிசத்தையும் கம்யூனிசத் தலைவர்களையும் கம்யூனிஸ்டுகளையும் இழிவு படுத்தும் எழுத்து என்பதுதான் லீனாவின் கவுஜை பற்றி நாங்கள் கூறிய விமரிசனம். அவ்வாறு இல்லை என்றால் அதன் பொருளை எவ்வாறு புரிந்து கொள்ள வேண்டும் என்று கவுஜாயினி விளக்க வேண்டும் என்பது எங்கள் கோரிக்கை.

இதை தந்திரமாக இருட்ட்டிப்பு செய்து விட்டு, “தடை விதிக்கிறார்கள், போலீசு வேலை செய்கிறார்கள்” என்று திசை திருப்பினார்கள். அப்புறம் “இது ஆபாசம் என்பதுதான் இந்து மக்கள் கட்சியின் கருத்து. ம.க.இ.க வின் கருத்தும் அதுதான். ரெண்டு பேரும் பழைய பஞ்சாங்கங்கள், ஒழுக்கவாதிகள், எனவே ரெண்டு பேரும் ஒண்ணுதான்” என்று முத்திரை குத்தினார்கள்.

“யோனி, மயிரு என்று எழுதி விட்டால் பெரிய வீரம் போலவும், அதைக் கேட்டு ம.க.இ.க காரர்கள் பயந்து நடு நடுங்கி துடிப்பதைப் போலவும் அந்த சீமாட்டிக்கும் படைப்பாளிகள் என்று தம்மை அழைத்துக் கொள்வோருக்கும் ஒரு நெனப்பு.

மேற்படி சொற்களைக் கண்டு அஞ்சி நடுங்குபவர்கள் நாங்கள் அல்ல என்பதை நிரூபித்துக் காட்ட வேண்டிய கட்டாயத்துக்கு நாங்கள் தள்ளப்பட்டு விட்டோம்.

“யோனி, புணர்தல், குறி” என்பன போன்ற இலக்கியத் தரம் வாய்ந்த, ரீஜென்டான சொற்களுக்குப் பழக்கமில்லாதவர்களும், ஒரிஜினல் தமிழில் மட்டுமே இந்த சொற்களைப் பயன்படுத்துகின்றவர்களுமான பெண்களுடன், கூட்டத்திற்கு வந்திருந்த படைப்பாளிகளை நேரில் சந்திக்க வருகிறோம்.

ஆமாம், கூட்டத்தில் கேட்டோம் பதில் சொல்லவில்லை. ஊளையிட்டீர்கள். வேறென்ன வழி? உங்கள் வீட்டுக்கு வந்து விளக்கம் கேட்டு தெரிந்து கொள்கிறோம்.

உங்கள் கவிதைக்கு நாங்கள் தடை விதிப்பதாக அல்லவா குற்றம் சாட்டுகிறீர்கள்? இதற்கு கழுவாய் தேட ஏழுமலையான் நோட்டீசு போல எங்கள் சொந்த செலவில் அந்தக் கவுஜையை அச்சடித்துக் கையோடு கொண்டு வருகிறோம்.

படைப்புரிமைக்கு குரல் கொடுத்த கலகக்காரர்களின் மனைவி, சகோதர சகோதரிகள், பக்கத்து வீட்டுக்காரர்கள் ஆகியோரிடம் “பிரதி”யைக் கொடுக்கிறோம். “இந்தக் கவுஜைக்காகத்தான், சார் குரல் கொடுத்தார். ஆனால் இந்தக் கவுஜையைப் படித்து கம்யூனிஸ்டுகளாகிய எங்களுக்கு கோபம் வந்தது. இது தவறா? இந்தப் பிரதியை நீங்கள் எப்படி வாசிக்கிறீர்கள் என்று அவர்களிடம் நியாயம் கேட்கிறோம்.

தன்னுடைய கட்சியின் கொள்கையைப் பக்கத்து வீட்டுக் காரனிடம் பேசுவதற்கு ஒரு திமுக காரன் தயங்குவானா? தன்னுடைய சினிமாவைப் பற்றி பெண்டாட்டியிடம் பேச ஒரு சினிமாக்காரன் கூச்சப்படுவானா? அப்படி இருக்கும்போது வீரமிக்க படைப்பாளிகள் மட்டும் பதுங்கி விடுவார்களா என்ன? பதில் சொல்லட்டும். மேலும் பெண் எழுத்துக்கு ஆபத்து நேர்ந்திருப்பதைப் பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டாமா?

உங்களுடைய அலுவலகங்களுக்கு வருகிறோம். கல்லூரிகளுக்கு வருகிறோம். மாணவர்களிடம் இந்தக் கவுஜையைக் கொடுத்து, “ஆசிரியன் செத்துவிட்டான். பிரதிதான் மிச்சமிருக்கிறது. மாணவர்களாகிய உங்கள் வாசிப்பு அனுபவத்தை சொல்லுங்கள்” என்று கேட்டுத் தெரிந்து கொள்கிறோம்.

சரக்கின் உன்மத்த நிலையில் குடிகாரனின் வாயிலிருந்து தெறிக்கும் எச்சிலுக்கு அந்தக் குடிகாரனும், படைப்பின் உன்மத்த நிலையில் படைப்பாளியின் வாயிலிருந்து தெறிக்கும் சொற்களுக்கு படைப்பாளியும் பொறுப்பேற்க முடியாது என்ற உங்கள் “படைப்புத் தத்துவத்தை” அவர்களுக்கும் விளக்குங்கள்.

தீக்கதிர், தாமரையின் ஆதரவு பெற்ற கவுஜாயினியின் இந்தக் கவிதையை போஸ்டராக அடித்து சி.ஐ.டி.யு, ஏ.ஐ.டி.யு.சி தொழிலாளர்கள், ஊழியர்கள் நிரம்பிய பகுதிகளில் ஒட்டுகிறோம். செலவுதான். நாங்கள் கலாச்சார போலீசு இல்லை என்று நிரூபித்தாக வேண்டுமே, வேறு என்ன செய்வது?

நீங்களும் பேசுங்கள் நாங்களும் பேசுகிறோம். மற்றவர்களும் பேசட்டும். அடிதடி வன்முறை, தடை, கலாச்சார போலீசு வேலை எதுவும கிடையாது. “உரையாடலைத் தொடர்கிறோம்”. அவ்வளவுதான்.

இந்த வழிமுறையெல்லாம் முறைகேடானது என்று யாரேனும் பதறினால் அவர்களைக் கேட்கிறோம் – படைப்பாளிகளை “முறை”க்குள் அடைக்க முடியுமா? வீடு, அலுவலகம் என்ற “வெளி”க்குள் அடைக்க முடியுமா?

“வேண்டுமானால் நீங்கள் ஒரு கூட்டம் நடத்தி உங்கள் கருத்தை தெரிவிக்கலாம். இந்த மாதிரி எதிர்ப்பெல்லாம் ‘மரபு’அல்ல” என்று யாரேனும் முனகலாம்.

அவர்களுக்கு எங்கள் பதில் இதுதான்.

“எங்கள் எதிர்ப்புக்கு கவிதை என்று பெயர் வை”

பெண்ணியமும் இஸ்லாமும் …


பொதுவாக இஸ்லாமியவாதிகள் மூன்றுவிதமான சிறப்புகளை இஸ்லாம் பெண்களுக்கு வழங்கியிருப்பதாக குறிப்பிடுவார்கள். ௧)சொத்துரிமை ௨)விவாகரத்துரிமை ௩)ஜிஹாப் எனும் பெண்ணாடை

சொத்துரிமை: பெண்களை பொருளாதார ரீதியில் ஒரு பொருட்டாக மதிக்காதிருந்த காலத்தில் இஸ்லாம் பெண்களுக்கு சொத்துரிமை வழங்கியது என்பார்கள். குரானில் பெண்களுக்கு சொத்துரிமை குறித்த வசனங்கள் இருக்கின்றன. ஆனால் எப்படி? ஆணில் பாதி. ஆண் எவ்வளவு பெறுகிறானோ அதில் பாதிதான் பெண்ணுக்கு. குரானின் நான்காவது அத்தியாயம் 11வது வசனம் இப்படிக்கூறுகிறது. “இரண்டு பெண்களின் பாகம் போன்றது ஒரு ஆணுக்கு உண்டு என்று உங்கள் பிள்ளைகள் விசயத்தில் அல்லாஹ் வலியுறுத்துகிறான்…..” ஒரே பெற்றோருக்கு பிறந்த ஆண் பெண் பிள்ளைகளில் பேதம் பார்க்கும் இந்த குரானின் வசனத்திற்கு நிறைய விளக்கங்கள் சொல்லியிருக்கிறார்கள், சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். பெற்றொரை பாதுகாக்கும் கடமை ஆண்களுக்குத்தான் உண்டு எனவேதான் ஆணுக்கு இரண்டு பங்கு, சகோதரிகளின் திருமணத்தின் போதும் அதற்குப்பிற‌கும் சகோதரனே அதிகப்பொறுப்பேற்கிறான் எனவேதான் அவனுக்கு இரண்டு பங்கு, குடும்பச்சொத்து வளர்வதற்கு ஆண்களே காரணமாக இருக்கிறார்கள் எனவேதான் அவர்களுக்கு இரண்டு பங்கு. ஆனால் இதுபோன்ற‌ கார‌ண‌ங்க‌ளுக்காக‌ குரான் ஆணுக்கு இர‌ண்டு ம‌ட‌ங்கு கொடுக்க‌ச்சொல்ல‌வில்லை. மேற்கூறிய‌ அந்த‌ வ‌ச‌ன‌ம் இப்ப‌டி முடிகிற‌து. “…..உங்க‌ள் பெற்றோர் ம‌ற்றும் பிள்ளைக‌ளில் உங்க‌ளுக்கு அதிக‌மாக‌ ப‌ய‌ன் த‌ருப‌வ‌ர் யார் என்ப‌தை நீங்க‌ள் அறிய‌மாட்டீர்க‌ள். அல்லாஹ் விதித்த‌ க‌ட‌மை. அல்லாஹ் அறிந்த‌வ‌னாக‌வும் ஞான‌மிக்க‌வ‌னாக‌வும் இருக்கிறான்” அறிந்த‌வ‌னாக‌வும் ஞான‌மிக்க‌வ‌னாக‌வும் இருக்கிற‌ அல்லாதான் க‌டைமையாக‌ விதித்திருக்கிறானேய‌ன்றி ஆண்க‌ளின் ப‌ங்க‌ளிப்பு குறித்த‌ கார‌ண‌ங்க‌ளுக்காக‌ அல்ல‌. அதையும் இந்த‌ வ‌ச‌ன‌ம் தெளிவாக‌வே சொல்லிவிடுகிறது, உங்க‌ளுக்கு அதிக‌மாக‌ ப‌ய‌ன் த‌ருப‌வ‌ர் யார் என்ப‌தை நீங்க‌ள் அறிய‌மாட்டீர்க‌ள் என்ப‌த‌ன் மூல‌ம். இருந்தாலும் விள‌க்க‌ம் கூறுப‌வ‌ர்க‌ளை கேட்க‌லாம், பெண்க‌ளே பெற்றோரை பாதுகாக்கும் குடும்ப‌ங்க‌ளில், ச‌கோத‌ரிக‌ளின் திரும‌ண‌ங்க‌ளிலும் அத‌ற்குப்பிற‌கும் பெண்க‌ளே பெறுப்பேற்கிற‌ குடும்ப‌ங்க‌ளில், குடும்ப‌ச்சொத்து வ‌ள‌ர்வ‌த‌ற்கு பெண்க‌ள் ப‌ங்க‌ளிக்கின்ற‌ குடும்ப‌ங்க‌ளில் பெண்க‌ளுக்கு இர‌ண்டு ப‌ங்கு கொடுக்க‌லாமா? வேண்டாம் ஆண்க‌ளுக்கும் பெண்க‌ளுக்கும் ச‌ம‌மாக‌ கொடுக்க‌லாமா? பெற்றோரின் சொத்தை பிரிப்ப‌தில் இந்த‌ வித்தியாச‌ம் காட்டும் குரான் க‌ண‌வ‌ன் ம‌னைவி சொத்து விச‌ய‌த்தில் என்ன‌ கூறுகிற‌து?

“உங்க‌ள் மனைவிய‌ருக்கு குழ‌ந்தை இல்லாவிட்டால் அவ‌ர்க‌ள் விட்டுச்சென்ற‌தில் பாதி உங்க‌ளுக்கு உண்டு. அவ‌ர்க‌ளுக்கு குழ‌ந்தை இருந்தால் அவ‌ர்க‌ள் விட்டுச்சென்ற‌தில் கால்பாக‌ம் உங்க‌ளுக்கு உண்டு…..உங்க‌ளுக்கு குழ‌ந்தை இல்லாவிட்டால் நீங்க‌ள் விட்டுச்சென்ற‌தில் கால் பாக‌ம் உங்க‌ள் ம‌னைவிய‌ருக்கு உண்டு. உங்க‌ளுக்கு குழ‌ந்தை இருந்தால் நீங்க‌ள் விட்டுச்சென்ற‌தில் எட்டில் ஒருபாக‌ம் அவ‌ர்க‌ளுக்கு உண்டு….”குரான்4:12 புரிகிற‌தா இந்த‌ வித்தியாச‌ம்? எடுத்துக்காட்டாக‌ க‌ண‌வ‌னுக்கும் ம‌னைவிக்கும் த‌னித்த‌னியே 100ரூபாய் சொத்து இருப்ப‌தாக‌ கொள்வோம். குழ‌ந்தை இல்லாத‌ நிலையில், ம‌னைவி இற‌ந்தால் க‌ண‌வ‌னுக்கு 50ரூபாய் சொத்து கிடைக்கும், க‌ண‌வ‌ன் இற‌ந்தால் ம‌னைவிக்கு 25ரூபாய் சொத்துதான் கிடைக்கும். குழ‌ந்தை இருக்கும் ப‌ட்ச‌த்தில் ம‌னைவி இற‌ந்தால் க‌ண‌வ‌னுக்கு 25ம் க‌ண‌வ‌ன் இற‌ந்தால் ம‌னைவிக்கு 12.50ம் கிடைக்கும். இதில் இன்னொரு விச‌ய‌ம் என்ன‌வென்றால் ஆணுக்கு நான்கு ம‌னைவிவ‌ரை திரும‌ண‌ம் செய்ய‌ அனும‌தி இருப்ப‌தால் க‌ண‌வ‌னிட‌மிருந்து ம‌னைவிக்கு போகும் சொத்து நான்காக‌ பிரியும். ம‌னைவியிட‌மிருந்து க‌ண‌வ‌னுக்கு வ‌ரும் சொத்து நான்கு ம‌ட‌ந்காக‌ உய‌ரும். இது ப‌டிப்ப‌டியாக‌ பெண்க‌ளிட‌முள்ள‌ சொத்தை ஆண்க‌ளுக்கு போய்ச்சேர‌வே வ‌ழிவ‌குக்கிற‌து. இதில் எங்கே இருக்கிற‌து ச‌ம‌த்துவ‌ம்?

இந்த‌ இட‌த்தில் சில‌ர் ஒரு கேள்வி எழுப்ப‌லாம். பெண்க‌ளுக்கு சொத்துரிமை இல்லாத‌ கால‌த்தில் இஸ்லாம் பெண்க‌ளுக்கு சொத்துரிமையை குறைவாக‌வேனும் வ‌ழ‌ங்கியிருக்கிற‌தே இது போற்ற‌ப்ப‌ட‌வேண்டிய‌தில்லையா? இஸ்லாத்திற்கு முன்பு பெண்க‌ளுக்கு சொத்துரிமை இல்லை இஸ்லாம்தான் அதை வ‌ழ‌ங்கிய‌து என்று சொல்வ‌து மோச‌டியான‌து. முகம‌து ந‌பியின் முத‌ல் ம‌னைவி பெய‌ர் க‌தீஜா. ம‌க்கா ந‌க‌ரின் மிக‌ப்பெரும் செல்வ‌ந்த‌ர். அரேபியாவின் ப‌ல‌ப‌குதிக‌ளுக்கும் சென்று வியாபார‌ம் செய்ய‌ ப‌ல‌ வ‌ணிக‌ர்க‌ளை வேலைக்கு அம‌ர்த்தியிருந்த‌வ‌ர். அப்ப‌டி ஒருவ‌ர்தான் முக‌ம‌து ந‌பி. க‌தீஜாவின் செல்வ‌த்தோடு ஒப்பிட்டால் முக‌ம‌து ந‌பி ப‌ர‌ம‌ ஏழை. இவ‌ர்க‌ள் இருவ‌ரும் திரும‌ண‌ம் செய்து ப‌ல‌கால‌ம் க‌ழிந்த‌ பின்புதான் இஸ்லாத்தின் முத‌ல் வேத‌ வெளிப்பாடே வ‌ருகிற‌து. வ‌ர‌லாறு இப்ப‌டி இருக்கையில் எந்த‌ப்பொருளில் இஸ்லாம்தான் இல்லாதிருந்த‌ சொத்துரிமையை பெண்க‌ளுக்கு வ‌ழ‌ங்கிய‌து என்று கூறுகிறார்க‌ள். க‌தீஜா போல‌ பொருளிய‌ல் செல்வாக்குள்ள‌ ஒரு பெண்ணை 1400ஆண்டுக‌ள் க‌ட‌ந்த‌ நிலையில் இன்று காண‌முடிய‌வில்லை என்ப‌தே உண்மை.

இவை எல்லாவ‌ற்றிற்கும் மேலாக‌ சொத்துக்க‌ளை பிரிப்ப‌தை விரிவாக‌ பேசும் அல்லாவுக்கு, முக்கால‌மும் உண‌ர்ந்த‌ எல்லாம் தெரிந்த‌ ஞான‌மிக்க‌ அல்லாவுக்கு த‌னிச்சொத்துடமைதான் உல‌க‌த்தின் அனைத்துப்பிர‌ச்ச‌னைக‌ளுக்கும் ஆணாதிக்க‌த்திற்கும் மூல‌கார‌ண‌ம் என்ப‌து தெரியாம‌ல் போன‌தேனோ? இல்லை இற‌ந்த‌த‌ற்குப்பின்னால் விண்ணில் கிடைக்க‌விருப்ப‌தாக‌ த‌ன்னால் ந‌ம்ப‌வைக்க‌ப்ப‌ட்டிருக்கும் சொர்க்க‌த்தை த‌னிச்சொத்துரிமையை ஒழித்து ம‌னித‌ன் உயிருட‌ன் இருக்கும்போதே ம‌ண்ணிலேயே பெற்றுவிட‌க்கூடாது என்ப‌த‌ற்காக‌வா?

விவாக‌ர‌த்துரிமை: பிடிக்காத‌ ம‌னைவியை விவாக‌ர‌த்து செய்ய‌முடியாம‌லும், வேறு திரும‌ண‌மும் செய்ய‌முடியாம‌லும் கொடுமைப்ப‌டுத்துவ‌தும் கொலை செய்வ‌தும் ந‌ட‌ந்து கொண்டிருக்கும் இந்த‌ நாட்க‌ளில், பெண்க‌ளுக்கேகூட‌ அந்த‌ உரிமையை வ‌ழ‌ங்கி பெண்க‌ளின் வாழ்வில் க‌ண்ணிய‌த்தையும் ம‌ல‌ர்ச்சியையும் ஏற்ப‌டுத்திய‌து இஸ்லாம். பெண்ணிய‌ம் ப‌ற்றி பேசும்போதெல்லாம் இஸ்லாமிய‌வாதிக‌ள் த‌வ‌றாம‌ல் எடுத்துவைக்கும் வாத‌மிது. இது மெய்தானா? ஆண்க‌ளுக்கு த‌லாக் என்றும் பெண்க‌ளுக்கு குலாஉ என்றும் இர‌ண்டுவித‌மான‌ விவாக‌ர‌த்துமுறைக‌ளை இஸ்லாம் சொல்கிற‌து. ஆண் த‌ன் ம‌னைவியை பிடிக்க‌வில்லையென்றால் மூன்றுமுறை த‌லாக் என்ற‌ வார்த்தையை சொல்லிவிட்டால் விவாக‌ர‌த்து ஆகிவிட்ட‌தாக‌ப்பொருள். இதை ஒரே நேர‌த்தில் சொல்ல‌ முடியாது, கால‌ இடைவெளிவிட்டு ஒவ்வொரு முறையாக‌ சொல்ல‌வேண்டும். முத‌ல் இர‌ண்டு முறை த‌லாக் சொன்ன‌பிற‌கு சில‌ நிப‌ந்த‌னைக‌ளுக்கு உட்ப‌ட்டு விரும்பினால் மீண்டும் சேர்ந்து கொள்ள‌லாம். ஆனால் மூன்று முறை கூறிவிட்டால் சேர‌முடியாது(ஆனால் மூன்று முறை அல்ல‌ முத்த‌லாக் என்ற‌ ஒற்றை வார்த்த‌யிலேயே ப‌ல‌ பெண்க‌ள் வாழ்க்கையிழ‌ந்து விர‌ட்ட‌ப்ப‌ட்டுள்ள‌ன‌ர் என்ப‌துதான் ந‌டைமுறை) இதை ஆண் த‌ன் குடும்ப‌த்திற்குள்ளாக‌வே முடித்துக்கொள்ள‌முடியும். ஆனால் பெண் குலாஉ முறையில் க‌ண‌வ‌னை விவாக‌ர‌த்து செய்ய‌வேண்டுமென்றால் ஊர்த்த‌லைவ‌ரிட‌ம்(அல்ல‌து நீதிம‌ன்ற‌ம்)

முறையிட்டு பெற்றுக்கொண்ட‌ ப‌ண‌த்தை திரும்ப‌க்கொடுத்துவிட்டு விவாக‌ர‌த்தைப் பெற‌வேண்டும். ஏற்க‌ன‌வே நான்கு ம‌னைவிவ‌ரை வைத்துக்கொள்ள‌ (கூடுத‌லாக‌ எத்தைனை அடிமைப்பெண்க‌ள் என்றாலும்) அனும‌தி உள்ள‌ நிலையிலும் ஆண்க‌ளுக்கு கால‌ அவ‌காச‌ம் (மூன்று த‌லாக்)அளிக்க‌ப்ப‌ட்டிருக்கிற‌து. ஆனால் பெண்ணுக்கோ ஊர்த்த‌லைவ‌ரிட‌ம் முறையிட்டு திரும‌ண‌த்தின் போது பெற்ற‌ ப‌ண‌த்தை திரும்ப‌க்கொடுக்க‌ச் ச‌ம்ம‌தித்தால் அந்த‌க்க‌ண‌மே விவாக‌ர‌த்து. அதாவ‌து உரிமை கொடுப்ப‌தைபோல் கொடுத்துவிட்டு விளைவுக‌ளைக்கொண்டு பெண்க‌ளை மிர‌ட்டுகிற‌து. எச்ச‌ரிக்கை க‌ண‌வ‌னை எதிர்த்தால் ம‌ண‌வாழ்வையும் இழ‌ந்து, பெற்ற‌ ப‌ண‌த்தையும் இழ‌ந்து வேறு வாழ்க்கைத்துணையைத்தான் தேட‌வேண்டிய‌திருக்கும். என‌வே க‌ண‌வ‌னுக்கு அஞ்சி ந‌ட‌ந்துகொள். ஆணுக்கோ ம‌னைவிய‌ரும் அடிமைப்பெண்ணும் இருக்க‌ தெவைப்ப‌ட்டால் அடுத்த‌ ம‌ண‌முடிக்க‌ விவாக‌ர‌த்துப்பெற்ற‌ ம‌னைவி திரும்ப‌க்கொடுத்த‌ ப‌ண‌மும் இருக்க‌ எல்லா வ‌ச‌திக‌ளும் ஆணுக்குத்தான், பெண்ணுக்கு எதிர்கால‌ம் குறித்த‌ ப‌ய‌ம் ம‌ட்டும்தான். பெண்க‌ளுக்கான‌ விவாக‌ர‌த்தின் பின்னே ஆணுக்கு அடிமைப்ப‌ட்டுக்கிட‌க்க‌வேண்டும் என்ப‌துதான் ம‌றைமுக‌மாக‌ தொக்கி நிற்கிற‌து. ஆணும் பெண்ணும் அதாவ‌து க‌ண‌வ‌னும் ம‌னைவியும் பிண‌ங்கியிருக்கும் கால‌த்தில் ஆண்விருப்ப‌ப்ப‌ட்டால் ம‌ட்டுமே இணைந்து வாழ‌முடியும். பெண்ணின் விருப்ப‌ம் இந்கே ஒரு பொருட்டில்லை. “இருவ‌ரும் ந‌ல்லிண‌க்க‌த்தை விரும்பினால் அவ‌ர்க‌ளின் க‌ண‌வ‌ர்க‌ள் அவ‌ர்க‌ளை திரும்ப‌ச்சேர்த்துக்கொள்ளும் உரிமை ப‌டைத்த‌வ‌ர்க‌ள்….” குரான் 2:228. இதில் என்ன‌ க‌ண்ணிய‌மும் ம‌ல‌ர்ச்சியும் இருக்கிற‌து. ச‌ரி குழ‌ந்தைக‌ள் இருக்கும் நிலையில் விவாக‌ர‌த்தானால் குழ‌ந்தை யாருக்கு சொந்த‌ம்? ச‌ந்தேக‌மில்லாம‌ல் ஆணுக்குத்தான். ஆண்க‌ளுக்குத்தான் வாரிசுரிமையே த‌விர பெண்ணுக்க‌ல்ல‌. ஆணைப்பொருத்த‌வ‌ரை பெண் ஒரு போக‌ப்பொருள் தான். விவாக‌ர‌த்து ச‌ம‌ய‌த்தில் பால்குடி குழ‌ந்தை இருந்தால் குழ‌ந்தை பால் குடிப்ப‌த‌ற்கு ப‌ண‌ம் கொடுக்க‌ச்சொல்லி தாய்மையை இழிவுப‌டுத்துகிற‌து குரான். அத‌னால்தான் குரான் கூறுகிற‌து “உங்க‌ள் ம‌னைவிய‌ர் உங்க‌ளின் விளைநில‌ங்க‌ள், உங்க‌ள் விளைநில‌ங்க‌ளுக்கு நீங்க‌ள் விரும்பிய‌வாறு செல்லுங்க‌ள்” குரான்2:223. த‌ங்க‌ம், வெள்ளி, குதிரை போன்று பெண்க‌ளும் ஆண்க‌ளுக்கு இவ்வுல‌கின் வாழ்க்கை வ‌ச‌திக‌ள். “பெண்க‌ள்,ஆண்ம‌க்க‌ள், திர‌ட்ட‌ப்ப‌ட்ட‌ த‌ங்க‌ம், வெள்ளியின் குவிய‌ல்க‌ள், அழ‌கிய‌ குதிரைக‌ள், கால்ந‌டைக‌ள் ம‌ற்றும் விளைநில‌ங்க‌ள் ஆகிய‌ ம‌ன‌விருப்ப‌ம் ஏற்ப‌டுத்தும் பொருட்க‌ளை நேசிப்ப‌து ம‌னித‌ர்க‌ளுக்கு க‌வ‌ர்சியாக்க‌ப்ப‌ட்டுள்ள‌து. இவை இவ்வுல‌க‌ வாழ்க்கையின் வ‌ச‌திக‌ள்….” குரான் 3:14 இதுதான் ம‌ண‌வாழ்வில் இஸ்லாம் பெண்ணிற்கு த‌ந்துள்ள‌ உரிமை. இவைஎல்லாவ‌ற்றுக்கும் மேலாக‌ ஒன்றுக்கு மேற்ப‌ட்ட‌ திரும‌ண‌ங்க‌ள் செய்வ‌த‌ற்கும், அடிமைப்பெண்க‌ளை ‘வைத்து‘க்கொள்வ‌த‌ற்கும் ஆண்க‌ளுக்கு இஸ்லாம் ஏற்ப‌டுத்தியிருக்கும் நிப‌ந்த‌னை த‌குதி என்ன‌ தெரியுமா? ப‌ண‌ம். உன‌க்கு வ‌ச‌தியிருந்தால் புகுந்து விளையாடு என்ப‌துதான்.ம‌ஹ‌ர் கொடுக்கும் வ‌ச‌தியிருந்தால் திரும‌ண‌ம் இல்லையேல் நோன்புவைத்துக்கொள். இதில் என்ன‌ பெண்ணுரிமை இருக்கிற‌து? முக்கிய‌மான‌ செய்திக்கு வ‌ருவோம். இஸ்லாத்திற்கு முன்னால் பெண்ணிற்கு விவாக‌ர‌த்துரிமையோ ம‌றும‌ண‌ உரிமையோ இருந்த‌தில்லையா? மீண்டும் க‌தீஜா பிராட்டியின் வர‌ல‌ற்றுக்கு திரும்ப‌லாம், முக‌ம‌து ந‌பிக்கு க‌தீஜா முத‌ல் ம‌னைவி அனால் க‌தீஜாவுக்கு முக‌ம்ம‌து ந‌பி…..? மூன்றாவ‌து க‌ண‌வ‌ர். எந்த‌ அடிப்ப‌டையில் இவ‌ர்க‌ள் இஸ்லாம்தான் பெண்ணுக்கு விவாக‌ர‌த்துரிமையும், ம‌றும‌ண‌ம் செய்துகொள்ளும் உரிமையும் அளித்த‌து என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்க‌ள்?

ஜிஹாப் எனும் பெண்க‌ளுக்கான‌ ஆடை(ப‌ர்தா): ஆண்க‌ளின் காம‌ப்பார்வையிலிருந்து பெண்க‌ள் த‌ங்க‌ளை காத்துக்கொள்ள‌ இஸ்லாம் வ‌ழ‌ங்கிய‌ கொடை இந்த‌ ப‌ர்தா எனும் ஆடை என்ப‌து இஸ்லாமிய‌ வாதிக‌ளின் வாத‌ம். அணியும் ஆடைக‌ள் தொட‌ர்பாக‌ ஆண்க‌ளுக்கு குறிப்பிட‌த்த‌குந்த‌ க‌ட்டுப்பாடு எதியும் வ‌ழ‌ங்காத‌ இஸ்லாம் பெண்க‌ளுக்கு அனேக‌ க‌ட்டுப்பாடுக‌ளை விதித்துள்ள‌து. பெற்றோர்க‌ள் க‌ண‌வ‌ன் உட்ப‌ட்ட‌ நெருங்கிய‌ சில‌ உற‌வின‌ர்க‌ளை த‌விர‌ ஏனைய‌வ‌ருக்கு த‌ங்க‌ள் ஆடை அல‌ங்கார‌ங்க‌ளை வெளிப்ப‌டுத்த‌க்கூடாது. இருக்க‌மான‌ ஆடைக‌ளை அணிய‌க்கூடாது. தோலின் நிற‌ம் தெரிய‌க்கூடிய‌ அல்ல‌து தோலின் நிற‌த்திலுள்ள‌ ஆடைக‌ள் அணிய‌க்கூடாது. முக‌ம் முன்கைக‌ள் த‌விர‌ ஏணைய‌ பாக‌ங்க‌ள் அனைத்தும் ம‌றைக்க‌ப்ப‌ட்டிருக்க‌வேண்டும் இப்ப‌டிப்ப‌ல‌. பெண்ணை பாலிய‌ல் ப‌ண்ட‌மாக‌ப்பார்ப்ப‌த‌ன் நீட்சிதான் இது. ஆணின் காம‌ப்பார்வைக்கு நான்கு ம‌னைவிக‌ளையும் கூடுத‌லாக‌ அடிமைப்பெண்க‌ளையும் த‌ந்துவிட்டு அவ‌ன் பார்வையிலிருந்து த‌ப்பிக்க‌ பெண்க‌ளை க‌வ‌ச‌ம‌ணிய‌ச்சொல்வ‌து குரூர‌மான‌ ந‌கைச்சுவை. இப்ப‌டிக்கூறுவ‌த‌ன் மூல‌ம் இன்றைய‌ முத‌லாளித்துவ‌ உல‌கின் பெண்ணை காட்சிப்பொருளாக்கும் சீர‌ளிவுக்க‌லாச்சார‌த்திற்கான‌ ஆத‌ர‌வு என‌ யாரும் த‌வ‌றாக‌ எண்ணிவிட‌லாகாது. பெண்ணின் ஆடையை ஆணின் வ‌க்கிர‌ப்பார்வை தீர்மானிக்க‌லாகாது என்ப‌துதான். முழுக்க‌ முழுக்க‌ ம‌றைத்துவிட்டு ஒற்றை விர‌ல் ம‌ட்டும் தெரிந்தாலும் அதையும் வெறித்துப்பார்க்க‌வைப்ப‌து ஆணின் வ‌க்கிர‌மேய‌ன்றி பெண்க‌ளின் உட‌ல‌ல்ல‌. த‌வ‌று ஆண்க‌ளிட‌ம் த‌ண்ட‌னை பெண்க‌ளுக்கா? பார்வை இருக்க‌ட்டும் கேட்க‌க்கூசும் வார்த்தைக‌ளால் அர்ச்சிக்கிறார்க‌ளே பெண்க‌ள் வெளியில் வ‌ரும்போது காதுக‌ளை ப‌ஞ்சால் அடைத்துக்கொண்டுதான் வ‌ர‌வேண்டும் என்று ச‌ட்ட‌ம் செய்ய‌லாமா? பொது இட‌ங்க‌ளுக்கு வ‌ந்தால் உர‌சுவ‌த‌ற்காக‌வே க‌ட‌ந்துபோகிறார்க‌ளே என்ன‌செய்ய‌லாம்? ப‌ர்தாவை இரும்பால் நெய்து கொள்ள‌வேண்டும் அதுவும் உட‌லைவிட்டு அரை அடி த‌ள்ளியிருப்ப‌துபோல் தைத்துக்கொள்ள‌வேண்டும் என‌த்திருத்த‌ம் கொண்டு வ‌ர‌லாமா?

பொதுவாக‌ ஆணின் பாலிய‌ல் வெறி அல்ல‌து அதீத‌ பாலிய‌ல் உண‌ர்வு என்ப‌து ச‌மூக‌த்திலிருந்து வ‌ருவ‌து. உட‌லுற‌வு என்ப‌து இன‌ப்பெருக்க‌த்திற்கான‌து என்ற‌ இய‌ற்கையை தாண்டி அது இன்ப‌மாக‌ நுக‌ர்வாக‌ ஆன‌து தான் பெண்க‌ள் மீதான‌ பாலிய‌ல் கொடுமைக‌ளுக்கான‌ தொட‌க்க‌ப்புள்ளி. எல்லாம் தெரிந்த‌ ஆண்ட‌வ‌ன் இந்த‌ தொட‌க்க‌ப்புள்ளியிலிருந்துதான் அந்த‌க்குற்ற‌த்தை பார்த்திருக்க‌வேண்டும். இந்த‌ தொட‌க்க‌ப்புள்ளியிலிருந்து தான் தீர்வை தொட‌ங்கியிருக்க‌வேண்டும். ஆனால் ஆணின் காம‌ உண‌ர்வை இன்ப‌ நுக‌ர்வாக‌ அங்கீக‌ரித்துவிட்டு அதிலிருந்து த‌ப்புவ‌த‌ற்காக‌ பெண்க‌ளுக்கு ஆடைக்க‌ட்டுப்பாடு விதிப்ப‌து எந்த‌ வ‌கையில் பெண்க‌ளுக்கு க‌ண்ணிய‌த்தை த‌ரும் என்று ம‌த‌வாதிக‌ள் கூற‌வேண்டும்.

சாட்சிய‌த்தில் பெண் ஆணில் பாதி(2:282), போர்க்கைதிக‌ளோடு உற‌வுகொள்ள‌ அனும‌தி(33:50), ம‌னைவியை அடிப்ப‌த‌ற்கு அனும‌தி(4:34), க‌ண‌வ‌ன் உற‌வுக்கு அழைத்து ஏதாவ‌து கார‌ண‌த்தால் ம‌னைவி ம‌றுத்தால் விடியும் வ‌ரை வான‌வ‌ர்க‌ளால் ச‌பிக்க‌ப்ப‌டுவாள்(புகாரி) போன்று பெண்ணை இழிவுப‌டுத்தும் வ‌ச‌ன‌ங்க‌ள் குரானிலும் ஹ‌தீஸிலும் ஏராள‌ம் உண்டு. இவைக‌ளையெல்லாம் ம‌ற‌ந்துவிட்ட‌ ந‌ண்ப‌ர் டென்தாரா பைபிளின் வ‌ச‌ன‌ங்க‌ளை சுட்டிக்காட்டியுள்ளார். பெண்ணை ஆணாதிக்க‌த்திற்கு ப‌லியாக்கும் பிற்போக்குத்த‌ன‌த்திற்கு எந்த‌ ம‌த‌மும் விதிவில‌க்க‌ல்ல‌. ஆணோ பெண்ணோ ந‌ம்பிக்கை கொண்டு ந‌ல்ல‌ற‌ம் செய்தால் அவ‌ர்க‌ளை ம‌கிழ்ச்சியான‌ வாழ்க்கை வாழ‌ச்செய்வோம். அவ‌ர்க‌ள் செய்து கொண்டிருந்த‌த‌ன் கார‌ண‌மாக‌ அவ‌ர்க‌ளின் கூலியை அவ‌ர்க‌ளுக்கு வ‌ழ‌ங்குவோம்(16:97) என்ப‌ன‌போன்ற‌ ஆணையும் பெண்ணையும் பொதுவாக‌ பாவிப்ப‌து போன்று தோற்ற‌ம் ஏற்ப‌டுத்தும் வ‌ச‌ன‌ங்க‌ளும் குரானில் உண்டு. ஆண், பெண்ணின் ந‌ல்ல‌ற‌ம் எது என்று பார்த்தால் அங்கே பேத‌ம் ப‌ல்லிளிக்கிற‌து.

பெண்க‌ளுக்கான‌ க‌ண்ணிய‌மும், ம‌திப்பும் காக்க‌ப்ப‌ட‌வேண்டுமென்றால், ஆணாதிக்க‌ம் ஒழிக்க‌ப்ப‌ட‌வேண்டும். ஆணாதிக்க‌ம் ஒழிக்க‌ப்ப‌ட‌வேண்டுமென்றால் த‌னியுட‌மை த‌க‌ர்க்க‌ப்ப‌ட‌வேண்டும். த‌னியுட‌மையை த‌க்க‌வைத்துக்கொண்டு பெண்ணிய‌ம் பேச‌முடியாது. என‌வே டென்தாரா அவ‌ர்க‌ளே (உங்க‌ளின் க‌டைசி வ‌ரியை மீண்டும் கூறுகிறேன்) சிந்தியுங்க‌ள் செய‌ல்ப‌டுங்க‌ள்.

நிலம் மக்களின் உரிமை …


தமிழகத்தில் மிகவும் வேகமாக அவசராமாக புதிதாக கட்டப்படுள்ள புதிய சட்டப்பேரவையில் நடந்த முதல் கூட்டத்தொடரில் (கடந்த ஏப்ரல் 9 ஆம் தேதி நடைபெற்ற பட்ஜெட் மீதான விவாதத்தில்) கலந்து கொண்டு எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர் செல்வம் பேசுகையில், தமிழகத்தில் 50 லட்சம் ஏக்கர் தரிசு நிலம் இருப்பதாக கூறினீர்கள். நிலமற்ற விவசாயிகளுக்கு 50 லட்சம் ஏக்கர் நிலத்தை தலா 2 ஏக்கர் வீதம் பிரித்து கொடுத்தீர்களா? என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த முதலமைச்சர் கருணாநிதி, திரும்ப திரும்ப எதிர்க்கட்சி துணைத் தலைவர் இந்த குற்றச்சாட்டை கூறுகிறார். நில மற்றவர்களுக்கு இரண்டு ஏக்கர் நிலம் தரப்படும் என்று அந்த நேரத்தில் அறிவித்தோம். 50 லட்சம் ஏக்கர் நிலம் இருப்பதாக அதிமுக அரசின் சார்பாக வைக்கப்பட்ட அறிக்கையில் சொல்லப்பட்ட நிலப் பரப்பைதான் கூறினோம் என்றார்.

அதாவது தங்கள் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டது அதிமுக அரசு சொன்ன விபரங்கள் அடிப்படியில் என்றார். ஆனால் இப்போது அந்த நிலங்கள் உள்ளதா என்பதை ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகள் ஆகியும் தனது அரசாங்கத்தால் கண்டுபிடிக்க முடியவில்லை என்பதை ஒப்புக்கொண்ட பேச்சு அது. எப்படியென்கிறீர்களா? அந்த விவாதத்தில் குறுக்கிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் கே.பாலபாரதி, “தமிழகத்தில் எவ்வளவு தரிசு நிலங்கள் உள்ளது என்று தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரியது. அதற்கு வருவாய்துறை அமைச்சரும் ஒப்புக் கொண்டார். அதனடிப்படையில் வெள்ளை அறிக்கை வெளியிடப்படுமா?” என்று கேட்டார்.

ஆனால் இந்த கேள்விக்கு பதிலளிக்காத முதலமைச்சர், “இந்த திட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்துவதற்கு முன்பு, நிலங்களை பிரித்து கொடுப்பதில் முன்னணியில் உள்ள, புரட்சிகரமாக செயல்படக்கூடிய மேற்கு வங்கத்திற்கு சென்று வருவாய் துறை அமைச்சர் ஆய்வு செய்துவிட்டு வந்தார். தமிழகத்திலேயே நாம் பிரித்துக் கொடுப்பதை விட மேற்கு வங்கத்திலே கொடுப்பது குறைவு” என்று கூறினார். ஊசியைப் பார்த்து சல்லடை சொல்கிறது; உன்னுடைய வாயில் ஒரு ஓட்டை இருக்கிறது என்று. இப்படி இருக்கிறது முதல்வரின் பேச்சு. கேட்ட கேள்விக்கு பதில்சொல்லாமல் கேள்வி கேட்ட உறுப்பினர் சார்ந்த கட்சி ஆட்சி செய்யும் மாநிலத்தின் மீது சேற்றைவாரி பூசுவதில் முதல்வர் கலைஞர் ஈடுபட்டார். அவருக்கும் தெரியும் அதிகப் பேச்சும், பொய்யும் நெருங்கிய உறவினர் என்று. எனினும் அவர் பேசுகிறர். ஆகவே நாமும் நிலச்சீர்திருத்தத்தில் தமிழகம் எந்த நிலையில் இருக்கிறது என்று பார்க்க வேண்டியுள்ளது.

உண்மை என்ன?

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடது முன்னணி அரசு மேற்கு வங்கத்தில் நில விநியோகத்தில் மகத்தான சாதனை புரிந்துள்ளது. அதனால்தான் அன்பை விதைத்தவன் நன்றியை அறுவடை செய்கிறான் என்பது போல அவரகள் தொடர்ந்து பல்லாண்டுகாலம் ஆட்சி புரிகின்றனர். இதில் நாட்டுக்கே மேற்கு வங்க இடது முன்னணி அரசு வழிகாட்டியாக உள்ளது. அவர்கள் விநியோகம் செய்தது தரிசு நிலத்தையோ அல்லது அரசுப் புறம்போக்கு நிலத்தையோ அல்ல. உண்மையில் அகில இந்திய அளவில் மொத்த நிலப்பரப்பில் தரிசு உள்ளிட்டு அரசுப் புறம்போக்கு நிலம் சராசரி 17 சதவிகிதமாகும். ஆனால் மேற்குவங்கத்தில் இத்தகைய தரிசு மற்றும் அரசுப் புறம்போக்கு நிலம் என்பது 1 சதவிகிதம் மட்டுமே. எனவே மேற்குவங்கத்தில் அரசு புறம்போக்கு நிலத்தையோ தரிசு நிலத்தையோ நிலமற்ற விவசாயிகளுக்கு விநியோகம் செய்வதில் சாதனை புரிந்துள்ளதாக மேற்கு வங்க அரசு சொல்லவில்லை.

மேற்குவங்கத்தில் 1977 ஆம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பேற்ற இடது முன்னணி அரசு இதுவரையில் நிலச் சுவான்தாரர்களிடமிருந்த சுமார் 12 லட்சம் ஏக்கர் (விவசாய விளை நிலத்தை) உபரி நிலத்தை எடுத்து நிலமற்ற விவசாயத் தொழிலாளர்களுக்கு விநியோகம் செய்துள்ளது. ஒட்டு மொத்தமாக நாட்டின் விவசாய நிலப்பரப்பில் 3 சதவிகிதம் மட்டுமே மேற்கு வங்கத்தில் உள்ளது. ஆனால், தேசிய அளவில் மறுவிநியோகம் செய்யப்பட்ட உபரி நிலத்தில், மேற்கு வங்கத்தின் பங்கு மட்டும் 22 சதவிகிதம் ஆகும். சுமார் 30 லட்சம் நிலமற்ற ஏழை விவசாயிகள் இதனால் பயனடைந்துள்ளனர். அதாவது தேசிய அளவில் நிலவிநியோகத்தால் பலன் பெற்றவர்களில் 55 சதவிகிதம் பேர் மேற்குவங்கத்தைச் சேர்ந்தவர்கள். இவ்வாறு பயனடைந்தவர்களில் 57 சதவிகிதத்தினர் தாழ்த்தப்பட்ட- பழங்குடியினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நிலச் சீர்திருத்த சட்டத்தை, முறையாக செயல்படுத்தி உபரி நிலத்தை எடுத்து மறுவிநியோகம் செய்ததால், மேற் குவங்கத்தின் மொத்த சாகுபடி நிலப்பரப்பு 70.7 சதவிகிதம் சிறு மற்றும் குறு விவசாயிகளின் கையில் உள்ளது. மேலும் 15 லட்சம் குத்தகை சாகுபடிதாரர்கள் பதிவு செய்யப்பட்டு அவர்கள் சாகுபடி செய்யும் 11 லட்சம் ஏக்கர் நிலத்தில் அவர்களது சாகுபடி உரிமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்களில் சுமார் 6 லட்சம் பேர் தாழ்த்தப்பட்ட- பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்கள் என்பது பாராட்டுக்குறியது மட்டுமல்ல அந்த அரசின் வர்க்கத்தன்மையின் வெளிப்பாடு அது.

ஆனால் தமிழகத்தில் நில உச்சவரம்புச் சட்டத்தின் மூலம் திமுக ஆட்சிக்கு வந்த 1967க்குப் பிறகு எவ்வளவு ஏக்கர் நிலம் விநியோகம் செய்தது என்பதை திமுக அரசு சொல்லுமா என்றால் சொல்ல மறுக்கிறது. தினமும் தனது தம்பிகளுக்கு கடிதம் எழுதும் கலைஞர். கேள்வியும் நானே பதிலும் நானே என்ற வடிவத்தில் அறைக்கைவிடும் முத்தமிழ் வித்தகர் தமிழ்குடிமக்களுக்கு கொடுத்தது என்ன?