குழந்தைகளின் ‘கொலை’க்காட்சி !


இரண்டு அல்லது மூன்று நாள் விடுமுறையின் சிக்கல்கள் இரண்டு, ஒன்று சொந்த ஊருக்குப்போவதற்கு பேருந்தை பிடிப்பது. திருப்பூரில் விடுமுறை நாட்களிலும் திருமண நாட்களிலும் பேருந்தில் இடம் பிடிப்பதை விட ரேஷனில் சீமெண்னை வாங்குவது சுலபமானது. இரண்டாவது பிரச்சினை ஊரில் உள்ள தொலைக்காட்சிப்பெட்டி. தோராயமாக ஒரு நாளில் ஆறு மணி நேரம் சீரியல் ஓடுகிறது எல்லா வீடுகளிலும். அவ்வப்போது பார்த்த வகையில் எல்லா நெடுந்தொடரிலும் ஒரே கதைதான் ஓடுவதாக தெரிகிறது. கதை என்கிற சமாச்சாரத்தில் யாரும் அவ்வளவு கவனம் செலுத்துவதில்லை என்பது வேறு விஷயம், ஆனாலும் ஒரே மாதிரியான காட்சிகளின் தொகுப்பாகத்தான் எல்லா தொடர்களும் இருக்கின்றன. ஒரே நடிகர் வெவ்வேறு தொடர்களில் ஒரே மாதிரி பாத்திரத்தில் நடிக்கிறார். நம் வீட்டு ஆட்கள் எப்படி அவர் பாத்திரத்தின் பெயர்களை சரியாக நினைவு வைத்திருக்கிறார்கள் என்பது ஆராயப்படவேண்டிய அதிசயம்.

தொடர்களும் இரண்டு வகையாக காணக்கிடைக்கின்றன. சிவனே என இருக்கும் கதாநாயகியை ஊரில் இருக்கும் பாதி பேர் பாடாய்ப்படுத்தி கதையை வளர்த்துவார்கள். இன்னோர் வகை கதாநாயகி கொஞ்சம் அதிரடி நாயகி, இவர்கள் ஊரில் உள்ள ஆட்கள் பாதி பேரின் பிரச்சனைகளை கவனிப்பதன் மூலம் கதையை கொண்டு செல்வார்கள். தன் அப்பா வயது கதாநாயகர்களுக்கு அம்மாவாக நடிக்க விருப்பமில்லாத முன்னாள் கதாநாயகிகளின் முதல் தேர்வு நெடுந்தொடர்தான் என்பது எல்லோரும் அறிந்ததுதான். அதிலும் தன் மகன் வயது ஆளுக்கு ஜோடியாக நடித்து தன் பழைய கதாநாயகர்களுக்கே அதிர்ச்சி வைத்தியம் தரும் பாக்கியம் சிலருக்குத்தான் கிடைக்கிறது. ரம்யா கிருஷ்ணன் தன் அத்தையை ‘அத்தை’ என விளிக்காவிட்டால் யார் யாருக்கு அத்தை என நமக்கு குழப்பம் வந்துவிடும்.

சீரியல் கதாநாயகிகளை ஒரு சூப்பர்வுமனாக சித்தரிப்பதில் பெரும் வெற்றி கண்டவர் ராதிகா. அவரது சமீபத்து தொடர் ஒன்றில் அதன் அதிகபட்ச எல்லையை தொடுவதுபோல தெரிகிறது. காபிக்கு சர்க்கரை போடுவதில் தொடங்கி கல்யாணத்தை நிறுத்துவது வரை சகல விஷயங்களிலும் ராதிகாவின் கருத்தை எல்லோரும் பயபக்தியோடு ஆதரிக்கிறார்கள். முன்பு தூர்தர்ஷனில் ஒளிபரப்பான புராணத்தொடர்களில் வரும் கடவுளரைப்போல ஒரு மர்மமான புன்னகையோடு தொடர் முழுக்க வலம்வருகிறார் ராதிகா, தலைக்கு பின்னால் ஒரு ஒளி வட்டமும் ஆசீர்வாதம் செய்வது போல கைகளையும் வைத்திருந்தால் செல்லம்மா ஒரு அவதாரமாகத்தான் காட்சியளிப்பார்.

கதாநாயகி மற்றும் வில்லனை தவிர்த்து நெடுந்தொடரில் வரும் கதாபாத்திரங்களையும் இரு பிரிவுக்குள் அடக்கிவிடமுடியும். ஒன்று கொஞ்சம் வில்லன் சாயலில் இருக்கும் குரூப், கோள் மூட்டுவதும் கழுத்தை வெட்டி ஜாடை பேசுவதும் இவர்கள் அன்றாடப்பணி. செய்வினை வைப்பது மற்றும் சாப்பாட்டில் விஷம் வைப்பது மாதிரியான பணிகளையும் அவசியம் ஏற்படின் இவர்கள் மேற்கொள்வார்கள். இன்னொரு குழு கொஞ்சம் அப்பிராணி உறுப்பினர்களைக்கொண்டது. இவர்கள் எந்நேரமும் கதாநாயகியோடோ அல்லது கதாநாயகிக்காகவோ ஒப்பாரி வைத்தவண்ணமிருப்பார்கள். ஒப்பாரி வைத்த நேரம் போக மீதமிருக்கும் நேரத்தில் கதாநாயகியின் கஷ்டங்களையோ அல்லது பராக்கிரமங்களையோ மற்றவர்களுக்கு மறு ஒளிபரப்பு செய்வார்கள். நாயகியின் கணவனும் இந்த இரு பிரிவுகளின் ஒன்றின் கீழ்தான் அடங்குவார், எனவே கதாநாயகன் என ஒரு பாத்திரம் இங்கு கிடையாது.

தொடரின் கதைகளுக்கென்று சில விதிமுறைகள் உண்டு. அதாவது தொடரில் வரும் ஒரு குடும்பம் கூட மகிழ்ச்சியாக இருக்கக்கூடாது. ஒரு அதிர்ச்சிகரமான செய்திக்கு வீட்டில் உள்ள எல்லோரையும் குளோசப்பில் காட்ட வேண்டும். உதாரணமாக பாத்ரூம் குழாயில் தண்ணீர் வரவில்லை என்ற வசனம் சொல்லப்பட்ட பிறகு வீட்டு நாய்க்குட்டி உள்ளிட்ட சகல உறுப்பினர்களின் முகத்தையும் மாற்றி மாற்றி காட்டுவது அவசியம். கூடுதல் அதிர்ச்சியைக்காட்டும் காட்சிகளில் கேமராவை மேலிருந்து கீழ், கீழிருந்து மேல், இடமிருந்து வலம் மற்றும் வலமிருந்து இடமென நடிகரின் அல்லது நடிகையின் முகத்தை நோக்கி நான்கு திசைகளிலிருந்தும் வேகமாக திருப்பவேண்டும் ( ‘என்னது இரண்டு நாள் தண்ணீர் வராதா’ என்ற டயலாக்கிற்கு இந்த நுட்பத்தை பயன்படுத்தலாம் ).

சாதாரண நிகழ்வுகளையும் உணர்வுபூர்வமாகத்தான் காட்ட வேண்டும், உடம்பு சரியில்லாத நபருக்கு சாப்பாடு ஊட்டுவதை நைட்டிங்கேல் அம்மையாரின் சேவைக்கு நிகரானதென நம்பும்படிக்கு காட்சி நீளமாக இருப்பதும் முக்கியம். கல்யாணமானவர்கள் ஆறு மாதத்திற்குமேல் சேர்ந்திருப்பது எந்த சீரியலுக்கும் அடுக்காது.

சித்தி தொடர் ஓடிய நேரத்தில் சென்னை ரங்கநாதன் தெருவில் கூட்டம் கணிசமாகக் குறைந்திருந்தது. மெட்டிஒலி தொடர் ஒளிபரப்பாகும் பொழுது வீட்டில் சேனல் மாற்றுவது கிரிமினல் குற்றமாகக் கருதப்பட்டது. இப்போது நிலைமை அப்படி இல்லை என்றாலும் நெடுந்தொடர்கள் ஓயாமல் வீட்டில் ஓடியவண்ணமிருக்கின்றன. அடுத்து வரப்போகும் காட்சிகளை அனுமானிக்கும் அளவு வல்லமை பெற்ற பிறகும்கூட யாரும் நெடுந்தொடர் பார்ப்பதை நிறுத்தக்காணோம்.

என் கவலை பெரியவர்களின் சீரியல் மோகம் பற்றியதல்ல. வீட்டு குழந்தைகள் நம்முடன் சேர்ந்து தொடர்களைப்பார்க்கும் நிர்பந்தத்திற்க்கு ஆளாகிறார்கள். நான் பார்த்த பல சிறார்கள் தொடர்களின் கதையையும் பாத்திரங்களின் பெயர்களையும் நினைவு வைத்திருக்கிறார்கள். நயவஞ்சகம், முறைகேடான உறவு, ஆள் கடத்தல்,கொலை, பழி வாங்குவது என சமூகத்திற்க்கு ஆகாத செயல்கள் விதிவிலக்கில்லாமல் எல்லா நெடுந்தொடர்களிலும் நிரம்பிவழிகிறது. எல்லா வீடுகளிலும் நடக்கும் சம்பவங்களாக இவை தொடர்களில் காட்டப்படுகின்றன. குழந்தைகள் அடுத்தவர்களை பார்த்து அதேபோல செய்வதன் மூலம்தான் (இமிடேஷன் ) பெரும்பாலானவற்றை கற்கின்றன. ஐந்து வயது வரை டிவியில் வருவது நாடகம் என்பது அவர்களுக்கு தெரியாது, கண்ணில் தெரிவது எல்லாம் அவர்களுக்கு ஒரே மாதிரியானவைதான்.

எனவே சமூகம் பற்றிய குழந்தைகளின் மதிப்பீடு சீரியலையும் உள்ளடக்கியதாகத்தான் இருக்கும்.குழந்தைகள் தங்கள் சுற்றத்தைப் பற்றி பெருமளவு கற்பது முன்பள்ளிப்பருவம் வரையிலான காலம்தான். இப்படி இபிகோ வின் எல்லா சட்டப்பிரிவுகளின் கீழ் அடங்கும் அனைத்துக்குற்றங்களும் நிரம்பிய தொடர்களைப் பார்த்துக்கொண்டுதான் நம் குழந்தைகளின் ஆளுமை இப்போது வளர்கிறது. இது எதிர்காலத்தில் அவர்களின் வாழ்க்கை முறையில் மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். ஆனாலும் இது தொடர்பில் எந்த ஒரு ஆய்வும் இதுவரை செய்யப்படவில்லை.

நாம் எப்படி ? டிவியை நிறுத்திவைக்கப்போகிறோமா அல்லது ஆராய்சி முடிவுகள் வரும் வரை காத்திருக்கப்போகிறோமா ??

யார் பத்தினி? ‘மாமா’க்கள் மோதல்!


ரஜினிகாந்த் கூற்றுப்படி இரண்டு வேளை உணவுக்காக விபச்சாரம் செய்த புவனேஸ்வரியை கைது செய்தது காவல்துறை.இதைன்பிறகு அவர் குறிப்பிட்டதாக கூறி சில நடிகைகளின் விலை விவரங்களையும் அவர்கள் புகைப்படங்களையும் வெளியிட்டது தினமலர். தொடர்ந்து செய்தித்தாள் படிப்பவர்களுக்கு இந்த செய்தி புதியதாக இருக்காது, செய்தியில் உள்ள புதிய தகவல் அவர்தம் கட்டணவிவரம்தான். பெயரை மட்டும் குறிப்பிடாமல் இந்த செய்தி எல்லா பத்திரிக்கைகளிலும் வந்தபடிதான் இருக்கிறது. ஸ்ரீபிரியா தன்னை ஒரு நடிகர் ஏமாற்றியதற்காக தற்கொலை செய்துகொள்ள முயற்சி செய்தபோது பாராமுகமாய் இருந்துவிட்டதைப்போல இன்னொரு வரலாற்றுத் தவறை செய்துவிடக்கூடாது என முடிவு செய்துவிட்ட நடிகர்சங்கம் உடனடியாக உலக நாயகன்.. மன்னிக்கவும் உலக சாதனையாளர், முதல்வர் கலைஞரை சந்தித்தார்கள். திரௌபதிக்கு சேலை கொடுத்த கிருஷ்ண பரமாத்மாவைப்போல நவயுக திரௌபதிகளுக்கு வன்கொடுமை சட்டத்தைத்தந்து அருள்பாலித்தார் கருணாநிதி.

சத்துணவு பணியாளர்கள் மாதக்கணக்கில் போராடியும் பார்க்க முடியாத முதல்வருக்கு நடிகர்களுக்கென ஒதுக்க எப்போதும் நேரமிருக்கிறது. அவர்கள் முறையிட்டவுடன் தினமலர் செய்தியாசிரியர் கைது செய்யப்படுகிறார். நடவடிக்கை எடுக்கப்பட்ட பிறகு ஷகிலா உள்ளிட்ட நடிகர் நடிகைகளுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ளவும் அவர் தவறவில்லை.

இதனிடையே நடந்த நடிகர்சங்க கூட்டத்தில் தங்கள் சுயரூபத்தை காட்டினார்கள் நடிகர்கள். அவர்கள் பேசியதைப்பார்த்தால் மறுநாள் தினமலர் பத்திரிக்கையே இருக்காதோ என சந்தேகம் பலருக்கு வந்திருக்கும். ஒரு விருதுக்காக ஊரையே எழுதித்தரும் பட்டத்துராஜா ஒருவர் கூப்பிடுதூரத்தில் இருக்கும்போது அவர்களுக்கு அப்படிச்செய்ய அவசியமிருக்காது.

ஜூன் மாதம் ஆனந்த விகடனுக்கு தான் அளித்த பேட்டியில் இலங்கைப் பிரச்சினையை பற்றி ‘ஆஃப் த ரெக்கார்ட்’ ஆக தன் கருத்துக்களை கவனமாக பேசிய சத்யராஜ் இந்த முறை அப்படியெல்லாம் பயப்படவில்லை, தினமலர் பொறுப்பாசிரியர் ஒரு வேசிமகன் என யாரெல்லாம் ஒத்துக்கொள்கிறீர்கள் என் கேள்வி எழுப்பினார். வேசிமகனுகான அடையாளங்களை சுலபமாக கண்டறியும் திறன் கொண்ட திரையுலகம் ஒட்டுமொத்தமாக கை உயர்த்தியது.

தான் பாதாள சாக்கடையை சுத்தம் செய்ய எந்திரம் செய்யும்படி சொல்லும் காட்சி வைத்ததால்தான் சென்னை மாநகராட்சி அப்படி ஒரு கருவி வாங்கியதாக உளறிய விவேக் எனும் கோமாளி இன்னும் ஒருபடி மேலே போய் பத்திரிக்கையாளர்களின் குடும்ப உறுப்பினர்களின் புகைப்படம் கேட்டார். சாதாரணமாகவே நடிகைகளை உள்ளடையுடன் ஆடவிடும் துறையில் இருப்பவரின் புத்தி பத்திரிக்கையாளர்களின் குடும்ப பெண்களுக்கு கிராபிக்ஸில் உள்ளாடை அணிவிக்கும் வகையில் சிந்திப்பதில் வியப்பதற்கு ஒன்றுமில்லை.

நடிகர்கள் உணர்ச்சிவயப்பட்டெல்லாம் அப்படிப்பேசவில்லை, அவர்கள் இயல்பே அப்படிதான் இல்லாவிட்டால் சக நடிகனுக்கு தனது படத்து வசனத்தின் மூலம் சவால் விட மாட்டார்கள். நடிகர்களின் யோக்கியதை மக்கள் எல்லோரும் அறிந்ததுதான், தாம் எவ்வளவு தூரம் கேவலமானவர்கள் என மக்களுக்கு தெரிவிக்கும் ஒரு வாய்ப்பாக இந்த கூட்டத்தை பயன்படுத்திக்கொண்டார்கள். தனது கட் அவுட்டுக்கு தன் செலவில் ( அல்லது தன் அப்பா செலவில்) பாலாபிசேகம் செய்யும் இவர்கள் நியாயமான முறையில் கோரிக்கை வைக்கமாட்டார்கள். அதன் வெளிப்பாடுதான் முதல்வரை சந்தித்து முறையிடுவது.

நடிகையை அவமானப்படுத்தி செய்தி வெளியிட்டதற்காக நடிகர்சங்கம் போராடுவதுதான் நமக்கு நெருடலாக இருக்கிறது. தமிழாசிரியர்களை இவர்கள் அவமானப்படுத்திய படங்கள் எத்தனை எத்தனை ?. கேரளப் பெண்களை ஒரு படத்திலேனும் இவர்கள் நாகரீகமாக காட்டியதுண்டா ? நடிகர்களைப்பற்றியோ தயாரிப்பாளர்களைப்பற்றியோ புகார் சொன்ன நடிகைகளின் குற்றச்சாட்டுக்களுக்கு இவர்கள் எடுத்த நடவடிக்கை என்ன ? தினமலர் ரமேஷை அக்கா தங்கையோடுதான் பிறந்தாயா என கேட்கும் ஸ்ரீபிரியா, பதின்வயது சிறுமிகளைக்கூட முத்தக்காட்சிகளில் நடிக்கவைக்கும் தன் சக ‘ கலைஞர்களை’ நோக்கி இந்த கேள்வியை எழுப்பியிருப்பாரா?

பஸ்டாண்டில் விபச்சாரத்திற்கு ஆள் பிடிப்பவன் புரோக்கர் என்றால், நடிகைகளின் அவயங்களை காட்டி படத்தை விற்கும் இவர்களை எப்படி அழைப்பது ? இவர்கள் எடுக்கும் நெருக்கமான காட்சிகள் ஒன்று நடிகையின் ஒப்புதல் பெற்ற பாலியல் அத்துமீறலாக இருக்கும் அல்லது நடிகையை கட்டாயப்படுத்தி செய்யப்படும் பாலியல் அத்துமீறலாக இருக்கும். இதைப்பற்றி கொஞ்சமும் வெட்கப்படாமல் கதைக்கு தேவையான கிளாமர் இருப்பதாக சொல்லும் இந்த மாமா கூட்டம் நடிகைகளின் மான அவமானத்தைப்பற்றி கவலைப்பட தகுதியுடையதுதானா ?. இவர்களுக்கும் புவனேஸ்வரிக்கும் என்ன வேறுபாடு?, இவர்கள் சொல்லும் நியாயத்தை அவரும் சொல்லக்கூடும், ஏனெனில் அவரும் விரும்பி வருவோரைத்தான் தொழிலுக்கு அனுப்புகிறார். அல்லது கஸ்டமர் கேட்பதை தருவதாககூட ஒரு நியாத்தை சொல்லலாம், ரசிகன் விரும்புவதைத்தான் படமாக எடுக்கிறோமென இயக்குனர்கள் சொல்வதைப்போல.

மற்றொருபுறம் பத்திரிகையாளர்கள் தங்களை ஒரு குடும்பம் என கூறிக்கொள்வதை தவறாக புரிந்துகொண்ட கலாநிதி மாறன் தனது தினசரியில் நடிகர்களின் கூட்டத்தை முழுப்பக்க செய்தியாக போடுகிறார், பின்னே அவர் குடும்ப சண்டையில் இப்படித்தானே நடந்துகொண்டார் ???. பொதுவாக பத்திரிக்கைத்துறையையே நடிகர்கள் திட்டியதால் இவர்கள் ஒன்று கூடினார்கள், நடிகர் சங்கம் தினமலரை மட்டும் திட்டியிருந்தால் இந்த ஒற்றுமையும் இருந்திருக்காது, ஜெயா ஆட்சியில் நக்கீரன் கோபாலை கைவிட்டதுபோல இப்போதும் நடந்துகொண்டிருப்பார்கள்.( கோபால் கைதை எதிர்த்து நடந்த கூட்டத்தின் புகைப்படத்தில் ராமின் படத்தை ஜாக்கிரதையாக தவிர்த்த ஹிண்டுவின் வீரம் அவ்வளவு சீக்கிரம் மறக்கக்கூடியதா என்ன ?? )

இரண்டு தரப்பும் ஒரு விசயத்தில் கவனமாக இருக்கிறார்கள். தங்கள் வசமுள்ள எதிர்தரப்பின் தவறுகள் பற்றிய தகவல்களை இருவருமே வெளியிடவில்லை. அதனால்தான் வெறும் வசவுகளோடும் வாய்சவாடல்களோடும் நிறுத்திக்கொள்கிறார்கள். ஏனெனில் ஆபாசம் இருவருக்குமே பொதுவான ஒரு மூலதனம், அதில் கைவைக்க இரண்டு வியாபாரிகளும் விரும்பமாட்டார்கள்.

நடிகைகள் தங்களை விபச்சாரிகள் என சொன்ன பத்திரிக்கைக்கு எதிராக போராடுவது கிடக்கட்டும்.. தங்களை விபச்சாரிகளை விட கேவலமாக நடத்தும் ( அல்லது திரையில் அப்படிக்காட்டும் ) திரையுலகிற்கு எதிராக முதலில் சிந்திக்கட்டும். இல்லவிட்டால் எப்போது இந்த மாதிரி செய்தி வந்தாலும் அது மக்களுக்கு ஒரு நினைவூட்டலாகவே அமையும்.